Tuesday, December 10, 2013

பிரபலங்கள் வரிசையில் பிர்தவ்ஸ் ராஜகுமாரன்...

நிகழ்கால இஸ்லாமிய சமூகத்தின் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய சிறந்த எழுத்தாளர்...கதாசிரியர்..இலக்கியவாதி.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பிர்தவ்ஸ் ராஜகுமாரன் 20 வருடங்களுக்கு முன்னாலேயே எழுத்துத் துறைக்கு வந்தவர். பிரபலமான இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன .அரசுப் பணியில் இருந்து கொண்டே எழுத்துப் பணியும் செய்வது இவரது தனிச் சிறப்பு. கதைகள் எழுதிக் கொண்டிருந்தவரை அரசியல் சமூக விழிப்புணர்வு கட்டுரைகள் எழுத வைத்ததில் எனக்கும் பங்குண்டு. " நமது முற்றத்தில்" இவர் எழுதிய கட்டுரைகள் மிகுந்த வரவேற்பை பெற்றன. இன்று முக்கியமாகப் பேசப்படும் அப்சல்குரு, மதானி, காஷ்மீர், இஸ்ரேல், குஜராத் பிரச்சனைகளை அப்போதே அனல் பறக்க விமர்சித்து கட்டுரைகள் எழுதிய துணிச்சல் மிக்கவர். ஏராளமான ஜனரஞ்சக இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

" நகரமே ஓநாய்கள் ஊளையிடும் பாலைவனம்போல "

என்ற சிறுகதைத் தொகுப்பில் கோவையில் நடைபெற்ற மதக் கலவரத்தின் கொடூர முகத்தை உள்ளது உள்ளபடி அப்படியே வரி வடிவில் கொண்டு வந்து, கண்களில் ரத்தக் கண்ணீரை வரவைக்கிறார் பிர்தவ்ஸ். இது சங்கப் பரிவாரங்களின் நிஜ முகங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.

கலவரம் நடந்த கோவை வீதிகளில் நாம் உயிர் பதைபதைக்க ஓடக்கூடிய உணர்வு இந்தக் கதைகளை படிக்கும் பொது ஏற்படுகிறது. வெறியர்களால் குத்திக் கொல்லப்படும் முஸ்லிம்களின் வயிற்றிலிருந்தும் நெஞ்சிலிருந்தும் பீறிட்டுப் பாயும் ரத்தம் நம் மூஞ்சியில் தெறித்து நம்மை மூர்ச்சையடைய வைக்கிறது.

தன் கண்முன்னே நடந்த கொடூரமான இனப்படுகொலையின் ஒரு சில சம்பவங்களை மட்டும் இயல்பான முறையில் சொல்லி நம்மை இதயம் கனக்க வைக்கிறார் பிர்தவ்ஸ்.

தொடர்ந்து பல நூல்களையும் எழுதியிருக்கும் இவர் "Firthouse Rajakumaaren "

என்ற பெயரில் முக நூலிலும் எழுதி வருகிறார்.

இவரது எழுத்துப் பணிகளும் இலக்கியப் பணிகளும் மென்மேலும் சிறந்து சமுதாயத்திற்கு நலம் பயக்க இறையை வேண்டி வாழ்த்துகிறேன்.

 
அபூ ஹாஷிமா வாவர்
படத்தில் அபூ ஹாஷிமா வாவர் மற்றும்  பிர்தவ்ஸும்
-------------------------------------------------------------------------------------------
அபூ ஹாஷிமா வாவர் அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர் அபூ ஹாஷிமா வாவர் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

                                                    முகம்மது அலி ஜின்னா

1 comment:

abu haashima said...

நல்ல பதிவு. நன்றிகளும் வாழ்த்துக்களும்