Saturday, December 14, 2013

வெற்றிதரும் பாதை

தொற்றிவிடும் சோம்பலினைத் தூக்கியெறி(ந்து)  போடு

வெற்றிபெறும் நோக்கத்தை விட்டுவிடா தோடு

பற்றிவிடும் வேகமுடன் பாருலகைச் சுற்றிக்

கற்றுதரும் பாடமும்தான் காண்பதெலாம் வெற்றி!


ஊக்கமதை மனத்தினிலே ஊன்றுவதால் கிட்டும்

வாழ்க்கையிலே வாய்ப்புகளாய் வாசலையும் தட்டும்

தாக்கவரும் சூழ்ச்சிகளைத் தாங்கிடவே நில்லு

போக்கினிலே வாழ்த்துகளும் போற்றுதலும் சொல்லும்



பூவுலகும் காட்டுமிடம் பூரணமாய்த் தேடு

நாவுதனில் சொல்வதற்கு நற்புலமை பாடு

தூவுகின்ற வாழ்த்துகளால் தோல்வியெலாம் ஓடும்

மேவுகின்ற நல்வழிகள் மேதினியில் கூடும்


உள்ளமதில் நற்குணங்கள் ஒன்றிவிட வேண்டி

முள்மலரில் காட்டுதல்போல் முன்னறிவைத் தூண்டிக்

கள்மனத்தை அன்புடனே கட்டிவிட நாடி

கொள்ளுமங்கு இன்பமெலாம் கோடியிலும் கோடி


அச்சமின்றிக் கூறிவிடு ஆய்வுரைகள் தந்தால்

துச்சமென்று சொல்லிவிடு துன்பமது வந்தால்

மிச்சமுள வாழ்க்கையினை மேன்மையுடன் வாழு

நிச்சயமாய் ஈருலகும் நிம்மதியால் சூழும்!

"கவியன்பன்"

அபுல் கலாம்

அதிரை ஜாஃபரின் இனிய குரலில் என் கவிதை வரிகள்


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பாதை....

வாழ்த்துக்கள்...