Sunday, December 22, 2013

அம்மா!


அறுபது வயதுக் குழந்தை ஒன்று
அழுகிறது உனைத்தேடி
உன் உயிர் தந்து
என்னுயிராகிவிட்ட தாயே !
அன்று உன்னருகிருந்து
இன்று உனையும்
இழந்து தனிமரமாய்
குளிருக்குள் உன் வடு
தேடும் பறவையானேன் !

சிறு பிள்ளை தன் தாயிழந்த
துயர் எனை வாட்டுகிறது
கோழிக் குஞ்சுகளாய்
உன்னுள் நானிருந்த
நாட்களைத் தேடுகிறேன் !
இறுதி வரை உன் முகம்
காணாது போனதற்காய்
ஏங்குகிறேன்,! .

எனக்காக உன்னலமிழந்து
எனைக்காத்த தாயே !
நீ இருக்கும் வரை எனை
அணுகா வாழ்வின் துயர்
இன்று என்னிருப்பும் கேள்வியாகி
சுமையாகிப் போனது!
என் சோகங்களின்
சுமை தாங்கி நீ

எப்புத்தகத்திலும் அச்சிலில்லை
உன்னிடம் நான் கற்றவைகள்
உன்னுள் உருகிப்போனது
என் கனவுகள்
உடல் கூடாய் உலவுகிறேன்
உன் நினைவில்!

உன் இனிய கனவுகளை
என்னால் நிஜமாக்க முடியவில்லை
இருப்பினும் நீயும் உன்
நினைவுகளும் என்னுடன் அம்மா.
உன் உள்ளம் வேண்டி
நிற்கிறேன் தாயே!– இன்றும்
அறுபது வயதுக் குழந்தை ஒன்று
அழுகிறது உனைத்தேடி
Source ; http://kulasaisulthan.wordpress.com

No comments: