Wednesday, June 30, 2010

அன்புடன் புகாரி

கனடாவில் நான்கு கவிதை நூல்கள் வெளியீடு - வைரமுத்து, மாலன், முத்துலிங்கம், இலந்தை, கந்தவனம் அணிந்துரைகள் - குமுதம், பாரதிதாசன் வையவிரி அவை, புத்தகப்புழு, கவிதை உறவு பரிசுகள் - தமிழ்மாநில அடையாளக் கவிதையாக இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவையின் தேர்வு - அமெரிக்க, ஐரோப்பிய கவிஞர்களுக்கான கவிதைப் போட்டியில் தங்கப் பதக்கம் - அமெரிக்கக் கண்டத்தில் தமிழ்நூல் வெளியிட்ட முதல் தமிழ்நாட்டுக்காரன் - தமிழ் உலகம் அரசவைக் கவிஞன் - உலகின் முதல் இணைய நூல் வெளியீட்டாளன் - உலகின் முதன் யுனித்தமிழ்க் குழும உரிமையாளன்.

ஒரத்தநாடு - நான் பிறந்த ஊரு

தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும்.

தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஓர் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.

வானூறி மழை பொழியும்
.....வயலூறி கதிர் வளையும்
தேனூறி பூவசையும்
.....தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
.....கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
.....பசியாறும் உரந்தையில்

நான் பிறந்தேன்.

நெஞ்சிலும் தோளிலும் உரம் மிகுந்தவர்களின் நாடு உரத்தநாடு என்று சொல்வார்கள்

சரபோஜி மகாராஜாதான் ஒரத்தநாட்டை ஆண்ட மன்னர்.

ஒரத்தநாட்டின் ராணி முத்தம்பாள் தன் உயிரைத் தந்து ஒரு புதையல் எடுத்ததாகவும், அதைக்கொண்டு 40 அன்னசந்திரங்களை மன்னர் நிறுவியதாகவும் சொல்வார்கள்.

அதனால் ஒரத்தநாட்டிற்கு முத்தம்பாள் சத்திரம் என்றும் பெயருண்டு. அந்தக் காலத்தில் ஒரத்தநாட்டுச் சத்திரத்தில் வந்தோருக்கெல்லாம் இலவச உணவு உண்டு.

தற்போது அது ஏழை மாணவர்கள் படிப்பதற்கென்று மாற்றப்பட்டுவிட்டது. அதாவது எந்த செலவுமே இல்லாமல் பள்ளிப்படிப்பை ஏழை மாணவர்கள் இங்கே முடிக்கலாம்

சரபோஜி மகாராஜாவின் அரண்மனையில்தான் நான் என் பள்ளிப்படைப்பை முடித்தேன். அரண்மனையின் சுவர் முழுவதும் நிறைத்த மகாராஜாவின் படம் இப்போதும் கம்பீரமாக அங்கே இருக்கிறது. அது பதினோராம் வகுப்புக்கான வகுப்பறையும்கூட

போர்வீரர்கள் பயிற்சிபெற்ற இடம்தான் எங்களுக்கு விளையாட்டு மைதானம்.

அரணமனைக்கு அருகே தெப்பக்குளம் இருக்கும். மகாராணி நீராடிய இடம்.

ஊரின் இருபக்கமும் இரண்டு பெரும் அரசுத் தோட்டங்கள். கீழத்தோட்டம் மேலத்தோட்டம் என்பார்கள்.

கீழத்தோட்டத்தில் மாட்டுப்பண்ணை கோழிப்பண்ணை என்று சில பண்ணைகள் உண்டு. எனவே விலங்கினங்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் மூன்றாம் ஆண்டு முழுவதும் எங்கள் ஊரில்தான்.

பல ஊர்களிலிருந்தும் பாலும் முட்டையும் கோழியும் வாங்க ஒரத்தநாடு வருவோர் பலருண்டு.

மேலத்தோட்டம் என்பது அருமையான இடம். உயரமாக புற்கள் முதல் பெரும் மரங்கள்வரை வளர்க்கப்படும்.

ஊருக்குச் சற்று வெளியே ஓடுவது கல்யாண ஓடை காவிரியிலிருந்து பிரிந்து பிரிந்து வந்து ஓடும் சிற்றாறு

ஒரத்தநாட்டைச்சுற்றி ஏகப்பட்ட கிராமங்கள் உள்ளன.

ஒரத்நாடு தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது. தஞ்சாவூரிலிருந்து 21 கிலோமீட்டர்கள்தான்.

எனவே என் ஊர் என்று தஞ்சையை அழைத்து என் நான்காம் தொகுப்பில் நான் எழுதிய கவிதை இது:

என் மண்ணில் விழுந்ததும் நான் அழுதேன் அழுதேன். ஏன் அழுதேன்? என் ஊரில் என்னை இறக்கிவிடாமல் இதுவரை ஏனம்மா உன் வயிற்றிலேயே பூட்டிவைத்திருந்தாய் என்ற கோபத்தில் இருக்கலாம். அப்படி என்னதான் இருக்கிறது என் ஊரில்?


வானூறி மழைபொழியும்
.......வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
.......தினம்பாடி வண்டாடும்

காலூறி அழகுநதி
.......கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலம்கூட
.......பசியாறும் தஞ்சாவூர்

தேரோடித் தெருமிளிரும்
.......திருவோடி ஊரொளிரும்
மாரோடி உயர்பக்தி
.......மதமோடி உறவாடும்

வேரோடிக் கலைவளரும்
.......விரலோடித் தாளமிடும்
பாரோடிப் பொருள்வெல்லும்
.......பொன்னோடும் தஞ்சாவூர்

சேறோடி நெல்விளைத்து
.......ஊரோடி உணவளித்து
யாரோடி வந்தாலும்
.......கண்ணோடிக் கறிசமைத்து

நீரோடி வளர்வாழை
.......நிலமோடி இலைவிரிக்க
ஓடோடி விருந்தோம்பி
.......விண்ணோடும் தஞ்சாவூர்

வாய்மணக்கும் வெத்திலைக்கும்
.......வயல்மணக்கும் காவிரிக்கும்
காய்மணக்கும் தென்னைக்கும்
.......கைமணக்கும் பட்டுக்கும்

சேய்மணக்கும் சேலைக்கும்
.......சிகைமணக்கும் பெண்ணுக்கும்
தாய்மணக்கும் பண்புக்கும்
.......தரம்மணக்கும் தஞ்சாவூர்

தலையாட்டும் பொம்மைக்கும்
.......அலைகூட்டும் பாட்டுக்கும்
கலையூட்டும் கோவிலுக்கும்
.......சிலைகாட்டும் சோழனுக்கும்

மழைகூட்டும் மண்ணுக்கும்
.......பிழையோட்டும் தமிழுக்கும்
நிலைநாட்டும் புகழோடு
.......எழில்காட்டும் தஞ்சாவூர்


என்னைப்பற்றி சுருக்கமாக:

1981 - 1999 சவூதி வாழ்க்கை
1999 ஜூலை 14ம் தேதி முதல் கனடிய வாழ்க்கை

பணி: கணினி வல்லுனர் - தகவல் தொழில்நுட்ப ஆலோசகர்
பிறப்பிடம்: ஒரத்தநாடு, தஞ்சைமாவட்டம்

நாலெல்லாம் இணையத்தில் எழுதுகிறேன். வலைத்தளம், வலைப்பூ, கூகுள் யுனித்தமிழ் குழுமம் நடத்துகிறேன். திருக்குறளை புதுக்கவிதையாக்கிக் கொண்டிருக்கிறேன். கனடாவில் தமிழன் என்ற தொடர் கட்டுரை எழுதுகிறேன்

தீபம், திசைகள், தாய், குமுதம், அலிபாபா, இந்திய அரசின் வார்சிகி, அமுதசுரபி, இலக்கியபீடம், கனடா உதயன், கனடா முழக்கம் என்று பல பத்திரிகைகளில் என் கவிதைகள் வந்திருக்கின்றன.

குமுதம் கவிதைப்போட்டியில் பரிசு
உதயன் கவிதைப்போட்டியில் தங்கப்பதக்கம்
தமிழ் உலகம் கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு
பாரதிதாசன் வையவிரி அவை கவிதைப் போட்டியில் முதல் பரிசு
புத்தகப்புழு கவிதைப்போட்டியில் முதல்பரிசு
கனடா எழுத்தாளர் இணையம் உறுப்பினர்
உதயன் கவிதைத் தேர்வு நடுவர்
கனடிய தமிழ் வானொலிகளில் பங்கேற்பு
பல யாகூ தமிழ்க் குழுமங்களில் பங்கேற்பு
தமிழ் உலகம் குழுமத்தின் ஆஸ்தான கவிஞர் (2003-2004)
வெளிச்ச அழைப்புகளுக்கு கவிதை உறவு சிறப்புப் பரிசு

அச்சேறிய கவிதை நூல்கள்

2002 வெளிச்ச அழைப்புகள்
2003 அன்புடன் இதயம்
2004 சரணமென்றேன்
2005 பச்சைமிளகாய் இளவரசி

உலகில் முதன்முறையாக மாலன் தலைமையில் இணையத்தில் என் அன்புடன் இதயம் கவிதைநூல் வெளியீடு

*

அன்புடன் புகாரி (டிசம்பர் 24, 2003)
.....................................................

ஒன்றிரண்டாய்க் கவிவரிகள்
ஒளிந்தொளிந்து முகங்காட்ட
அன்றுஅந்த இளவயதில்
ஆவல்பொங்க எழுதிவைத்தேன்

சொல்லொன்றில் ஏழெழுத்து
சொத்தையதில் மூன்றெழுத்து
சொல்லிநின்ற சேதிகூட
சொந்தமல்ல கேள்விவழி

உள்ளத்தின் பரப்புகளை
உழுதுநின்ற உணர்வுகளைச்
சொல்லும்சுவை நானுணர்ந்தேன்
சொன்னமொழி என்மொழிதான்

வென்றுவிட்ட நினைவெழுந்து
வெள்ளலையாய் வந்துமோத
கன்றுமனத் துள்ளலோடு
கவிஞனெனக் கண்சிலிர்த்தேன்

பெற்றெடுத்த காதுகளில்
புகுந்ததிந்தச் செய்திவெடி
கற்றுபலப் பதவிவேண்டும்
கைநிறைய காசுவேண்டும்

வெற்றுக்கவி ஆகிவிட்டால்
வேதனையே வீடுசேரும்
முற்றுப்புள்ளி இட்டுவிடு
மூட்டைகட்டி கொளுத்திவிடு

தொட்டுஒரு வரிமீண்டும்
தொடர்ந்தெழுதிப் போனாலோ
பட்டையாய்த் தோலுரிப்பேன்
பட்டினியே இருட்டறையில்

கட்டைக்குரல் கடுகடுக்கக்
கண்டிப்பாய்க் கூறிவிட்டார்
முட்டியதுநீர் அன்றேஎன்
முதற்கவிதை பிறந்ததடா

0

பதின்வயதில் விளையாட்டு
பருவத்தின் குறுகுறுப்பு
புதுவனப்பில் தரையிறங்கி
பகல்நிலாக்கள் வலம்போக

மதுக்குடத்தில் மனம்விழுந்து
மதிமயங்கிக் கூத்தாட
உதித்தகவி கொஞ்சமல்ல
ஒவ்வொன்றும் முத்தழகு

காதலெனும் புயல்ஊற்றைக்
கவியேற்றாக் கவியுண்டோ
காதல்நதி குதிக்காமல்
கவிஞனென்று ஆனதுண்டோ

காதலுக்குள் விழும்போதும்
காதலாகி எழும்போதும்
காதலோடு அழும்போதும்
கவிதைகளோ பலகோடி

கவிதைகளால் சிறகசைத்த
காகிதங்கள் பார்வையிட்டு
கவிஞரேயென அன்போடு
கற்றுத்தரும் தமிழய்யா

உயிர்மலர எனையழைத்து
உற்சாகம் தந்திடுவார்
பயிர்வளர்க்கும் உழவன்போல்
பாசமுடன் அரவணைப்பார்

அடுக்கடுக்காய்ப் புத்தகங்கள்
ஆயிரமாய் அள்ளிவந்து
படிக்கவேண்டும் என்றெனக்குப்
பரிவோடு தந்திடுவார்

விடுப்பில்தான் படிக்கவேண்டும்
வேண்டாமிது இப்போது
இடுப்பொடியும் பாடமுண்டு
எப்படியும் முடிக்கவேண்டும்

மருத்துவனாய் எனையாக்க
மனமெல்லாம் கனவுகளாய்
இருக்கின்றார் என்வீட்டில்
எனைவிடுவீர் இப்போது

வருத்தம்தான் எனக்குவேறு
வழியுண்டோ கூறுங்கள்
விருப்பத்தை ஒத்திவைத்து
விடைகூறிப் புறப்பட்டேன்

போதுமான மதிப்பெண்கள்
பெற்றேநான் தேர்ந்தபோதும்
மோதிமுட்டிப் பார்த்தேன்நான்
முடியவில்லை மருத்துவமும்

சாதிவழிச் சலுகையில்லை
சந்துவழி வசதியில்லை
வேதனையில் விளைந்ததடா
வைரமணிக் கவிவரிகள்

0

பட்டமொன்று பெற்றுவிட்டேன்
படையெடுத்தேன் வேலைகேட்டு
வெட்டவெளிப் பொட்டலிலே
வெறுமைகூட்டி நிற்கவைத்து

கெட்டகெட்ட கனவுகளைக்
கண்களுக்குள் கொட்டிவிட்டு
பட்டமரம் போலஎன்னைப்
பாதையோரம் நிறுத்தியது

எல்லோரும் மன்னரென்ற
என்நாட்டு நாற்காலி
அல்லாடும் மனத்தோடு
அரபுநிலம் புறப்பட்டேன்

சொல்லவொருச் சொல்லுமில்லை
சுகம்பெற்றேன் சத்தியமாய்
இல்லாமைப் பேய்விரட்டி
என்வீட்டைக் காத்திட்டேன்

பாலைவனச் சாலைகளில்
பார்த்ததெலாம் நெருப்பெனினும்
ஊளையிடும் வறுமைபோக்கி
உறவுகளைக் காத்துநின்று

மாலையிட்டு மக்களீன்று
மனம்முழுதும் பசுமைபூக்க
வேலைதந்தப் பாலைவனம்
வேதனையைத் தீர்த்ததெய்வம்

பெற்றமண்ணை உறவைநட்பை
பிரிந்துவந்த சோகவிதை
நெற்றிவரி இழுத்துச்சென்ற
நிலம்விழுந்து முட்டிமோத

பெற்றதுன்பம் கொஞ்சமல்ல
பிரிவென்பதும் வாழ்வுமல்ல
கற்றபெரும் அனுபவங்கள்
கவிதைகளாய் வெடித்ததடா

0

வருடங்கள் மூவாறு
வாழ்வளித்தப் பாலையிலே
உருண்டோடி விட்டபின்னர்
ஊர்தேடிப் புறப்பட்டேன்

அரும்புகளின் கல்வியெண்ணி
அப்படியே திசைமாற்றம்
அருமைநிலம் கனடாவில்
அவசரமாய்க் குடியேற்றம்

கனவுகண்ட புதியபூமி
கருணைமனத் தூயவானம்
இனங்களெலாம் இணைந்துபாடும்
இனியரதம் கனடியமண்

குணக்கேடு மதவெறியர்
குத்துவெட்டு பகையில்லா
மனிதநேயம் போற்றுமிந்த
மண்பெருமை விண்பாடும்

இணையத்தின் தமிழுக்கு
இங்குவந்தே என்வணக்கம்
முனைதீட்டிக் கவிபாட
முத்தமிழின் புதுச்சங்கம்

அணையுடைத்துக் கவிபாடும்
ஆற்றுவெள்ள உற்சவம்போல்
இணையமெங்கும் தமிழ்வாசம்
இதயமெங்கும் தேரோட்டம்

குளிர்தீண்டக் கவிகொஞ்சம்
கொட்டும்பனி கவிகொஞ்சம்
மலர்வண்ணம் இலைதாவும்
மரக்கிளையின் கவிகொஞ்சம்

வளர்தமிழை விண்ணேற்றி
உலகமெலாம் மழைபொழியும்
புலம்பெயர்ந்த ஈழத்தவர்
புகழ்பாடி கவிகொஞ்சம்

எழுதியெழுதி கவிதைகளை
இணையமெங்கும் தூவினேன்
எழுதிவைத்த தொகுப்பிரண்டை
இங்கிருந்தே வெளியிட்டேன்

அழகுதமிழும் கணினிமடியும்
அமுதூட்டித் தாலாட்ட
அழகழகாய்த் தேன்மழையாய்
அருங்கவிதை பொங்குதடா

0

பார்க்கவரும் விழிகளெல்லாம்
பார்ப்பதற்கே வருவதில்லை
கோர்க்கவரும் விரல்களுமே
கோர்ப்பதற்கே வருவதில்லை

ஊர்ப்பாட்டைக் கேட்டிருந்தால்
உன்பாட்டை மண்மூடும்
மார்தட்டித் திடங்கொண்டால்
மலைத்தொடரும் பொடியாகும்

யானைநடை போட்டாலும்
இடறிவிழும் காலமுண்டு
தேனமுதச் சொல்லெடுத்துத்
தித்திக்கப் பொய்யுரைத்து

பூனைபோலப் பாலருந்தப்
புறப்பட்டு வருவார்பின்
கானகத்து முட்புதரில்
கதியற்று நிறுத்திடுவார்

நிலவோடு விழிகளாட
நிலத்தோடு கால்களாட
விலகியோடும் பனிமேகம்
விருந்தாகும் சிலநேரம்

தழுவவரும் யோகங்களைத்
தடைபோடும் பாவங்கள்
நழுவிவிழும் அடிகளுக்கும்
நாடிவரும் ஒத்தடங்கள்

கோடுகளில் நதியோட்டம்
கரைகளிலோ நெஞ்சோட்டம்
ஏடுகளில் காணாத
எத்தனையோ கனவோட்டம்

கூடிவரும் வாய்ப்புகளில்
குறைவில்லாக் கொண்டாட்டம்
தேடுகின்ற அமைதிமட்டும்
தென்படாத திண்டாட்டம்

எத்தனையோ இவைபோல
என்வாழ்வில் காண்கின்றேன்
அத்தனைக்கும் மருந்தாக
ஆனதொரு மந்திரந்தான்

சொத்தைகளும் சரியாகும்
சுடர்வெற்றி வாழ்வாகும்
நத்தைபோல நகர்ந்தாலும்
நம்பிக்கை முன்னிறுத்து

நம்பிக்கை வளர்த்தெடுக்க
நாளெல்லாம் கவியெழுதி
தெம்புக்கோர் பாட்டென்று
திசையெங்கும் பாடவைத்து

அன்புமனம் அமுதளக்க
அன்னைத்தமிழ் எழுதுகிறேன்
அன்புக்கரம் வளைத்துலகை
அரவணைத்து நெகிழ்கின்றேன்


குர்ஆனிலிருந்து..துவா--Quranic Duas in Tamil

   
குர்ஆனிலிருந்து..துவா

1. எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201

2. எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! 2:286

கவிதை : கூடா நட்பு

Xavier_kavithai
உன்
ஊசிக்குத்தல்கள்
இணைக்க
என்றே நினைத்திருந்தேன்
நீ
நூல் கோர்க்காமல்
குத்திக் கொண்டிருந்த
சேதி தெரியாமல்.
நீயோ
இன்னும்
குத்திய இடத்திலேயே
குத்திக் கொண்டிருக்கிறாய்
என் கிழிசல்
ஒட்டுப் போடப்படவில்லை.
காயங்களின்
காலங்கள் நீண்டபோது
என்
உறக்கம் கலைத்து
எட்டிப் பார்த்தேன்,
நூல் இல்லா
நிலையும் அறிந்தேன்.
காரணமற்ற காரணங்களுக்காய்
என்
முதுகைக் காட்டிக் கொண்டிருந்த
அறியாமையால்
இன்னும் கொஞ்சம்
கூடிப் போனது
வலி.
நூல் கோர்த்துக் கொள்
இல்லையேல்
கிழிசலோடு எனை
வாழவிடு என்று
அப்போது தான்
முதன் முதலாய் சொன்னேன்.
ஊசிக்குக் காதில்லை
என்கிறாய்
சிரித்துக் கொண்டே.
அப்போதே
என்னை
ஆடை மாற்றவேனும்
அனுமதித்திருக்கலாம்
நீ
 சேவியர்

நட்பு

 தெள்ளிய நீரில்
கழுவுவதற்கு முன்
அந்த முகம்
பார்க்கச் சகிப்பதாயில்லை.

நட்பின் கருணை
வாய்க்கும் காலங்களில்
கள்ளிமரங்களும்
ரோஜாக்களையே மலர்த்துகின்றன.

பயணத்தின் இனிமையை
பேசிக் கொண்டிருக்கும் நதிகளும்
பார்க்கப்படலாம்
பாதைகளின் குறுக்கீடாய்.

துயரமென்பது வானமல்ல
கடந்துபோகும் மேகங்களேயென்று
பாடிப் பறக்கின்றன பறவைகள்
வானவில் மகிழ்ச்சி.

திறந்திருக்கும் சுவர்க்கங்களில்
தனித்து நுழைய விருப்பமற்று
காத்துக் கிடக்கிறது தென்றல்
யுகங்கள் தோறும்.

கூடவே பிறந்த
சுயநலத்தை வெல்வதற்கு
நட்பைவிடவும்
நல்லவழியுண்டா?
- இப்னு ஹம்துன் 

நன்றி: www.keetru.com



 Source : http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1169:2009-11-12-06-34-20&catid=2:poems&Itemid=88

Monday, June 28, 2010

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்

  அன்புடன் புகாரி

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்


கண்ணதாசன் திரையிசைப்பாடல்களில் பல சுவாரசியங்களைப் புகுத்தியவர். தேன் தேன் என்று முடிவதாகவும், பால் பால் என்று முடிவதாகவும், நிலா நிலா என்று முடிவதாகவும் காய் காய் என்று முடிவதாகவும் இன்னும் சில சொற்களில் முடிவதாகவும் தேன் சொட்டும் பாடல்களை எழுதிக் குவித்தவர்.

அவர் காலத்தில் திரை இசை, குத்துப் பாட்டுக்களில் ரத்தம் கொட்டி நிற்காமல் கண்ணதாசனின் இலக்கிய தாகத்திற்கு ஏற்ப மென்மையாய் இருந்தது. அதுவே கண்ணதாசனுக்கு வசதியாய் இருந்தது.

இப்போது தேன் தேன் என்று தேன் குழைத்து எழுதிய கண்ணதாசனின் தேன் பாடல் ஒன்றை நாம் சுவைப்போமா? திரையிசைப்பாடல்களுக்குள் இலக்கியத்தை அள்ளிப் பொழிந்த அந்த இன்பத்தை காலங்கள் மாறினாலும் மாறாத சிலிர்ப்போடு அனுபவிப்போமா?

இந்தப் பாடலை கவிஞர் 1965ல் எழுதி இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த கே.வி.மகாதேவன் இசையில் சுசீலாவும் ஸ்ரீனிவாசும் பாடிய அற்புதப் பாடல். படம் வீர அபிமன்யு.

ஓர் அழகான காதல் காட்சி. தலைவனும் தலைவியும் முழுநிலவின் மடியில் விழுந்த வெண்ணைக் கட்டிகளாய் உருகிக் கரைந்து காதல் பொழிகிறார்கள் கண்மயங்கி கவிதை மொழிகிறார்கள். இதுதான் பாடலின் சூழல். இதற்கு கண்ணதாசன் எழுதிய முதல் மூன்று வரிகளைப் பாருங்கள்.

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்


எத்தனைத் தேன்? முன்றே வரிகளில் ஏழு தேன் அதிலும் மலைத்தேன் என்று ஒரு சிலேடைத் தேன்.

அவன் அழகே உருவான அவளைக் காதலாய்ப் பார்த்தானாம். அவளும் அவனிடம் மயங்கி அப்படியே காதல் பொங்கப் பார்த்தாளாம். அந்தப் பார்வைகள் தந்த உடனடி ஒப்புதலின் காரணமாக அடுத்த நிலைக்குச் சென்றானாம் அவன். அதாவது அவளைக் கண்டு இதழ் அவிழச் சிரித்தானாம். அதுவும் அவளிடம் ஒப்புதல் ஆனதும் அதோடு நிற்காமல் வா வா என் அருகே என்று அவளை அழைத்தானாம்.

காதலென்றால் காலங்கள் தோறும் ஆண்கள் முன்னேறிக்கொண்டேதானே இருப்பார்கள். அவனது அழைப்பை ஏற்று அவளும் அவனிடம் வந்துவிடுகிறாளாம். அடடா இப்படியல்லவா இருக்க வேண்டும் பெண் என்று கற்பனை ஓடுகிறதா? கொஞ்சம் அந்தக் குதிரையைக் கட்டிவையுங்கள். அவள் அவனுக்கு உரிமையானவள். அதன் காரணமாகவே அவள் காயாய் நிற்காமல் கனியாகவே குழைகிறாள்.

அழைத்ததும் வந்தவளைச் சுவைக்கிறானாம் அவன். அடடா இவள் உண்மையிலேயே தேன் என்று முடிவு செய்துவிடுகிறானாம். அவளிடமிருந்து பெற்ற காதல் சாதாரணத் தேன் அல்ல சுவை மிகுந்த மலைத்தேன் என்று கண்டு மலைத்து நிற்கிறானாம். எத்தனை அழகு பாருங்கள் இந்தத் தேன் தேன் வரிகள். மலைத்தேன் என்ற சொல்லுக்கு இரு பொருள். ஒன்று மலைப் பிரதேசத்திலிருந்து எடுத்த தேன் மற்றொன்று அதிசயத்தில் அப்படியே மலைத்துப் போய் நிற்பது.

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இவரென மலைத்தேன்


இனி அவள் சொல்கிறாள். அவனை ஆமோதிப்பதுபோலவே சொல்கிறாள். இந்த ஒத்த மனமும் ஒத்த இசையும் ஆணுக்கும் பெண்ணும் தரும் சுகம் கொஞ்சமா? அவளும் அவனைப் பார்த்தாளாம், பின் சிரித்தாளாம், அவன் அழைக்கும் முன்னரே அவன் பக்கத்தில் செல்லத் துடித்தாளாம். இது எப்படி இருக்கிறது? அவனைப்போலவே அவள் அவனைத் தேன் போல் தித்திப்புடையவன் என்றே நினைத்தாளாம். ஆனால் அவன் காதல் மட்டுமல்ல அவனே ஒரு சுவையான மலைத்தேன் என்று அவள் அப்படியே மலைத்துப் போய்விட்டாளாம்.

கொடித்தேன் இனி எங்கள் குடித்தேன் என
ஒரு படித்தேன் பார்வையில் குடித்தேன்


மெல்லிய இடையைக் கொண்ட இவள் ஒரு கொடியைப் போன்றவள் அதாவது இவள் ஒரு கொடித்தேன். இனியெல்லாம் இவள் எங்கள் வீட்டுக்குச் சொந்தமானவள். எங்கள் குடியைச் சேர்ந்தவளாகிறாள். இந்தக் கொடித்தேன் இனி எங்கள் குடித்தேன் ஆகிறாள் என்று எத்தனை அழகாகச் சொல்கிறார் பாருங்கள் கண்ணதாசன். அடடா என்று வியக்க வைக்கிறதல்லவா? இப்போது அவள் அவனை ஆழமாய்ப் பார்க்கிறாள் அதில் அகிலத்தின் காதலெல்லாம் ஒன்று சேர்ந்து நிற்கிறது. அதை எப்படிச் சொல்கிறார் கண்ணதாசன் பாருங்கள். ஒரு படி நிறையத் தேன் குடித்ததுபோல அவள் பார்வையைக் குடித்தேன் என்கிறார். பெண்ணிடம் பல்லாயிரம் அழகுகள் உண்டு. ஆயினும் அவள் பார்வை என்ற அழகுக்குமுன் எல்லாமும் ஒன்றுமில்லை என்று ஆகிவிடுகிறது. அந்தப் பார்வைதான் காதலின் மொழி. பருவக் கண்களை அதன்பின் உறங்கவே விடாத அற்புதம்.

துளித்தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்
அணைத்தேன் அழகினை ரசித்தேன்


அவள் அழகை எல்லாம் ஒரு துளியும் சிந்தாமல் அனுபவித்தானாம். அப்படியே அள்ளி எடுத்து அணைத்தானாம் பருவ அழகையெல்லாம் முழுவதும் ரசித்தானாம். வார்த்தைகள் எத்தனை மதுரமாய் வந்து விழுந்திருக்கின்றன பாருங்கள். .

மலர்த்தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்


அழகிய மலரில் தேன் நிறைவதைப்போல இளமை அழகு நிறைய பருவம் எய்தினாளாம் அவள். அதுமட்டுமல்ல அவனுக்காகவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தாளாம், உரிய வயது வந்ததும் அவனையே மணந்தாளாம். இதைவிட அற்புத வாழ்வு வேரென்ன இருக்க முடியும்? நட்பும் நட்பைத் தொடர்ந்த காதலும் அந்தக் காதலைத் தொடர்ந்த கல்யாணமும் அமைந்துவிட்டால், வேறென்னதான் வேண்டும் வாழ்வில்?

எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனித்தேன்
இல்லாதபடி கதை முடித்தேன்


சரி கல்யாணமும் ஆகிவிட்டது. அடுத்து? தேன் நிலவுதானே? தேன் நிலவில் சுகம் என்பது இருவருக்கும் சமம் அல்லவா? அங்கே சுகம் எடுக்கவும் செய்ய வேண்டும். சுகத்தை அள்ளிக் கொடுக்கவும் செய்யவேண்டும். அவர்கள் அப்படியேதான் செய்தார்கள். அதுமட்டுமா அனுபவிக்கும்போது ஒரு முழுமை வேண்டுமல்லவா? தமிழே நாணும் வண்ணம் எத்தனை அழகாக அதை கண்ணதாசன் எழுதுகிறார் பாருங்கள். இனி அவளிடம் எஞ்சியதாய் ஒரு துளி தேனும் இல்லை என்று ஆகும் அளவுக்கு அந்தக் காதல் லீலைக் கதையை அழகாக சுவையாக சுகமாக முடித்தானாம் :)

கலக்கிட்டியே கண்ணதாசா!

நன்றி http://anbudanbuhari.blogspot.com/2009/12/blog-post_1312.html

அப்பா...

அப்பா...


எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...



முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...



அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது



உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...



கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?



சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?



லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...



அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என
இன்று
அப்பா சென்ற பின்னர்
நான் யார் செல்லம்..?



எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?



சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு



நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..



அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...

நன்றி

Saturday, June 26, 2010

மனம் மகிழுங்கள்-3

“சும்மா நாலு தும்மல் தும்மினாலும், என்ன தான் பயமோ ? உடனே டாக்டரிடம் ஓடுகிறார்கள். நான் சின்ன வயசில தடுப்பூசிக்காகப் போனதுடன் சரி; அப்புறம் இத்தனை வருஷமாச்சு --. டாக்டர் வீட்டு அட்ரஸ் கூடத் தெரியாது எனக்கு.”

கேட்டிருக்கிறீர்களா இதை? அல்லது எப்பொழுதாவது யாராவது எங்காவது பத்திரிகைப் பேட்டிகளில் இப்படிச் சொன்னதைப் படித்துள்ளீர்களா?

”இருந்தாலும் ரொம்ப ஓவர் அலட்டல் இது,” என்று அப்பொழுது உங்களுக்குத் தோன்றியிருக்கும். அவர்கள் மிகைப்படுத்திப் பேசுவதாகவும் எண்ணியிருந்திருப்பீர்கள். ஆனால், உண்மையில் சிலருக்கு அப்படி ஒரு பாக்கியம் அமைவதுண்டு.

எப்படி சாத்தியம்?

சாதிப்பது மனதுதானாம்!

அதாவது, அவரது மனதின் பாஸிட்டிவ் வடிவமைப்பாம். அது ஆக்க சிந்தனையுள்ள மனது. அதற்காக அவர்களை, சிக்கன் குன்யா, swine flu வைரஸ்களெல்லாம் வெறுத்து ஒதுக்கி ஓடும் என்பது அர்த்தமில்லை. யதேச்சையாய்த் தாக்கும் சில்லறை நோய்களிலிருந்து வலிமையான மனது நம்மைக் காக்கும் என்கிறார்கள்.

இது ஒன்று!

ஆச்சா?

அடுத்தது, சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்க நேரிடுவது.

அது என்னவாம்?

பிடித்த நடிகரின் படம் வெளியான முதல் நாள். தியேட்டர் ஹவுஸ் ஃபுல். லஞ்ச லாவண்யத்தைச் சகட்டு மேனிக்குத் திட்டி ”உருப்படுமா இந்த நாடு” என்று பொருமும் மகா அக்கறையுள்ள சிட்டிசன், கள்ள மார்க்கெட் டிக்கெட்டாவது கிடைக்காதா என்று பரபரப்பாய் அலைந்து கொண்டிருப்பார். அப்பொழுது தான் இவர் பக்கத்தில் அசால்ட்டாய் அவன் வந்து பைக்கை நிறுத்தி விட்டு இறங்க, வேகமாய் அவனை நெருங்குவார் இன்னொருவர். “ஸார் எக்ஸ்ட்ரா டிக்கெட் ஒன்று இருக்கிறது வேண்டுமா?”

இவர் காதில் அது விழுந்து, சுதாரிப்பதற்குள், படம் ஆரம்பிக்கப்போகும் அவசரத்தில் அந்த இருவரும் போயே போயிருப்பார்கள். சிலர், சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்க நேரிடுவதையும் ஆக்க சிந்தனையுள்ள மன வடிவமைப்பு என்கிறார்கள். பெரும்பாலும் அது அவர்கள் வாழ்க்கையில் அப்படி நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

வேறு சிலர் உள்ளனர். தொட்டதெல்லாம் பொன்னாய்த் துலங்கும். மண்ணும் பொன்னாகும். பலர் அதிர்ஷ்டம் என்கிறார்கள். மனோவியலாளர்களோ, ”பிலீவ் மீ. அதுவும் பாஸிட்டிவ் வடிவமைப்பு” என்று அடித்துச் சொல்கிறார்கள்.

சில வருடங்களுக்குமுன் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பலர் திடீரென்று லட்சாதிபதி, கோடீஸ்வரன் என்றெல்லாம் ஆகிவிட்டார்கள். உபயம் ஐ.டி. என்றார்கள்; சாஃப்ட்வேர் என்றார்கள். இது பொதுவாய்ப் பலருக்கு ஒரே நேரத்தில் நிகழும் விதி. அது வேறு.

இந்தச் சிலர் யாரென்றால், ”மனுஷன் குடியிருப்பானா அந்தக் காட்டிலே” என்று நாம் நினைக்கும் ஓர் அத்துவானப் புறநகரில் என்னவோ நினைத்து மனை வாங்கியிருப்பர் ஞான திருஷ்டியெல்லாம் எதுவும் இருந்திருக்காது. ஆனால் சரியாக அந்தப் பகுதியில் வந்து சேரும் வெளிநாட்டுக் கார் கம்பெனி ஒன்று சில ஆயிரம் ரூபாய்களில் வாங்கப்பெற்ற மனைகளை இலட்சங்களில் விலைபேசி வாங்கி, மனைக்குச் சொந்தக்காரர்களை ஓவர் நைட்டில் லட்சாதிபதியாக்கிவிடும்.

அடுத்து, பெரிய நிர்வாக இயல் பட்டமோ அதில் நிபுணத்துவமோ இல்லாத சிலருக்கு, எளிமையான ஓர் இயல்பு இருக்கும். வெளுத்ததெல்லாம் பால் என்பது போல் எல்லோரையும் நம்புவார்கள். மனதில் விகல்பம் ஏதுமில்லாமல் பழகக் கூடியவர்களாய் இருப்பார்கள். எதைச் செய்தாலும் எளிதாய் எடுத்துக் கொண்டு, இனிமையாய்க் காரியமாற்றும் மன வடிவமைப்பு அவர்களுக்கு இருக்கும்.

எதிர்வினை?

அவர்களிடம் பாசம் கொண்ட, எப்பொழுதும் நல்லவிதமாய் அவர்களுடன் பழகும் நண்பர் கூட்டம் ஒன்று விரிவடையும். அவர்களுக்கு உதவ அந்த நட்பு வட்டம் எப்பொழுதுமே ஆர்வமாயிருக்கும். அந்த நட்பு வட்டத்திடம் தமக்கு வேண்டிய உதவிகளை கோரிப் பெறுவது இவர்களுக்கு எளிதாகவே இருக்கும்.

”வெரி நைஸ். கேட்க நல்லாயிருக்கு. இதைப்போல நல்ல ஆக்கபூர்வ வடிவமைப்புகள் என் மனதிலும் ஏற்பட வேண்டும். மாடல் ஆர்டர் செய்தால் எங்காவது கிடைக்குமா?” என்று நெகடிவ்வாளர்கள் யோசிக்கலாம். ”பிறக்கும் போதே கூடப் பிறந்த குணம் சார். அதெல்லாம் நீரைப் பீய்ச்சி அடித்தாலும் போகாது” என்று அவர்களில் வேறு சிலர் சலித்துக் கொள்ளலாம்.

“அப்படியெல்லாம் இல்லை. நாம் மாறினால் நம் வாழ்க்கையும் மாறும்” என்று மனவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஏனாம்?

அதுதான் இயற்கையின் நியதி. பிறக்கும் போதே உடன் பிறந்ததை அப்படி எளிதாய் மாற்றி விட முடியுமா என்ன? எளிதல்ல; ஆனால் சாத்தியம். நிச்சயமாய் சாத்தியம்.

“எப்படி? பிரச்சனையே இல்லையா?”

உண்டு. அதில் பிரச்சனை உண்டு!

தடை!

மாற வேண்டும் என்று நினைக்கும் போதுதான் தடை ஒன்று ஏற்படும். மாற்றம் எளிதாய் நிகழவிடாது அந்தத் தடை தடுக்கும். அது நியதி.

“தொந்தி, தொப்பை, மேல் மூச்சு, கீழ் மூச்செல்லாம் வாங்குகிறது. என்னவோ சிக்ஸ் பேக்காமே அதெல்லாம் வேண்டாம், குனிந்து கால் விரலைப் பார்க்க முடிந்தால் உத்தமம். அப்பொழுதாவது மனைவி, ஏதேனும் கொஞ்சம் காதல் பார்வை பார்க்கக் கூடும்“ என்று ஆசை ஏற்பட, பலநாள் மனப் போராட்டத்திற்குப் பிறகு டயட் முடிவிற்கு வந்திருப்பீர்கள். அந்த வாரம் தான் நெருங்கிய உறவின் திருமணமும் நாலைந்து நாள் வைபவமுமாக ஆடு, கோழியெல்லாம் பலவிதத்தில் வடிவமைக்கப்பட்ட உணவு, பிரியாணி, நெய் ஊறும் பலகாரம் (சைவ உணவாளர்கள் பிஸி பேளா பாத்திலிருந்து குலாப்ஜாமூன் வரை கற்பனை செய்து கொள்ளவும்) என்று உங்கள் முன் தோன்ற……. உங்களது தீர்மானம் காரியக் கமிட்டி கூட்டமெல்லாம் இல்லாமல் தள்ளி வைக்கப்படும்.

ஒருவழியாய் அது முடிந்தால் அடுத்த வாரம் உங்கள் தெருமுனையில் சுத்தமான, சுகாதாரமான பேக்கரி தொடங்கப்படும். அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போது, மணக்கும் சமூசாவும் பக்கோடாவும் இன்ன பிறவும் உங்கள் தீர்மானத்தைத் தள்ளிப் போட வைக்கும். அதற்கடுத்த வாரம் திடீரென ஒரு வேலை நிமித்தம் மனைவி ஊருக்குக் கிளம்பிப் போக நேரிட………. எந்த ஹோட்டலில் டயட் மீல்ஸ் போடுகிறார்கள்? இப்படியே ஏதோவொரு தடை ஏற்பட்டு, ஏற்பட்டு, டயட் தீர்மானம் என்பது காவிரி ஆணையத் தீர்ப்பாக மாறிவிட்டிருக்கும்.

மாற்றம் நிகழத் தடை இப்படித்தான்.

சம்பாதிக்கும் பணமெல்லாம் தண்ணீராய் இறைந்து விரயமாகிறதே! இந்த மாதம் எப்படியாவது ஒரு தொகையைச் சேமித்து விடவேண்டும் என்று அந்தப் பெண் மேனேஜர் தீர்மானித்து, “இந்த மாதம் புதுப் புடவை, புதுச் செருப்பு, புது லிப்ஸ்டிக், எல்லாவற்றி்ற்கும் நோ!“ என்று அப்படி இப்படி பணம் சேமித்து வைக்கும் போதுதான் அந்தப் படுகோர விபத்து நிகழும். படு பத்திரமாய் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த அவரது ஸ்கூட்டியை இடுத்துத் தள்ளிவிட்டு போயிருப்பான் ஆட்டோக்காரன். இன்ஷுரன்ஸும் இல்லை. மெக்கானிக் பார்த்து விட்டு, ரிப்பேருக்கு அளித்த எஸ்டிமேட் அவரது அந்த மாதச் சேமிப்பையெல்லாம் தாண்டியிருக்கும்! இதில் அவர் பிழை என்ன? ஒன்றும் இல்லை. மாற்றம் நிகழத் தடை, அவ்வளவே!

அங்கே அப்படியென்றால், மற்றொரு குடும்பத்தில் நிகழ்ந்தது என்ன? அங்கே மனைவிக்கு எப்பொழுதுமே குறை.

“உங்களை என்ன ஹீரோ மாதிரியா டிரெஸ் பண்ணிக்கச் சொல்றேன்? கொஞ்சம் மேட்சா, ஷர்ட், கொஞ்சம் அழகான ஷு, ஒரு நல்ல சலூன் விஸிட், அப்படின்னு நாசூக்கா, டீஸென்ட்டா இருக்கச் சொல்றேன்.” எனக் கணவனிடம் முறையிட,

“எல்லாம் இது போதும். இந்த வயசில என்னத்தை ஸ்டைல்?”

“ஸ்டைலைப் பற்றி யாரு சொன்னது? இப்படி ஏனோ தானோன்னு போட்டுக்காம இருந்தா பத்தாது.”

மனைவி மற்றும் பிள்ளைகளின், அங்கலாய்ப்பு, அன்புத் தொல்லை தாங்காமல் அன்று மேட்சாய் டிரஸ் தெரிந்தெடுத்து, அக்கறையாய் அயர்ன் செய்து அணிந்து தெருவில் இறங்கினார் அவர். பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது அது தோன்றியது. அவசர அவசரமாய் வீட்டிற்குள் வந்து பார்த்தால்…….. சந்தேகமேயில்லை, பேண்ட் பின்னால் தையல் பிரிந்திருந்தது. “எனக்கு இதெல்லாம் சரிப்படாது. அப்போதே சொன்னேனே கேட்டியா?” என்ற இரைச்சல் கேட்டு ஓடிவந்தார் மனைவி.

என்ன பெரிய பிரச்சனை இங்கு?

மாறாதே நீ! அது உனக்கு ஒத்துவராது என்று தடை!

நிகழும்! இப்படியெல்லாம், அல்லது இப்படி ஏதாவது, நிகழும்.

ஆனால் நமக்கு சரிப்படாது என்று பழைய நிலைக்குத் திரும்பிவிடுவதோ, முயற்சிகளை கைவிடுவதோ கூடாது.

உணர வேண்டும்!

என்னவென்று?

மாற்றம் எதிர்ப்புக்கு உட்பட்டது என்பதை உணர வேண்டும்.

எனவே மாற வேண்டும் என்று யோசித்தவுடன் எதிர்ப்புக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்!

னம் மகிழ, தொடருவோம்...

நன்றி http://www.inneram.com/manam3மனம் மகிழுங்கள்-3

Friday, June 25, 2010

ஆங்கிலத்தில் நர்த்தனமே ஆடட்டும்



அன்புடன் புகாரி


கனடாவில் பிறந்தாலும்
தமிழ்ப் பிள்ளை
தமிழ்ப் பிள்ளைதான்

ஆங்கிலம் அவசியம்
தமிழோ இதயம்

நாக்கு
ஆங்கிலத்தில்
நர்த்தனமே ஆடட்டும்
மூக்கு மட்டும்
தமிழையே சுவாசிக்கட்டும்

http://anbudanbuhari.blogspot.com/2009/11/blog-post_2496.html

பெண் மனது மற்றும் ஆட்சிகள் உனதாக...

  -எம்.ரிஷான் ஷெரீப்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியான 'விகடன் மகளிர் சக்தி' மற்றும் 'மனிதம்' இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட எனது இரு கவிதைகள்.


பெண் மனது

அவர்கள் வரட்டும்
எது கொண்டோ உடைத்துப் போன
ஓர் ஆழ்துயர் மனதை
எப்படிச் சரிப்படுத்துகிறார்களென
வேடிக்கை பார்க்கலாம்

அது ஒரு பெண் மனது
பால்யம் முதலாய்ப் பலர் சேர்ந்து
பருவங்கள் தோறும்
பல எல்லைகளையும் அணைகளையும்
வளையங்களையுமிட்டு
இன்னும் பல இடர்களை ஒன்றாய்ப் பின்னி
இறுக இறுகச் சேர்த்துக்
கட்டிய மனது

முன்பும் அது சிதைந்தது
சிறுகச் சிறுகச் சிதைந்து வருகையில்
திரும்பவும் வந்து
பெருந்துயரொன்று கொண்டு
அவர்கள்
அதனை மீளச் செப்பனிட்டார்கள்

காலத்திற்கு என்ன தெரியும் - அவளது
கண்ணீர் பிசைந்து
அவர்கள் சீர்படுத்தப் படுத்த
மீண்டும் சிதிலமாகவே செய்தது
இப்பொழுதைப் போல

அவர்களும் வந்தனர்
ஓட்டைகள் வழியே நழுவிய துயர்களை
நினைவுகள் கொண்டு மீள அடைத்தனர்
மறதியில் உதிர்ந்து
காணாமல் போனவற்றை
மீளப் பெறமுடியாமல் போக
அவதூறுகள் கொண்டும்
கடுஞ்சொற்கள் கொண்டும்
அவளுக்கு வலிக்க வலிக்க
மகிழ்வோடும் அலுப்பில்லாமலும்
இதயம் நிறைந்த குரூரத்தோடும்
மீளவும் மெருகேற்றினர்

அவர்கள் பார்வையில் இக்கணத்தில்
அழகு பெற்றதாகி விட்டது அது

அது ஒரு பெண்மனது
ஆம் அவள் ஒரு பெண்

நன்றி
# விகடன் மகளிர் சக்தி
# பெண்ணியம்



ஆட்சிகள் உனதாக

அநிச்ச நிலவதனைப் பிடித்து
அவளது வதனத்தில் இடுகிறாய்
மீன்களைப் பிடித்து அவளது விழிகளிலிட்டுத்
துள்ளத் துடிக்க நீர் சிந்தப் பார்த்து ரசிக்கிறாய்

உன்னுடையது போன்றதேதானே
அவளுடையதும்
எனினும்
கழுத்தைச் சங்கென்கிறாய்
பற்களை முத்தென்கிறாய்
கன்னங்களைக் கனிகளென்கிறாய்
உதிர்ந்த ஒற்றை முடியை
உயிர்த்தோகை என்கிறாய்
உன் முன்னால்
வெட்டி எறிந்த நகத்துணுக்கைக் கூடப்
பிறைநிலவென வர்ணிக்கிறாய்
இன்னுமின்னும்...

அஃறினைகளுக்காளாக்கி
அவளை வதைத்தது போதும்
எப்போதவளைச் சக மனுஷியென்பாய் ?


நன்றி - மனிதம் இதழ்

 -எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

http://www.rishanshareefpoems.tk/பெண் மனது மற்றும் ஆட்சிகள் உனதாக...


Thursday, June 24, 2010

கொஞ்சம் சிரிங்க....!

கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?"
"கோழியினால்தான் முட்டை வந்தது"
"எப்படி?"
"ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே
முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன்.
ஆனால் அதோடு கோழி வரவில்லை
                                      *******************************************
பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட
செய்தி நடந்துச்சிம்மா.
அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
அம்மா: கெட்ட செய்தி
பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க
                                            *******************************************
நீதிபதி: பத்தாயிரம் ஒரு மாத ஜெயில் தண்டனை இதுல எது வேனும் உனக்கு.
குற்றவாளி: ஹி.ஹி...பத்தாயிரமே போதும் சாமி எப்டியாச்சும் பொட்டிக்கடை
வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.
                                           *********************************************
(ஒருவர் மஞ்சப்பை வைத்துக் கொண்டு LIC க்கு முன்னால் நிற்கிறார். ஒரு
சென்னை லோக்கல் ரவுடி அவரிடம் )
ரவுடி: இங்க என்ன பண்ணிட்டு இருக்கிறஒருவர்: எவ்வளவு பெரிய உயரமான
கட்டிடம் பாத்துட்டு இருக்கேன்.
ரவுடி: அப்படியெல்லாம் சும்மா பாக்க கூடாது. நீ எத்தனை மாடி வரை பாத்தியோ அதுக்கு எனக்கு பணம் தரனும். ஒரு மாடிக்கு பத்து ரூபாய் குடு.
ஒருவர் :நான் 4 வது மாடி வரைக்கும் தான் பாத்தேன் இந்தா பிடி (40 ரூபாய்
கொடுக்கிறார்)
ஒரு பொது ஜனம்: என்னங்க அந்த ரவுடி ஏமாத்தி பணம் வாங்கிட்டான்
உங்களிடம்ஒருவர்: அவன் எங்க ஏமாந்தான் நான்தான் ஏமாத்திட்டேன். நான்
பாத்தது ஏழாவது மாடி அவனிடம் 4 வது மாடின்னு சொல்லி ஏமாத்தி 40 ருவாதானே
குடுத்தேன்.
                                            *********************************************
நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொட‌ரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி
இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'
குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?'
                                            *********************************************
ஆசிரியர்: "டேய் ராமு, இன்னும் பத்து நாளில் உலகம் அழியப்போகுதுன்னு
வச்சுக்கோ. அப்போ கடவுள் கிட்டே என்ன வேண்டிக்குவே?"
ராமு: "அன்னிக்கு ஸ்கூல் லீவு விடணும்னு வேண்டிக்குவேன் சார்"
மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா: ஓன்னுமில்லை
மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை
பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம்
ஸ்டாப் ஆவலியே.
அப்பா:...............
                                                   *********************************************
நோயாளி: டாக்டர் என் கால் நல்லா போயிடுமா டாக்டர்
டாக்டர்: இன்னும் மூனு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்
நோயாளி: நான் நடக்கலாமா
டாக்டர்:நல்லா நடக்கலாம். நான் கொடுத்திருக்கும் மருந்த மறக்காம தடவுங்க
நோயாளி: இந்த மருந்த தடவுனா கால் வலி போயிடுமா டாக்டர் நான் அப்புறமா ஓடலாமா.
டாக்டர்: தாராளமா
நோயாளி: இந்த மருந்துக்கு அத்தனை பவரா..நான் சைக்கிள் ஓட்டலாமா.டாக்டர்:
ம்..ஓட்டலாமே...
நோயாளி: ஏன்னா எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது..அதான் கேட்டேன்.
டாக்டர்: ......????????
                                          *********************************************
நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்"
"உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?
எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது?
ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச் விட்டுப்போச்சுய்யா.
உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே!
ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்!
                                               *********************************************
ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்.
பையன் என்ன பண்றான்?
டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்
                                                     *********************************************
"எங்க வீட்டு நாயைக் காணோம் சார்...
""அடையாளம் சொல்லுங்க...
""அது குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்.......!"
நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
                                        *********************************************
என்னோட மாமியார் அவங்க பணக்காரப் புத்தியைக் காட்டிட்டாங்க.
அப்படியா... என்ன பண்ணினாங்க?
எனக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டையை உள்ளூர் கேபிள்ல ஒளிபரப்ப ஏற்பாடு
பண்ணிட்டாங்களாம்
                                                    *********************************************
நோயாளி: டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்! டாக்டர்: எங்கப்பா
கடிச்சுச்சு?
நோயாளி: விட்டுக்கு பக்கத்துக்கு தெருவில் டாக்டர்!
                                             *********************************************
டா‌க்ட‌ர் ரொ‌ம்ப டெ‌ன்ஷனா இரு‌க்கு..
டெ‌ன்ஷன‌க் குறை‌க்க‌த்தா‌ன் மா‌த்‌திரை எழு‌தி‌க் கொடு‌த்தேனே..
மா‌த்‌திரை‌ப் ப‌‌த்‌தியெ‌ல்லா‌ம் வ‌ர்ற செ‌ய்‌திய‌ப் படி‌ச்சா இ‌ன்னு‌ம்
டெ‌ன்ஷ‌ன் அ‌திகமாகுது டா‌க்ட‌ர்.. வேறு எதா‌ச்சு‌ம் செ‌ய்யு‌ங்க‌...
                                               *********************************************
எ‌ன்ன டா‌க்ட‌ர்.. அ‌ந்த பேஷ‌ன்டோட உட‌ம்பு முழு‌க்க எ‌ந்தெ‌ந்த
க‌ம்பெ‌னியோட ‌விள‌ம்பரமோ இரு‌க்கு?
அ‌ந்த க‌ம்பெ‌னிக‌ள் எ‌ல்லா‌ம் சே‌ர்‌ந்து தா‌ன் அவரோட அறுவை
‌சி‌கி‌ச்சை‌க்கு ‌ஸ்பா‌ன்ச‌ர் ப‌ண்றா‌ங்க..
ச‌ரியா‌ப் போ‌ச்சு..
                                                  *********************************************
பல் டாக்டரை கல்யாணம் பண்ணிக்கிட்டியே.... எப்படி போகுது வாழ்க்கை?
எப்படியோ பல்லைக் கடிச்சிட்டு ஓட்றேன்..
                                                  *********************************************
என்னோட அப்பா ரொம்ப பயந்தாங்கொள்ளிடா...!
எதை வெச்சு சொல்றே...
ரோட்டைக் கடக்கும்போது என்னோட கையைப் பிடிச்சுக்கறாரே
நன்றி :  http://www.tamilsaral.com/news%3Fid%3D4179.doகொஞ்சம் சிரிங்க....!

ஈரல் வறுவல்

நளன்
தேவையான பொருட்கள்:

ஆட்டு ஈரல் - 500 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
வர மிளகாய் - 4
இஞ்சி & பூண்டு விழுது - ஒரு டீ ஸ்பூன்
மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் - ஒரு டீ ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணை - முன்று டேபிள் ஸ்பூன்
பட்டை, இலை - தாளிக்க

செய்முறை:
ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி இருநூறு மி.லி தண்ணீர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைக்க வேண்டும். தண்ணீர் முழுவதும் சுண்டி விட வேண்டும்.


மிளக, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் வைக்க வேண்டும். வெங்காயத்தை நீள நீளமாகவும், பச்சை மிளகாயை சிறிது சிறிதாகவும் நறுக்கி வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பட்டை, இலை தாளிக்க வேண்டும்.


வாசனை வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி, சிவந்ததும் ப. மிளகாய், கறிவேப்பிலை போட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி & பூண்டு விழுது, ம.பொடி, ஒரு டீ ஸ்பூன் உப்பு மூன்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.


வதங்கியதும் ஈரல் கலவையைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். அடிக்கடி திறந்து கிளறி விட வேண்டும். தண்ணீர் வற்றியதும் இறக்க வேண்டும்.
'நன்றி: www.keetru.com'
Source :http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2517:2010-01-25-07-33-42&catid=19:non-veg&Itemid=133

பாலைவன பரிதவிப்பு





பாலைவன பனியில் நனைந்துகொண்டே நடந்துபோது
பொங்கிவந்த மனகுமுறலை பொறுத்திடமுடியாமல்
வெளிறிக்கிடந்த வானத்தையே வெறித்துபார்த்து
வெதும்பிகரைந்தது கண்ணீர்

பத்துக்கு பதிமூன்றை நம்பி
இருந்தெல்லாம் விற்று போதாகுறைக்கு
பத்துக்கு பதினைந்தாக வட்டிக்கும்வாங்கி
வெளிநாட்டுக்கு வேலைக்கு வந்தால்

இன்றுபோகுமோ வேலை நாளைபோகுமோ
என்ற நிலைக்கு தள்ளப்பட்டு
அடுத்ததுநானோ அடுத்ததுநானோ என

காலையில் வேலைக்குபோகும் மனம்கலங்கியபடி
ஒவ்வொருநாளும் பொழுதுபோக்கும் அவஸ்தை
அனலில் புளுவாய் துடித்தபடி

குடும்பச்சுமை கடன்சுமை இதற்கு
நடுவே வேலைகள் பறிபோகும்நிலை
என்னசெய்வது என்னசெய்வது என்றெண்ணியபடியே
இருதலைக்கொள்ளியாய் தவித்திடும்மனது

சொட்டச்சொட்ட பனியில் நனைந்தபோதும்
நெஞ்சுக்குள் மட்டும் பற்றி எறிகிறது நெருப்பு
சோறுபோட்ட நாடு சுகம் பெறுமா -இல்லை
சுமைகளின் பாரம் கூடிப்போகுமா?

எல்லாம்வல்ல இறைவன் இருள்நீக்கி
அருள்புரியவேண்டும்
இன்னல்களை போக்கி மகிழ்ச்சியை
தந்திடவேண்டும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

 http://niroodai.blogspot.comபாலைவன பரிதவிப்பு



Wednesday, June 23, 2010

தமிழ் செம்மொழி மாநாடு வீடியோ (கவிதை -பாட்டு ) சாங் - AR ரஹ்மான்



முதல்வர் கருணாநிதி எழுதி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த மைய நோக்குப் பாடல்

தந்தையின் தவிப்பு

தந்தையின் தவிப்பு


எனது அன்பு மகனே,,
அன்னையைமட்டும் அணைத்துகொள்கிறாய்,
இந்த தந்தையை ஏன் தள்ளிவைத்தே பார்க்கிறாய்!

ஈன்றெடுத்தவள் அன்னையென்றாலும் –அதில்
இந்த தந்தைக்கும் பங்குண்டல்லவா?

சினிமாக்களிலும் தந்தைகளை தரக்குறைவாகவே
சித்தரிப்பதால் உன் சிந்தையிலும்
தவறாகவே பதியப்பட்டது!

சில சமயங்களில் என் பாசத்தை உன்மீது
வெளிப்படுத்த தவறிவிடுவதால்
உன்மீது எனக்கு பாசமில்லை என்றாகுமா?

அன்னையும் தந்தையும் காட்டும் அளவுக்கு மீறிய
பாசத்தால் குழந்தை அல்லல்பட்டுவிடக்கூடாதே
”என்றுதான்” நான் சற்று என் பாசத்தை பூட்டியே வைத்துள்ளேன்!

அதை புரியாத நீ என்னை ஒரு
பூச்சாண்டியைப்போலவே பார்ப்பதைதான்
என்னால் பொருக்கமுடிவதில்லை!

விரோதியல்லடா உன் தந்தை! உன்னை
இவ்வுலகத்திற்கு வெளிச்சமாய் காட்ட
என்னை நான் மெழுகாக்கிக்கொண்டேன்,

உருகுவதற்காக வருந்தாது மெழுகு ”தன்”
உயிரைக்கொன்று திரியை வாழவைக்கும்
அதுபோல்தான் நான்!

மகனே நீ உயிர்வாழ உன் அன்னை தன்
உதிரத்தைபாலாக்கித்தந்தாள்,

நான் உனக்காக என் உயிரையே உழைப்பாக்கி தந்தேன்
உணர்வாயா. என் உணர்வுகளைப் புரிவாயா????

அன்புடன் மலிக்கா


Tuesday, June 22, 2010

தமிழ் வட்டார மொழி வழக்குகள்- (தமிழ் முஸ்லிம்கள் உறவு முறைகளுக்கு பயன்படுத்தும் வார்த்தைகள்)

மிழ் முஸ்லிம்கள் உறவு முறைகளுக்கு பயன்படுத்தும் வார்த்தைகள்


தமிழகத்தைப் பொறுத்தவரை உறவுமுறைகளில் முஸ்லிம்கள் பயன்படுத்தும்
வார்த்தைகள் மிகவும் சுவராஸ்யமாய் இருக்கும். காரணம் ஒரு ஊரில்
பயன்படுத்தும் வார்த்தைகள் பக்கத்து ஊரில் வேறு மாதிரியாய், அப்படியே
தலைகீழாய் கூட இருக்கும்.
வாப்பா,அத்தா,வாவா,அம்பா - தந்தை, வாப்பா - கடற்கரை பகுதிகளான கீழக்கரை,
அதிராம்பட்டினம், தொண்டி, இராமநாதபுரம், காரைக்கால், நாகூர்,பழனி போன்ற
ஊர்களில் விளிக்கிறார்கள். இமாம் ஷாஃபி மத்ஹப் (School of thoughts)

பின்பற்றுபவர்களாய் இருப்பார்கள். அதேபோல், தந்தையை அழைக்க *அத்தா*
(அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்
. அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது. அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள். 
பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம். அத்தா அச்சன் முத்தன் அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்.  
"த்தா இது கேள் என ஆரியன் கூறுவான்" கம்பராமாயணம்
"அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே" தேவாரம் 
அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்-அன்புடன் புகாரி)

எதிர்பாராத பதில்கள்


தமிழ் விரிவுரையாளர்.                      
                         எதிர்பாராத பதில்கள்



எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுப்பு தான் வாழ்க்கை. இருந்தாலும் அடுத்து என்ன நடக்கும என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் யாரும் இருப்பதில்லை.

“எதிர்பார்ப்பு குறையும் போது ஏமாற்றமும் குறையும்“

வாழ்க்கையில் எதிர்பாராத பதில்கள் பல நம்மை நீண்ட நேரம் சிந்திக்கச் செய்துவிடும். அப்படிப்பட்ட எதிர்பாராத பதில்களைத் தொகுத்து தொடந்து இடுகையாகத் தரலாம் என எண்ணுகிறேன்.


-oOo-


காட்சி -1


அப்பா - உனக்கே எழுதப்படிக்கத் தெரியாது என்ன எழுதிக்கிட்டிருக்க? யாருக்கு எழுதுற?

பையன் - என் நண்பனுக்கு கடிதம் எழுதுறேன்.

அப்பா - நீ எழுதும் கடிதம் அவனுக்குப் புரியுமா?

பையன் - ஏன் புரியாது? அவனுக்கும் என்னை மாதிரி எழுதப்படிக்கத் தெரியாது! அதனால் நான் எழுதுவது அவனுக்குப் புரியும்!!

அப்பா - !!


-oOo-

காட்சி -2


அப்பா - தம்பி இங்க வா! சாமிகும்பிடாமப் போலாமா?
வா சாமி கும்பிட்டுப் போ!

பையன் - ஏம்பா சாமி கும்பிடனும்?

அப்பா - சாமி கும்பிட்டா, சாமி எல்லாம் தரும் பா.

பையன் - அப்படின்னா சாமி பேனால்லாம் தருமா?

அப்பா - ஓ பேனா என்ன? நீ என்ன கேட்டாலும் தரும்!

பையன் - சரி நீங்க உங்க பேனாவை எனக்குக் கொடுங்க.

நீங்க சாமிட்ட கேட்டு வேற பேனா வாங்கிக்கோங்க!!

அப்பா - !!!!

-oOo-

காட்சி -3


பெரியவர் - ஏம்பா தம்பிகளா..
ஓணானை ஏன் கழுத்துல கயிறைக் கட்டி இந்தப்பாடு படுத்தறீங்க? அந்த வாயில்லா சீவனைப் பார்த்தா உங்களுக்குப் பாவமா இல்லையா?

சிறுவர்கள் - இல்லையே நாங்க விளையாட்டுக்குத் தானே செய்யுறோம்.

பெரியவர் - உங்களுக்கு விளையாட்டாத் தெரியலாம். ஆனா அதுக்கு இது துன்பமி்ல்லையா? நீங்க இப்படி செஞ்சீங்கன்னா, அடுத்த பிறவியில அந்த ஓணான் மனிதனாப் பொறந்து நீங்க ஓணானா பிறப்பீங்க. அப்ப அந்த ஓணான் உங்கள இப்படி பாடாப் படுத்தும்.

சிறுவர்கள் - பெரியவரே நீங்க சொல்வது ரொம்ப சரி. போன பிறவில நாங்க ஓணானா பிறந்தப்ப இந்த ஓணான் எங்களை இப்படி துன்பம் செய்தது அதனால் தான் அதுக்கு நாங்க இப்ப பலி வாங்கிக்கிட்டு இருக்கோம்.

பெரியவர் - !!

-oOo-

காட்சி -4


தாத்தா - பாப்பா இங்க பாரு இந்த விளக்கில் ஒளியேற்றுகிறேன். இப்போது இந்த விளக்கில் ஒளி எங்கிருந்து வந்தது?

குழந்தை - (அந்த விளக்கை ஊதி அணைத்துவிட்டு.) இப்போது இந்த ஒளி எங்கு போனதோ அங்கிருந்து தான் வந்தது.

தாத்தா - !!

நன்றி: http://gunathamizh.blogspot.com/2010/03/blog-post_23.html

வசந்தங்கள் வர வழி விடு


வசந்தங்கள் வர வழி விடு











உனதிருண்ட வாழ்வில்
ஒரு பொழுதிலேனும்
ஒளிக் கீற்றொன்று
உட்பிரவேசிக்குமென்ற
நம்பிக்கையுடனாவது-கொஞ்சம்
நிம்மதியாய்
உறங்கக் கூடாதா தோழி?

விழிநீர் வற்றும் வரை
கதறியழுதுன்
காலத்தைப் போக்குவதாக
வாதம் புரிகிறாய்;
இருட்டு மட்டுமேயுன் எதிர்காலத்தைச்
சூழ்ந்துள்ளதென்று
ஏங்கித் தவிக்கிறாய்!

வசந்தம் - உன்
வாசலுக்கு மட்டும்
வரக்கூடாதென்கிறாய்.
வைகறை விடியலும் - உன்
வாழ்விலொருபோதும்
இல்லையென்கிறாய்!

உன்னிதயத்தைச் சிலுவையிலேற்றிச்
சித்திரவதை செய்யும்-அவன்
சம்பந்தப்பட்ட நினைவுகளை
மறக்க முடியாதென்கிறாய்.
மருந்து போடக்கூடாதென்கிறாய்!

உன்னால் உயிர் பிரிந்த-அவன்
உனக்கான நிம்மதியையும்
உருவிக்கொண்டு போனதாக
உள்ளம் குமுறுகிறாய்.
உச்சந்தலை மேல்
இடி வீழ்ந்துன் இதயம் நொருங்கியதாய்
எண்ணித்தவிக்கிறாய்!

உன் சுற்றமேயிப்போது
உனைச் சீறுகிறது.
வார்த்தை அம்புகளால்
வதைக்கிறது.-அவன்
காதலை ஏற்க மறுத்த
கர்வம் மிகுந்த அந் நாட்களில்
கணப் பொழுதிலேனும்
இப்படி நேருமென நீ
எண்ணிப் பார்த்ததுண்டா?

அவன் உறங்கும் கல்லறையில்
வீழ்ந்து கதறியழுதாவது
நீ செய்த பாவத்துக்கு
பரிகாரம் தேட முயற்சிக்கிறாய்!

உன்னிடம் அன்பை யாசித்து
அபயம் தேடிய அவனுக்குன்னால்
ஆறுதல்தான் கூற முடியவில்லை.
வார்த்தைகளால் காயப்படுத்தாமலாவது
இருந்திருக்கலாமல்லவா?

விதி உனக்கென்று
வரைந்த பாதையினூடு-உன்
வாழ்க்கை போகிறது.
நீ அதற்கென்
செய்வாய் தோழி?

நீ செய்த தவறுக்காக
காற்று – உனை மட்டும்
விட்டுவிட்டு வீசுகிறதா?
நிலா –தன்
பால் கிரணங்களை உன்மேல்
பொழிய மறுக்கின்றதா?
உனை நனைக்க
மழை தூற மாட்டேனென்கிறதா?

அவன் போய்விட்டான்
இனி உனக்கான தேசத்தில்
நிச்சயமாய் வாழ வரமாட்டானென்ற
நிதர்சனத்தை
நீயுணர்ந்த போதிலும்
நிம்மதியிழந்து தவிப்பதேன் தோழி?

கண்ணீரால் வரையப்பட்ட-உன்
காதல் சரித்திரம்
மறக்கவே முடியாததொன்றுதான்.
ஆனாலும் உனக்கான வாழ்க்கை
இன்னும் மிச்சமிருக்கிறதென்கிற
உண்மையை உணர்வாயா?

வசந்தத்தின் ஆணி வேர்கள்
உனை நோக்கி வருகிறது
இதய வாசலைத் திறந்துவிடு தோழி!
வாழ்க்கை உனை
வாழ அழைக்கிறது-ஒரு
முன் மாதிரியாய் வாழ்ந்துகாட்டு தோழி!

ஒரு பூ
உதிர்ந்து போனதென்று
செடிகள் என்றேனும்
சித்தம் கலங்குவதில்லை.
கணப்பொழுதுதான் தனக்கு
காட்சி தர முடிகிறதென்று
வானவில் ஒருபோதும்
வருத்தப் பட்டதில்லை!

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை

http://mrishanshareef.blogspot.com/2007/09/blog-post_13.html

காலம் கடந்து...

உள்ளூரில் விலைப் போவாததால்
வெளி நாட்டில் நான்!

வெள்ளை முடியும் பல் இழிக்க
கலர்ச் சாயம் தேடியது கண்கள்
கறுப்புச் சாயத்தை தவிர்த்து!

முதுமையென
முத்திரையிட்டால்
முடியாது இனி வளைகுடாவில் குப்பைக் கொட்ட!

நரைத்த ரோமங்கள்
விதைத்த நினைவுகளால்
விடுப்புக் கேட்டு விரைந்தேன்
விமான நிலையத்திற்கு!

சிறகுகளோடு பறந்த விமானத்தில்
சிறகுகளே இல்லாமல் நானும் பறந்தேன்!

தொட்டுப் பார்க்க என் மழலை;
முத்தமிட என் மனைவி;
கட்டியணைக்க என் தாய் - எனக்
கட்டாத கோட்டையுடன்
கனவுகளில் நான்!!

முடிந்துவிட்டது எல்லாம் ;
எரிகிற வைக்கோலாய்
முடிந்து விட்டது எல்லாம் உள்ளுக்குள்ளே!

பாசங்களுக்கு பதில் சொல்லாமலே
பயணித்துவிட்டேன்
என் இறுதி இலக்கிற்கு!!

இருக்கின்ற காலத்தை
இழந்துவிட்டேன் கடல் கடந்து;
எல்லாம் முடிந்து உணர்ந்து பயனென்ன
காலம் கடந்து!!!-
யாசர் அரஃபாத் 

http://paalaivanathoothu.blogspot.com/2010/05/blog-post_4797.html

அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்


 from    அன்புடன் புகாரி


அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்

 அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது. அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள். 

பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம்.
 

அத்தா அச்சன் முத்தன் அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும். 

"த்தா இது கேள் என ஆரியன் கூறுவான்" கம்பராமாயணம்

"அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே" தேவாரம்

Monday, June 21, 2010

மீண்டும் ஒரு முறை சொல்லிப்பார்த்தேன்…by:யாசர் அராஃபத்

தந்தை சொன்னார் அப்போதே,
படித்து விடுடா – இல்லை என்றால்
வாழ்க்கை உன்னை படுத்தி விடும்!



என் தலை முறையினருக்கு எப்போதுமே
ஒரு நினைப்பு – பாஸ்போர்ட் கிடைத்துவிடும்
18 இல் – படிப்பு எதற்கு பிறகு!!!



சூழ்ச்சி காரர்களும் சூழ்ந்து கொண்டு
திரும்ப திரும்ப காதில் ஊதினார்கள் – பாய்
பசங்களுக்கு படிப்பு எதற்கு? – ஆசிரியர் வடிவில் …



பரிட்ச்சை எனக்கு
பரிட்ச்சையம் ஆனது – வினாத்தாளை பார்க்கும் போது
விமானத்தின் நினைப்புதான் எனக்கு!



பரிட்ச்சை முடிவும் வந்தது ,
பாஸாகி விடுவேன் என்று நினைத்தார்கள் எல்லோரும் – பின்
அழுது நனைத்தார்கள் அவர்கள் கண்ணை …



என் தந்தை அழுது பார்த்தேன், முதன் முதலாய்!


என்னையே நான் தேற்றிக் கொண்டேன் நான் பயணம் போவதில்
எத்துனை கடுப்பு இவர்க்கு!!!



இறங்கிய நாளே இடி விழுந்தது எனக்கு!
புரிந்து விட்டது எனக்கு -
காரணம் கிடைத்து விட்டது!
தந்தையின் கண்ணிர் எதோ சொல்லதுடித்தது அன்று!!



அத்தனை அதட்டல்களையும்
அலச்சியம் செய்தேனே!
கனிவே கிடையாது என்று
கற்பனையும் செய்தேனே!



உங்கள் எலும்புகளையும்
தோள்களையும் உருக்கிய பட்டறையா இந்த
பாலைவனம்!!



நாங்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காகவா
இத்தனை நாள்
தனியே அழுது உள்ளீர்கள்?



கனபொழுதில் கனமாகி போனது என் இதயம் !
கண்களில் கசியும் இந்த கண்ணிருடன்
மீண்டும் ஒரு முறை சொல்லிபார்தேன்
அத்தா என்று அடிமனதில் !!!!


நன்றி http://kattankudi.infoமீண்டும் ஒரு முறை ..

அத்தா என்று அடிமனதில்!!

அத்தா அப்போதே சொன்னார் 
படித்து விடுடா - இல்லை என்றால்
வாழ்க்கை உன்னை படுத்தி விடும்!

என் தலை முறையினருக்கு எப்போதுமே
ஒரு நினைப்பு - பாஸ்போர்ட் கிடைத்துவிடும்
18 -ல் படிப்பு எதற்கு பிறகு!

சூழ்ச்சிக்காரர்களும் சூழ்ந்து கொண்டு
திரும்ப திரும்ப காதில் ஊதினார்கள் - பாய்
பசங்களுக்கு படிப்பு எதற்கு? ஆசிரியர் வடிவில்!

பரிச்சை எனக்கு பரிச்சையம் ஆனது - வினாத்தாளை
பார்க்கும் போது விமானத்தின் நினைப்புதான் எனக்கு !

தேர்வு  முடிவும் வந்தது -தேர்ச்சி பெறுவேன்
என்று நினைத்தவர்கள்  எல்லாம் - இனி இவன்
தேறவே மாட்டான் என்றார்கள்!
 அத்தா அழுது பார்த்தேன்! முதன் முதலாய்!

என்னையே நான் தேற்றிக் கொண்டேன்-நான் பயணம்
போவதில் எத்துனை கடுப்பு இவருக்கு!

இறங்கிய நாளே  விழுந்தது இடி எனக்கு!
புரிந்து விட்டது- எனக்கு
காரணம் அறிந்துவிட்டது!
அத்தாவின்  கண்ணீர் ஏதோ சொல்லத்துடித்தது அன்று!?

அத்தனை  அதட்டல்களையும்
அலச்சியம் செய்தேனே!
கனிவே கிடையாது என்று
கற்பனையும் செய்தேனே!

உங்கள் எலும்புகளையும்- தோள்களையும்
உருக்கிய பட்டறையா இந்த பாலைவனம்!

நாங்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காகவா
இத்தனை நாள் தனியே அழுது உள்ளீர்கள்?

கனபொழுதில் கனமாகி போனது என் இதயம்!
கண்களில் கசியும் கண்ணீருடன் -மீண்டும்
ஒரு முறை சொல்லிப்பார்த்தேன்  
அத்தா என்று அடிமனதில்!!

நன்றி:- யாசர் அராஃபத்
நன்றிhttp://hrmanson.blogspot.com/2010/06/blog-post_2185.htmlஅத்தா என்று அடிமனதில்!!