Saturday, October 31, 2009

தாய்ப்பாசத்தினாலும் பக்தியினாலும்

எதிர்ப்பார்பு
ஏமாற்றம் தந்தாலும்
உறவு நிலைக்கும்
அது தாய்ப்பாசம்

எதிர்பார்ப்பு
ஏமாற்றம் தரும்போது
வழியற்று வெதும்பும்
பின் மீண்டும்
எதிர்பார்க்க தொடங்கும்
அது பக்தி

தாய்ப்பாசத்தாலும்
பக்தியினாலும் ஆனது
உன்மீதான என் காதல்
 நன்றி:அன்புடன் புகாரி புதிய பதிவுகள்
அன்புடன் புகாரி

Thursday, October 29, 2009

பத்து வயசில...

பத்து வயசில எண்டு தொடங்கி சொல்ல வந்த விஷயம் அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசிலைப் பற்றித்தான். இப்ப எனக்குப் பத்து வயசில நடந்த நிகழ்வுகளில ஒண்டு ரெண்டைத் தவிர எல்லாமே மறந்து போச்சு. அறியாத வயசு, பால்மணம் மாறாத அந்தப் பால்குடி வயசில நடக்கிற சோதினையைப் பற்றித்தான் சொல்லப் போறன். சோதினை நடக்கிறதொண்டும் பெரிய விஷயமில்லை. ஆனால் அதுக்கு நடக்கிற ஆயத்தங்களும் ஆரவாரங்களும்தான் ஏனெண்டு எனக்கு இன்னும் புரியேல்ல, சரியா விளங்கேல்ல.

அஞ்சாம் ஆண்டுப் புலமைப் பரிசில் சோதினை வைக்கிறதுக்கு காரணம் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேலே எடுக்கின்ற வறிய மாணவர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து படிப்பதற்காக சிறு தொகை நிதியை பரிசிலாக வழங்குவதாகும். இதுக்காகத்தான் அரசாங்கம் இந்தச் சோதினையையே ஆரம்பிச்சதெண்டு சொல்லுறாங்கள். அப்பிடியெண்டா அதுக்காக ஏனிந்த ஆரவாரங்கள்? சோதினை தொடங்கப் பட்டதன் நோக்கம் இப்ப பலருக்குத் தெரியாது. ஆனா ஒண்டு மட்டும் நல்லாத் தெரியும் இதில நல்ல புள்ளியெடுத்தால் பெரிய பள்ளிக்கூடங்கள் என்று சொல்லப்படுகின்ற பள்ளிக்கூடங்களுக்கான ஆறாம் ஆண்டு அனுமதியை வாங்கலாம். அதை விட பெற்றார் நெஞ்சை நிமித்திக் கொண்டு தன்னோட வேலை செய்யுறாக்களுக்கு கேக் குடுக்கலாம். சித்தியடையத் தவறிய மற்றப் பிள்ளைகளின்ர பெற்றாரை நக்கலடிக்கலாம். ஆக மொத்தத்தில பெற்றார் தங்கட சுய மரியாதைக்காகப் பிள்ளைகளின்ர பெறுபேற்றைப் பயன்படுத்தினம்.

அஞ்சாம் ஆண்டெண்டால் பிள்ளைக்குப் பத்து வயசு. காலமை நாலு மணிக்கு எழும்ப வேணும். அதுக்கெண்டு விழிப்பூட்டும் கடிகாரங்கள் வீட்டில விழிப்பா இயங்கும். பிள்ளை உறக்கத்தின் இனிமையை மேலும் அனுபவிக்கப் புரண்டு படுத்தால் அம்மா மாறி அப்பா மாறி சத்தம் போடுவினம். பிள்ளை அரைகுறை மனசோட எழும்பி படிக்கிறதுக்கு மேசையில இருந்தா பாவம் பிள்ளைக்கு நித்திரை வெறி இன்னும் முறிஞ்சிருக்காது. புத்தகம் தலைகீழாக் கிடக்குதோ எண்டதையே பிரித்தறிய முடியாத நித்திரைக் கலக்கத்தில தூங்கி விழும் (துலாப் போடும் - ஊர் வழக்கு). காலம வெள்ளண இதமான குளிர் இன்னும் மெத்தையத்தான் ஞாபகப்படுத்தும். சிலவேளை சுடச் சுட தேத்தண்ணி வரும். அதைக் குடிச்சிட்டுக் கொஞ்சம் படிச்சாலும்  அது முடிய பள்ளிக்கூடம், முடிஞ்சு வர சாப்பாட்டை அவசரமா முடிச்சுட்டு தனியார் வகுப்பு. சொன்னா நம்ப மாட்டியள் கன பிள்ளைகளின்ர காலமை மத்தியானச் சாப்பாடுகள் காருக்குள்ளேயே நடக்குது.(என்ன கொடுமையோ?) முடிஞ்சு வர வீட்டில பிரத்தியேக வகுப்புகள். கொஞ்ச நேரம் சாப்பாடு. பிறகு படிப்பு. பதினொரு மணிக்குத் தான் பிள்ளைக்குப் படுக்கிறதுக்கு அனுமதி. (எனக்கு இவ்வளவத்தையும் எழுதவே களைச்சுப் போச்சு, நித்திரை தூங்குது)

பிரத்தியேக வகுப்பைப் பற்றிச் சொல்லியே ஆகவேணும். முதல்ல எத்தினை ஆசிரியர்களை ஒழுங்கு படுத்திறதெண்டதிலேயே போட்டி. பக்கத்து வீட்டில அல்லது கூட வேலை செய்யுறவை ரெண்டு பேரை வச்சுப் படிப்பிக்கினம் எண்டா நான் மூண்டு பேரை ஒழுங்கு படுத்த வேணும். சரி அதுதான் போச்சுதெண்டா வாத்திமாருக்குள்ளேயே திறமான வாத்திமாரை பிடிக்க வேணும். அவர் தனக்கு நேரமில்லை,  இடைக்கிட வரமாட்டன் எண்டு சொன்னாலும் பரவாயில்லை. ஏனெண்டா வெளியில ஆரும் கேட்டா இன்னார் படிப்பிக்கினம் எண்டு சொல்லிக் கொள்ளலாம்தானே. அதை விட ஆசிரியருக்கு குடுக்கிற சம்பளத்திலையும் போட்டி ஆர் கூடக் குடுக்கிறதெண்டு. பிரத்தியேக வகுப்புச் சொல்லிக் குடுக்கப் போகும் நண்பன் ஒருவன் சொன்னான், தான் சில வேளை மனச்சாட்சியாக குறஞ்ச காசு வாங்கினாலும் சில பெற்றோர் சொல்லுவினமாம் உங்களுக்கு கூடக் காசு தந்தாத்தான் நீங்கள் படிப்பிக்கிறது பிள்ளைக்கு ஏறுமெண்டு. என்ன கண்டுபிடிப்போ? என்னத்தைச் செய்தென்ன? பிள்ளையெல்லா படிக்கவேணும்,  பிள்ளையெல்லோ சோதினை எழுத வேணும். எப்பத்தான் இது பெற்றாருக்கு விளங்கப் போகுதோ? ஏன் எதுக்காக படிக்கிறன் எண்டு தெரியாமலே பிள்ளை வதைபடுது - வாய் திறந்து தான் படும் வேதனையை வெளியில சொல்ல முடியாத வயசில.

இப்போது புலமைப் பரிசில் பரீட்சையெல்லாம் உயர்தரதப் பரீட்சையின் நிலைக்கு ஒப்பாக வைத்து நோக்கப்படுகின்றது. அதாவது வாழ்வா சாவாப் போராட்டம் போல. உயர்தரத்தில் தவறினால் பல்கலைக்கழக அனுமதியில்லை. ஐந்தாம் ஆண்டில் தவறினால் உயர் பாடசாலை அனுமதியில்லை. இப்போதெல்லாம் சாதாரண தரத்திற்கு மதிப்பே இல்லை. புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்கள் உயர்தரக் காலங்களில் பிரகாசிப்பதில்லை என்ற பொதுவான அவதானிப்புகள் இருந்த போதும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான ஆரவாரம், எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை.

முதலாவதாக சிறு வயதுப் பிள்ளைகள் தங்களுக்கான சுதந்திரங்களைத் தொலைத்துவிட்டு பரீட்சை என்ற போர்வையில் கொடுமைப் படுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஓய்வே இல்லாமல், பொழுது போக்குகளே இல்லாமல் படிப்பு என்னும் நிலை களையப்பட வேண்டும். அதற்கு பெற்றோர்கள் தங்கள் சுய கெளரவம் இந்தப் பரீட்சையின் பெறுபேற்றிலேயே தங்கியிருக்கிறது என்ற எண்ணம் களையப்பட  வேண்டும். இவ்வெண்ணம் தோற்றம் பெறுவதற்கான முழுமுதற்காரணம் உயர் பாடசாலைகளுக்கான அனுமதி இப்பெறுபேற்றிலேயே தங்கியிருத்தலாகும். இதற்கு அரசாங்கம் இப்பரீட்சையின் நோக்கம்  வறிய மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குவதுதான் என்றால் இப்பரீட்சையின் பெறுபேற்றை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் (உயர் பாடசாலைகளின் அனுமதிக்காக அல்ல).

உயர் பாடசாலைகள் தங்களுடைய அனுமதிக்காக தனித்தனி பரீட்சைகள் வைத்து மாணவர்களைத் தெரிவு செய்யலாம். அப்பரீட்சைக்கு விரும்பியவர்களைத் தோற்றுவதற்கு அனுமதிக்கலாம். அதே போல உயர் பாடசாலை அனுமதியானது ஆறாம் தரத்துடன் நின்று விடாது அதற்குப் பிறகான ஒவ்வொரு வருடமும் வெளி மாணவர்களிடம் பரீட்சை வைத்தோ அல்லது மீண்டும் ஒன்பதாம் தரத்தில் பரீட்சை வைத்தோ அனுமதியை வழங்கலாம். ஏனெனில் ஆறாம் தரத்தில் சித்தியெய்தத் தவறியவன் ஒன்பதாம் தரத்தில் அதே நிலையில்தான் இருப்பான் என்று எதிர்வு கூற முடியாது. இவ்வாறு செய்வதனால் உயர் பாடசாலைகளுக்கான போட்டிகள் குறைவடையும், பெற்றோர் இந்த முறை தப்பினால் அடுத்த முறை என்ற மன நிலையில் பிள்ளைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பார்கள். பிள்ளைக்கு ஓய்வும் அமைதியான கல்வியும் கிடைக்கும். புலமைப் பரிசில் பரீட்சையின் உண்மையான நோக்கமாகிய வறிய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குதல் என்பது அதிக எண்ணிக்கையான வறிய மாணவர்களுக்குச் சென்றடைய வாய்ப்பு அதிகரிக்கும். அவர்களும் ஊக்கமாக கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும். சமுதாய வளர்ச்சிக்கு இது வித்தாகும்.

நன்றி!/thaaimadi

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 53



காகிதமும் மின் கடத்தியா?  
சுர் என்று சுட்டதே  
மின்சார கட்டணம்!
நன்றி :  http://nizardeen.blogspot.com

உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்

உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்,
அது உயிர் பெறும் போது விதி வெல்லும்!
கனவுகள் கண்ணுள் நடை பயிலும்,
கண்ணிமை மூடி மனம் துயிலும்!
நரம்பின் நாளத்தில் நடனமிடும்...
இதயத்தின் ஆழத்தில் புதைந்துவிடும்!!

உணர்வுகள் ஆயிரம் கதைசொல்லும்,
அது உறக்கம் மறந்து விழிப்பு தரும்!
வசந்தம் வாசலில் வட்டமிடும்,
பருவம் பாதையில் வழி நடத்தும்!
அன்பாய் தழுவி அரவணைக்கும்...
இன்பத்தின் எல்லையில் இணைந்துவிடும்!!

உணர்வுகள் ஆயிரம் கதைசொல்லும்,
அது உள்ளத்தின் எழுச்சியில் உருகிவிடும்!
கடலலை போல எழுந்து வரும்,
கடமைகள் மறந்து கவிதை தரும்!
காதல் தழுவலில் கனிந்து விடும்...
மோகத்தில் தன்னை இழந்து விடும்!!

உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்,
அது உரிமையுடனே ஆட்கொள்ளும்!
தனிமையில் நினைத்தால் தவிப்பு தரும்,
தவிப்பினில் புதிய துடிப்பு வரும்!
அமைதியில் நெஞ்சம் தடுமாறும்...
அனுதினம் அதற்கு மனம் ஏங்கும்!!

-சுமஜ்லா
.source:http://sumazla.blogspot.com"
நன்றி!

Monday, October 26, 2009

மழை




இறுக மூடப்பட்ட
வீட்டினுள் வர முடியாது
நனைந்து கொண்டிருக்கிறது
மழை

ஆட்டுக் குட்டிகளுடன்
தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்று
இன்னொரு
புல்வெளி தேடிப் போவதற்குத்
தருணம் பார்க்கிறது

புகார்கொண்டு
தன்னைப் போர்த்தியவாறு
தென்னந் தோப்பினுள்
வழிதவறியலைகிறது

வாய் திறந்து பார்த்திருந்த
நீர் நிலைகளின்
கனவுகளை நிறைவேற்றிய பின்
மீன் கூட்டங்களைச்
சீதனமாகக் கொடுத்துச் செல்கிறது

யார் யாரோ
வரைந்த கோடுகளையெலாம்
தனது கால்களால்
தேய்த்து அழித்துச்
சேற்றில் புரண்டவாறு
வீதிகளைக் கழுவுகிறது

பெரும் கோட்டைகளையெலாம்
கரைத்தழித்திட நினைத்து
நிறைவேறாமற் போகவே
அவற்றின் வசீகரங்களை
கழுவிக் கொண்டு நகர்கிறது

ஆழ் மண் வரையும்
நீரிட்டு நிரப்பிய பின்
அடுத்துச் செய்வதென்ன?
என்ற வினாவுடன்
தரை மீது தேங்கி நிற்கிறது

ஓய்ந்திட மாட்டாமல்
இன்னொரு
வெப்ப மழை பெய்து கொண்டிருந்த
அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்
தனது ஆவேசமெலாம்
ஒடுங்கிப் போய்விடப்
பெய்வதை நிறுத்திப்
பெருமூச்செறிந்து போயிற்று
அந்த மழை

(நன்றி:மறுபாதி)
source:http://faheemapoems.blogspot.com

Sunday, October 25, 2009

தக்கனூண்டு குட்டிப் பாப்பா நானு


நாள் நட்சத்திரம் பார்க்காமல்,
ஜாதகக் குறிப்பையும் புரட்டாமல்,
மணம் முடித்தன
சுக்கிலமும் சுரோணிதமும்!

இரண்டும் ஒன்றாய் இணைவு கொள்ள
இதயமாய் துடித்தேன் நான்!

குழாய் மூலம்
வயலுக்கு நீர்ப்பாய்ச்சுவது போல
நேரத்துக்கு நேரம்
எனக்கு சோறு பாய்ச்சினார்கள்!

பேரில் பனி இருந்தாலும்
இந்த குடத்துக்குள்
குளிரில்லை!
நீரில் நான் மிதப்பதால்,
தண்ணீர் பஞ்சம்
எனக்கில்லை!!

இடத்தகராறு நிலத்தகராறு
நான் செய்யாமல்,
கிடைத்த இடத்தில்
குந்திக் கொள்வேன்!
திட உணவு உண்ணாவிட்டாலும்,
சத்துக்களை உறிஞ்ச மட்டும்
முந்திக் கொள்வேன்!!

தடைச்சுவராய் தோள்சுவர்கள்,
தாண்டிடுவேன் ஒரு நாள் நான்!

விடைதருவேன் கருவறைக்கு
வியனுலகைக் கண்டிடவே!!

கோபமென்றாலும் குஷியென்றாலும்
விடுவேன் ஒரு உதை!
என் உதைக்கு
மனிதவதைத் தடுப்பு சட்டத்தில்
தண்டனை தர வழியில்லை
என்பதால்,
தைரியமாகச் சொல்கிறேன் இதை!!

அம்மா!
நீ தூங்கும் போது
உனக்கே தெரியாமல்
மெல்ல எனைத் தடவிக் கொடுக்கும்
அப்பாவின் செய்கையை,
நீ அறிவாயா?!

கொஞ்சம் குறைவாக
சாப்பிடேன் அம்மா!!
இல்லாவிட்டால்,
என்னை எல்லாரும்
குண்டு பாப்பா என்பார்கள்!!

ஐயோ, என்ன இது?
என்னை என்னமோ
ஊடுருவிப் போகுது?!
ஓ!!
ஸ்கேன் பார்க்கிறாயா நீ!!

போம்மா,
நான் பையனா பொண்ணானு
காட்ட மாட்டேன்,
எனக்கு வெட்கமா இருக்கு!!

நான் நல்லா
வளர்ந்திட்டேன் அம்மா!
உள்ளே ஒரே இட நெருக்கடி!!

உதைத்துக் காட்டுகிறேன் பாரு,
அப்ப புரிஞ்சுக்குவ
என் பலத்தை!

போரடிக்கு அம்மா!
நான்
கதவைத் தட்டிக் கிட்டே
இருக்கிறேன்!

வெளியே வர நான் ரெடி!
நீ எப்ப
கதவைத் திறக்கப் போகிறாய்?!

-சுமஜ்லா.
.source:http://sumazla.blogspot.com"
நன்றி!

Saturday, October 24, 2009

பழகலாம் வாங்க.....

எனக்கு அரபு நபருடன் பழக்கமிருக்கிறது . எனக்கு அரசியல் வாதியுடன்
பழக்கமிருக்கிறது .
இப்படி பலர் அல்லது சிலர் கூற நாம் கேட்டிருக்கலாம் அல்லது நாமே
சிலரிடம் கூறியிருக்கலாம்.
பல மனிதர்களுடன் பழகும் வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம் .அந்த பழக்கம்
நட்பாக காதலாக மாறலாம் நட்பிற்கு நாடோ மொழியோ நிறமோ இனமோ தடையில்லை . ஆத்மார்தமான அன்பு மட்டுமே போதுமானது.
சிலருடன் நாம் பழகும் போது அவர்களுடைய பழக்கத்திற்கு நம்மை அழைத்து
செல்வார்கள் .அல்லது நம்முடைய பழக்கத்திற்கு நாம் ஈட்டுச் செல்வோம் . இது அவரவரின்
மன வலிமையை பொருத்தே நிகழ்கிறது.

பழக்க வழக்கத்தினால் ஒரு மனிதன் முன்னேற்ற மடையவும் முடியும்
தாழ்வு நிலைக்கு செல்லவும் முடியும்.

பெற்றோர்களின் வளர்ப்பில் குழந்தைகள் மனதில் முதன் முதலில்
பழக்கம் பதிவாகிறது. இந்த பதிவு குழந்தைகளின் வளர்ச்சியில் சிறுவனாகி வாலிபனாகி வயதாகும் வரையில் பதிவான பழக்கம் முழுமையாய் மாற்றமடைவதில்லை . அதனால் தான் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி தர வேண்டும் என்பார்கள்.

வளரக்கூடிய சூழ்நிலையில் வாழக்கூடிய சூழ்நிலையிலும் எத்தனையோ
மாற்றங்கள் பழக்கத்தினால் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

தீய பழக்க வழக்கங்களை கொண்டவர்கள் அவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை அவர்களைச் சார்ந்திருக்க கூடிய அனைவரும் பாதிக்கப் படுகிறார்கள்.

நல்ல பழக்கத்தினால் ஒரு குடும்பம் சந்தோசமாக வாழ நூரு சதவீதம் வாய்ப்பிருக்கிறது.

நல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்கு கஷ்டமாக இருக்கலாம் ஆனால்
அவற்றோடு வாழ்வது சுலபமே ஆகும். தீய பழக்க வழக்கங்கள் சுலபமாக வருவதாக இருக்கலாம் ஆனால் அவற்றோடு வாழ்வது கடினமாகும் .என்கிறார் ஒரு ஆய்வாளர்.

நம்மை விட உயர்தவர்களோடு பழகுவதற்கு எப்போதும் முயற்சி செய்ய வேண்டும். அந்த பழக்கம் நம்மை அவர்களவிற்கு சமமாக உயரச் செய்யும்.

நம் பழக்கத்தை விட குறைந்தவர்களோடு நாம் பழகிக் கொண்டிருந்தால்
அவர்களுடைய குணதிசயங்கள் நம்மில் தொற்றிக்கொள்ள நிறைய்ய வாய்ப்பிருக்கிறது .பின் நாமும்அவர்களைப் போலாகி விடுவோம்.

அது மட்டுமல்ல தாழ்வு மனப்பான்னை உடையவரோடு நாம் பழகினால்
நம்மால் எதையும் சாதிக்க முடியாது எதிலும் வெற்றி பெற முடியாது . நமக்கும் தாழ்வு மனப்பான்மை உண்டாகி விடும்.

தாழ்வு மனப்பான்மையுடைய நண்பர்களை பெற்றவர்கள் அவர்களை நீங்கள் மாற்றிவிடுங்கள் இல்லை யெனில் நீங்கள் மாறிவிடுவீர்கள் .

நமது முன்னேற்றதிற்கு நம் பழக்க வழக்கங்கள் முக்கிய பங்கு
வகிக்கிறது என்பதை மறந்திடக்கூடாது . கவனமாயிருக்க வேண்டும்.



தீய பழக்க வழக்கத்தை கொண்டவரோடு நட்பு வைத்துக் கொள்வதை விட நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.அவர் திருந்தாத வரையில்.


நம்மோடு பழகும் நம் நண்பர்களின் பழக்க வழக்கங்களை நாம்

கூர்ந்து கவனிக்கதான் வேண்டும். அவர்களின் தீய பழக்கத்தினால் நமது முன்னேற்றம் எந்த விதத்திலும் தடைப்படக் கூடாது.


சில தீய பழக்கம் உடம்பை கெடுக்கும் சில பழக்கம் மனதை கெடுக்கும் அதனால் உறவுகள் இடையே விரிசல் கொடுக்கும்.


நமது நடத்தை பெரும்பாலும் பழக்கமே யாகும் . இவை நாம் சிந்திக்காமலேயே தானாகவே வந்து விடுகின்றன. பண்பு என்பது நமது பழக்க வழக்கங்களின் மொத்தத் தொகையாகும். நல்ல வித பழக்க வழக்கங்களுடன் ஒருவர் இருந்தால் அவர் நல்லவிதப் பண்பு உடையவர் என்று கருதப்படுகிறார்.


எதிர் மறைப் பழக்க வழக்கங்களை எதிர் மறை பண்புடையவர் ஆகிறார்.பழக்க வழக்கங்கள் தர்க்கத்தையும் பகுத்தறிவையும் விடவும் மிகப் பலமானவை .
தொடக்கத்தில் பழக்க வழக்கங்கள் நம்மால் அறிந்துக் கொள்ள முடியாத அளவிற்கு மிக பலவீனமாக இருக்கும் இறுதியில் அவற்றிலிருந்து வெளிவர முடியாத அளவிற்கு மிகப் பலமானவையாகி விடும் . பழக்க வழக்கங்களைத் தன்னிச்சையாகவோ அல்லது மன உறுதியானாலோ வளர்த்துக் கொள்ளலாம்.

நான்சிறுவனாக இருந்த போது எனது பெற்றோர்கள் நீ நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் பழக்க வழக்கங்களே பண்பை உருவாக்குகின்றன. என்று என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது என்கிறார் ஷிவ்கெரா.


ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவரின் நல்ல பழக்க வழக்கத்தினால் அந்த கம்பெனி அவர் மீது நம்பிக்கை வைக்கிறது அதனால் அவருக்கு உயர் பதவியை அது சம்பாதித்து தருகிறது. நல்ல நண்பர்களை தேடி தருகிறது. பலர் நம்மிடம் பழகுவதற்கு ஆர்வப்படுவார்கள்.நல்ல சிந்தனையாள்களுடன் பழகும் போது நமக்கும் நல்ல சிந்தனைகள் மலரும்.


நல்ல பழக்க வழக்கங்களை கொண்ட சிலர் சில சந்தர்பங்களில் தீய பழக்கத்திற்கு மாறிவிடுவதுண்டு இதற்கு பல வித காரணங்கள் கூறுவார்கள் இவர்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு நிகழ்ச்சி மனதில் பாதிப்பை உண்டாக்கியிருக்கலாம் இதிலிருந்து மீள்வதற்கு இவர்களின் நண்பர்கள் உதவி செய்ய முன் வர வேண்டும் இது இவர்களின் மீது கடமையாகும்.
ஓரு பழக்கத்தை வளர்ப்பது என்பது நிலத்தை உழுவது போன்றதாகும்.
நல்ல பழக்கத்தை வளர்ப்பது ஒரு பூந்தோட்டத்தை உருவாக்குவது போலாகும்.

எதையும் அறிவுரைகள் என்று நாம் கருதவும் கூடாது அதை ஒதுக்கவும் கூடாது இவைகள் யாவும் நமது அனுபவத்தின் பிரதிலிப்பு. 


கிளியனூர் இஸ்மத் 
நன்றி:source:www.kismath.blogspot.com

நனைந்த கன்னங்கள் !!! !!! !!!

 
அந்தத் திருமண சூழ்ச்சியில்
விழுந்த பொருளாதாரச் சறுக்கல்களின் தலைவாயில்கள்
 
பெற்ற பாவத்திற்காக விற்ற சொத்துக்கள்
பட்டியலிடப்பட காரணமான காரணகர்தாக்கள்
 
குடிசை ஓரத்தில் கேட்கும் விசும்பல் சத்தத்தில்
எதிரொலிக்கும் சோகப் பின்னணிகள்
 
பெண்னைப் பெற்றவனின் மூளை நரம்புகளில்
துளிர்த்த வியர்வைத் துளிகள்
 
இவைதான் "வரதட்சணை" என்ற கொடிய அரக்கனின்
சுய விமர்சனங்கள்
 
இனி ... இதோ
திருமணத்தால் விழி பிதுங்கும்
பெண் வீட்டாரின் சோகப் பிரசுரங்கள்

பெற்ற பெண்னை கரையேற்றும் நோக்கத்தோடு

கவலைகளைப் போர்த்திக்கொண்டு தூங்குபவனை
பயமுறுத்தும் கனவுகள் எதார்த்தமானவை

இந்த இரவு கழிய

உள்ளக் குமுறல் மட்டுமே மூலதனமாக்கப்பட்டது
ஆனாலும்...
"நாளைய திருமணம் சிறப்பாய் நடைபெற வேண்டும்"
என்ற ஆவல் பிரதிபலிக்கத் தவறவில்லை.
 
மூத்தவளுக்கு வாங்கிய நகைகளை அணிந்து
அழகு பார்த்துக் கொண்ட
இளைய சகோதரிகளின்
கண்களில் துளிர்த்த கண்ணீருக்கு
அர்த்தம் தெரியவில்லை!

துக்கத்திற்க்கும் தூக்கத்திற்க்கும் மத்தியில்

கழிந்தன இச்சோதனை இரவுகள்

மணப் பெண்னுக்கு வாங்கிய

உயர் ஆடைகள் ஒரு புறமிருக்க
துவைத்துக் காய்ந்து கொண்டிருந்தது

தகப்பனாரின் வெள்ளாடைகள்

அது கரை படப் போவதும்

இவர் குறைபடப் போவதும்
தவிர்க்கமுடியாதது

அந்தப் பேராசைக் காரர்களின்

சூழ்ச்சியில் சிக்கித் தவித்து
சின்னாபின்னப் படப் போவது

இவர்களுக்குத் தெரிய நியாயமில்லை.

மறுநாள்

மூன்று வாடகை டம்ளர்கள் தவறி
அதன் விலை கொடுக்கப்பட்டது
 

இன்னும் வழக்கமான
பிரியாணியில் உப்பு இல்லை
எங்களுக்கு வரவேற்பு சரிஇல்லை
என்ற குறைபாட்டு கோஷங்களுக்கிடையில்
திருமணம் சிறப்பாய் நடந்தேறியது .

பிறந்த வீடு துறந்து வெளியேறினாள் புதுப்பெண்
அந்த உள்ளத்தில் எழுந்த "பாச எரிமலைகள்"

உதட்டில் அடக்கப்பட்டு
விழிகளில் வழிந்தது
 
உற்சாகமாய் கையசைத்து வழினுப்பியது
அந்த இரண்டு வயதுக் குழந்தை
ஆம்.. அந்த தந்தையின் நான்கில் ஒரு பங்கு
சுமை இறக்கப்பட்டிருக்கலாம்...

ஆறு மாதங்கள் உருண்டோடின!
புகுந்த வீட்டு அராஜகங்கள் குறித்து

மகள் எழுதிய ஆறு பக்க கடிதம்
தகப்பனின் வாயிற் கதவைத் தட்டியது
 
நான்கு மாதத் தவணையில்
தர ஒப்புக்கொண்ட வரதட்சணை பாக்கி
என்ற இடத்தில் அடிக் கோடிடப்பட்டிருந்தது
இருந்தாலும் என்னைப் பற்றி

கவலைப்பட வேண்டாம்
என்று முடிக்கப்பட்டிருந்தது.
 இதயப் புண்களில் கசியும்

இரத்தத்தில் பாய்ச்சப்பட்டது இன்னுமோர் அம்பு
அணைந்த விளக்குகளில் நனைந்த கன்னங்கள்
துடைத்துக் கொள்ளப்பட்டன
 
தோளில் துண்டோடு பணம் தேடப் புறப்பட்டார்
சோகத்தில் திரும்பி வந்தவருக்கு
சுபச் செய்தி சொல்லப்பட்டது
ஆம்.. இளைய மகள் பூப்பெய்தி விட்டாள்.
from Faizurhadi          

பணமா..? குணமா...?


பணம்
மனிதனை மனிதனிலிருந்து
மாற்றி விடும்
குணம்

இதைத்தேடுவதில்
தன்னை
தொலைத்துக் கொள்ளும்
மனித இனம்

கேட்டதும்
கொடுக்கவில்லையெனில்
உறவுக்குள் ஏற்படும்
சினம்

வழிபாடுகள்
வேறுபட்டாலும்
கொடுக்கல் வாங்கலில்
உடன்படும்
மனம்

வெட்டிக் கொள்வதும்
கட்டிக்கொள்வதும்
பணத்தினால் ஏற்படும்
மனஊனம்

செத்தும் கொடுத்தவர்களும்
சொத்தையே கொடுத்தவர்களும்
பலரின் வாழ்க்கைக்கு
பாலம்

குணம் மிகைத்தவர்கள்
இனம் வகையில்லாமல்
என்றும் கொடுப்பார்கள்
தானம்


கொடுப்பதற்கு இருந்தும்
பறிப்பதற்கு பாயும்
பணப்பிச்சனின் உள்ளம்
சாணம்

பணம்தான் வாழ்க்கை
என்பவர்களிடம்
இல்லை குணம்
அவர்களிடம் இருக்கும் உயிர்
என்றும் பிணம்…!

நன்றி: சிந்தனை கிளியனூர் இஸ்மத்
souurce:6வது அறிவு...

வலி உன்னை வளர்த்தெடுக்கும் தாய்-- byஅன்புடன் புகாரி


வலி
உன்னை
வளர்த்தெடுக்கும் தாய்

உன்னை
உனக்கே உரித்துக்காட்டும்
அம்மணம்


தேடாத விழிகளில்
திசைகளெல்லாம்
ஊமைகளாய் மூடிக்கிடக்கும்

வலியே
தேடலின் வல்லமை


உன் உண்மை முகவரியை
எழுதும் முள்

இருட்டை உடைத்து
வெளிச்ச வழி குடையும்
சிற்றுளிகளின் பேரியக்கச் சக்தி


மனிதா
நீ எப்போதும்
எதையும் வென்றதே இல்லை


உன் தோல்விகள்தாம்
ஒன்றுகூடி
வலிகள் பெறுக்கி
வெற்றியிடம் உன்னை
அடித்து இழுத்துக்
கொண்டுபோய்ச் சேர்க்கிறது

நன்றி:அன்புடன் புகாரி

Friday, October 23, 2009

நேற்று, இன்று, நாளை! அளவோடு கவலைப்படு!

தன்னுடைய  Just Enough Anxiety என்ற புத்தகத்தில், கவலைகள் நமக்குகூர்ந்து கவனிக்கும் ஆற்றலைத் தருகின்றன, கற்றுக்கொள்வதற்கும், மற்றவர்களோடு ஒப்பீடு செய்து மாற்றிக் கொள்வதற்கும், ஆக்க பூர்வமாகச் சிந்திப்பதற்கும், உண்மையிலேயே சிறந்த பலனைத் தருவதாகவும் ஆன கருவியாக ஆக முடியும் என்று சொல்கிறார்.  



கவலைகள் அளவுக்கு அதிகமாகும்போது பயம், குழப்பம் இவைகளோடு நம்பிக்கையை இழந்து விடுவதும் உண்மை  தான்! அதே நேரம், கவலைப்படாமல் அசட்டையாக இருந்து விடுவதும் கூட, ஒருவிதமான மந்தத்தன்மையுடன், போலியான அல்லது அசட்டுத் தனமான தைரியம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற மாதிரிக் கற்பனையில் மிதப்பதுமே கூட ஆபத்தானது தான்! ஒரு ரப்பர் பான்ட் இருக்கிறது, அதை ஒரு எல்லைக்கு மேல் இழுத்தால் பிய்ந்து விடும்! அந்த எல்லையை அறிந்து கொள்ள முயற்சிக்காமல் சும்மா இருந்து விட்டால் ரப்பர் பான்ட் நமக்கு எந்த விதத்திலுமே பயன்படாது போய்விடும் இல்லையா? அதே மாதிரி, பிய்ந்து விடுகிற நிலைக்கும், அதனுடைய எலாஸ்டிசிடியைப் பயன்படுத்தாமல் இருக்கிற நிலைக்கும் மத்தியில் இருக்கும் அதிகப்பயன்பாடு  அல்லது பயன்பாட்டு உச்ச நிலையைக் கண்டுகொள்வதில் தான், கவலைகள் மிக வலி.மையான கருவிகளாக, வெற்றியைத் தருபவையாக  நமக்குக் கிடைக்கின்றன என்கிறார் ஆசிரியர்.


நமக்கு இன்னமும் தெளிவாகப் புரிந்துகொள்ள வீணை, கிடார் போன்ற தந்தி வாத்தியங்களில் தந்திகள் போதுமான அளவுக்கு முறுக்கேற்றினால் தான்  தேவையான ஒலி கிடைக்கும். அளவுக்கு அதிகமாக முறுக்கினால், தந்தி அறுந்து விடும், அளவு குறைந்து போனாலோ தொய்ந்து போய் ஒளியே வராது என்பது போல, கவலைகளால் ஏற்படும் முறுக்குத் தன்மை கூட அவசியம் தான் என்பது இவருடைய வாதம்..

பாதுகாப்பின்மை, அசௌகரியம், குழப்பம், வலி இவைகளை அனுபவித்துப் புரிந்துகொள்வதில் நம்முடைய உச்சகட்டத் திறமையை வெளிப்படுத்தும் தருணங்களாக,தனிநபராகவோ அல்லது குழுக்களாகவோ எப்படியிருந்தாலும் சரி, 'போதுமான அளவுக்குக் கவலைப்படு' என்பது ஒரு வாழும் கலையாகவே ஆகிவிடும் என்று சொல்கிறார்.

கவலைப்படுவது என்பது, அதைப் பற்றி எவ்வளவு மோசமாகச் சொல்லப்பட்டபோதிலும், அதன் மோசமான விளைவுகள் உண்மையாக இருந்தபோதிலும் கூட, உண்மையான பிரச்சினை இல்லை! கவலைகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம், என்ன செய்கிறோம் என்பதே உண்மையான பிரச்சினை என்கின்ற
source:consenttobenothing

Thursday, October 22, 2009

நிறைவான வாழ்வு

தலைமையேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் நடத்தைகளை சிறப்பான முறையில் வைத்து கொள்ள வேண்டும். எல்லோரிடமும் இன்முகத்துடன் நடக்க பழகி கொள்ள வேண்டும். வேண்டியவர்கள் வேண்டாதவர் என பாகுபாகுபடுத்தி பார்க்கக் கூடாது. தன்னலம் பாராத பொது நலத்தொண்டில் பிரியப்படுவறதாக இருத்தல் வேண்டும். அமைதி, பொறுமை, நிதானம், நீதி நேர்மை சகிப்பு தன்மை இவற்றுடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். சலுகை என்பதை யாருக்காகவும் செய்யக்கூடாது. வன்முறையை தவிர்ப்பவராக இருத்தல் வேண்டும்.
காட்டுக்கு போனாலும் கூட்டு உதவாது இருவருக்கு மேல் மூவறாகவோ செல்லும்படி நேரிட்டால் உங்களுக்குள் ஒருவரை தலைமை ஏற்க செய்து அவர் சொற்படி நடக்க வேண்டும் தலைமைக்கு கட்டு பட்டுதான் நடக்க வேண்டும் அல்லாமல் ஒழுங்கீனமாக நடக்கக்கூடாது. துலைமையை குறை கூறாமல் தவறுகளிருந்தால் சுட்டி காட்டுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தாய்ப்பால்
குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் அத்தியாவசியமாகும். தாய்பால் கொடுப்பதால் குழந்தை நல்லதிட காத்திரமாகவும், நோய்களை தடுக்கும் வலிவும் உடம்பில் ஏற்படுகிறது. தாயின் குண நலன்கள் பிள்ளை பெற்று குடும்ப நலன்காக்கும் பந்தபாசம் ஏற்பட்டு பெற்றோர்களை காப்பாற்றுவார்கள். குழந்தை பிறந்தவுடன் முதன் முதலில் குழந்தைக்கு தாயிடம் சுரக்கும் சீம்பால் தான் கொடுக்க வேண்டும். சீம்பால் கெடுதல் அல்ல! சீம்பாலில் குழந்தையின் இதயம், நுரையீரல், மூளை போன்ற முக்கியமான அவயவங்கள் வலுப்பெற்று வளரவும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கக் கூடியது! தவறாமல் சீம்பால் கொடுப்பது மிகவும் ஆரோக்கியமானதும் ஆகும்.

குழந்தை வளர்ப்பு
உங்கள் குழந்தைகளை பாசத்துடன் வளருங்கள். செல்லத்துடன் வளர்த்து விடாதீர்கள். பாசத்துடன் வளரும் குழந்தைகள் பிற்காலத்தி;ல் பாசத்தைகாட்டி பெற்றவர்களை காப்பாற்றும். செல்லத்துடன் வளரும் குழந்தைகள் பின்னாளில் தானும் சீரழிந்து பெற்றவர்களையும் மன வேதனைகளுக்கு ஆளாக்கி தலை குனிவை உண்டாக்கிவிடும்.

அடிமை
பெண்கள் அடிமைகளோ, விளையாட்டு கருவிகளோ, போகப்பொருளோ அல்ல. அவர்களுக்கும் உணர்வுகளும், உணர்ச்சிகளும், எண்ணங்களும், சிந்தனைகளும், மனகிளர்ச்சிகளும், விருப்பு வெறுப்புகளும், உண்டு என்பதை ஆண்கள் (கணவர்கள்) உணர்ந்து நடந்து கொண்டால் வீட்டில் என்றும் இன்ப சூழ்நிலை நீடிக்கும்.

அடக்கம்
பெண்கள் நவ நாகரீக உடையணிந்து தங்களை அழகுபடுத்திக் கொள்வதும் அலங்கரித்துக் கொள்வதம் தங்கள் கணவனுக்காகவே அல்லாமல் பிறருக்காக இருத்தல் கூடாது. எனவே நகைகளை அளவுடன் அணியுங்கள். அதிக அல்லாமல் வீண் அலங்காரமோ வீண் ஆடம்பரமோ நல்ல குடும்பப் பெண்களுக்கு அழகல்ல வாங்கு சிட்டியும் கால்விரல்களில் பவுன்மெட்டியும் முழங்கை வரை வளையல்களையும் அணிந்து கொள்வதால் பிறரின் ஏக்க பார்வைகளுக்கும் கண்ணெரிக்கும் சாபத்திற்கும் ஆளாக நேரிடும். மேலும் அது நம்மையும் நம் செல்வத்தையும் அழித்துவிடும். இது தேவைதானா? யோசியுங்கள்!

- M.A.P. ரஹமத்துல்லா

மனைவிக்கு மட்டுமா உபதேசம்?


‘ஒரு மனிதன் பாவியாகிவிட, அவன் உணவளிக்க கடமைப்பட்டவரு(மனைவி)க்கு உணவளிக்காமல் கடமை தவறுவது போதுமாகும்.’ (நூல்: அபூதாவூது.)
ஒரு பெண்ணுக்கு திருமணமாகிவிட்டால் அவள் கரம்பிடித்த கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்து அவனது கௌரவத்தையும், குடும்ப கண்ணியத்தையும் காப்பது அவளது கடமை என்பதில் இருகருத்தில்லை.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்ற, “நல்ல பெண் எவரென்றால், கணவன் அவளைக் காணும்பொழுது மகிழ்விப்பாள். அவன் கட்டளையிட்டால் கீழ்படிந்து நடப்பாள். தனது விஷயத்திலும்; தமது பொருள் விஷயத்திலும் கணவனுக்கு விருப்பமில்லாத போக்கை கடைப்பிடிக்க மாட்டாள்!’ என்ற நபிமொழிக்கொப்ப, ஒரு பெண் பணிந்து வாழ்ந்தால்தான் அவள் சிறந்த பெண்மணி என்ற நற்பெயரை அடைய முடியும்.

கண்ணியம் வாய்ந்த கணவனை அவமதிக்கும் வகையிலும் பெற்ற பிள்ளைகளை நிராதரவாக விட்டும் ஒரு பெண் வாயடித்துக்கொண்டும், வம்பளத்துக்கொண்டும், அடங்காப்பிடாரியாக சுற்றியளைந்தாள் என்றால்…ஊர்மக்கள், இவளா? ராட்சசியாயிற்றே! வாயாடியாயிற்றே பெண்ணுருவில் நடமாடும்…ஆயிற்றே! என்றெல்லாம் (அவள் காதில் விழாதவாறு) பேசத் தலைப்படுவர். இத்தகைய பெண்களை நபிகளார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கடிந்துரைத்துள்ளார்கள்.

‘கணவனுக்கு மாறு செய்வதன் மூலமும் வந்தபடி பிறரை சாபமிடுவதன் மூலமும் அனேக பெண்கள் நரகம் புகுத நான் கண்டேன்’ என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஆக, ஒரு கணவன் தமது மனைவியுடன் இன்புற்று வாழ அப்பெண் நடந்துகொள்ள வேண்டிய ஒழுக்க முறைகள், சட்டமுறைகள், வழிபாட்டு முறைகள் பற்றி இஸ்லாம் நன்குரைத்துள்ளது. இதன்படி வாழ்வது இஸ்லாமிய பெண்ணின் கடமையாக இருக்கிறது.

ஆயினும் ஒரு பெண்ணுக்கு இஸ்லாம் கூறிய அளவு அறிவுரைகளை, அவளைக் கரம்பிடித்த கணவனுக்கு எடுத்துரைக்கவில்லையா? என்ற கேள்விக்கணை பல ஊர் முஸ்லிம் பெண்கள் தரப்பிலிருந்து எழுந்தவாறுள்ளது. இவ்வாறு இவர்கள் கேள்வி எழுப்ப நியாயமான காரணங்களும் உள்ளன.

இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு பெண் எப்படி குடும்பம் நடத்த வேண்டும்? ஒழுக்கம் பேண வேண்டும்? கணவனையும், குழந்தைகளையும், அண்டை அயலாரையும் அவள் எப்படி ஆதரிக்க வேண்டும் என்பதற்கான பெண்ணுபதேசங்கள் நிறைய உள்ளன. அவை ஒவ்வொரு ஊரிலும் பிசங்கங்களில் உபதேசிக்கப்படுகின்றன. ஆனால், இவைபோன்ற அறிவுரைகள் கணவனுக்கும் அதிகம் இருந்தும் கணவனுக்கு செய்யும் உபதேசங்கள் குறைவாக உள்ளன.! இது ஏன்? ஏன்ற கேள்வியை பேண்கள் கேட்கின்றனர்.

தவிர, ஒரு சில குடும்பங்களில் சில கணவன்களால் குடும்பப்பெண்கள் கடும் பிரச்சனைக்கும் தொல்லைக்கும் ஆளாகி, அவனது கொடும்பிடியில் நரக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நிலை. ஒரு சில கணவன்கள் பெண்களை அடிமைகளைப்போலெண்ணி இழிவுபடுத்துகின்றனர். இன்னும் பலர் தமது குடும்பப்பொறுப்பை எண்ணி சம்பாதிக்காமல் மாமனார் வீட்டை உறிஞ்சிக்கொண்டு மிடுக்குடன் பவனி வருகின்றனர். மற்றும் சிலர் மணமுடித்த கையோடு பெண்ணை அந்தரத்தில் விட்டு திரும்பிப்பாராமல் தலைமறைவாகி விடுகின்றனர். வேறு சிலரிடம் சொல்ல முடியாத உடல்கூறு நோய்கள், கடும் பிணிகள் இருப்பதால் பெண்கள் தமது சுகமான வாழ்வை இழக்கும் நிலை!

இப்படி எத்துனையோ வெகு மோசமான குற்றங்கள் குறைகள் பல கணவன்களிடம் உண்டு. இதில், தந்தை, நாத்திகளின் அவதூறுகளையும் கிசுகிசுப்புகளையும் காதில் போட்டுக்கொண்டு அமைதியின் வடிவங்களாகத் திகழும் பெண்மணிகளை அணுஅணுவாக இம்சித்து சித்ரவதை செய்யும் கொடும்பாவிகளும் உண்டு. ஊர்தோறும் இப்படிப்பட்ட அவஸ்தைகளால் மனம் குமைந்து குமுறி அவதியுறும் அபலைப் பெண்களின் ஈனஸ்வரங்கள்தான் சில சமயம் கேள்விக்கணைகளாக மாறுகிறது.

அதாவது, பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள இஸ்லாம் இவர்களைப்போன்ற கொடுமைக்கார கணவன்களுக்கு ஒன்றும் கூறவில்லையா? என்பதுதான் அந்தக் கேள்விக்கணைகள்! உண்மையில் கணவன்மார்களுக்கும் இஸ்லாம் நிறைய அறிவுரைகள் நல்கியுள்ளன. இதோ, ஒரு பெண்ணை கரம்பிடித்து விட்டால், அந்த நிமிடமே கணவனின் கடமையென்னவென்பதை தெளிவுபடுத்துகிறது.

நீங்கள் அப்பெண்களை நல்ல முறையில் வாழச்செய்யுங்கள். இது சுருக்கமான திருக்குர்ஆன் வசனமாகும். இதைத்தொடரந்து இவ்வாறு உபதேசிக்கிறான் அல்லாஹ். ‘அவர்களை நீங்கள் வெறுத்தால்; நீங்கள் அவர்களை வெறுக்கலாம்-ஆனால் அல்லாஹ் அவர்களில்தான் உங்களுக்கு பெரும் நன்மைகளை வைத்திருப்பான்.’ – அல்குர்ஆன் 4:19

பெண்ணினத்தின்மீதே நல்லபிப்ராயத்தை விதைக்கும் வகையில் இவ்வசனங்களை அல்லாஹ் கூறியுள்ளான். இனிய வாழ்க்கை, இரணவிருத்தி, மன அமைதி போன்ற பாக்கியங்கள் ஒருவன் மணமுடித்தபின் கரம்பிடித்தவள் மூலம் பெறவியலும்-அதை முறையாகப் பெறுவது கணவனின் கடமை என்பது இவ்வசனங்களின் நோக்கம்.

ஒரு மனிதன் பதவி பட்டங்கள் சொத்து செல்வங்கள் குழந்பை;பேறுகள் மூலம் அடையாத அமைதியை தமது இல்லாள் மூலம் அடைய முடியும். தமது மனைவி மூலம் அவன் காணும் அன்பும் ஆதரவுமே அத முக்கியமானது, நீடித்தது, கலங்கலில்லாதது! என்பதை இதோ இன்னொரு வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். ‘நீங்கள் சேர்ந்து வாழும்) மனைவிகளை அவர்களிடம் நீங்கள் நிம்மதி பெறுவதற்காகவே உங்களிலிருந்து அல்லாஹ் அவர்களைப் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும், நேசத்தையும் உண்டுபண்ணினான்  – அல்குர்ஆன் 30:21

இந்தளவு பெண்ணின் பெருமையை அல்லாஹ் கணவன்களுக்கு அறிவித்துள்ளான். ஒரு பெண்ணுக்குரிய கடமைகளை தனது திருமறையில் விபரித்துள்ளதுபோல், ஆணுக்கும் தெளிவாக உபதேசித்துள்ளான். இஸ்லாமியப் பெண்களில் பலர் குர்ஆன், ஹதீ }; அறிவுரைகளை கற்பதிலும் மார்க்க நூல்களை படிப்பதிலும் அக்கறையில்லாமல் இருப்பதால், கணவன்மீது தங்களுக்குரிய உரிமைகளைப் பெறத் தெரியாமல் இருக்கிறார்கள்.

பெண்ணுரிமை நிலைநிறுத்தும் உபதேசங்கள் திருக்குர்ஆனில் நெடுகேயுள்ளன. குர்ஆனில் எங்கெல்லாம் பெண்களுக்கான உபதேசங்கள் இடம்பெற்றுள்ளனவோ அங்கெல்லாம் ஆண்களுக்கும், உபதேசிக்கப்பட்டுள்ளன. சுpல எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள். ‘நபியே! விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறும்!அவர்களும் தமது பார்வையை கீழ் தாழ்த்தி தமது கற்பை அரட்சித்துக் கொள்வார்களாக! அதுவே அவர்களுக்கு பரிசுத்தமானதாகும். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாகும்.’ – அல்குர்ஆன் 24:30 மேலும் அல்லாஹ் கூறுகிறான்: ‘ஆண்கள் சம்பாதித்தவை அவர்களுக் குரியதாகும். பெண்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே உரியதாகும்.’ – ஆல்குர்ஆன் 4:32

இப்படி ஆண்களுக்கும் பெண்ணுரிமைகளை போதிக்கும் பொன்மொழிகள் குர்ஆனிலும், ஹதீஸிலும் சட்ட அமைப்பிலும் நிறையவுள்ளன.

அதேபோல், பெண்கள் விஷயத்தில் ஆண்களுக்கு சற்று அதிகமான அறிவுரைகள் உள்ளன. அதில் முத்தாய்ப்பாக் ‘அப்பெண்களுக்கு உரிமைகள் உள்ளன! கடமைகள் உள்ளதுபோல்!’ என்ற திருக்குர்ஆன் வசனத்தை அறிஞர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். இவ்வசனத்தில் பெண்களின் கடமைகளை காட்டும் சொல்லைவிட அவர்களது உரிமைகளுக்கு குரல் எழுப்பும் சொல் முதன்மை இடம் பெற்றுள்ளது. பெண்களின் நியாயமான உணர்வுகளுக்கு இஸ்லாம் முழுமையாக செவி சாய்த்துள்ளதற்கு இவ்வசனம் ஒன்றே பலமான சான்று!

ஒரு கணவனால், தமது மனைவிக்கு நியாயமான முறையில் வாழ்க்கையை தரவில்லையெனில் அவளுக்கு அன்பான முறையில் விவாக விடுதலை அளித்து விடுவதே அவனது மனுஷத்தன்மைக்கும் மனித நேயத்துக்கும் அடையாளமாகும்.

அண்டை அயலாருக்கும் தமது பணியாட்களுக்கும் ஏன் முஸ்லிம் அல்லாதோருக்கும்-இன்னும் சொல்வதெனில் வாயற்ற ஜீவன்களுக்கும் புற்பூண்டுகளுக்கம் அத்துணை படைப்புகளின் உரிமைகளையும் போற்றச்சொல்லும் இஸ்லாம் கணிசமான மஹரீந்து கண்ணியமான முறையில் ஒரு பெண்ணை கரம் கோர்க்கச் செய்யும்போது அவளது பெண்ணுரிமையை எந்தளவு போற்றும்ஃ என்பதை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஒரு பெண்ணை ஆதரித்து பாதுகாக்கும் முறையை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு விளக்கினார்கள்: ‘நீங்கள் உண்ணும்பொழுது மனைவியையும் உண்ணச்செய்யுங்கள். உங்களுக்க உடை வாங்கும்போது அவருக்கும் வாங்குங்கள். அவரது முகத்தில் அடிக்காதீர்கள். அசிங்கமாக பேசாதீர்கள். வீட்டில் தவிர (வெளியில்) அவரை கண்டிக்காதீர்கள்.’ (ஆதாரம்: அபூதாவூது)

இதுபோன்ற ஹதீஸ்களெல்லாம், ஒரு பெண்ணை இரக்கமின்றி தண்டிப்பதையும், அவளது பாசம் மிக்க பெற்றோரிடமிருந்து அரக்கத்தனத்துடன் அவளை பிரித்து வைப்பதையும், அனாதையாக அவளை விட்டு விட்டு ஒதுங்கி பதுங்கி விடுவதையும், தமது அக, புற நோய்கள் காரணமாக அவளுக்கு வாழ்வளிக்க முடியாத பொழுது, இதமான முறையில் விவாக விலக்களித்து அவளது மறுவாழ்வுக்கு இடந்தராதிருப்பதையும் பெரிதும் கண்டிக்கின்றன.


‘ஒரு மணிதர் அவரது மனைவி மக்களை நேர்மையுடன் பராமரிக்க வேண்டியவராக இருக்கின்றார். அது பற்றி அவர் மறுமையில் விசாரிக்கப்படுவார்!’ (ஆதாரம்-புகாரி) என்ற ஹதீஸை சம்மந்தப்பட்ட கணவன்கள் சிந்திக்க வேண்டும். தமது மனைவியை எந்தவொரு வகையில், இம்சித்தாலும், தமக்கு விளையும் இறை முனிவுகள் தண்டனையிலிருந்து எந்த ஆணும் தப்பிக்கவியலாது.

நபிகளார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வில் சமுதாயத்துக்கு அவர்கள் வழங்கிய ஆயிரக்கணக்கான பிசங்க நிகழ்ச்சிகளில் ஹிஜ்ரீ 9-ஆம் ஆண்டு அவர்கள் நிகழ்த்திய அரஃபாத் பிரசங்கம் வரலாற்று சிறப்பு கொண்டதாகும். இக்காலம் இஸ்லாம் முழுமை பெற்றிருந்த காலமாகும். பெருமானார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் இறையோனைக் காணச்செல்ல நேரம் நெருங்கிக் கொண்டிருந்த காலமாகும். லுட்சக்கணக்கான சஹாபாக்கள் குழுமியிருந்த அந்த சபையில் அவர்களின் பெரும்பகுதி பேச்சு பெண்ணினத்துக்கே பெருமை சேர்ப்பதாகவும், அவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதாகவும் அமைந்தது.

‘மக்களே! பெண்களுடன் நியாயமான முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்கள் உங்களிடம் சிறைக்கைதிகள் நிலையிலுள்ளனர். அவர்கள் உங்களிடம் தப்பாக நடந்து கொள்ளும்பொழுது மட்டும்தான் நீங்கள் அவர்களிடம் கண்டிப்புக் காட்டலாம். அவர்கள் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்தால், அவர்களை இம்சிக்க நீங்கள் எந்த வழியும் தேடவேண்டாம்.தெரிந்து கொள்ளுங்கள்! உங்கள்மீது உங்கள் மனைவியர்க்கு நியாயமான பல உரிமைகள் உண்டு-அதனைக் காப்பாற்றுங்கள்! முக்கியமாக அவர்களுக்கு நீங்கள் சரிவர உணவும், உடையும் அளிக்க வேண்டும்.’ (ஆதாரம்-புகாரி)

‘உங்களில் சிறந்தவர் உங்களின் மனைவியிடம் சிறந்தவராகும்! நான் எமது மனைவியரிடம் நல்லவனாக இருக்கிறேன். என்ற நபிகளார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிக்கிணங்க- ஒவ்வொரு ஆண் மகனும் தனது துணைவியின் உரிமைகளையும், அந்தஸ்துகளையும் காப்பாற்றுவது புனித கடமையாகும்.


மௌலவி, A.முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவி நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் தலைமை இமாம்,,
 நன்றி::nidur.info

பூவும் பொன்மின்னலும்


பூப்பூக்கும் ஓசை
அந்தப் பூவிற்கே கேட்பதில்லை
பொன் மின்னல் பூக்கும் ஓசையோ
இந்த பூமியெங்கும் கேட்கும்
பூவாகவும் இருப்போம் நாம்
பொன்மின்னலாகவும் வாழ்வோம்


நன்றி:அன்புடன் புகாரி

உங்கள் மீது இறைவனின் அருள் மழை பொழியும் ஸலாம் – முகமன் கூறுதல்!

அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வார்த்தை முஸ்லிம்களுக்குக் கிடைத்த ஓரு பெரிய அருட்கொடை என்றே சொல்ல வேண்டும். அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:
ஸலாமுன் – நிகரற்ற அன்புடையோனாகிய இறைவனிடமிருந்து வந்த வார்த்ததையாகும். (அல்குர்ஆன்: 36:58).
பல விஷயங்களில் நாம் அலட்சியமாக இருப்பது போன்று ஸலாம் (முகமன்) கூறும் விஷயத்திலும் அலட்சியமாக இருக்கின்றோம். இந்த ஸலாம் என்பது ஏதோ வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்கார், குட்மார்னிங் போன்ற ஒரு வார்த்தை என்று தான் பலர் நினைத்து கொண்டுள்ளனர்.
நாம் சொல்லும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற வார்த்தையை சாதாரண மனிதர்களோ, மேதைகளோ, பண்டிதர்களோ இயற்றவில்லை. மாறாக மனித சமுதாயத்தைப் படைத்த இறைவனிடமிருந்து நமக்கு அருளப்பட்ட வார்த்தைதான் இந்த அஸ்ஸலாமு அலைக்கும். நாம் இதை மொழியும் போதெல்லாம் நிச்சயம் இறைவனின் அருள் மழை பொழியும். இந்த ஸலாத்தின் மூலம் சண்டை சச்சரவுகளையெல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டு பிரியத்தையும், சமாதானத்தையும் உண்டாக்க அல்லாஹ் விரும்புகிறான்.
கொள்ளைக்காரனைக் கூட கொள்கை வீரனாக மாற்றிவிடும் வார்த்தையே இந்த ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லும் போது கல் நெஞ்சங்களையும் இந்த ஸலாம் கரைத்துவிடும். இதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
உங்களில் ஈமான் (விசுவாசம்) கொள்ளாதவரை யாரும் சுவனம் செல்லமாட்டீர்கள். மேலும் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை ஈமான் கொண்டவர்களாக ஆகமாட்டீர்கள். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றை நான் கற்றுத்தரட்டுமா? என்று கேட்ட நபி(ஸல்) அவர்கள், உங்களுக்கு மத்தியில் ஸலாம் சொல்வதைப் பரவலாக்குங்கள் (பிரியத்தை ஏற்படுத்த இதுவே மிக சிறந்த வழியாகும்) என்று கூறினார்கள். நூல்:முஸ்லிம்
இந்த நபிமொழியின் முதல் வாசகத்தை சற்று விளக்கமாக பார்த்து விட்டு அடுத்த விஷயங்களில் நுழைவோம். உங்களில் ஈமான் கொள்ளாதவரை யாரும் சுவனம் செல்லமாட்டீர்கள் இதுதான் அந்த முதல் வாசகம். இதற்கு பொருள் என்ன? உலகில் யார் எவ்வளவு நல்ல விஷயங்கள் செய்தாலும் அவர்களுக்கு ஈமான் (இறை நம்பிக்கை) கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் நற்செயல்கள் அனைத்தும் செல்லாக்காசுகளே!
உலகில் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட பல நல்ல காரியங்களை செய்வதைப் பார்க்கிறோம். இப்படிப் பட்டவர்களுக்கு சுவனம் கிடைக்குமா? என்றால், நிச்சயமாக இல்லை. சுவனம் செல்வதானால் இறை நம்பிக்கை இருக்க வேண்டும்.
இறை நம்பிக்கை இல்லையெனில் எந்த நற்செயலும் அது எவ்வளவு பெரிய மலையைப் போல் இருப்பினும் கானல் நீரே! இதைப்பற்றி அல்லாஹ்வும் இவ்வாறு கூறுகிறான்.
மேலும், எவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும். தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் – (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன். (அல்குர்ஆன் 24:39)
நான் வேலை செய்கிறேன், ஆனால் என்னுடைய பெயர், ஊழியர்களின் பெயர் பட்டியலில் இல்லாமல் இருப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதே போல் தான் ஸலாம் கூறாமலிருப்பதுமாகும். மனிதர்கள் தரும் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கே தலை சுற்றுகிற அளவிற்கு நிபந்தனைகளைப் போடுவதை ஏற்றுக் கொள்கின்ற நாம் நிரந்தர சுவனத்தை, அளவிலா இன்பத்தை சம்பளமாக தரும் இறைவன், அவன் மட்டும் நிபந்தனைகள் போடக்கூடாதா? எல்லைகள் வகுக்க கூடாதா? அதை ஏற்கின்ற நாம் இதை மட்டும் ஏன் யோசிக்க மறுக்கின்றோம்.
அடுத்து நமக்கு உண்டாகும் சந்தேகம் இதுதான். ஸலாம் சொல்லத்தான் செய்கிறோம். ஆனால் பாசமோ, பிரியமோ, நேசமோ, சமாதானமோ உண்டாவதாக தெரியவில்லையே. சண்டைகளும், சங்கடங்களும் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் ஸலாம் எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படி நாம் சொல்வதில்லை. எப்படிச் சொல்ல வேண்டும்? வாய்வழி உச்சரிப்புடன், உள்ளத்தால் சொல்ல வேண்டும். ஆனால் நடைமுறையில் அதிகமானோர் நேரில் பார்த்து “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்கிறார்கள். அவர் சிறிது நகர்ந்ததும், போகிறான் பாரு, இவன் என்ன பெரிய யோக்கியனா? போன்ற வார்த்தைகளால் நாம் சொன்னாலும் அல்லது உள்ளத்தால் எண்ணினாலும் இறைவனின் அருள் மழை பொழியுமா? இப்படி ஸலாம் கூறினால் எங்கிருந்து அமைதி உண்டாகும்?! நிம்மதி உண்டாகும்?!. எப்படி சண்டைகள் தீரும்?! இங்கே நாம் யாரைக் கேவலப்படுத்துகிறோம் தெரியுமா? அல்லாஹ்வை, ஆம் ஸலாம் என்பதும் அல்லாஹ்வின் பெயர்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக அல்லாஹ்விற்கு தொண்ணூற்றி ஒன்பது திருபெயர்கள் உள்ளன. அவற்றை (விளங்கி) மனனம் செய்பவர் சுவனம் சென்றுவிட்டார். நூல்: புகாரி
தொண்ணூற்றி ஒன்பது திருப்பெயர்களில் ஒன்றுதான் இந்த ஸலாம். அவைகளில் ஒன்று அஸ்ஸலாம் என்று கீழ்காணும் வசனம் தெரிவிக்கிறது.
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன்; பெருமைக்கு உரித்தானவன் – அவர்கள் இணைவைப்பவற்றை எல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.(அல்குர்ஆன் 59:23)
எனவே ஸலாம் சொல்லி அதன் மூலம் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள் அல்லாஹ்வையே ஏளனம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மீது நிம்மதி நிலவட்டுமாக! என்பது அதன் பொருள். அதாவது உங்கள் மனைவியிடத்தில், உங்கள் குழந்தையிடத்தில், உங்கள் உறவினர்களிடத்தில், உங்கள் பிரயாணத்தில், உங்கள் வியாபாரத்தில், உங்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், உங்கள் மண்ணறையில் பின்பு மறுமையில் இவை எல்லா நிலைகளிலும் உங்கள் மீது நிம்மதி உண்டாகட்டுமாக! இது தான் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதின் பொருள். இவை அனைத்தையும் சுருட்டி மடக்கி அஸ்ஸலாமு அலைக்கும் என்பதில் அல்லாஹ் வைத்துள்ளான். மனித வாழ்வில் ஏற்படும் முக்கியமான தருணங்கள் அவை.
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டாமல் ஸலாத்தினை அதன் உண்மையான வடிவில், பொருளுணர்ந்து ஸலாம் கூறுபவர்களாக ஆக்கி அருள்வானாக!
- சாதாதுல்லாஹ்
நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்
 நன்றி:இஸ்லாம்கல்வி.காம்

புன்னகையைக் கொடு

முக்கியமானவர் எவரையேனும்
சந்திக்கச் சென்றால்
வழமையாய்ப்
பூங்கொத்து கொடுப்பார்கள்
நீயுன் புன்னகையைக் கொடு
போதும்
பூங்கொத்துகளெல்லாம்
நிறமிழந்து
உதிர்ந்து போகும்

அன்புடன் புகாரி புதிய பதிவுகள்
 நன்றி::அன்புடன் புகாரி

முஸ்லிம் பெண்கள் ஏன் கல்வியில் பின்தங்கியவர்களாய் இருக்கிறார்கள்?


இஸ்லாம் என்பது மதப் பிரச்சாரத்தில்தான் இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். நாம் மதப்பிரச்சாரம் செய்தால் நமக்கு ஆயிரம் நன்மைகள் கோடி நன்மைகள் என்று வந்து குவியும் இறைவன் நம்மை நேரே சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான் என்று தவறாக நினைக்கிறார்கள்.

இறைவன் மனிதர்களின் உயர்வினையே நிச்சயமாக விரும்புவான். தன்னை, தன் உறவுகளை, தன் சமுதாயத்தை உயர்த்துவதற்கு எவன் ஒருவன் பாடுபடுகிறானோ அதற்கான வெகுமதியாகத்தான் அவனை சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான்.

இறை நம்பிக்கை கொள்வது, தொழுவது, நோன்பு நோற்பது, ஈகை அளிப்பது, ஹஜ் என்னும் புனிதப்பயணம் செல்வது என்ற ஐந்து கடமைகளை மட்டும் செய்துவிட்டால் போதும் நமக்கு சொர்க்கம் நிச்சயம் என்று நினைத்துக்கொள்கிறார்கள் சிலர்.

தன் முன்னேற்றம், தன் உறவுகளின் முன்னேற்றம், தன் சமுதாய முன்னேற்றம், பொது மக்கள் முன்னேற்றம், உயர் கல்வி, அறிவுடைமை, பெண் விடுதலை, முற்போக்கு எண்ணங்கள் போன்று எந்த முன்னேற்றத்திற்கும் தன்னால் இயன்றதைச் செய்யாது சிலர் இருந்துவிடுகிறார்கள்.

அப்படியாய் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோர் சொர்க்கம் செல்வது இயலுமா? உலகம் முழுவதும் முஸ்லிம் பெண்கள் கல்வியில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். ஏன் என்ற காரணம் அலசப்படவேண்டும்.

ஒன்றை நாம் துவக்கத்திலேயே அறிந்துகொள்ள வேண்டும். ஆரம்பக் காலங்களில் உலகில் முஸ்லிம்கள் என்றில்லை எந்தப் பெண்ணுமே கற்றவளாய் இல்லை. அப்படி கற்றவள் மிகக் குறைவாகவே இருந்தாள். பின் ஒவ்வொரு சமுதாயமாக முன்னேறியது. ஆனால் முஸ்லிம் பெண்களோ இதில் கடை நிலையில்தான் இன்னமும் இருக்கிறார்கள்.

முஸ்லிம் பெண்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். 16 லிருந்து 18க்குள் திருமணம் முடிந்துவிடுகிறது. இந்திய சட்டம் 18 என்று சொல்வதால் போலி பிறப்புச் சான்றிதழ்களும் தயாரிக்கிறார்கள்.

பதின்ம வயது நிறைவடைவதற்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என்று கட்டாயமாகப் பெண்களின் படிப்பை நிறுத்துகிறார்கள். 18 வயதைத் தாண்டிவிட்டால் மாப்பிள்ளை கிடைக்காது என்று அறிவில்லாமல் கவலைப்படுகிறார்கள். அவசியமே இல்லாமல் பயத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொள்கிறார்கள்.

அடுத்தது, குழந்தை பெற்றுக்கொள்வதில் எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை. 24 மணி நேரமும் பிள்ளைகளோடு போரடும் வாழ்வையே பெண்கள் பெறுகிறார்கள். ஏன் இத்தனை பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு அவதிபடுகிறீர்கள் என்றால் இறைவன் கொடுத்தான் என்று பொறுப்பில்லாமல் சிலர் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை.

பல வீடுகளில் கணவன் தன் மனைவியை வீட்டில் பூட்டி வைப்பதையே விரும்புகிறான். கேட்டால் அது ஒன்றுதான் அவளுக்குப் பாதுகாப்பு என்கிறான். உண்மையில் அது அவளின் பாதுகாப்பா அல்லது அவனது சுயநலமா என்பதை ஆலோசிக்கவேண்டும்.

இஸ்லாமிய குடும்பங்களின் பெரியோர்கள் பெண்களை அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என்று செய்யாதே பட்டியலைத்தான் பெரிதாக முன்வைக்கின்றனர். அதைச் செய் இதைச் செய் என்ற பெண் முன்னேற்ற வழிகளை கற்றுத் தருவதே இல்லை.

நிச்சயமாக இஸ்லாம் மதம் கல்வி கற்பதைத் தடுக்கவில்லை. ஆடை கட்டுப்பாடையே அது வலியுறுத்துகிறது. சவுதி அரேபியாவில் இந்தியப் பெண்கள் அவர்கள் சொல்லும் கறுப்பு மேலங்கையைப் போட்டுக்கொண்டு மிக நன்றாகப் படிக்கிறார்கள். என்றால் பிரச்சினை உண்மையில் எங்கே இருக்கிறது? நிச்சயமாக ஆடையில் இல்லை.

படிப்பது வேலைக்குச் செல்வதற்காக மட்டுமே என்று நினைப்பதும் தவறான எண்ணம்தான். கல்வி என்பது சூரியனைப் போன்றது. அது வந்துவிட்டால் குடும்பம் பிரகாசம் ஆகிவிடும். ஒரு பெண் கல்வியில் மேலோங்கிவிட்டால் போதும், தந்தை மட்டுமே முடிவெடுக்க வேண்டும் என்பது முதலில் மறைந்து இருவரும் முடிவெடுக்கும் நிலை உருவாகும்.

பிள்ளைகள் எப்படி வளரவேண்டும் என்பது அவளுக்கும் தெளிவாகத் தெரியும். அவளின் மகளை அவள் எப்படி உருவாக்க வேண்டும் என்றும் தெரியும். ஆகவே பெண் கல்வி ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமான ஒன்று.

அவள் வேலைக்குச் செல்வதும் வேண்டாம் என்று நினைப்பதும் கணவன் மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. இஸ்லாம் பெண்களை வேலைக்குப்போகாதே என்றும் சொல்லவில்லை. குடும்பத்தின் சூழலுக்கு ஏற்ப வேலைக்குச் செல்வது அவசியமான ஒன்றுதான். ஆனால் அந்த முடிவை எடுக்க வேண்டியவர்கள் கணவனும் மனைவியும்தான். வேறு எவரின் தலையீடும் இருத்தல் கூடாது.

மலேசியா போன்ற நாடுகளில் பெண்களின் வளைச்சி பிரமிக்க வைக்கிறது. கல்வி, நிர்வாகம் போன்ற பல துறைகளில் முஸ்லிம் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். கல்வித்துறையில் அவர்களின் ஆட்சி பெருகி வருகிறது. மலேசியா ஓர் முஸ்லிம் நாடு. அங்கே முஸ்லிம் பெண்கள் கற்று உயர் பதவிகள் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள்.

இப்போத‌ல்லாம் அர‌பு நாடுக‌ளிலும் ஆண்க‌ளைவிட‌ பெண்க‌ளே அதிக‌மாக‌க் க‌ல்வியில் ஆர்வ‌ம் காட்டுவதாகக் கூறுகிறார்கள். பெண்கள் விசயத்தில் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட நாடான சவுதி அரேபியாவின்கூட ஆயிரக்கணக்கான பெண்க‌ள் பெரிய நிறுவனங்கள் பலவற்றிலும் வேலை வாய்ப்புகள் பெற்று பணிக்குச் செல்கிறார்கள் என்று தகவல்கள் சொல்கின்றன.

முஸ்லிம் பெண்களை முன்னேற்ற முதலில் முஸ்லிம் ஆண்கள் முன்னேறவேண்டும். அவர்களே இன்னும் படிப்பில் மிகவும் பின் தங்கியவர்களாகவே இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விசயம்.

பெண்ணுக்கான முன்னேற்றப் படிகளை இன்னொரு பெண் அமைத்துத் தருவதை விட அந்த வீட்டு ஆண்கள் அமைத்துத் தந்தால் அதன் வெற்றி மிகப் பெரியதாக இருக்கும்.

முஸ்லிம் பெண்கள் படிப்பதற்கு முஸ்லிம் ஆண்கள் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவர்கள் மனம் முஸ்லிம் பெண்களின் கல்வியில் முனைப்பாய் இருக்க வேண்டும். சகோதரி, மனைவி, மகள், பேத்தி என்று எல்ல்லோரையும் கற்றவர்களாக ஆக்குவது முஸ்லிம் ஆண்களிடம்தான் பெரிதும் இருக்கிறது.

முஸ்லிம் குடும்பங்களில் அதிக அளவில் திருமணத்தின்போது பெண்ணுக்கு வீடும் நகையும் பணமும் சீதனமாக கொடுத்து திருமணம் செய்து வைக்கும் நிலைதான் இந்தியா போன்ற நாடுகளில் உள்ளது. பெண்ணுக்கு அவளின் கல்வியே முதல் சீதனமாக அமைய வேண்டும். நன்கு படித்த பெண்ணையே திருமணம் செய்ய ஒரு படித்த மணமகன் விரும்புவான். இன்று முஸ்லிம் ஆண்கள் அதிகளவில் படித்து முன்னேறி வருகிறார்கள் என்பதால் பெண் கல்விக்கு இந்த சீதனமும் ஒரு தடையாக ஆகாது.

ஆகவே ஒரு முஸ்லிம் பெண் படிப்பதற்கு எதுவுமே தடையில்லை.

முஸ்லிம்பெண் வேலைக்குப் போகக்கூடாது என்று விரும்பிய காலம் இப்போது வெகுவாகக் குறைந்து வருகிறது. முஸ்லிம்கள் பிற்போக்குவாதிகள் அல்ல என்பதை நிரூபித்து வருகின்றார்கள். முஸ்லிம் பெண் ஓர் அடிமை அல்ல என்ற தெளிவு இருக்கிறது.

வேற்று ஆணோடு ஒர் முஸ்லிம் பெண் பேசக்கூடாது என்ற நிலை மாறிவருகிறது. ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலையே வளர்ந்து வருகிறது.

படிப்பறிவில்லாத முஸ்லிம் பெண்கள் தன்னைப்போல தன் பிள்ளைகள் ஆகிவிடக்கூடாது என்று பெண்கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும்.

மத அறிஞர்கள் பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை சொற்பொழிகளில் பெண் கல்வியின் அவசியத்தை தவறாமல் வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.

இப்போது முஸ்லிம் பெண்களின் கல்வி குறைவானதாக இருந்தாலும், அது முன்புபோல மிகக் குறைவானதாக இல்லை. எல்லாவற்றுக்கும் துவக்கம் என்று ஒன்று வேண்டுமல்லவா. துவங்கிவிட்டால் பின் வேகம் அதிகரிக்கும். இது வேகம் அதிகரிக்கும் காலகட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. அதைப்போல முஸ்லிம் பெண்களின் கல்வியும் இனி மறையப்போவதும் இல்லை ஓயப்போவதும் இல்லை.

இன்னும் ஒரு பத்தாண்டுகளில் உலகில் முஸ்லிம் பெண்கள் தாண்டும் தூரம் ரொம்ப உயரமாகவே இருக்கும் என்று நம்புவோமாக.

 அன்புடன் புகாரி புதிய பதிவுகள்
 நன்றி::அன்புடன் புகாரி

Wednesday, October 21, 2009

புனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள் ( 1 )


புனித ஹஜ்ஜின்  பயணக் குறிப்புகள்

தொகுப்பு
நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்

வழக்கறிஞர்,



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

லப்பைக்க அல்லாஹ{ம்ம லலப்பைக்க
லப்பைக்க லாஷரீ கலக்க லப்பைக்க
இன்னல் ஹம்த வன்னிஃமத்த
லகவமுல்க லாஷரீகலக்க


தல்பியா

வந்துவிட்டேன் இறiவா வந்துவிட்டேன்
உனக்கு இணை எவருமில்லை
வந்துவிட்டேன்
நிச்சயமாக அனைத்துக் புகழும்
அருட்கொடையும் உன்னுடையதே
உனக்கு இணை எவருமில்லை

Tuesday, October 20, 2009

தாய்ப்பாசம்



ஆயிரம் கைகள்
சேர்ந்து செய்த
மெத்தையில்
படுத்திருக்கிறேன்...
உன் இருகையில்
மட்டும்தான்
தூங்கி இருக்கிறேன்
.
அம்மா உனக்கு அவ்வளவு பாரமாய்
இருந்தேன் என்றா..?
பால் கொடுத்து
என்னை வளர்த்தாய்....
நீ
தூக்கவே
முடியாதளவுக்கு.

வெற்றி பெற்றால்
தேடி வந்து வாழ்த்த
ஆயிரம் உறவுகள்...
தோற்றுப்போனால்
தேடி வந்து அணைக்க
உன்னைத் தவிர யார்
எனக்கு.

ஆயிரம் முறை
தலை சீவிய
சந்தோசம்...
நீ
ஒரே ஒரு தடவை
தலை கோதிவிடும்
போது
.
எல்லாம் சேலைதான்
எனினும்...
நீ
கட்டிய சேலையில்தான்
என் நிம்மதியான தூக்கம்
அவிழ்ந்து கிடக்கிறது
.
என்னை நடக்க வைத்துப்
பார்க்க வேண்டும்
என்ற ஆசையை விட...
நான் விழுந்து விடக்கூடாது
என்ற கவனத்தில்தான் இருந்தது
உன் தாய்ப்பாசம்
. மழையில் நனைந்துகொண்டே  
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துட்டுப்
போக வேண்டியது தானே'
என்றான் அண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடுச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல:
மழையை!''
''Jazaakallaahu khairan''
MAIS,  Abdur Rahman  

நன்றி::Nidur.info




 


 

நாம் சிந்திக்கத் துவங்க வேண்டும்.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து அரை நூறாண்டு நிறைவுப் பெற்று விட்ட நிலையிலும் மக்கள் முன்னேற்றத்தில் ஒரு மகா தேக்கநிலை நிலைத்து நிற்பதை உணராத அறிவாளிகள் யாரும் இருக்க முடியாது. ஓரு பரந்த முன்னேற்றம் இல்லை என்றாலும் மக்கள் பதட்டமில்லாத ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்களா.. என்று பார்க்கும் போது உலக நாடுகளில் குறிப்பாக வல்லரசுகளிலும் அதன் ஆணைக்கு கட்டுப்பட்டு நடக்கும் நாடுகளிலும் உள்ள மிக மிக சொற்பமான மக்களே நிம்மதியான சுகபோக வாழ்வை சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலக மக்கள் தொகையில் இவர்கள் ஐந்து சதவிகிதத்தைக் கூட தாண்ட மாட்டார்கள் என்பது தான் உண்மை. இதற்குரிய காரணம் என்ன? என்பதை ஆய்வுக்குட்படுத்தினால்  உடனடியான பதில் மக்கள் தொகை பெருக்கம் என்பதுதான். அதிலும் இந்த பதிலை வல்லரசுகளே தொடர்ந்து முன்மொழிகின்றன.

எதையும் சந்திக்கவும் சாதிக்கவும் சக்திப் பெற்ற வல்லரசுகள் இந்த பதிலை சொல்லும் போது இயற்கையிலேயே ஒரு சந்தேகம் வலுக்க துவங்கி விடுகிறது. அவசரமாக இந்த பதில் உதிப்பதற்கு காரணம் என்ன? வேறு எதையோ மறைக்க இந்த பதில் அவர்களுக்கு ஆயுதமாகவும் ஆயத்தமாகவும் ஆகிவிடுகின்றன.

மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப இயற்கை வளங்களின் வளர்ச்சியும் குறைவின்றி செழுமையாக விளையும்போது மக்கள் வளர்ச்சியின் தேக்க நிலைக்கு மக்கள் தொகை வளர்ச்சியே காரணம் என்ற பதில் ஒரு போதும் சரியாக இருக்காது.

இதற்குரிய காரணத்தை கண்டுபிடிக்க வேண்டுமானால் இரண்டாம் உலகப் போருக்கு பின் நடந்த பல முக்கிய நிகழ்ச்சிகளை நாம் தெரிந்தாக வேண்டும். அப்படி தெரியும் போது ஒரு மர்ம சக்தியின் பிடிக்குள் இந்த உலகம் சிக்கி இருப்பதே மக்கள் வளர்ச்சியின் தேக்க நிலை உட்பட எல்லா கெடுதிகளுக்கும் காரணம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

1954ம் ஆண்டு உலகில் ஒரு அமைப்பு உருவாகிறது. - பில்டர்பேர்ஜ் - என்ற பெயர் கொண்ட இவ்வமைப்பை ஸ்வீடன் நாட்டை சார்ந்த பெரும் தொழிலதிபரும் அரசியல் செல்வாக்கு பெற்றவருமான ஜோசப் ரெடிங்கர் என்பவர் நிறுவுகிறார். சோர்போன் பல்கலை கழகத்தில் படித்து பட்டம் பெற்ற இவர், ஐரோப்பாவின் வல்லமையை பலப்படுத்தும் ஒரு கனவை உருவாக்கிக் கொண்டார். ஆரம்ப நாட்களில் இவரின் ஒரு சில திட்டங்கள் எடுபடவில்லை என்றாலும் தனது கடின முயற்சிக்குப் பிறகு 1920களில் மெக்ஸிகன் நாடுகளுடனான ஒரு வர்த்தக தொடர்பை ஏற்படுத்துவதில் வெற்றிப் பெற்றார். முதலாம், இரண்டாம் போர்களின் விளைவுகளை நிதானமாக உற்று நோக்கி 1950களில் மேற்குலகின் அரசியல் மற்றும் ராணுவ முக்கியப் புள்ளிகளுடன் உறவு வைத்துக் கொள்ளத்துவங்கி அதை வலுபடுத்திக் கொண்டார்.

உலக மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து அதில் ஆதிக்கம் செலுத்துவது என்பது அமெரிக்காவின் ஒத்துழைப்பின்றி நடக்காது என்பதை சரியாக யூகித்த இவர் ஐரோப்பிய அரசியலிலும் பெட்ரோல் உற்பத்தித் துறையிலும் செல்வாக்குப் பெற்றிருந்த ஹோலாந்து இளவரசர் பெரன்ஹார்ட் டின் உதவியை நாடிப் பெற்றார்.

இப்படியாக தன் செல்வாக்கை பெருக்கிக் கொண்ட இவரால் முறைப்படுத்தப்பட்ட, பில்டர் பேர்ஜ் என்ற ரகசிய அமைப்பின் முதலாவது கூட்டம் 1954 மே மாதத்தில் உஸ்டர்பீக் என்ற நகரத்தில் ஒரு ஹோட்டலில் கூட்டப்பட்டது. முதல் கூட்டத்தின் நினைவாகவும், அமைப்புப் பற்றி வெளிப்படையாக தெரியாமல் இருப்பதற்காகவும் எந்த ஹோட்டலில் கூட்டம் கூட்டப்பட்டதோ அந்த ஹோட்டலின் பெயரையே அமைப்பின் பெயராக்க முடிவு செய்யப்பட்டது. அந்த ஹோட்டலின் பெயர்தான் பில்டர் பேர்ஜ்.

இவ்வமைப்பிற்கு கனவு கண்ட பெரன் ஹார்ட் தலைமையிலேயே இதன் கூட்டங்கள் 22 வருடங்கள் நடந்துள்ளன. இக்கூட்டத்திற்காக இவர்கள் வருடந்தோரும் ஐரோப்பிய நகரங்களையே தேர்ந்தெடுத்தனர். கலந்துக் கொள்ளும் உறுப்பினர் எண்ணிக்கையை 120ஐ தாண்டாமல் பார்த்துக் கொள்வார்கள். இக்கூட்டங்கள் பற்றிய எந்தவித தகவலையோ ஆவனங்களையோ இவர்கள் பதிவு செய்துக் கொள்ள மாட்டார்கள். பிறரால் பதிவு செய்யவும் முடியாது. தப்பித் தவறி எப்படியாவது செய்தி வெளியில் போய் விட்டால் எத்தகைய விலை கொடுத்தும் அந்த செய்தி வெளியில் வருவதை தடுத்து விடுவார்கள்.

இக் கூட்டத்தில் கலந்துக் கொள்பவர்களில் 85 பேர் ஐரோப்பியர்களும் மீதி 35 வட அமேரிக்கர்களும் ஆவர். 80க்கும் மேற்பட்ட அரசியல் வாதிகளும் மீதி இருப்போர் பொருளாதார, கல்வி, வர்த்தக புள்ளிகளும் இடம் பெறுவர்.

அமைதியான ஒதுங்குப்புறமான இடமே கூட்டம் நடத்த தேர்வு செய்யப்படும். இக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள வரும் எந்த பிரமுகரும் கூட்டம் நடக்கும் மூன்று நாட்கள் வரை தங்கும் இடத்தை விட்டு வெளியில் செல்ல முடியாது. கூட்டம் நடக்கும் இடத்திற்கான பாதுகாப்பை அமெரிக்க உளவு பிரிவும் ஐரோப்பிய நாடுகளின் உளவுப் பிரிவும் பொறுப்பெடுத்துக் கொள்ளும்.

1959 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளுக்கான இவ்வமைப்பின் கூட்டம் துருக்கியில் (முஸ்லிம் நாடு) நடந்தது. துருக்கியின் அரசியல் பொருளாதார கல்வித்துறை முக்கியஸ்தர்கள் இதில் கலந்துக் கொண்டனர். அந்நாட்டை சார்ந்த ஸலாஹூத்தீன் பயாஸீத் இவ்வமைப்பின் நிரந்தர உறுப்பினராவார்.

இவ்வமைப்புப் பற்றிய செய்திகள் வெளிவர துவங்கியவுடன் உலக அமைதிக்கு பாடுபடுவதுதான் எங்கள் லட்சியம் என்று இவ்வமைப்பு கூறினாலும் இதன் ரகசிய செயல்பாடுகள் - இது பொய் லட்சியம் - என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

இவ்வமைப்பிற்கு தேவையான நிதிகளை ரோக்புலர் என்ற யூத அமைப்பும் ரோத் ஷீல்ட் என்ற யூத கோடீஸ்வரரின் வங்கியுமாகும்.

இதன் தற்போதைய தலைவராக நேட்டோ வின் முன்னாள் பொது செயலாளர் வோர்ட் காரின்ஜ் டோன் ஆவார். இவ்வமைப்புக்கு உள்ள அளவு கடந்த அதிகாரம் பிரமிக்கத்தக்கதாகும்.

ஜிம்மி கார்டர், ரீகன், ஜோர்ஜ்புஷ், கிளிண்டன் போன்ற பலரும் இவ்வமைப்பில் இணைந்துக் கொண்டுதான் பின்னர் தேர்தலில் வெற்றிப் பெற்றனர். 1975ல் இவ்வமைப்புக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட மார்கட் தாட்;சர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்தின் பிரதமரானார். அரசியல் கணிப்பாளர்களின் கருத்துப்படி பிரதமராவதற்கு வாய்ப்பே இல்லாமலிருந்த டோனிபிளேயர்  நாட்டை ஆண்டு வந்ததற்கு வழி வகுத்ததும் இந்த அமைப்புதான். காரணம் அவர் இந்த அமைப்பு கூட்டங்களில் கலந்துக் கொண்டுள்ளார்.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன் இவ்வமைப்பு கூட்டங்களில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பபைப் பெற்ற பத்திரிக்கையாளர்கள் சிலர் - தி நியு வேல்ட் ஆர்டர் இன்டலிஜன்ஸ் அப்டேட் - என்ற பெயரில் வெளியிட்ட அறிக்கையில்,

கொஸோவோ போர் முடிவுக்கு வந்தால் ஸைப்ரஸில் மற்றொரு போர் வெடிக்க வேண்டும் என்ற திட்டத்தை வெளியிட்டிருந்தனர்.ஈராக் பற்றிய குறியீடும் இதில் அடங்கி இருந்தது.

இவ்வமைப்புப்பற்றி ஒரு நூல் எழுதிய அமெரிக்கப் பத்திரிக்கையாளர் ரோபர்ட் ஆக்கீன்ஸ் என்பவர் தனக்கு தேவையான தகவல்களை திரட்டுவதற்காக அவ்வமைப்புக் கூட்டங்களில் பங்கு பெற்ற வெளிநாட்டு அமைச்சர்கள், மத்திய உளவுப்பிரிவின் உயர் அதிகாரிகள் ஆகியோரோடு தொடர்புக் கொண்டு இவ்வமைப்புப் பற்றி சில கேள்விகளை கேட்ட போது, அப்படி ஒரு அமைப்புப் பற்றியே எங்களுக்குத் தெரியாது என்று சொல்லி வைத்தார்போல் அனைவரும் கூறியதைக் கேட்டு தான் தடுமாறி போன விபரத்தை குறிப்பிடுகிறார்.

உலக நாடுகளில் தலையிட்டு அங்கு எத்தகைய அதிகாரத்தையும் பெற்று தான் விரும்பும் மாற்றங்களை செய்யும் அளவிற்கு சக்தியுடன் விளங்கும் இவ்வமைப்பின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இன்னும் பல பயங்கர அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

மாட்ரிக்ஸ் பத்திரிக்கையின் முக்கிய ஆசிரியர் இவ்வiமைப்பு பற்றி எழுதிய கட்டுரையில்,

1998 மே 14ம் தேதி மேற்குலகின் அரசியல் கல்வி பொருளாதார முக்கிய பிரமுகர்கள் 120பேர் கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட விலையுயர்ந்த கார்களில் ஸ்காட்லாந்து கிராமபுர ஹோட்டல் ஒன்றுக்கு சென்றனர் பூட்டப்பட்ட கதவுகளுக்குள் அதி தீவிர பாதுகாப்புக்குள் நடந்த இவ்வமைப்பின் 46 வது கூட்டத்தில், உலகில் தம் ஆதிக்க எல்லையை விரிவு படுத்தி தங்கள் கலாச்சார பண்பாட்டு திட்டங்களை திணிப்பது சம்பந்தமாகவும், ஆட்சியாளர்களாக யார் இருக்க வேண்டும் யார் இருக்கக் கூடாது என்பதை தீர்மாணிப்பது சம்பந்தமாகவும் விவாதிக்கப் பட்டு முடிவெடுக்கப்பட்டதை குறிப்பிடுகிறார். இதற்கான பொறுப்பை நியூஜர்ஸி கவர்னர் கிறிஸ்டின் லீட் வயிட்மான் ஏற்றுக் கொண்டுள்ளார்.

உலகில் எதையும் சாதிக்கும் சக்திப் பெற்றிருந்தும் அதை வைத்து நல்ல மாற்றங்களை கொண்டு வராமல் தம் சக்திக்கு கீழ் மற்ற வேண்டாத நாடுகளை அடிமைப்படுத்தி மேலாதிக்கம் செய்யும் எண்ணத்துடன் தொடர்ந்து கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல் பட்டு வருவதே பில்டர்பேர்ஜின் வரலாறாகும்.இதுபற்றி எல்லாம் கண்டுக் கொள்ளாமல் காலம் தள்ளும் போக்குதான் முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் தொடர்ந்து நிலவி வருகிறது.

மத்திய ஆசியாவின் மையப் பகுதிகளில், குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு நீடித்துக் கொண்டிருக்கும் அமைதியின்மை, ராணுவக் கொலைகள், பதட்டம், நில ஆக்ரமிப்பு போன்ற பயங்கரவாத செயல்களுக்கு இதுபோன்ற அமைப்புகளின் ரகசிய ஆளுமை பெரும் பங்காற்றுகிறது.

இதுபற்றி நாம் சிந்திக்கத் துவங்க வேண்டும்.

அல் முஜ்தமஃ அரபு பத்திரிக்கையின் கட்டுரையாளர் அவ்ரஹான் முஹம்மது அலி சொல்வது போல்,
இதுபற்றி சிந்திப்போம், ஆக குறைந்தது சிந்திக்க மட்டுமாவது செய்வோம். ஏனெனில் சிந்திப்பதால் எதுவும் தீமை ஏற்படப் போவதில்லை. அதற்கு யாரும் வரி விதிக்கப் போவதுமில்லை.

Faizur Hadi   M

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிந்து போகும் ஒற்றுமையும்!

அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்ளிவாசல்கள் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. விரல் ஆட்ட ஒரு பள்ளிவாசல், விரல் நீட்ட ஒரு பள்ளிவாசல், அது அவர்களின் பள்ளிவாசல், இது இவர்களின் பள்ளிவாசல் முஸ்லிம் சமூகம் முரண்பட்டு , பிரச்சினைப் பட்டு, பிரிந்து கிடக்கிறது.

பாவம் பாமர மக்கள் ! இந்த றியால், தீனார் தஃவா காரர்களின் பின்னணி புரியாமல் நடு வீதியில் தட்டுத் தடுமாறி திணறி நின்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒற்றுமையை உரத்துப் பேசி பேசி ஒருவரின் உதிரத்தை மற்றவர் உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வஹாபிஸம் என்ற சஊதி, குவைத் மன்னராட்சியை மறைமுகமாய் பாதுகாக்கின்ற சித்தாந்தம் பொது ம்ககளை மட்டுமல்ல அவர்களிடம் பணம் வாங்கும் கூலிப்பட்டாளத்தைக் கூட குறி வைத்து பிரித்துத் தான் வைத்திருக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரை தஃவா களத்தில் இருக்கும் தப்லீக் இயக்கத்தை தவிர ஏனைய அத்தனை இயக்கங்களும் இந்த வஹ்ஹாபி பணத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவையே.

தப்லீக் இயக்கம் தனது தஃவா இயக்க செயற்பாட்டில் பாரிய மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் தனது சொந்த பணத்தில் தஃவா செய்கின்ற புனிதத் தன்மையை அது என்றும் பேணிப் பாதுகாத்து வ்ந்திருக்கிறது. அது காசு வழங்குபவனுக்கு கைக்கூலியாய் வேலைசெய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்படாத ஒரு அமைப்பு.

வஹ்ஹாபி பணத்தில் போஷிக்கப்படும் அத்தனை இயக்கங்களும் நாளுக்கு நாள் முரண்பாட்டை தமக்கிடையே வளர்த்து முரண்பட்டு பிரிந்து செல்வதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

வஹ்ஹாபிப் பணம் வருவதால் இங்கு இஸ்லாம் வளர வில்லை.
வன்முறை வளர்ந்திருக்கிறது. ஒற்றுமை குறைந்திருக்கிறது.

இவையெல்லாம் உருவானது தனக்கென தனித்தனி பள்ளிவாசல் உருவாவதன் பின்னால் தான் என்ற உண்மையை நாம் பலாத்கதரமாகவே மறந்தும் இரு்க்கிறோம். தனித்தனி பள்ளிவாசலின் உருவாக்கம் ஒற்றுமையை தவிடுபொடியாக்கி இருக்கிறது.

ஒற்றுமையை சீர்குலைக்கும் தனித் தனி பள்ளிவாசல் கலாசாரத்தை இஸ்லாம் அங்கீகரிக்கின்றதா?

குறைஷிக் காபிர்களால் றசூலுல்லாஹ்விற்கு கஃபாவில் வணங்க தடை வந்த போது மக்காவில் வாழத் தடை வந்த போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்?

தனது கொள்கையை மாற்றிக்கொண்டு, கஃபாவை அபூஜஹ்லுக்கும், அபூலஹபுக்கும் கொடுத்துவிட்டு மதீனாவில் கஃபாவைப்போல் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டிக்கொண்டு மறைந்து வாழ்ந்திருக்கலாமே? அப்படி வாழ்ந்திருந்தால் மக்கா வெற்றி என்று ஒன்று வரலாற்றுக்கு வந்திருக்குமா?

றஸுலுல்லாஹ்வின் தஃவா இஸ்லாத்தின் கொடியின் கீழ், ஒரே தலைமைத்துவத்தின் அனைவரையும் ஒன்று திரட்டுவதாகவே இருந்தது. அனைத்து கோத்திரங்களையும், குழுக்களைகயும் , கொள்கைகளையும் ஓரணியில் திரட்டி பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

பிரிவினையையும் பிரச்சினைகளையும் இல்லாதொழிக்கும் மத்திய நிலையங்களாக மஸஜித்கள் செயலாற்றின.

இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிது. பிரிவினைக்காகவே பள்ளிவாசல்கள் உருவாகின்றன. உருவாக்கப்படுகின்றன.

“அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப்பிடியுங்கள். பிரிந்து விடாதீர்கள்” என்று அல்குர்ஆன் அறைகூவல் விடுகிகிறது. அல்லாஹ்வின் இல்லங்களாலேயே நாங்கள் பிளவு பட்டு நிற்கின்றோம். ஒற்றுமையாய் வாழுங்கள் என்ற அல்லாஹ்வின் அறைகூவலையே நாம் அலட்சியப்படுத்தியிருக்கிறோம்.

பிரிவினைக்காகவே உருவாகின்ற இந்த பள்ளிவாசல்களின் பின்னணி என்னவாக இருக்கும் என இதுவரை யாரும் சிந்திக்காமலேயே இருந்து வருகிறோம்.

தஃவா என்ற போர்வையில் நற்செயல்கள் என்ற போலி முலாம் பூசி வந்து சேர்கின்ற இந்த அரபு பணத்தின் பின்னணி என்ன? என்பதை யாரும் சிந்திக்காமல் விட்டதன் விளைவை இலங்கை முஸ்லிம் சமூகம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

இந்த அரபு நாடுகளில் மஸ்ஜித்கள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் அவர்களிடம் இஸ்லாம் இருக்கின்றதா? அந்த நாட்டுக்கு பயணம் செய்யும் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வம் வரும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கை இருக்கிறதா? இல்லவே இல்லை.

இஸ்லாத்தின் தாயக பூமியை, அரபு பூமியை, மனித நேயத்தாலும், நீதியாலும், நேர்மையாலும் நிரப்பி அல்லாஹ்வின் தீனை பாதுகாக்க முடியாத இவர்களின் பணத்தால் இலங்கையில் இஸ்லாத்தை வளர்க்க முயல்வது மடமையிலும் மடமையன்றோ.

முஸ்லிம்களையே முட்டி மோத வைப்பதால் இஸ்லாம் எப்படி வளரும்? மாற்று மதத்தவருக்கு இஸ்லாத்தின் மீது அச்சம் அல்லவா ஏற்படும்?ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை உருவாக்கி அமெரிக்காவும் சஊதியும் அதைத்தானே சாதித்தன?

பள்ளிவாசல்கள் கட்டுதல்,

இன்று, மத்திய கிழக்கில் தனது ஆதிபத்தியத்தை உறுதிப்படுத்தி, அரபு மண்ணின் எண்ணெய் வளங்களை சூறையாடிக்கொண்டிருக்கும், முஸ்லிம் நாடுகளுக்குள் அத்துமீறி புகுந்து அநியாயம் புரிந்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய வாதிகளின் அட்டகாங்களை தஃவாவின் போர்வையில் மூடி மறைப்பதற்கு இந்த அரபு பணத்தைப் பெறும் இஸ்லாமிய இயக்கங்கள் நன்றாகவே பயன்படுத்தப் படுகின்றன.

அரபுகளை திருப்தி படுத்தும் இவர்களது தஃவா, பணத்தை மையப்படுத்தி சுழன்று, வியாபார மயப்படுத்தப்பட்ட ஜாஹிலிய்ய சிந்தனையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. உயிரோட்டமான இஸ்லாத்தின் கட்டளைகளை பணத்திற்கு தாரை வார்த்து அநியாயங்களையும், அக்கிரமங்களையும் அடக்கி வாசிக்கும் அளவிற்கு காசின் கைதிகளாக இவர்கள் மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.

கடைசியாக உங்கள் சிந்தனைக்காக சில வார்த்தைகளை தர முடியும்
ஈராக்கில் புகுந்து பத்து லட்சம் முஸ்லிம்களை கொல்வதற்கு தனது நாட்டில் அமெரிக்கா கொலைகாரர்களுக்கு தளம் அமைத்துக்கொடுத்து, அமெரிக்கா யுத்த விமானங்களுக்கு இலவசமாக எண்ணெய் வழங்கிய சஊதி அரேபியா

ஆப்கானிஸ்தானை அழிக்க அமெரிக்காவுக்கு துணைபோன சஊதி அரேபியா

பலஸ்தீன் முஸ்லிம்களைக் கொன்று குவி்த்து, முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸை கபளீகரம் செய்த இஸ்ரேலின் தந்தையான, நண்பனான அமெரிக்காவை மிக மிக நேசிக்கும் சஊதி அரேபியா

இஸ்லாத்தை மறந்து புனித மண்ணில் ஆடம்பர மௌட்டீக மன்னர் ஆட்சி நடாத்தும் சஊதி அரேபியா

இஸ்லாத்தை வளர்க்க உதவி புரியுமா? அதன் பணத்தால் இஸ்லாம் வளருமா? அப்படி வளரும் இஸ்லாத்தை அதன் நேச நாடுகளான அமெரிக்காவும், இஸ்ரேலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா? அங்கீகரிக்குமா?
ஆயிரம் கேள்விகளை இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்...

ஏகத்துவ பிரசாரம் என்ற போர்வையில் எமக்கு சஊதி ஏற்றுமதி செய்திருப்பது முரண்பாடுகளை, மோதல்களை, சண்டைகளை, சச்சரவுகளை....

தமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு தனது எதிரியின் சதியை சரியாக புரிந்துக்கொள்ள அவகாசம் கிடைப்பதில்லை.
அதுதான் சஊதிக்கும் அமெரிக்காவிற்கும் தேவை!

இதனால் ஏற்படும்

இழப்பு...
இஸ்லாத்திற்கும்
முஸ்லிம் உம்மத்திற்கும்,

Posted by Azeez Nizardeen 
 நன்றி:   badrkalam.blogspot.com