Friday, November 29, 2013

எது சிறப்பு!




மலரதனின் சிறப்பென்றால் மகிழ்ச்சித் தோற்றம்
மனங்கனியச் செய்வதிலே மிகவும் ஏற்றம்
நிலவதனின் சிறப்பதுவோ நிலைகள் மாற்றம்
நிறைந்தாலும் மறைந்தாலும் நிலைக்கும் ஆற்றல்
உலகமிதன் சிறப்பென்ன? வேறு பூக்கள்
ஒருசேரப் பூத்திருக்கும் இயற்கைப் பூங்கா
உலவுகின்ற தென்றலுக்கும் உண்டே பேறு
உள்ளபடி பொதுவுடமை விளங்கும் காற்றே

.
தலைமையதன் சிறப்பென்றால் தகுதி காத்தல்
தக்கபடி பணிமுடிக்க தேரும் ஆட்கள்
கலைமனதின் சிறப்பிங்கே கற்பின் வாய்மை
கலங்காமல் ஒளிவீசும் கனலின் தூய்மை
அலைமுழக்கம் சிறப்பில்லை: ஆழி என்றால்
ஆழம்தான் சிறப்பாகும் அறிஞர் போல!
நிலைமறந்தே ஆடுவோரின் நினைப்பைக் கூட
நீக்கிவிடும் சிறப்பிங்கே நல்லோர்க் காமே

நண்பர்தம் சிறப்பெல்லாம் நலமே செய்தல்
நம்பிக்கை நீட்டியொரு நேசம் பெய்தல்
மண்ணிதனின் சிறப்பிங்கே மனிதம் ஓங்கல்
மற்றவரும் தன்போன்றே மனதில் கொள்ளல்.
கண்விழிகள் சிறப்படையும் காணும் நோக்கில்
கருத்தான ஏதொன்றும் கவர்ந்துக் கொண்டால்.
பெண்ணவளும் சிறப்பன்றோ பேணும் தாய்மை
பொறுமையினால் அடைகின்றாள் பெரிய வெற்றி.

சிலமனிதர் சிறப்பின்றி சின்ன புத்தி
சிந்தையிலே சுயநலமே செய்யும் உத்தி
பலமனிதர் சிறப்பிங்கே பாவம் ஐயோ.
பண்பாட்டைச் சிதைப்பதிலே பெருமை கொள்வார்
உளமகிழச் செய்வதுவே உயர்ந்தோர் செய்கை
ஒருவரையும் இகழாமல் உணரும் போக்கு.
புலவரிவர் சிறப்பிங்கே பொறுமை காத்து
புகழோங்க கவிவானில் ஒளிரும் பாடல்!


by இப்னு ஹம்துன்
 
நன்றி: http://www.ezuthovian.blogspot.in/

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

வாழ்த்துக்கள்...