Monday, November 18, 2013

கவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-4]

வருடங்கள் மூவாறு
வாழ்வளித்தப் பாலையிலே
உருண்டோடி விட்டபின்னர்
ஊர்தேடிப் புறப்பட்டேன்

அரும்புகளின் கல்வியெண்ணி
அப்படியே திசைமாற்றம்
அருமைநிலம் கனடாவில்
அவசரமாய்க் குடியேற்றம்

கனவுகண்ட புதியபூமி
கருணைமனத் தூயவானம்
இனங்களெலாம் இணைந்துபாடும்
இனியரதம் கனடியமண்


குணக்கேடு மதவெறியர்
குத்துவெட்டு பகையில்லா
மனிதநேயம் போற்றுமிந்த
மண்பெருமை விண்பாடும்

இணையத்தின் தமிழுக்கு
இங்குவந்தே என்வணக்கம்
முனைதீட்டிக் கவிபாட
முத்தமிழின் புதுச்சங்கம்

அணையுடைத்துக் கவிபாடும்
ஆற்றுவெள்ள உற்சவம்போல்
இணையமெங்கும் தமிழ்வாசம்
இதயமெங்கும் தேரோட்டம்

குளிர்தீண்டக் கவிகொஞ்சம்
கொட்டும்பனி கவிகொஞ்சம்
மலர்வண்ணம் இலைதாவும்
மரக்கிளையின் கவிகொஞ்சம்

வளர்தமிழை விண்ணேற்றி
உலகமெலாம் மழைபொழியும்
புலம்பெயர்ந்த தமிழர்களின்
புகழ்பாடி கவிகொஞ்சம்

எழுதியெழுதி கவிதைகளை
இணையமெங்கும் தூவினேன்
எழுதிவைத்தத் தொகுப்புகளை
இங்கிருந்தே வெளியிட்டேன்

அழகுதமிழும் கணிமடியும்
அமுதூட்டித் தாலாட்ட
அழகழகாய்த் தேன்மழையாய்
அருங்கவிதை பொங்குதடா

                                                    தொடரும் ...
கவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-1]
கவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-2]
 கவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-3]
அன்புடன் புகாரி

நன்றி :http://anbudanbuhari.blogspot.in/

No comments: