Monday, November 18, 2013

கவிதையின் கதை - அன்புடன் புகாரி [பகுதி-1]

ஒன்றிரண்டாய்க் கவிவரிகள்
ஒளிந்தொளிந்து முகங்காட்ட
அன்று அந்த இளவயதில்
ஆவல்பொங்க எழுதிவைத்தேன்

சொல்லொன்றில் ஏழெழுத்து
சொத்தையதில் மூன்றெழுத்து
சொல்லிநின்ற சேதிகூட
சொந்தமல்ல கேள்விவழி

உள்ளத்தின் பரப்புகளை
உழுதுநின்ற உணர்வுகளைச்
சொல்லும்சுவை நானுணர்ந்தேன்
சொன்னமொழி என்மொழிதான்

வென்றுவிட்ட நினைவெழுந்து
வெள்ளலையாய் வந்துமோத
கன்றுமனத் துள்ளலோடு
கவிஞனென கண்சிலிர்த்தேன்

பெற்றெடுத்த காதுகளில்
புகுந்ததிந்தச் செய்திவெடி
கற்றுபலப் பதவிவேண்டும்
கைநிறைய காசுவேண்டும்
                                                   
வெற்றுக்கவி ஆகிவிட்டால்
வேதனையே வீடுசேரும்
முற்றுப்புள்ளி இட்டுவிடு
மூட்டைகட்டி கொளுத்திவிடு

தொட்டு ஒரு வரிமீண்டும்
தொடர்ந்தெழுதிப் போனாலோ
பட்டையாய்த் தோலுரிப்பேன்
பட்டினியே இருட்டறையில்

கட்டைக்குரல் கடுகடுக்கக்
கண்டிப்பாய்க் கூறிவிட்டார்
முட்டியது நீர் அன்றே என்
முதற்கவிதை பிறந்ததடா

                                                             தொடரும் ...



அன்புடன் புகாரி

நன்றி :
Source: http://anbudanbuhari.blogspot.in

No comments: