Monday, November 4, 2013

இருட்டில் பிறந்து வெளிச்சத்தில் வளரும் ஆச்சரியம் !

ஹிஜ்ரி -
ஓர் அதிசயம் !
இருட்டில் பிறந்து
வெளிச்சத்தில் வளரும்
ஆச்சரியம் !

தாய் வயிற்றில்
இருக்கும் வரை
கரு !
பிறந்தால்தான்
அது
குழந்தை !
கலைந்துபோனால்
குருதிக் குவியல் !


ஹிஜ்ரி
கருவான இடம்
அக்கினிக்கூடு
கரை சேர்ந்த இடம்
குளிர்நீர்க் காடு !

ஜனனம்
இறப்புக்கு எழுதும்
முன்னுரை
ஹிஜ்ரிக்கு மட்டும்
அது
வரவேற்புரை !

உயிர்
ஒருமுறை பிறக்கும்
உடல்
ஒரு முறை சாகும் !

எரிந்தாலும்
வெளிச்சத்தோடு
எழுகின்ற
சூரியனைப்போல்
இறக்காமலே வாழும்
தத்துவம்
ஹிஜ்ரி !

பிறப்பதை விட
பெற்றெடுப்பது சிறப்பு !

பெருமானாரின்
பாதப் பூக்கள்
பாலை மணலில்
பயண வரிகளை
எழுதாதிருந்தால்
ஹிஜ்ரிக்கு
முகவரியே
இருந்திருக்காது !

ஹிஜ்ரி
பெருமானார் பெற்றெடுத்த
வசந்தம் !
உலகத்தை வெல்லப்போகும்
சுகந்தம் !

அந்த ...
ஹிஜ்ரியின் கருவறை
மதீனாவில்தான் இருக்கிறது
மதீனா
சொர்க்கத்தை சுமக்கிறது !

 கவிதை யாத்து தந்தவர்
< அபூ ஹாஷிமா வாவர்  அவர்கள்
Abu Haashima Vaver

No comments: