Friday, November 22, 2013

வண்ணத்துப் பூச்சியாக வெளிவந்து உலவிக்கொண்டிருக்கிறேன்.

புதுக்கல்லுரி வைரவிழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பது அறிந்தேன், மனம் மகிழ்ந்தேன்.

சிறந்த மாணவர்களால் அவர்கள் படித்தக் கல்லூரிக்கு பெருமை.
எனக்கோ அந்தக் கல்லூரியில் படித்தோம் என்ற சந்தோசம்.

சென்னை புதுக்கல்லுரி - எனக்கு இந்தக் கல்லூரியில் சேருவதற்கு முன் சென்னை என் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாட்டிலிருந்து வரும்போது விமான நிலையம் வரை வந்துப்போகும் அளவுக்கு மட்டுமே பரிச்சம்.

வயல்வெளிகளை மட்டுமே பார்த்துப் பழகியவனுக்கு கோளரங்கம் சென்று
ஆகாயத்தைப் பார்த்தால் எப்படி வியப்பு வரும் அப்படித்தான் இருந்தன என் ஆரம்ப நாட்கள்.


கல்லூரியில் சேர்ந்து இரண்டு மாதம் கழித்து சென்னையில் உள்ள ஐந்து நூலகங்களில் உறுப்பினர் ஆகிவிட்டேன். அதிகம் சென்றது அமெரிக்கன்
நூலகமும், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகமும். இயற்கை சம்பந்தப்பட்ட இதழ்கள் நிறைய வரும்.

நான் விரும்பி படித்தது விலங்கியல் அதில் எனக்கு பிடித்தப் பாடம் மரபியல்.

நான் கல்லூரிக்கு வருவதற்கு கட்டுரை, கவிதை எழுதியிருக்கிறேன். ஆனால் பேசிய அனுபவம் இல்லை. முதலாண்டு இறுதியில் எங்கள் விடுதியில் நடக்கும் பேச்சுப்போட்டிக்கு பெயர் கொடுத்துவிட்டேன் எப்படியும் பேசியாகவேண்டும் என்று தீர்மானம் எடுத்துக்கொண்டுவிட்டேன்.
அப்போதுதான் அதை என் பேராசிரியர் நத்தர்ஷா அவர்களிடம் தெரிவித்தேன்.
எனக்கு ஊக்கமும் பயிற்சியும் கொடுத்தார்கள், அதன் விளைவு நான் தங்கிப்படித்த மூன்று ஆண்டுகளும் முதல் பரிசு எனக்கேக் கிடைத்தது.

கல்லூரியில் தமிழ் பாடம் எடுத்த மற்ற பேராசிரியர்கள் இன்குலாப், ஈரோடு தமிழன்பன், அஹமது மரைக்காயர்,இவர்கள் ஒவ்வொருவரும் என்னை ஒவ்வொரு வகையில் ஈர்த்தவர்கள்.

இரண்டாமாண்டில் ஒரு நாள் வகுப்பு முடிந்து வரும்போது தமிழ்த துறையில்
கூட்டமாக இருந்தது என்ன என்று விசாரித்தப்போது கட்டுரைப்போட்டி நடக்கப்போவதாக அறிந்தேன். நான் கலந்துக்கொள்ள இயலுமா எனக் கேட்டேன். நீ கலந்துக்கொள்ளலாம் என்று அனுமதித்தார்கள்.
அதே ஆண்டில் கவிதைப்போட்டியும் நடந்தது அதிலும் கலந்துக்கொண்டேன்.
கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசும் கட்டுரைப்போட்டியில் முதல் பரிசும்
அதற்கானப் பரிசை கலைஞர் கருணாநிதி அவர்கள் மூலம் பெற்றதும் சந்தோஷமான அனுபவம்.

மூன்றாம் ஆண்டு விடுதி மாணவர்கள் சேர்ந்து காஷ்மீர் வரை சுற்றுலா சென்றது மறக்கமுடியாத அனுபவம். இந்தியாவுக்குள் இத்தனை அழகான
இடமும் மனிதர்களின் நிறமும் குணமும் இன்னும் அந்த நினைவுகள் அகலவில்லை, நீங்கா நினைவுகள்.
அங்கே இன்னொரு மறக்க முடியாத நிகழ்வும் நடந்தது. குல்மார்க் என்னும் இடத்தில் குதிரைச் சவாரி செய்யும்போது என் மணிப் பர்ஸ் தொலைந்து விட்டது. அன்று இரவு என் அறையில் வருத்தத்தோடு இருக்கும்போது என் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து நான் தொலைத்தப் பணத்துக்கு ஈடாக
அவர்கள் அனைவரும் சேர்ந்து எனக்களித்து நட்பின் வலிமையை உணர்த்திய நாள். அவர்களுக்கு இந்தப் பதிவின் மூலம் என் நன்றியை நினைவுக்கூர்கிறேன்.

இதே ஆண்டு அந்தமானுக்கு கல்லூரி வகுப்பு நண்பர்களுடன் துறைச் சார்ந்த சுற்றுலா கப்பலில் பயணமானோம். என் நடவடிக்கைகளைப் பார்த்து என் துறைத் தலைவரும் என் கல்லூரி முதல்வருமான பேராசிரியர் முகைதீன் அவர்கள் என்னை Uncrowned king என்று சொன்னது என் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டது. மனம் துவழும் தருணங்களில் இந்த சொல் என்னை உசுப்பிவிடும் மந்திரச்சொல்.

இந்தக் கல்லூரியில் படிக்கும்போது நம் நாட்டவர்கள் மட்டுமல்லாது சுடான், எத்தியோப்பியா மற்றும் பாலஸ்த்தீன தேசத்து மாணவர்களும் அங்கேப் பயின்றதும் அவர்களுடன் நட்பாகி அவர்களது கலாச்சாரத்தையும் அறிந்துக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.

கல்லூரியில் பயின்றக் காலத்தில் NSS ல் இணைந்து இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உதவி செய்தது, ஏழைக் குழந்தைகளுக்குப் பாடம் எடுத்தது நினைவில் நின்றாடும் தருணங்கள்.


இன்று நான் படித்தக் கல்லூரி அந்தச் சேவைகளுக்காக ஜனாதிபதியிடம் பதக்கம் வாங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நான் சென்ற நாடுகளிலெல்லாம் என் கல்லூரி நண்பர்களை அவர்களின் இன்றைய மேம்பட்ட நிலையில் நல்ல மனிதர்களாக சந்திக்கும் வாய்ப்பு ஒரு வரம்.

நான் கல்லூரி முடித்து வெளிவந்தப்போது என் நிலையை நான் படித்த பாஷையில் சொல்வதென்றால் ஒரு புழுவாக நுழைந்து சிறகடித்துப் பறக்கும்
வண்ணத்துப் பூச்சியாக வெளிவந்து உலவிக்கொண்டிருக்கிறேன்.

என்னைப் போல் பல்லாயிரம் வனத்துப்பூச்சிக்கள் உலகம் முழுக்க சிறகடித்து பறந்துக்கொண்டிருப்பார்கள் இனியும் உருவாகி பறப்பார்கள்.


தகவல் தந்தவர்
 Tariq Salahudeen
தாரிக் சாலஹுதீன்

No comments: