Wednesday, November 20, 2013

புனிதமானது

நீ தேடாத ஒரு சுகம்
உன்னைத் தேடி வரும்
நீ அனுபவிக்கக் கூடாத ஒரு துக்கம்
உன்னை அனுபவிக்கும்

நீ நினைக்காத ஒரு பாவத்தை
நீ அறிந்தே செய்து முடிப்பாய்
நீ எண்ணாத ஒரு புண்ணியத்தை
நீ அறியாமலேயே செய்திருப்பாய்


பயந்து பயந்து
ஓர் உரிமையை நீ இழப்பாய்
பயமே இன்றி
ஓர் உரிமையை நீ பெறுவாய்

நீ விளைத்த பழங்களெல்லாம்
நீ உண்ணமாட்டாய்
நீ உண்ணும் கனிகளையும்
நீ விளைத்திருக்கமாட்டாய்

வாழ்க்கை என்பது இப்படியாய்த்
தட்டுப்பாடற்ற திடீர்ச் சம்பவங்களின்
தொழிற்சாலைதான்

அடிக்கும்போதெல்லாம்
மாங்காய் விழுந்துவிட்டால்
ஆவல் செத்துவிடும்
தேடாதபோதும் தேடிவரும் முத்தத்தால்
சித்தம் பூத்துவிடும்

பிறப்பே
இந்த அதிசய விளையாட்டரங்கின்
நுழைவு வாயில்தான் - இறப்போ
புதிய புல்லரிப்புகளோடு பூமியில் பிறக்கும்
இளைய இதயங்களுக்கு இடம் விடத்தான்

எல்லாச் சிலிர்ப்பையும் இழந்த முதுமையை
எலும்பில் சுமந்து
இருப்பது ரணம் இறப்பதே பூரணம்

ஆடி முடித்த அனுபவ வேர்கள்
அளவற்ற அறிவுரைகளை அள்ளியள்ளி அளந்தாலும்
புத்தம்புதுத் திருப்பங்களின் படையெடுப்போ ஓய்வதில்லை
பிஞ்சு நெற்றியில் புதிய சுருக்கங்களைப்
பிறப்பிக்காமல் விடுவதில்லை

தோல்விகளாகும் நம் முயற்சிகள் எல்லாம்
சேமிக்கப்படுகின்றன
ஒருநாள் வீசும் வசந்தம் உன் அதிர்ஷ்டமல்ல
நீ நிதமும் எறிந்த நம்பிக்கைக் கற்களுக்கு
மொத்தமாய்க் கிடைத்த கனிகள்

அடடா...
அலுத்துக்கொள்ளாமல் இப்படிக்
கொடுத்துக் கொடுத்துப் பூத்து நிற்கும்
இந்த வாழ்க்கைதான் எத்தனை இனிமையானது
இதை வாழக் கிடைத்த பாக்கியம்தான்
என்றும் புனிதமானது


கவிதை யாத்தவர்
அன்புடன் புகாரி

No comments: