Friday, January 1, 2010

பெய்ஜிங் கட்டிடக் கலை


பெய்ஜிங் கட்டிடக் கலை
1420ம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்ட சொர்க்கக் கோயில் அல்லது வானுலகக் கோயிலை மிங் வம்ச அரசர்களும் ச்சிங் வம்ச அரசர்களும் வானுலகுக்கு மதிப்பும், மரியாதையும் அளிக்கும் இடமாகவும், நல்ல விளைச்சலுக்காக இறை மன்றாடும் இடமாகவும் கருதினர். சொர்க்கக் கோயிலினுள்ளே அமைந்துள்ள ஒரு வட்ட வடிவ பீடத்தின் நடுவே உள்ள கல், வானுலகக் கல்லின் இதயம் என்றழைக்கப்படுகிறது. இந்த மேடையின் சிறப்பு என்னவென்றால் இங்கிருந்த பேசினால், சன்னமாக பேசினாலும், கனீரென்று குரல் எழும்புவதுதான். உண்மையில் இது அந்த கல்மேடையின் சிறப்பல்ல, இந்த வட்ட வடிவ பீடம் அமைந்த அறையின் அமைவும், அதன் சுவர்களுமே இந்த விந்தைக்கு பின்புலத்திலான காரணங்கள். சுவர்களுக்கும் இந்த மேடைக்குமிடை தூரம் மிகக் குறைவே. எனவே உண்மை குரலொலியும் அதன் எதிரொலியும் தெளிவாக பிரித்தறியமுடியாமல் போக, இரு ஒலிகளும் இணைந்து, சன்னமான குரலும் கம்பீரமாக தொனிக்கும்படி செய்து விடுகின்றன. இதை பற்றியெல்லாம் கடந்த முறை விரிவான தகவல்களை வழங்கினோம். இன்றைய நிகழ்ச்சியில் கோடைக்கால மாளிகையை பற்றிய தகவல்கள் உங்களுக்காக. ஆனால் கோடைக்கால மாளிகை பற்றி சொல்வதற்கு முன், சொர்க்கக் கோயிலின் தெற்கு வாயிலுக்கு அருகே அமைந்த விளக்குகளை பற்றிய சில தகவல்கள்.


பேரரசர்களின் வழிபாட்டு விளக்குகள்
சொர்க்கக் கோயிலின் Zhao Xiang வாயில் எனப்படும் தெற்கு சொர்க்க வாயிலுக்கு மேற்கே Wang Deng Tai எனப்படும் மூன்று பெரிய கல் மேடைகள் உள்ளன. சீன மொழிப்படி Wang Deng Tai என்றால் விளக்கு பார்வையிடும் மேடைகள் என்று பொருள். இங்கே மேடைகளில் தொங்குகின்ற விளக்குகள், வழமையான இத்தகைய விளக்குகளை காட்டிலும் பெரியவை. இரண்டை மீட்டர் உயரமும், இரண்டு மீட்டர் அகலமும் கொண்ட இந்த விளக்குகள் கிட்டத்தட்ட ஒரு சிறிய அறையின் அளவில் காணப்படும். இந்த விளக்குகளின் எலும்புகள் போன்ற சட்டங்கள் மஞ்சள் நிற பருத்தித் துணியால் ஒட்டப்பட்டிருக்கும். விளக்கின் உட்புறத்தின் அடிப்பகுதில் மெழுகுவத்திகள் ஏற்றப்பட, துணியாலான விளக்கின் மேல்பகுதி அல்லது ஆடை பொருத்தப்பட மிக அழகாக அவை ஒளிரும். உள்ளே ஏற்றப்படும் மெழுகுவத்திகள், சிச்சுவான் மற்றும் யுன்னான் மாநிலங்களால் அரசுக்கு வழங்கப்பட்டன. 1.3 மீட்டர் உயரம் கொண்ட மெழுவத்திகள் 33 செமீ அடர்த்தி கொண்டவை. இந்த மெழுகுவத்தில் பறவைநாகம் எனப்படும் டிராகன் சின்னம் செதுக்கப்பட்டிருக்கும். அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் அடையாளப்படுத்தும் இந்த சின்னம் பொருத்தப்பட்ட விளக்குகள் விலை கூடியவை, 12 மணி நேரம் தொடர்ந்து எரியக்கூடியவையாம். 
Source : http://tamil.cri.cn

No comments: