Saturday, January 9, 2010

சிறுபிள்ளையும் பெருங்களிறும்!



அதியமான் சங்ககாலத்தில் வாழ்ந்த அரசர்களுள் குறிப்பிடத்தக்கவன்.
அதியனுக்கும் ஔவைக்குமான நட்பை தமிழுலகம் நன்கறியும்.
அதியன் தனக்குக் கிடைத்த அரிய நெல்லியை தான் உண்ணாமல் ஔவைக்குக் கொடுத்தான்..
தான் உண்டால் நிலப்பரப்பு இன்னும் அதிகரிக்கும்..
அதனால் யாது பயன்?
ஔவை உண்டால் தமிழ் வளரும் என்பது அவனது எண்ணமாக இருந்தது.
அதியனின் வாழ்ந்திருந்தால் கூட அவனுக்கு இந்த அளவுக்குப் புகழ்கிடைத்திருக்குமா என்பது ஐயமே!
அதியனின் ஒவ்வொரு பண்பு நலனையும் ஔவையார் தம் பாட்டில் அழகாகப் பதிவு செய்து வைத்துள்ளார்.

இதோ ஒரு பாடல்..

ஊரில் உள்ள சிறுவர்கள் தன் வெண்மையான தந்தத்தைக் கழுவுவதால் நீர்த்துறையில் பெரிய களிறு(யானை) படிந்துகிடக்கும்.
பெருமானே!
அவ்வாறே எங்களுக்கும் எளிமையுடையவனாக நீ விளங்குகிறாய்!


மாறாக,

அந்தக் களிறு மதம் கொண்டால் மிகவும் அச்சமூட்டுவதாகவும், தம் அருகே யாரும் செல்ல இயலாததாகவும் விளங்கும்
அவ்வாறே நீ உன் பகைவருக்கு இன்னாதவனாக விளங்குகிறாய்!


யானையின் எளிமையும், வலிமையும் அதியனின் பண்புக்கு உவமையானது.

யானை எளிமையாய் இருத்தல் அதியனின் அருள் உள்ளத்தையும்.
மதம் கொள்ளுதல் எதிரிகளுக்கு அஞ்சத்தக்கவனாக அமையும் வீரத்துக்கும் சான்றாயிற்று.

இருவேறு தன்மைகளையும் ஒன்றாகப்பெற்றவன் அதியன்,

யாரிடம் அன்புகாட்டவேண்டும்?
யாரிடம் வலிமையைக் காட்டவேண்டும்?
என்பதை நன்கு அறிந்தவன் என்று அதியனின் புகழை உரைக்கிறார் ஒளவையார்.
 
பாடல் இதோ..
ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை, பெரும ! எமக்கே ; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய், பெரும ! நின் ஒன்னா தோர்க்கே.
புறநானூறு 94.
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை. துறை: அரச வாகை.
 
ஒவ்வொருவருக்குள்ளும் அன்பும் இருக்கும். வலிமையும் இருக்கும்.
அன்பை எங்கே வெளிப்படுத்த வேண்டும்?
வலிமையை எங்கே வெளிப்படுத்த வேண்டும்?

என்பதில் தான் இங்கு சிலருக்குக் குழப்பம் வருகிறது.

(படங்கள்- ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு மலர். நன்றி)
நன்றி http://gunathamizh.blogspot.com

No comments: