Tuesday, January 26, 2010

யார் சொன்னது ந‌ம்மைக் காதலிக்க யாருமில்லையென்று !!!!


 
ந‌ம்மைப் புர‌ட்டி போட்டு,க‌ச‌க்கி க‌ந்த‌லாக்கும் வாழ்வு தான் தின‌ம் தின‌ம்.

நேற்றைய நற்பொழுதுகள் மறக்கப்பட்டு, நாளைய‌ க‌ன‌வுக‌ள் சிதைக்க‌ப்ப‌டும் எதிர்பாராமையை எதிர்கொள்ளும் ச‌வால்களுமே அதிக‌ம்.ந‌ம்மை நாமே காத‌லிக்க‌ த‌குதியில்லாமை மேற்கூறிய‌வைக‌ளை பொறுத்து தான் அமைகிற‌து.நிற‌ம்,தோற்ற‌ம்,உய‌ரம் போன்ற‌ அளவைகள் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ந‌ம்மை காத‌லிக்க‌ குறைந்த பட்ச தகுதிகளாக‌ நாமே நிர்ண‌யித்து கொள்த‌லில் ஏமாற்றங்கள் ம‌ட்டுமே மிஞ்சுகின்ற‌ன‌.திருமணத்திற்கு பிறகு தோன்றும் காதலை "பெற்றவை"களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறோம்.அங்கே பொறுப்புகளும் சில கடன் தொல்லைகளும் தோள் சேர்ந்து கொண்டு அந்த உண்மைக் காதலையும் நீர்த்து போகச் செய்து விடுகின்றன.எல்லா அடைப்புக‌ளையும் மீறி, நமக்கே தெரியாம‌ல் என்றோ ஒருநாள் நமக்கு ஆதரவாக காதல் பிறந்திருக்கும்..நாமும் பல தருணங்களில் காதலிக்கப்பட்டிருப்போம்.காத‌லிக்க‌ப்ப‌ட்டு கொண்டிருக்கிறோம்.

எங்கே எப்போது ??? ......இருக்க‌லாம்......

பேருந்து நிழ‌ற்குடையிலும் டீக்க‌டையிலும் ஒதுங்கி நிற்போர் கண்கள் விரிய‌, சுஜாதாவையும் செல்போனையும் பாலிதீனில் வைத்து நீர்புகா வ‌ண்ண‌ம் இறுக‌ க‌ட்டி கொண்டு,குடையை மடக்கி வைத்து விட்டு,கொட்டும் ம‌ழையில் அம்மா சொல்லியும் கேட்காமல் சேற்றில் ந‌ட‌ந்த‌ "சொத‌க்" "சொத‌க்" க‌ண‌ங்க‌ளிலா...

வெள்ள‌ம் க‌ரைபுர‌ண்டோடிய‌ ம‌ழைக்கால‌ங்க‌ளில், அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவ‌து த‌ள‌த்தின் உய‌ர‌த்திலிருந்து செலுத்திய‌ க‌த்திக் க‌ப்ப‌ல்,நீரில் மூழ்கும் போதும் கலங்கிய நாட்களிலா...

ச‌வேராக்க‌ளையும் ஷெர‌ட‌ன்க‌ளையும் புறக்கணித்து விட்டு,நண்பன் பிறந்த நாளை அந்த கிழ‌க்கு குறுக்கு தெரு கையேந்திபவன் சுண்டல் கடையில் அறுபது ரூபாய் செலவில் கொண்டாடி மகிழ்ந்தோமே !!! அந்த டிசம்பர் மாத இரவுகளிலா....

மின்சார ரெயில் எதிர் இருக்கையில், தன் பாட்டி மடியில் படுத்து கொண்டு..நம்மை முறைத்து பார்க்கும் குழந்தையின் பிஞ்சு விரல்களை லேசாக உரசிப் பார்த்து சிலாகிப்போமே !!! அந்த அரை மணி நேர பயணங்களிலா...!

அலுவலகம் முடிந்து களைப்புடன் வீடுதிரும்பும் மாலைப் பொழுதுகளில், முகத்தில் புழுதி வாரியிறைப்பதையும் பொருட்படுத்தாது,சட்டை கைகளை மடக்கி வைத்து விட்டு, சாலையோர‌ சிறுவர்களுடன் கால்பந்து ஆடி களித்தோமே....! அப்போது மளிகை கடையோடு கூடிய அந்த மாடி வீட்டு மயிலொருத்தி சன்னலோரத்தில் நின்று,ஓரக்கண்ணால உங்களை சைட்டிருக்கலாமே !!! அந்த அந்தி நேர பொழுது சாயுதல்களிலா.......

சாலையில் சிதறி கிடக்கும் பூக்களையும் சிதறாமல் விரிக்கப்பட்டிருக்கும் கோலங்களையும் மிதித்து விடுவோமோ என்ற பிரக்ஞையில், தாவி தாவி நடக்கும் மார்கழி மாத பனித்துளி முகத்தில் சொட்டும் வைகறைகளிலா...!!

உறவு வீட்டு திருமணமொன்றில், ஓடியாடி வேலைபார்த்து,வந்த சுற்றங்களுக்கெல்லாம் உணவு பரிமாறி,கடைசியில் இருக்கும் மிச்சமீதியை பரிமாறக் கூட ஆள் இன்றி,க‌ளைப்புட‌ன் விய‌ர்வை வ‌ழிய‌ அம‌ர்ந்து,ந‌ம‌க்காக‌ நாமே கிழிந்த இலை விரித்து சாப்பிட முயலும்போது,ஓடிவந்து கரண்டியை பிடுங்கி புன்னகையுடன் பரிமாறுவாளே !!! அத்தை மகள்..அவள் கண்களிலா..

இருக்கலாம்....

பல தருணங்களில் நாம் கவனித்திருக்க மாட்டோம் நம்மை யாரெல்லாம் கவனிக்கிறார்கள் என்று.

வாழ்வின் புதையல்களில் சிக்கி கிடக்கும் ஆயிரமாயிரம் அற்புத கணங்களைத் தோண்டியெடுத்து, தொல்பொருள் துறைக்கு ஒரு நகலையும்,தடயவியல் துறைக்கு ஒரு நகலையும் அனுப்பி வைத்தோமேயானால், கிடைக்கும் நம்மை காதலித்தவர்களின் எண்ணிக்கையை கொண்டு ஒரு தேசத்தையே உருவாக்கலாம்.

வாழ்வு நுரையீரலைப் பிய்த்து தின்னும் வேளைகளிலும், ஈயெறும்புகள் கூட நம்மை காதலிப்பதாக உருவகித்து கொள்ளும் உயர்ந்த உள்ளங்களின் தலைமேல் ஒளிவட்டங்கள் படரக் கடவது !!!

*******************

No comments: