Friday, November 9, 2012

நாகூர் பாஷையில் திருக்குறள்

நாகூர்வாசிகளின் நகைச்சுவையைத் தூண்டுவதற்கு  “நாகூர் பாஷையில் திருக்குறள்”

“உடுக்கை இழந்தவன் கைபோல” என்று தொடங்கும் ஒரு திருக்குறளை எனது வலைப்பதிவில் எழுதப்போய் நம்ம ஊர்க்காரர் ஒருவர் இதுக்கு என்ன அர்த்தம்னு விளக்கம் கேட்டார். அவருக்கு நாகூர் பாஷையிலேயே விளக்கினேன். அவருக்கு உடனே புரிந்துப் போய் விட்டது.

இதேபோன்று குறள்களுக்கு நாகூர் பாஷையிலேயே பதவுரை எழுதினால் என்ன என்ற ஒரு விபரீத ஆசை எனக்கு தோன்றியிருக்கக் கூடாதுதான். என்ன செய்வது? திருவள்ளுவர் என்னை மாப்பு செய்வாராக.

    (பிகு. பரிமேலழகர், மு.வ., சாலமன் பாப்பையா, மு.க. இவர்கள்தான் விளக்கவுரை எழுத வேண்டுமா? நாம எழுதக்கூடாதா? நாகூர் ரூமியிடம் கேட்டுப் பாருங்கள். யாராவது பதிப்பாளர்கள் ரெடியாக இருக்கிறார்களா என்று. “நாகூர் பாஷையில் திருக்குறளுக்கு பதவுரை” என்று ஒரு புத்தகம் போட்டு விடலாம்.)

    ***


    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு

கைலி அவுந்து உலும்போது கை எப்படி கப்புன்னு புடிச்சுக்குதோ அதுமாதிரி கூட்டாளி முசீபத்துலே இருக்கும்போது உளுந்தடிச்சு போயி கூடமாட ஒத்தாசை செய்யிணும்.

    *
    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு

அரபு பாஷைக்கு அலீஃப் எழுத்து எப்படியோ அதுமாதிரி அல்லாஹுத்தாலாதான் இந்த துனியாவுக்கு எல்லாமே.

    *
    கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
    என்ன பயனும் இல

அஹ எஹல பாக்கும்போது, எஹ அஹல பாக்கும்போது பேச்சு மூச்சு இரிக்காது

    *
    குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
    மழலைச்சொல் கேளாதவர்

பச்சப்புள்ளெ மதலை பேச்சை கேக்காதஹத்தான் பீப்பீ சத்தம்தான் அலஹா இருக்கு, புல்புல்தாரா சத்தம் அலஹா இருக்குன்னு சொல்லுவாஹா.

    *
    மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
    என்னோற்றான் கொல்எனும் சொல்

புள்ளெ வாப்பாவுக்கு செய்யிற உதவி என்னான்னு சொன்னா ‘இவனைப் பெத்ததுக்கு அஹ ரொம்பவும் கொடுத்து வச்சிருக்கணும்’னு சொல்றமாதிரி அவன் நடந்துக்கணும்.

    *
    செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்விருந்து வானத் தவர்க்கு

வந்த விருந்தாடி ஜனங்களுக்கு பணியான் பண்டம் வச்சுக் கொடுத்து, வேற யாராச்சும் வர்ராஹலான்னு வாசக்கதவெ பார்த்துக்கிட்டு இருந்தா அஹலுக்காகா மலாயக்கத்துமாருவ மஹ்ஷர்ருலே காத்துக்கிட்டு இருப்பாஹா.

    *
    இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை
    எல்லாரும் செய்வர் சிறப்பு

ஏழைப்பட்ட ஜனங்களெ எல்லாரும் ஏசுவாஹா. காசுபணம் இருக்குறஹலெ தலையிலே தூக்கிவச்சுக்கிட்டு ஜிங்கு ஜிங்குன்னு ஆடுவாஹா.

    *
    கற்க கசடற கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

ஓதுங்க. (சாபு சொல்ற மாதிரி) நல்லா ஓதுங்க. ஓதி முடிச்சப்பொறவு அதுக்கு தகுந்தமாதிரி அதபு அந்தீஸா நடந்துக்குங்க.

    *
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பதறிவு

யார் பிஸாது செஞ்சாலும் அஹ ஹக்கா பேசுறாஹலான்னு விசாரிச்ச பொறவுதான் எதையும் முடிவு பண்ணனும்.

    *
    யாகாவ ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

வாயை அடக்கி பேசுங்கனி. இல்லாட்டி பலா கர்மம் கொண்டு ஹயாத்தெ அளிஞ்சு போயிடுவியும்.

    *
    அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை; அதனை
    மறத்தலின் ஊங்கில்லை கேடு

நல்ல அமல் செய்யிறதைக் காட்டிலும் பரக்கத் வேற ஒண்ணுமே கெடையாது. அத செய்யாமப் போனா அதைவிட பலா முசீபத்து வேற எதுவுமே கெடையாது.

    *
    யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்

நாம அஹல பாக்குறப்போ அஹ தரையை பாக்குறாஹா; நாம அஹல பாக்காதப்போ அஹ நம்மள பாத்து அஹலுக்குள்ளேயே சிரிச்சுக்குறாஹா.

    *
    இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
    தாமே தமியர் உணல்

ஹவா நஃப்ஸ் புடிச்சு நாம தனியா உக்காந்து வயித்துலே கொட்டிக்கிறது, மிஸ்கீன் மாதிரி மத்தஹக்கிட்டே காசுபணம் கேக்குறதை விட மோசம்.

    *
    விருப்புஅறாச் சுற்றம் இயையின், அருப்புஅறா
    ஆக்கம் பலவும் தரும்

ஒருத்தஹலுக்கு மொஹபத் காட்டுற சொந்தக்காரஹ மட்டும் அமைஞ்சிட்டாஹனா, அந்த சீதேவிக்கு நெறஞ்ச பரக்கத்தையும், நீடிச்ச ஸலாமத்தையும் கொடுக்கும்.

    *
    இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்;மற்று எஞ்ஞான்றும்
    நல்லார்க்கு நல்ல செயல்

பொண்டாட்டிக்கு பயந்து நடுங்குறஹ, சாலிஹான மனுசருக்கு ஒத்தாசை செய்யக்கூட பயப்படுவாஹா.

    *
    யாதானும் நாமாம்ஆல்; ஊராம்ஆல் என்னொருவன்
    சாம்துணையும் கல்லாத ஆறு

நாலெழுத்து படிச்சஹலுக்கு சஃபர் செஞ்ச எல்லா நாடும் அஹலோடசொந்த ஊரு மாதிரிதான். அப்படியிருந்தும் ஏன் அஹலுவோ ஓதாம இருக்குறாஹா?

    *
    கல்லாதான் சொல்கா முறுதல், முலையிரண்டும்
    இல்லாதாள் பெண்காமுற்று அற்று

(மாப்புசெய்ங்க. இதுக்கு பதவுரை எழுதி “அதபு கெட்ட மனுஷன்”னு ஏச்சுபேச்சு வாங்குறதுக்கு நான் தயாரா இல்லை)

    பழிஅஞ்சிப், பாத்துஊண் உடைத்து ஆயின், வாழ்க்கை
    வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

அல்லா ரசூலுக்கு பயந்து, ஹலாலான வழியிலே சம்பாதிச்சு, வூட்டு மனுசருவோ, சொந்தக்காரஹ, இஹலுக்கு பவுந்து உண்ணுரஹலோட பரம்பரை என்னிக்குமே அழியாது.

*

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்

வூட்டுக்கார உம்மனைக்கூட ஒத்துமையா, ஜதப்பா குடும்பம் நடத்துற சாலிஹான சீதேவி மனுசரு, மனுசருலே சேத்தியில்லே. மலாயக்கத்துமாருவ மாதிரின்னு வச்சுக்குங்களேன்.

*

    அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்;அஃது உண்டேல்
    தவாஅது மேன்மேல் வரும்

ஹவா நஃப்ஸ் இல்லாதஹலுக்கு முசீபத்து அண்டவே அண்டாது. அது இருக்குறஹலுக்கு (அல்லா வச்சு காப்பாத்த) பலா முசீபத்து ஹல்கை புடிச்சு வாட்டி எடுத்துடும்.

*

    பணைநீங்கிப் பைந்தொடி சோரும், துணைநீங்கித்
    தொல்கவின் வாடிய தோள்.

அஹ என்னை வுட்டுட்டு (சபர்) போனப் பொறவு என் தோள்பட்டைக்கூட துறும்பா இளைச்சு போச்சு. இப்ப கை மெலிஞ்சிட்டதாலே பூட்டுக்காப்பு, பொன்மணிபவளம் கூட ‘புசுக்’குன்னு கழண்டு கழண்டு உலுந்துடுது.

*

    கவ்வையால் கவ்விது காமம்; அதுஇன்றேல்
    தவ்என்னும் தன்மை இழந்து

நான் அந்த புள்ளே மேலே மொஹப்பத் வச்சிருக்கேன்னு இந்த ஊருக்காரஹ உடாமே பிஸாது பண்றதுனாலேதான் எங்களோட மொஹப்பத்து இவ்ளோ நாளு நீடிச்சிக்கிட்டு இக்கிது. இல்லாக்கட்டி எப்பவோ அது உப்பு சப்பு இல்லாம ஹயாத்தளிஞ்சு போயிருக்கும்.

*

    களித்தொறும் கள்உண்டல் வேட்டுஅற்றால்; காமம்
    வெளிப்படுந் தோறும் இனிது.

(வாஞ்சூர்லே போயி) கள்ளுக் குடிச்சிட்டு வந்து மெதப்புலே இருக்குறஹ எப்படி குஷியா இருக்குறாஹலோ அதுமாதிரி எங்க காதலெ பத்தி ஊருலே பிஸாது பண்ணும்போதுதான் கல்புக்கு ராஹத்தா இக்கிது.

*

    கண்டது மன்னும் ஒருநாள்; அலர்மன்னும்
    திங்களைப் பாம்புகொண்டு அற்று

நான் அஹலை பாத்துப் பேசியது கொஞ்சமோ நஞ்சமோதான். (களிச்சல்லே போவ) அதுக்குள்ளே ஊரு ஜனங்களுவ பொறையை பாம்பு புடிச்சு ‘லபக்’குன்னு வாயிலே போட்டுக்கிட்ட மாதிரி பிஸாது பண்ணுறாஹலே?

*

    அமிழ்தினும் ஆற்ற இனிதே,தம் மக்கள்
    சிறுகை அளாவிய கூழ்

சின்னப் புள்ளையிலுவோ கையைப் போட்டு பிசையிற கோதுமைக் கஞ்சியானது, பாச்சோறை விட அம்புட்டு ருசியா இக்கிது.

*

    தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்

வாப்பாக்காரஹ புள்ளைக்கு செய்யிற சவாபான காரியம் என்னன்னு சொன்னா, முஹல்லாவுலே/ மஜ்லீசுலே, அவனை பெரிய ஆளா, நசீபு உள்ளவனா ஆக்கிக் காட்டுறதுதான்.

*

    என்புஇல் அதனை வெயில்போலக் காயுமே
    அன்புஇல் அதனை அறம்

எலும்பு இல்லாத புழுவை பட்டப் பவலு வெய்யிலு காய்ச்சி மவுத்தாக்குற மாதிரி, கல்புலே ஈவு இரக்கம் இல்லாதஹலே அவுலியா கண்ணை அவுச்சிடுவாஹா.

*

    காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது

ஒருத்தஹலுக்கு நெருக்கடியான வஃக்துலே கூட மாட ஒதவி ஒத்தாசை செய்யிறது கொஞ்சக்கோனு இருந்தாலும் தேவலே. ஆனா அது இந்த துனியாவை விட ரொம்ப ரொம்ப பெருசு.

*

    உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்; மற்றுஅது
    தள்ளினும் தள்ளாமை நீர்த்து

ஹாஜத்து எப்பவுமே பெருசா இருக்கணும். ஒருவேளை நம்மளோட ஹாஜத்து கைக்கூடாம போனாக்கூட, பெரிய மனுசஹலுவோ நம்மள, ஆஹா ஓஹோன்னு பாராட்டுவாஹா. அதுவே முராது ஹாசில் ஆன மாதிரிதானே?

*

    பரியது, கூர்ங்கோட்டது ஆயினும், யானை,
    வெரூஉம் புலிதாக் குறின்.

(நாகூர் தர்ஹா) யானைக்கு பெரிய சரீரமும், கூர்மையான தந்தமும் இருந்தாலும் கூட, புலி தாக்குனுச்சுன்னு வச்சுக்குங்க, அதுக்கு அத்து பித்து எல்லாம் கலங்கிப் போயிடும்.

*

    புறந்தூய்மை நீரான் அமையும், அகம்தூய்மை
    வாய்மையால் காணப் படும்

நம்மளோட சரீரம் ஒளு செஞ்சா நஜீஸ் நீங்கும். அதுமாதிரி கல்பு, ஹக்கான அமல்னாலேதான் சுத்த பத்தமாவும்.

*

    மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு
    தானம்செய் வாரின் தலை

கல்பு அறிய ஹக்கா பேசுறஹ, இத்திகாஃப் இருக்குறஹலை விட, ஜகாத் கொடுக்குறஹலை விட ரொம்ப ரொம்ப ஒசத்திஹானஹ.

*

    அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்,
    தீயுழி உய்த்து விடும்

பொறாமை, பொச்சரிப்பு எஹக்கிட்ட இக்கிதோ, அது அஹலோட ஆஸ்தி அந்தஸ்த்தெ அழிக்கிறதோட நிக்காம, அஹலெ நரகத்து கொள்ளிக்கட்டையா ஆக்கிப்புடும்.

*

    உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர், எஞ்ஞான்றும்
    கள்ஒற்றிக் கண்சாய் பவர்

(மனாரடி ஓரம் விக்கிற) கஞ்சா, அபினை வாங்கிச் சாப்பிடுறது ஊரு ஜமாஅத்துக்கு தெரிஞ்சிச்சுன்னா அப்புறம் விசயம் நாறி நறங்குலைஞ்சுப் போயிடும். கபர்தார்.

தொடர்புடைய சுட்டி :


நாகூர் பாஷையில் திருக்குறள் – முதல் பகுதி
நாகூர் பாஷையில் திருக்குறள் – இரண்டாம் பகுதி

“நாகூர் பாஷையில்" எழுதியவர் அப்துல்  கையும் 




Source : http://nagoori.wordpress.com






தகவல் "நான் ரசித்தகுறளின்  தமிழ் விளக்கத்தை நீங்களும் ரசிப்பதர்க்காக..." Hassane Marecan