Monday, November 12, 2012

ஞானம் பெறுவது தலையாய கடமை

  இஸ்லாத்தைப் பற்றி, அப்புனித மதத்தின் தீர்க்கதரிசி முஹம்மது நபி அவர்களைப் பற்றி, பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஒவ்வொரு இஸ்லாமிய இளைஞனும் திறம் பெற்றிருக்க வேண்டும்.  மற்ற மத நண்பர்களோ நம் மதத்திலேயே நமது நாகரிகம், கலை, பண்பாடு முதலியவற்றை அறியாத பாமர மக்களோ நம்மிடம் விளக்கம் கேட்கும் போது கொஞ்சமும் தயங்காது விரிவுரை தருவதற்கு நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும்.  இதற்குப்பல வழிகள் இருக்கின்றன.
பொதுவாக ஒவ்டிவாரு முஸ்லிம் கிராமத்திலும் சங்கங்கள் இயங்கிவருகின்றன.  திருமண வைபவங்களில் கலந்து பணியாற்றுவதையே பிரதானக் கடமையாக அவைகள் கருதுகின்றன.  அப்படி இல்லாது இன்னும் பல பணிகளில் அவைகள் ஈடுபட வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு பொருள் பற்றி அங்கத்தினர்களிடையே கருத்தரங்கு, விவாதம், பேச்சு முதலியவை நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும்.  பெரிய மனிதர்களை அழைத்து பார்வையாளர்களாக இருக்கச் செய்ய வேண்டும்.  இஸ்லாமியக் கருத்துக்களைப் பின்னணியாக வைத்து பலவித எழுத்தோவியங்கள் அங்கத்தினர்கள் எழுதி மாதம் ஒரு முறை கையெழுத்துப் பத்திரிக்கை கொண்டு வரவேண்டும்.  வருடத்திற்கு ஒரு சிறப்பு மலர் உருவாக்கி அதை அச்சிலேற்றி விநியோகிக்க வேண்டும்.
மனிதன் எதையும் தானாக செய்வதில்லை.  ஏதாவது ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அந்தச் செயலில் ஈடுபடுகிறான்.  இளம் வயதிலிருந்து அவனுக்கு அந்தப் பழக்கம் பதிந்துவிடுகிறது.  பள்ளியில் இருக்கும் மாணவன் கல்வி தனது கடமை என்று புத்தகங்களை ஊன்றிப் படிப்பதில்லை.  பரீட்சை என்று வந்த பிறகே அதில் வெற்றி பெறுவதற்காக இரவும் பகலுமாக கடைசி நேரத்தில் உட்கார்ந்து படிக்கிறான்.
குடும்பச் செலவுகள் அதிகமாக அதிகமாகத்தான் பணத்தின் தேவையை உணர்ந்து அதை எப்படியாவது சேர்க்க வேண்டும் என்று பாடுபடுகிறான்.  வருமானத்துக்குத் தகுந்த செலவு என்பதை விட, செலவுக்குத் தகுந்த வருமானம் வேண்டும் என்று தன் முயற்சியில் ஈடுபடுகிறான்.
இன்று நமது சமுதாயத்தில் நம் மதத்தைப்பற்றி ஒன்றும் அறியாத இளைஞர் பலர் உண்டு.  நவீனக் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தும் அவர்கள் ஓய்வு நேரத்தில் மத இலக்கியங்களைப் படித்து பார்க்க ஞானம் பெறுவது தலையாய கடமை என்பதை உணராதிருப்பது மிகவும் வருந்தத்தக்கது.
நான் சொன்ன திட்டப்படி இளைஞர்கள் இஸ்லாபமியக் கருத்துக்கள் பற்றி பேச்சு மேடையும் எழுதுதற்கு நிர்ப்பந்தத்தையும் அமைத்துக் கொண்டால் எப்படியாவது இலக்கியங்களைப் படித்தாக வேண்டும், படித்தவைகளிலிருந்து குறிப்புகள் எடுக்க வேண்டும், மார்க்க அறிஞர்களின் கூட்டுறவு பெற்று விளக்கங்கள் பல அறிய வேண்டும் என்பன போன்ற வாய்ப்புக்கள் ஏற்படும்.  அதற்காகத்தான் இத்தகைய காரியங்களில் உங்கள் சங்க அங்கத்தினர்கள் ஈடுபட வேண்டுகிறேன்.
பொருளாதாரம் என்பது முதுகெலும்பு.  அது இல்லாமல் எந்த இயக்கமும் ஏறுநடைபோட முடியாது.
கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் இன்னும் பல அநாவசியச் செலவுகளுக்கும் எவ்வளவோ பொருளை பாழ்படுத்தும் நாம் நல்ல காரியங்களுக்காக நன்கொளை அளிப்பதற்குத் தயங்குகிறோம்.  அப்படி இல்லாது நல்லவகையில் தம்மால் இயன்ற பொருளுதவி செய்து, இதுபோன்ற நடவடிக்கைகள் சிறப்புற அமைய உதவமுன் வரவேண்டும்.
படிக்க முடியாத ஏழை மாணவர்கள் பலர் இருக்கலாம்.  ஆவர்களில் திறமையான மாணவர்கள் மேல்படிப்பிற்குச் செல்ல உங்கள் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வேலை கிடைக்காமல் எத்தனையோ இளைஞர்கள் வாழ்க்கையில் தோல்வி மனப்பான்மையுடன் திரிவதை நாம் காண்கிறோம்.  அவர்களுக்குத் தேடித்தர உங்கள் ஸ்தாபனம் ஈடுபட வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்தினரும் அந்தந்த ஊர் பிரச்சினைகளைத் தாங்களே தீர்வுகாண்பார்களேயானால் எங்கும் சுபிட்சமும் சாந் மும்நிலவும்.  அதே போன்று மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்கின்ற ஒருவன், தன்கடமையினைச் செவ்வனே செய்ய வேண்டும், மற்றவர்கள் அன்பையும் அனுதாபத்தையும் பெறும் அளவுக்கு தனது திறமையையும், பண்பையும் அதை;துக் கொண்டால் தர்ம சிந்தை மற்றவர்களிடம் தானகப் பிறக்கும்.  ஊர் மக்கள் அனைவரும் சகோதர மனப்பான் நோக்குடன். ஒருவர்க்கொருவர் உதவிக் கொண்டு ஊர் முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டுமானால் எல்லோரும் தொண்டு செய்யும் பெரு நோக்கு கொள்ள வேண்டும்.
சிறுவர்கள் பலர் தீய பழக்கங்கள் மேற்கொண்டு திரிவதைக் கண்டு அவர்களைத் திருத்த முடியாது கண்ணீர் வடிக்கும் பரிதாபமான பெற்றோரை நாம் சந்திக்கிறோம்.
மனிதன் பிறக்கும்போது பத்தரை மாற்றுத் தங்கமாகத்தான் இருக்கிறான்.  சூழ்நிலையும் சந்தர்ப்பமும் தான் அவனைத் தீய வழிகளில் ஈடுபடுத்தி விடுகின்றன.  அவன் தீயவழிக்குச் சென்ற சூழ்நிலையை ஆராய்ந்து மற்ற சிறுவர்கள் அதற்குப் பலியாகாமல் இருக்க ஆவன செய்ய வேண்டும்.  ‘நான் என்ன சொல்லியும் கண்டித்தும் அவன் திருந்தவில்லை’ என்று சொல்லித் தோல்வியைக் காணபிப்பதைவிட, “அவனை எப்படியும் திருத்தி நல்வழிக்குக் கொண்டுவருவதே என் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கும்” என்று சொல்லுவதுதான் இஸ்லாhமியச் சகோதரனின் சூளுரையாக அமையவேண்டும்.
இந்தச் சங்கத்தில் அங்கத்தினனாக இருப்பதே அவமானம் என்று சொல்லும்படி பல சங்கங்கள் இயங்கி வருகின்றன.  இந்தச் சங்கத்தில் அங்கத்தினனாகச் சேர்வதே மிகக்கடினம், சேர்ந்து விட்டால் மிகப் பெரும் கவுரவம் இருக்கும் என்னும் அளவுக்கு நமது சங்க நடவடிக்கைகள் ஆக்க வேலைகளில் ஈடுபடவேண்டும்.
நன்கு உருவான பிறகு மற்ற ஊர்ச்சங்கத்தினரைப் பேச்சரங்குகளுக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கும் அழைத்து, பங்கு பெறச் செய்யலாம்.  இவையெல்லாம் பொழுதுபோக்கு என்று கருதுவதைவிட நமது உரிமையும் கடமையும் அதிலே பிணைந்து கிடக்கின்றன என்பதை நாம் உணர்ந்தால் நமக்கு வெற்றி வெகுதூரமில்லை.  வாழ்த்துக்கள்.


by நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்

No comments: