Saturday, November 17, 2012

உன்னுடன் வருவது யார் ?

இறுதி  வரை என்ற வார்த்தை பல காரணங்களுக்காக   பயன்படுத்தப் பட்டாலும் இறப்புதான்   இறுதி என்று நாம் எண்ணுகின்றோம் . இதய‌ம் துடி‌க்கவில்லை, செ‌ல்க‌ளி‌ன் இய‌க்க‌ம் ‌நி‌ன்று போனது ‌‌அதனால்  மரண‌‌ம். அந்த இறப்பும்,மரணமும்  இறுதி இல்லை என நம்புவதும் உண்டு. மறுலோகம் என்பர் மார்க்கம் பேசுபவர் .அதை நம்பாதவர் இயற்கை என்பர் .
மடிதல் என்று கிடையாது உரு மாறுகின்றது. இலை விழுந்தால் எரு ,  அவ்வளவுதான் .  ஏன் இறப்புக்கு நாம் பயப்படுகின்றோம் .  வாழ்வே மாயம்,  பின்  ஏன் இத்தனை விளையாட்டு. தேவை தான் !
உலகம் உருள்வதுபோல் மனித வாழ்வும் மற்ற பிறவும் உருள்வதற்காக.
பால் உணர்வால் உலகம் உருள்கின்றதா?  அதற்கு பணம், அதிகாரம், புகழ் தேவையா !
பட்டாமணியார் வீட்டில் இறப்பு விழுந்தால் ஆயிரம் பேர் பட்டாமணியார் இறந்தால்  பத்து பேர் இது அறிந்த உண்மை .
என்ன ஆனது பணமும், புகழும், அதிகாரமும் .

உன்னுடன் வருவது யார் ?

அன்றே பட்டினத்தாரின் கவிதை மனித வாழ்வினை அறிய வைத்தது .
“அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு
கைத்தலை மேல்வைத் தழுமைந் தருஞ்சுடு காடுமட்டே,
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே.”



''இறந்தவரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை அவனது குடும்பம், அவனது சொத்து, அவனது செயல்கள் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டும் தங்கி விடுகிறது. அவனது குடும்பமும், அவனது சொத்தும் திரும்பி விடுகின்றன. அவனது செயல் தங்கி விடுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரளி)
நூல்கள்: புகாரி , முஸ்லிம்




இப்பொழுது பாமரனும் விளங்க காலமெல்லாம்  பேசப்படும்  
கவிஞர் கண்ணதாசன் பாடல்

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன…?வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

1 comment:

சேக்கனா M. நிஜாம் said...

மரணத்தின் நிலைக்கு வந்துவிட்டால்........

1. இனி நீங்கள் மையித் என்ற பெயரில் அழைக்கப்படுவீர்கள்!

2. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டி, அனைத்து மஸ்ஜித்களிலும் உங்களின் மரண அறிவிப்புத் தகவல் அறிவிப்புச் செய்யப்படும்!

3. உங்கள் உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் வருகை தந்து, உங்களின் மையத் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் (“சலாம்”) எனக் கூறுவார்கள்.

4. சுத்தமான முறையில் குளிப்பாட்டப்படுவீர்கள்.

5. ஏறக்குறைய 12 மீட்டர் அளவுள்ள வெள்ளைத் துணியால் கஃபனிடப்படுவீர்கள்!

6. வீட்டிலிருந்து “சந்தூக்” எனும் பெட்டியில் உங்களை (மையத்தை) வைத்து கப்ர்ஸ்த்தான் நோக்கிக் கொண்டுச் செல்லப்படுவீர்கள்.

7. கப்ர்ஸ்த்தானில் ஆறு அடி நீளம், முன்று அடி அகலம், ஐந்து அடி ஆழத்தில் வெட்டப்பட்ட குழியில் அடக்கம் செய்யப்படுவீர்கள்!

8. “உன் இறைவன் யார்? உன் மார்க்கம் எது? உன் வழிகாட்டி ( நபி ) யார்?

போன்ற கேள்விகள் கேட்கப்படுவீர்கள்! பதில் சொல்லத் தயாராகுங்கள்!

“உங்களுக்காக தொழுகை வைக்கப்படும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்!”

என்ற அறிவிப்புப் பலகை வாசித்த நினைவு உண்டுதானே ?