Saturday, December 15, 2012

பெண்ணுடைய வாழ்வு பாழாகிவிட அனுமதிப்போமா?

“… … அண்மையில் கோப்பன்ஹேகில் உலகப் பெண்கள் பிரச்சினை குறித்த ஒரு கருத்தரங்கம் நடந்தது.  பெண்ணினத்திற்கு சமத்துவம் வேண்டும்; பெண்கள் முன்னேற வேண்டும் என்றெல்லாம் அந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
 1400 ஆண்டுகளுக்கு முன்னமேயே தாய்குலத்திற்கான பிரச்சனைகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக தீர்த்துவைக்கப்பட்டுவிட்டன.  ஆகவே, இஸ்லாமிய சமுதாயத்தில் பிரச்சனைக்கே இடமில்லை.  காலப்போக்கில் நாம் மாற்றான் கலாசாரத்திற்கு அடிமையாகி, அலைக்கழிந்துவிட்டோம்.  நம்மை நாமே சீரழிவைத் தேடிக்கொண்டோம்.  அரபு நாடுகளிலே பெண்களுக்கு மஹர் கட்டியே திருமணம் நடைபெறுகிறது.  அங்கு ஆண் ஏழையாகிவிடுகிறான் - பெண் பணக்காரியாகிறாள்! இந்த விழாவில் கலந்து கொள்ள பயந்து கொண்டு கோழைகள் பலர் வரவில்லை.  மஹர் தான் நம் சட்டம்.  ஹிந்துக்களிடையேதான் இந்த வரதட்சனைப்பழக்கம்!  பெண்களுக்கு அங்கே சொத்துரிமை இல்லாததால், பெண்ணுக்கு சீராக ஹிந்துத் தந்தை மகளுக்குக் கொடுப்பதில் நியாயமிருக்கிறது.  ஆனால் இஸ்லாத்தில் பெண்ணுக்கு சொத்துரிமை இருக்கிறது.  ஆகவே வரதட்சணைத் தேவையில்லை.


இந்த வரதட்சனைக் கொடுமைக்கு 60 விழுக்காடு பெண்கள் தான் காரணமாயிருக்கிறார்கள்.  மகளுக்குக் கொடுத்த சீரை மகன் மூலம் வாங்கித் தீர நமது தாய்மார்கள் துடியாய்த் துடிக்கிறார்கள்.  பெண்களுக்கு இதில் பொறுப்பு உண்டு.  கைக்கூலிக்கு அடிப்படைக் காரணம் நம்மிடையே மார்க்கக்கல்வி சூனியம்.  நம் மத்தியில் போதிய மார்க்கக் கல்விக்கூடங்கள் இல்லை.  அப்படியே அங்குமிங்குமாக தீனியாத் பள்ளிகளை ஆரம்பித்து வைத்தால், நமக்கு தீனியாத் கல்வி பயிலும் ஆர்வமும் ஏற்படுவதில்லை – நமது குழந்தைகளையும் மதரஸாக்களுக்கு அனுப்பி வைப்பதுமில்லை.  மஹரைப்பற்றி அறிந்து கொள்வதற்கு நம் பெண்களுக்கு எந்த அளவுக்கு மார்க்கக்கல்வி தெரிந்திருக்கிறது? நாம் என்பதை நாம் யோசித்துப் பார்க்கவேண்டாமா? எல்லாவற்றுமே விலை ஏறியிருக்கும் இந்த காலத்தில் ஒரு பெண்ணுக்கு மகர் தொகையை மட்டும் பழைய நிலையிலேயே வைத்துள்ளோம்   இதுகேலிக்குரியது.  தலாகின் கொடுமை பற்றி நாம் அனைவரும் தெரிந்திருந்தால் இவ்வளவு மலிவாக பெண்ணுடைய வாழ்வு பாழாகிவிட அனுமதிப்போமா? கூக்குரல் இட்டால் மட்டும் போதாது. சரியான அணுகு முறை நம்மிடையே வேண்டும்.  எண்ணம் சிறப்பாகயிருந்து, கூட்டுச்செயல் உருவாகுமானால் உங்களைக் கண்டு சமுதாயம் பயப்படும்.  அந்த அடிப்படையில் இன்றே சபதம் எடுத்துக்கொண்டு செயல்படுங்கள்.  பெண்கள் முகாமிலே தொண்டர் படையை ஏற்படுத்துங்கள்.  இறைவன் நம் பக்கம் இருந்து நமது தூய கடமைப் பணிகளுக்கு உரிய பலனை ஈட்டித்தருவது திண்ணம்”


நீடூர் அல்ஹாஜ் S .E A.முஹம்மது சயீத்
வழக்கறிஞர்

No comments: