Friday, December 21, 2012

பயண அனுபவங்கள் – ( சீனா பகுதி 11)

தொழுகைக்கான நேரம் வருவதை அறிந்து கொண்ட நான் எனது நண்பரையும் கூட அழைத்துக்கொண்டு நேராக ப்ரேயர் ஹாலை நோக்கி நடந்தேன். இஸ்லாமியர்களுக்கென தனியாக அவர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாகிய தொழுகையை நிலை நிறுத்திக்கொள்வதற்காக கூடம்மொன்று அங்கே காணப்படும். வணிகச்சந்தையில் கலந்துகொண்டுள்ள பெரும்பாலான இஸ்லாமிய வாடிக்கையாளர்கள் இங்கு நடைபெறுகிற தொழுகையில் பங்குபெற்று தங்களின் கடமையை சிறப்புடன் நிறைவேற்றிக்கொள்வது எனக்கு மகிழ்ச்சியை தந்தன.

அங்கே எனது கடமையும் நிறைவேற்றிக்கொண்டு அங்கிருந்து பகல் உணவருந்துவதற்காக எனது நண்பரையும் கூட அழைத்துக்கொண்டு நேராக உணவகம் நோக்கி நகர்ந்தோம்.

வணிகச்சந்தையில் துரித உணவகம் மற்றும் சுயமாக தேர்ந்தெடுத்து சாப்பிடும் பல வகை உணவுகள் [ Buffet ] அடங்கிய இஸ்லாமிய உணவு விடுதி என இருந்தாலும் அதிகமானோர் துரித உணவகத்திற்கு விரும்பி செல்கின்றனர்.

பலவகை உணவுகள் [ Buffet ] அடங்கிய உணவு விடுதியைப் பொறுத்தவரை வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் உணவுகளைப் பிரித்து இருவேறு விலைகளை என நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் இங்கும் கூட்டம் எப்போதும் அலைமோதும்.



நாங்கள் மெக்டொனால்ட் [ Mcdonalds ] என்ற துரித உணவகத்தை தேர்ந்தெடுத்து அங்கே சென்றோம். அங்கே தனித்தனியாக பிரிக்கப்பட்டு பல்வேறு கவுண்டர்களைக் கொண்ட ஒவ்வொரு வரிசையிலும் நின்றுகொண்டிருந்த கூட்டங்கள் எங்களை வியக்க வைத்தன காரணம் வெவ்வேறு நாடுகளிலிருந்து வருகை புரிந்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் இத்துரித உணவை வாங்குவதற்காக போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் நின்றதே !


நாங்களும் அங்குள்ள வரிசையொன்றில் நின்றவாறே கடந்துசென்று கவுண்டரை அடைந்தோம். எதிரே உள்ள விற்பனை பெண்மணியால் தரப்பட்ட உணவின் படத்துடன் கூடிய விலைப்பட்டியல் அடங்கிய அட்டையில் எங்களின் விருப்ப உணவை அவர்களிடம் சுட்டிக்காட்டினோம். குறிப்பாக சிக்கன், பீப் போன்ற உணவுகள் ஹலால் செய்யப்படவில்லை என்பதால் எங்களின் சாய்ஸ் கடல் சார்ந்த உணவாகவே இருந்தன. அங்கே அமர்ந்து சாப்பிடுவதற்குரிய அனைத்து வசதிகளும் அந்நிறுவனத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் பேசுவதற்கு இலகுவாக ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு அங்கே அமர்ந்தோம்.


சீன தேசத்தில் மொத்த சனத் தொகையில் 41 சதவீதத்தினர் துரித உணவையே விரும்புகின்றனர் என்பது ஆய்வு அறிக்கைகள் குறிப்பாக Mcdonalds , KFC, Pizzahut, போன்ற அன்னிய துரித உணவு வகைகளை சீன மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர்.  மேலும் நகரில் ஆங்காங்கே காணப்படும் துரித உணவங்களில் வேலைக்குச் செல்லும் இருபாலர்களும் தினமும் உண்டு மகிழத் தவறியதில்லை. இது போன்ற உணவுகளில் அதிகளவில் கலோரிகள் காணப்படுவதால் உடலில் கொழுப்புச்சத்து கூடுவதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கக்கூடியது என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

வணிகச்சந்தை நடைபெறும் பெரும்பாலான நாட்களில் சுயமாக சமைத்து சாப்பிடுவதற்கோ அல்லது சுவையுடன் கூடிய இந்திய - அரபிய உணவங்களை நாடிச்செல்வதற்கோ போதிய நேரம் இல்லை என்ற போதிலும் நான் அதிகளவில் உட்கொள்ளும் உணவாக இவற்றையே பயன்படுத்தி வந்தேன். இதனாலேயே ஒவ்வொரு முறையும் சீனா சென்று திரும்பியவுடன் முதலில் எனது உடலின் இரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவை குறிப்பாக LDL மற்றும் Triglyceride  போன்றவற்றின் நிலைகளை தெரிந்துகொள்ள பரிசோதனை நிலையத்திற்கு செல்லத் தவறியதில்லை.


செயற்கை நிறமிகளையும், சுவையூட்டிகளையும் கொண்டுள்ள இதுபோன்ற உணவுகளை ருசிக்காகவும், நறுமணத்திற்காகவும் சாப்பிடுவதிலிருந்து சற்று நாம் விலகி இருந்தால் கண்டிப்பாக இரத்தப் பரிசோதனை செய்து கொள்வதிலிருந்து சற்று விலகி இருக்கலாம். உடல் ஆரோக்கியத்தையும் பேணிப் பாதுகாக்கலாம்.

உணவருந்திக்கொண்டு இருக்கும்போது எனது அழைப்பேசி ஒலித்தது... எடுத்தேன்... மறுமுனையில்..!?

இறைவன் நாடினால் ! ‘பயண அனுபவங்கள்’ தொடரும்...
சேக்கனா M. நிஜாம்
Source : http://nijampage.blogspot.in/

1 comment:

சேக்கனா M. நிஜாம் said...

பதிவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி !