Friday, October 8, 2010

இணையத்துக்கு இல்லை இணை - கவியரங்கம்


சந்தவசந்தம் குழுமத்தில் என் தலைமையில் நடந்த கவியரங்கத்தில் தலைமைக் கவிதையாகவும் அழைப்புக் கவிதைகளாகவும் நன்றிக் கவிதைகளாகவும் நான் எழுதியவை

துவக்கவுரை
கோள்கள் பால்வீதியில்
கதிர்கள் பகல்வீதியில்
இலைகள் மரக்கிளையில்
விழிகளோ யௌவனத்தில்
ஓயாமல் கொண்டாடும்
கவியரங்கம் கவியரங்கம்

பயிர்கள் ஏரெழுத்தில்
மழைநீர் விளைநிலத்தில்
உயிர்கள் உறவுகளில்
உயர்வோ பண்பாட்டில்
தவறாமல் கொண்டாடும்
கவியரங்கம் கவியரங்கம்

நெருப்பு சத்தியத்தில்
ஞானம் அனுபவத்தில்
விதிகள் இயலாமையில்
வெற்றியோ நம்பிக்கையில்
கணந்தோறும் கொண்டாடும்
கவியரங்கம் கவியரங்கம்

காதல் மனத்துடிப்பில்
கவிதை உயிர்த்துடிப்பில்
மடல்கள் குழுமங்களில்
வசந்தமோ சந்தங்களில்
உயர்வாகக் கொண்டாடும்
கவியரங்கம் கவியரங்கம்

கவியரங்கில்லா இடமேது
கவியரங்கில்லாப் பொ஡ழுதேது
இருந்தபோதும் இதயங்களே
எத்திசையும் கூடிப்பாடும்
இணையில்லாக் கவியரங்கம்
இணையக் கவியரங்கன்றோ !



நன்றி சந்தவசந்தமே
பஞ்சபூதங்களும்
பவித்திரமாய்க் கவிபாட
ஓர் வானவில்
தலைமை ஏற்கும்
இது என்ன வைபவம் !

யானை கட்டிப்
போரடிக்கும் பேருழவில்
ஓர் எறும்பு வந்து
கயிறிழுக்கும்
இது என்ன அதிசயம் ?

நயாகராக்கள்
கூடிக் கொட்ட
ஓர் குற்றாலம்
தலைமை ஏற்கும்
இது என்ன குதூகலம் ?

நன்றி நிறைந்த நயனங்களோடு
நான் அரங்கேறி
இக்கவித் தமிழிருக்கையில்
இன்றோர் பிறப்பெடுக்கிறேன்

மேகத் துளியொன்றில்
முழுமொத்த ஆகாயத்தையும்
கவிக்கண்ணால் காண வந்தத்
தமிழ்ச்சுடர்களே

சந்தவசந்தப் படிப்பறையில்தான்
நான் கவியரங்கம் கற்றேன் - அதன்
தலைவனையே அழைத்தின்று
கவிபாடு கவிஞனே என்று கூற
இன்றெனக்குத் தலைமையா?

ஆழிசூழ் அகிலமெல்லாம்
அருங்கணிக்குள் கூடுகட்டி
அருகருகே அமர்ந்திருக்கும்
அழகவைக்கு என் வணக்கம்

தலைமை ஆசனத்திலென்னை
ஏற்றிவைத்த இலந்தையார்க்கும்
நெய்யூற்றித் தூண்டி நிற்கும்
நற்கவிப் பெருமக்களுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்



கவியரங்கம்: இணையத்துக்கு இல்லை இணை
முதல் அழைப்பு
நினைவிலேறி
நிறைந்து கொள்ளும்
ஆகாய முழுச் சிரிப்பு

வருத்தமேனடா
விருத்தமெழுதவென்றே
வினவும்
ஆசிரியத்தாயுள்ளம்

விழிதிறந்தால் விமரிசனம்
வாய்திறந்தால் கவியரங்கம்

ஏறிய மேடைகளுக்கோ
எழுதிய பாடல்களுக்கோ
கணக்கு வைத்துக் கொள்ளாத
சந்தவசந்தச் சாரதி

கற்க கசடற என்று
கவியேற்றக் கற்றுத்தரும்
கவிமாமணி இலந்தையாரே
வருக வருக

பொன்னும்
புதுவைரமும் இழைக்கும்
உங்களின்
முற்றியச் சொல்வளத்தால்
கவியரங்கின்
முதற் கவிதையைத்
தருக தருக

No comments: