Tuesday, June 1, 2010

கவிதை : இணையக் காதல்…

கவிதை : இணையக் காதல்
இது

இருபதாம் நூற்றாண்டின் காதல்.

விரலாலும் குரலாலும்

விருப்பங்கள் பரிமாறிக் கொள்ளும்

விஞ்ஞானக் காதல்.

விழிபார்த்து வார்த்தைகளை

விழுங்கி விட்டேனென்று

கவிஞர்கள்

இனி பொய் சொல்லவேண்டாம்.

யாரும் பார்க்கக் கூடாதென்று

நெரிசல் நகரங்களில்

நிழல்ப்பூங்கா தேடவேண்டாம்.

மணிக்கணக்கில் அலங்காரம் செய்து

பிம்பங்களோடு பிடிவாதம் பிடித்து

கசங்காமல் நசுங்காமல்

நிழல் கூடக் கலையாமல்

நடக்கும்

அவஸ்த்தை இனி வேண்டாம்.

இந்த நேரம் பார்த்தா

இவன் இங்கே வரவேண்டுமென்று

பயத்தின் படபடப்பில்

இதயத்துடிப்பை இறக்குமதி செய்யவேண்டாம்.

தொடுதல்களால் பற்றிக்கொள்ளும்

தொட்டாச் சிணுங்கி இலைகளாய்

எத்தனை நாள் தான் காதலிப்பது ?

காக்கவைத்ததற்குக் காரணத்தை

எத்தனை நாள் தான்

பிரதி எடுப்பது.

புதிதாய் கொஞ்சம் பேசுவோமே…

உலக வலையில்

ஏதோ ஓட்டையாம்.

கணிப்பொறி என்னோடு

முரண்டு பிடிக்கிறது.

தொலைபேசி

நேற்றைக்கு மூர்ச்சையாகி விட்டது.

காதலில் பொய் சொல்வது விதியாகி விட்டது

அதை

புதிதாய் சொல்வதற்கு பழகிக் கொள்ளலாம்.

விழிகள் இரண்டும் மோதும் முன்

விரல்கள் விரலிடை தூங்கும் முன்..

தீண்டலின் தூண்டல் துவங்கும் முன்

இதயங்களிடையே

நம்பிக்கை பரிமாறுகிறதே விஞ்ஞானக் காதல் !!!

காதலுக்கு

சிணுங்கலின் வெப்பத்தை விட

நம்பிக்கையின் சப்தம் தானே

தேசிய கீதம் !!!

http://xavi.wordpress.com/2010/02/15/love-56/
கவிதை : இணையக் காதல்…: "

No comments: