Friday, June 18, 2010

ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய்

அன்புடன் புகாரி
 
ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம்போல் தனிமை இன்பம் கனியக்காய்


நான் பிறந்த ஊர் ஒரத்தநாடுங்க. ஒரத்தநாடு தஞ்சைமாவட்டத்தில் உள்ளது. தஞ்சாவூர் கடற்கரையோரம் வாழும் மக்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. தேனீர் அருந்தும்போது

வெறும் பால் மட்டும் சேர்க்கமாட்டார்கள். கூடவே ஏலக்காய் வேண்டும் அல்லது இஞ்சி வேண்டும் அப்படியே பல சுவைமிக பொருட்களைச் சேர்த்து அருமையாய்

கமகமக்கும் மசாலா தேநீர் ஆக்கிவிடுவார்கள். ஒருமுறை அதைப் பருகிப் பழகிவிட்டால் அவ்வளவுதான். நாக்கு மீண்டும் அதையே கேட்டு மல்லுக்கு நிற்கும்.

ஏலக்காய் பல்லுக்கு நல்லது என்பதால் அழகிய காதல் சொல்லுக்கும் நல்லது. ஏலக்காய் தொண்டைக்கு நல்லது என்பதால் காதலில் கனிந்துபாடும் பாட்டுக்கு நல்லது.

அதுமட்டும் இல்லீங்க இன்னொரு மிக முக்கியமான விசயம் ஏலக்காயிடம் இருக்குங்க. அது இந்தக் காதல் என்றால் முகம் சுழித்து காத தூரம் ஓடுபவர்களின் மலட்டுத் தனத்தை உடைத்து ரத்தம் சுத்திகரித்து ஆண்மையை வலிமையாக்கி.... இவ்ளோ போதுமா இன்னும் சொல்லவேண்டுமா?

தேநீருக்கே இந்த ஏலக்காய் தரும் வாசமும் வீரியமும் இத்தனை என்றால், வாழ்க்கைக்கு? அதான் தலைவி சொல்கிறாள், ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம்

வாழக்காய் என்று. ஒரு தரம் அந்த வாசனையைத் தேநீரில் பருகிவிட்டால் எப்படி விடமுடியாதோ அதே போல அவர்கள் உள்ளமும் ஒருவரை ஒருவர் விடாமல்

வாழவேண்டும் என்று கண்ணதாசன் முடிவுபண்ணிட்டுத்தான் இப்படி எழுதி இருப்பார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சரி அவர் அதோடு நிக்கலீங்க, ஒருககால் அதுகூட கைகொடுக்கலேன்னா இந்த ஜாதிக்காயைக் கொண்டுவருகிறார் வாழ்க்கைக்குள். தலைவியின் கவலையே அதுதானே? எபோதும் இன்பமாய் தங்கள் வாழ்க்கை குறைவின்றி அமையவேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் காதல் விருப்பம்.

ஜாதிக்காயும் வாசம் வீசும் சமாச்சாரம்தான். ஏன் கண்ணதாசன் இப்படி வாசனை வீசும் சமாச்சாரமாகவே கொண்டுவருகிறார் என்று நீங்கள் யோசிக்கலாம். எல்லாம்

காரணமாகத்தான். முதலிரவு என்றால் மல்லிகை மணம் வேண்டுமல்லவா? திருமணம் என்ற பேச்சு வந்தாலே பூக்கள்தான். அவை தரும் வாசனைதான். அப்படியே

கிளர்ச்சியை ஊட்டி, ஊட்டியையே வீட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.

ஜாதிக்காயை கொஞம் அதிகமாகப் பயன்படுத்திவிட்டால் என்னாகும் தெரியுமோ மயக்கம்தான் கிறக்கம்தான் போதைதான். அந்த ஜாதிக்காய் வைத்திருக்கும்

பெட்டகத்தைப்போல அதாவது பெட்டியைப்போல அதைத் திறந்தால் அந்த வாசனையில் அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் கிடைக்க அதனுள் இன்பம் கனியக்காய் என்று நிலாவை காயச்சொல்லிக் கேட்கிறாள். ஏன் இப்போதுமட்டும் காயச் சொல்கிறாள் என்றால் தலைவன் தலைவியின் மடிக்கு வந்துவிட்டான். இனி நிலா காய்வது அவசியமாகிவிடுகிறது. அமாவாசையோ தேய்பிறையோ கூடாது அவளுக்கு. அப்போதுதானே காதல் ஊட்டப்பட்டு அவர்கள் அற்புதமாய் வாழலாம் அல்லவா!

20. ஏலக்காய்
21. வாழக்காய்
22. ஜாதிக்காய்
23. கனியக்காய்

அப்படியே 23 காய்கள் இதுவரை வந்துவிட்டன. இத்தோடு நிற்கலீங்க. கண்ணதாசன் அவ்வளவு எளிதில் திருப்தி பட்டுவிடுவாரா என்ன? மேலும் அவர் தன் பாட்டுச் சாவடிக்குள் குவித்த காய்களை அடுத்த இடுகையில் காண்போம்.
,

No comments: