Tuesday, June 22, 2010

வசந்தங்கள் வர வழி விடு


வசந்தங்கள் வர வழி விடு











உனதிருண்ட வாழ்வில்
ஒரு பொழுதிலேனும்
ஒளிக் கீற்றொன்று
உட்பிரவேசிக்குமென்ற
நம்பிக்கையுடனாவது-கொஞ்சம்
நிம்மதியாய்
உறங்கக் கூடாதா தோழி?

விழிநீர் வற்றும் வரை
கதறியழுதுன்
காலத்தைப் போக்குவதாக
வாதம் புரிகிறாய்;
இருட்டு மட்டுமேயுன் எதிர்காலத்தைச்
சூழ்ந்துள்ளதென்று
ஏங்கித் தவிக்கிறாய்!

வசந்தம் - உன்
வாசலுக்கு மட்டும்
வரக்கூடாதென்கிறாய்.
வைகறை விடியலும் - உன்
வாழ்விலொருபோதும்
இல்லையென்கிறாய்!

உன்னிதயத்தைச் சிலுவையிலேற்றிச்
சித்திரவதை செய்யும்-அவன்
சம்பந்தப்பட்ட நினைவுகளை
மறக்க முடியாதென்கிறாய்.
மருந்து போடக்கூடாதென்கிறாய்!

உன்னால் உயிர் பிரிந்த-அவன்
உனக்கான நிம்மதியையும்
உருவிக்கொண்டு போனதாக
உள்ளம் குமுறுகிறாய்.
உச்சந்தலை மேல்
இடி வீழ்ந்துன் இதயம் நொருங்கியதாய்
எண்ணித்தவிக்கிறாய்!

உன் சுற்றமேயிப்போது
உனைச் சீறுகிறது.
வார்த்தை அம்புகளால்
வதைக்கிறது.-அவன்
காதலை ஏற்க மறுத்த
கர்வம் மிகுந்த அந் நாட்களில்
கணப் பொழுதிலேனும்
இப்படி நேருமென நீ
எண்ணிப் பார்த்ததுண்டா?

அவன் உறங்கும் கல்லறையில்
வீழ்ந்து கதறியழுதாவது
நீ செய்த பாவத்துக்கு
பரிகாரம் தேட முயற்சிக்கிறாய்!

உன்னிடம் அன்பை யாசித்து
அபயம் தேடிய அவனுக்குன்னால்
ஆறுதல்தான் கூற முடியவில்லை.
வார்த்தைகளால் காயப்படுத்தாமலாவது
இருந்திருக்கலாமல்லவா?

விதி உனக்கென்று
வரைந்த பாதையினூடு-உன்
வாழ்க்கை போகிறது.
நீ அதற்கென்
செய்வாய் தோழி?

நீ செய்த தவறுக்காக
காற்று – உனை மட்டும்
விட்டுவிட்டு வீசுகிறதா?
நிலா –தன்
பால் கிரணங்களை உன்மேல்
பொழிய மறுக்கின்றதா?
உனை நனைக்க
மழை தூற மாட்டேனென்கிறதா?

அவன் போய்விட்டான்
இனி உனக்கான தேசத்தில்
நிச்சயமாய் வாழ வரமாட்டானென்ற
நிதர்சனத்தை
நீயுணர்ந்த போதிலும்
நிம்மதியிழந்து தவிப்பதேன் தோழி?

கண்ணீரால் வரையப்பட்ட-உன்
காதல் சரித்திரம்
மறக்கவே முடியாததொன்றுதான்.
ஆனாலும் உனக்கான வாழ்க்கை
இன்னும் மிச்சமிருக்கிறதென்கிற
உண்மையை உணர்வாயா?

வசந்தத்தின் ஆணி வேர்கள்
உனை நோக்கி வருகிறது
இதய வாசலைத் திறந்துவிடு தோழி!
வாழ்க்கை உனை
வாழ அழைக்கிறது-ஒரு
முன் மாதிரியாய் வாழ்ந்துகாட்டு தோழி!

ஒரு பூ
உதிர்ந்து போனதென்று
செடிகள் என்றேனும்
சித்தம் கலங்குவதில்லை.
கணப்பொழுதுதான் தனக்கு
காட்சி தர முடிகிறதென்று
வானவில் ஒருபோதும்
வருத்தப் பட்டதில்லை!

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை

http://mrishanshareef.blogspot.com/2007/09/blog-post_13.html

No comments: