Sunday, June 13, 2010

வாழ்க்கை இனிமையானது

அன்புடன் புகாரி
 -----------------------------
வாழ்க்கை என்ற அரிய பயிர்
கருகியபின் ஓடிவரும்
அழகு நீரோடைதான்
அனுபவமாம்
விரக்தியோடு சொன்னார்கள்
கண்டுணர்ந்தவர்கள்

ஆயினும் என்னைப்
புதுப்பிக்கும் மனத்தோடு
பொறுமையாய்க் காத்திருந்தேன்

கடந்த கணங்களின்
அழுக்குச் சுவடுகளைக்
கழுவிக்கொண்டே நடந்தேன்

முடிந்த துயரத்தின்
இருட்டுப் பிடியிலிருந்து
உயிர்த்தெழும் உர உயிராய்ப்
பூத்தெழுந்தேன்

உச்ச இறுக்கத்தில்
சிக்கிக் கிடந்ததால்
அது வைரம்

தப்புகளும் தவறுகளும்
வாழ்வின் தடங்கள்

அந்த
ஓடுகளை உடைத்துக்கொண்டு
புதிய பிறப்புகள்
மீண்டும் மீண்டும் பூக்கும்

வாழ்க்கை எப்போதும்
வசந்த வரங்களைப்போல
வந்துகொண்டே இருக்கும்

உடல் ஒன்றுதான்
உயிர் பிரியுமுன் வரும்
ஜென்மங்களோ ஆயிரம்

வாசலைத்
திறந்துவைப்போம்
வாழ்க்கை இனிமையானது

No comments: