Friday, June 18, 2010

அகிம்சைக் கப்பல்கள்

விடுதலை அணிக்கப்பல்கள் (Freedom Flotilla) என்று பெயிரிடப்பட்டு, மே 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சைப்ரஸ் நாட்டுக் கடற்கரையிலிருந்து கஸ்ஸாவை நோக்கி, ஆறு கப்பல்களின் அணிவகுப்பு ஒன்று புறப்பட்டது. அதில் 10,000 டன் பொருட்கள் இருந்தன. வெடிமருந்து, குண்டு, ஆயுதம் போன்ற கெட்ட சமாச்சாரம் எதுவும் இல்லை. அனைத்தும், உணவு, மருந்து, கட்டடங்கள் சீரமைக்க சிமென்ட் இப்படியான சில அத்தியாவசியப் பொருட்கள். தவிர 700 பிரயாணிகள் இருந்தனர். அவர்களில் எவரும் தீவிரவாதிகளோ, கொள்ளைக்காரர்களோ, மாஃபியாக்களோ அல்லர். உலகறிந்த நல்லவர்கள். நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து நாட்டு மைரியட் கோர்ரிகன் மெக்கொயர் (Mairead Corrigan Maguire), ஹிட்லரின் யூதப் படுகொலைகளில் தப்பித்த யூதர், மற்றும் ஜெர்மனி, துருக்கி, ஜோர்டான் நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், டாக்டர்கள், நர்ஸுகள் இப்படி சமூகத்தில் நல்ல நிலையிலுள்ள நல்லுள்ளம் கொண்ட மக்கள்.

இந்த 10,000 டன் பொருட்களுடன் கிளம்பிய அவர்களுக்கு முக்கியமான ஜோலி ஒன்று இருந்தது. சக மனிதர்கள் சிலர் அத்தியாவசியப் பொருட்கள் ஏதுமின்றி வாழ்வா, சாவா என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டும். என்பதன்றி உள்நோக்கம் வேறு எதுவும் இல்லை. கப்பல்களின் பயணம் துவங்கியது.


மே 30, இரவு 10:30 மணி. விடுதலை அணிக்கப்பல்களை இஸ்ரேலிய இராணுவம் நெருங்கியது; நிற்கும்படி கட்டளையிட்டது. ஆனால் அவை அடிபணியாமல் தம் பயணத்தைத் தொடர்ந்தன.


மே 31, அதிகாலை 1:30 மணி. இஸ்ரேலியர்கள் அந்த ஆறு கப்பல்களையும் குறிப்பிட்ட தொலைவில் பின் தொடர ஆரம்பித்தனர்.


மே 31, அதிகாலை 4:30 மணி - கமாண்டோ படைகளுக்குத் தலைமையிடத்திலிருந்து சமிக்ஞை வந்து சேர்ந்தது. அவ்வளவுதான், விடுதலை அணியின் தலைமைக் கப்பல் மேவி மார்மரா (Mavi Marmara) விற்குள் ஹெலிகாப்டரில் இருந்து கமாண்டோக்கள் குதித்தனர். தடுத்து எதிர்கொண்டனர் அதிலிருந்த மக்கள். சலசலப்பும் களேபரமும் ஏற்பட்டன. யூதர்களால் ஒன்பது செயல்வீரர்கள் கொடூரமாய்ச் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தச் செயல்வீரர்கள் அனைவரும் துருக்கி நாட்டவர். கப்பல் தரையில் இரத்தம் தெறித்துப் பரவியது.


கஸ்ஸாவின் வெளியே, கடலில் 65 கி.மீ. தொலைவில் சர்வதேச நீர்ப் பரப்பில் இது நிகழ, அதிகாலை சேவல் கூவுவதற்கு முன்பாகவே, இந்த அயோக்கியத்தனமான கொலைச் செயலை எதிர்த்து உலக நாடுகள் பல கோபத்துடன் கூவ ஆரம்பித்தன. கடும் கண்டன அலை எழுந்து பரவியது.


அதையெல்லாம் பெரிதாய் ஏதும் பொருட்படுத்தாத இஸ்ரேல், "கப்பலில் இருந்த அந்த ஒழுக்கமற்ற கும்பல் எங்கள் படை வீரர்களை உயிர்க்கொல்லி ஆயுதமான மட்டைகளாலும் கம்புகளாலும் தாக்க ஆரம்பித்தனர். எங்கள் அப்பாவி வீரர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள லேசாய்ச் துப்பாக்கியால் தடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதில் ஒன்பது பேர் செத்துப் போனால் நாங்கள் என்ன செய்வது?" என்று சொல்லிவிட்டு ஹீப்ருவில் சிரித்துக் கொண்டது.


என்ன இது அக்கிரமமாய் இருக்கிறதே என்று தோன்றுகிறதா? அல்லது இது ஒன்றுமே புரியவில்லையா? ஒன்றும் பிரச்சனையில்லை. இஸ்ரேல் அப்படித்தான். அவர்களது நியாயம் அப்படித் தான்.
* * * * *
ஒரு தகவலுக்காக மற்றுமொரு அக்கிரமத்தை இங்குத் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

அமெரிக்காவின் சியாட்டில் நகரின் அருகே உள்ள மற்றொரு நகரம் ஒலிம்பியா. இந்த நகரைச் சேர்ந்த 24 வயது மாணவி ஒருவர் தனது படிப்பிற்கு ஒரு வருடம் விடுமுறை எடுத்துக் கொண்டு பயணம் சென்றார். உல்லாசப் பயணமல்ல, ஃபலஸ்தீனில் உள்ள கஸ்ஸாவிற்கு. அது 2003ஆம் ஆண்டு. அப்பொழுது கஸ்ஸாவில் உள்ள வீடுகளை யூத ராணுவம் புல்டோசர்களைக் கொண்டு சகட்டு மேனிக்கு இடித்துத் தள்ளிக் கொண்டிருந்தது. சர்வதேச ஒருமைப்பாட்டு இயக்கத்தின் (International Solidarity Movement - ISM) சார்பில் ஃபலஸ்தீனர்களுக்கு உதவுவதற்காகவும் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராகவும் உலகம் முழுவதிலிருந்தும் பல தன்னார்வலர்கள் வந்திருந்தார்கள். அதற்குத்தான் அந்த மாணவியும் வந்து சேர்ந்தார்.


மார்ச் மாதம் 16ஆம் தேதியன்று ஒரு ஃபலஸ்தீனியரின் வீட்டை புல்டோசர் ஒன்று இடித்துத் தள்ள புறப்பட்டு வந்தது. இந்த மாணவியும் மற்றும் சிலரும் அதைத் தடுத்து நிறுத்தி மறியல் செய்தனர். கொஞ்சங்கூட ஈவிரக்கமில்லாமல், அமைதி இயக்கத்தைச் சேர்ந்த செயல்வீரர்கள் அவர்கள் என்பதையும் கருதாமல், அந்த மாணவியை புல்டோசரால் நசுக்கிக் கொன்றது யூத ராணுவம். "அடடா, இது ஒரு விபத்து. அந்த மாணவி நின்றது டிரைவர் கண்ணுக்குத் தெரியவேயில்லை" என்று ஒப்புக்கு வாதாடியது இஸ்ரேல். ஒன்றல்ல, இரண்டல்ல அதைக் கண்ணால் பார்த்த அனைத்து சாட்சிகளும் அது விபத்தல்ல, அப்பட்டமான கொலை என்று அடித்துச் சொல்லினர். "ஸோ வாட்?" என்றது இஸ்ரேல்.


உலகின் எந்த மூலையிலும் தன் நாட்டுக் குடிமகனுக்கு ஒரு பிரச்சனை என்றால் வரிந்து கட்டிக் கொண்டு உடனே ஓடி வருமே அமெரிக்கா! இந்தக் கொலை விஷயத்தில் மட்டும் இஸ்ரேலிடம் ஒரு சம்பிரதாயத்திற்குக்கூட விசாரணை நடத்தவில்லை. அவர்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டது!
* * * * *
கஸ்ஸா எனும் ஊர் அல்லது பிராந்தியம், ஃபலஸ்தீன் நாட்டை யூதர்கள் ஆக்கிரமித்து மேய்ந்தபின் தென் மேற்குப் பகுதியில் ஒதுங்கிய ஒரு மிச்ச சொச்சம். இங்குச் சுமார் 15 இலட்சம் மக்கள் வாழ முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பகுதி மேற்குக் கரை (West Bank). இதை ஃபதாஹ் அமைப்பு நிர்வகித்து வர, கஸ்ஸாவை ஹமாஸ் நிர்வகித்து வருகிறது. ஆண்டாண்டு காலமாய், பிறந்து வளர்ந்து வந்த மக்கள் தங்களது நிலம், உடைமை அனைத்தும் பறிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாய் ஆகிவிட்டிருக்க, மேற்குலகிலிருந்து வெளியேறி வந்த யூதர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் அசுரனாய் தங்களின் அரசாங்கத்தை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஃபலஸ்தீன் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடி வரும் ஹமாஸிற்கும், இஸ்ரேலுக்கும் என்றுமே ஒவ்வா உறவு. ஏனெனில் இஸ்ரேலின் நியாயத்திற்கு சொரணை மரத்துப்போன மனிதனாலும்கூட இணங்கிப் போக முடியாது. அப்பேற்பட்ட யோக்கியதை யூதர்களுடையது. ஹமாஸ் போராளிகள் கஸ்ஸா மக்களின் ஏகோபித்த அபிமானத்திற்கு உள்ளானவர்கள். அந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கஸ்ஸாவில் அரசு அமைத்தவர்கள். ஆனால் தாங்கள் ஆட்டுவிக்கும் பொம்மைகள்போல் இல்லை அவர்கள் என்பது தெரிந்ததும் என்ன செய்வார்கள் சட்டாம் பிள்ளைகள்? ஹமாஸ் என்பது தீவிரவாத முத்திரை குத்தப்பட்ட இயக்கமாகிவிட்டது. விடுதலைப் போருக்கு அயோக்கியர்கள் இட்ட நாமகரணம் அது.

ஓயாத, ஒழியாத தொல்லை தரும் இந்த கஸ்ஸாவையும் ஹமாஸையும் நசுக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் இஸ்ரேல் ஓர் உபாயம் செய்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக கஸ்ஸா மக்களின்மேல் அக்கிரமமான முறையில் பொருளாதாரத் தடை நிகழ்த்தி வருகிறது. சுருக்கமாய்ச் சொல்வதென்றால் உங்கள் வீட்டிற்குள் சிலர் புகுந்து ஆக்கிரமித்துக் கொண்டு, ஓர் அறையில் உங்களையும் குடும்பத்தினரையும் பூட்டி வைத்து விட்டு, துண்டு ரொட்டியைத் தூக்கிப் போட்டு, "இதைச் சாப்பிட்டு பிழைத்துக் கொள்" என்றால் எப்படி இருக்கும்? மிகையற்ற உதாரணம் இது.

இந்தப் பொருளாதாரத் தடை "உலகத்தின் மிகப் பெரும் மனித உரிமை மீறல்". தவிர, சர்வதேச சட்டத்தின்படியும் மிக முறைகேடானது. யார் தட்டிக் கேட்பது? கேட்க வேண்டியவர்களுக்குதான் எப்பொழுதுமே ஒரு பக்கக் காது மந்தமாயிற்றே!

American Near East Relief Association (ANERA) என்பது இஸ்ரேல், ஃபலஸ்தீன் என எந்தச் சார்பும் அல்லாத அமைப்பு. அரசியல் ஆதாயம் எதுவும் இன்றி வெறும் மனிதாபிமான அடிப்படையில் பணி புரிந்து வருகிறார்கள். ஏதோ போனால் போகட்டும் என்று கண் துடைப்பாக இஸ்ரேல் (மற்றும் அமெரிக்கா) அனுமதிக்கும் அளவிற்கு கஸ்ஸா மக்களுக்கு அவர்களால் நிவாரணம்  எடுத்துச் செல்ல முடிகிறது.

அவர்கள் இன்றைய கஸ்ஸா நிலவரம் பற்றித் தகவல் தொகுத்து வைத்திருக்கிறார்கள். மிகவும் சங்கடமான விபரங்கள் அவை. அதில் கொஞ்சம் கீழே:
  • கஸ்ஸாவில் சுமார் 15 இலட்சம் மக்கள் கடும் துன்பத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பது அதிகாரபூர்வத் தகவல்களின் கணிப்பு. இவர்களில் பாதிக்கும் மேல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்-சிறுமியர், குழந்தைகள்.
  • 10இல் 8 பேர் வெளியிலிருந்து வரும் உதவியைக் கொண்டே உயிர் பிழைக்கும் நிலையில் உள்ளனர்.
  • உலக உணவு திட்டம் எனும் அமைப்பின் கூற்றுப்படி குறைந்த பட்சம் நாளொன்றிற்கு 400 லாரிகள் அளவிற்காவது உணவுப் பொருட்கள் தேவைபடுகின்றன. ஆனால் ஒரு வாரத்துக்கே தோராயமாய் 171 லாரிகள்தான் கஸ்ஸாவிற்குள் நுழைகின்றன.
  • தானமாய் வந்து இஸ்ரேலிய துறைமுகத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாய்க் கிடந்து மக்கிய உடைகள்தாம் கஸ்ஸா மக்களை வந்தடைகின்றன - உபயோகப்படுத்த இயலாத வகையில்.
  • தண்ணீர்? உலக சுகாதார அமைப்பின் தர நிர்ணயபடி 95 சதவிகிதம், உபயோகத்திற்கே லாயக்கற்றது.
  • சிறு குழந்தைகள் சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தொழிற்சாலை உபகரணங்கள் அனுமதிக்கப்படாததால் மாசு நீக்கப்படாத 7 கோடி 50 இலட்சம் லிட்டர் கழிவுகள் கடலில் கலந்து வருகின்றன.
இத்தகைய நிலைமையில்தான் வாழ்ந்தும் போராடியும் வருகிறார்கள் கஸ்ஸா மக்கள். விஷயம் இவ்வாறிருக்க இவர்களால் தங்கள் நாட்டிற்கு பிரச்சனை அதிகமாகியுள்ளது என்று எகிப்து அரசாங்கம் தன் பங்கிற்குத் தனது எல்லையை இவர்களுக்கு அடைத்து விட்டது. எல்லை தாண்டி நாட்டிற்குள் ஊடுருவி விடுகிறார்களாம். உயிர் பிழைக்க என்னதான் செய்வார்கள் அவர்கள்? அயராத கஸ்ஸா மக்கள் சுரங்கம் தோண்டினார்கள். அத்தியாவசியப் பொருட்களை அந்தச் சுரங்கங்களின் வாயிலாய் எகிப்திலிருந்து கஸ்ஸாவிற்குள் கொண்டு வர ஆரம்பித்தார்கள். அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எகிப்திற்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்து சேர்ந்திருக்க வேண்டும். உடனே எகிப்து அதிபர், கோடிக் கணக்கில் செலவழித்து திட்டம் ஒன்று தீட்டினார். காஸா மக்களுக்கு உதவி வழங்கும் திட்டமெல்லாம் இல்லை. பூமிக்கு அடியிலுள்ள அந்த சுரங்கங்களை எஃகுத் திரை கொண்டு மூட! எப்படியும் கஸ்ஸா மக்களை ஒழித்துக் கட்டியே ஆகவேண்டும் என்பதுபோல்தான் அனைத்தும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில்தான் கஸ்ஸாவை விடுவி (Free Gaza) எனும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. மொழி, மதம் கடந்து சமூகத்தின் பல்வேறு துறையைச் சார்ந்த செயல் வீரர்களால் (activist) தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு. அவர்களின் நோக்கம், மிகவும் தெளிவானது, எளிதானது. அக்கிரமமான இந்தத் தடைக்கு சாத்வீக முறையில் சவால் விடுக்க வேண்டும். கஸ்ஸா மக்களுக்கு எப்பாடுபட்டாவது உதவிப் பொருட்கள் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும், அவ்வளவே.


2008ஆம் ஆண்டு இறுதியிலேயே இவர்கள் அதை ஆரம்பித்து விட்டார்கள். இரு சிறிய மீன்பிடி படகுகளில் சில நிவாரணப் பொருட்கள் எடுத்துச் சென்று கஸ்ஸா துறையில் இறங்கினார்கள். இவர்களின் நோக்கத்திற்கு ஆதரவு பெருகி உலகளவிலும் பலர் இணைய ஆரம்பித்தார்கள். மலேஷியாவின் முன்னாள் பிரதம் டாக்டர் மஹாதீர் முஹம்மது இதற்கென நிதி திரட்டி உதவியுள்ளார்.


அன்றிலிருந்து அவ்வப்போது இப்படி இந்த அமைப்பின் மூலம் கப்பல் சென்று கொண்டிருக்க, அவ்வப்போது அதையும் இஸ்ரேல் தடுத்தே வருகிறது. அதன் உச்சக்கட்டம்தான் விபரீதத்தில் முடிந்த மேற்சொன்ன நிகழ்வு.


இந்தக் கப்பல் அணிவகுப்பில் பங்கெடுத்துக் கொண்ட நாடுகள், பிரிட்டன், அயர்லாந்து, அல்ஜீரியா, குவைத், கிரீஸ் மற்றும் துருக்கி. இன்ஸானி யார்டிம் வக்ஃபி (Insani Yardim Vakfi) எனும் மனித உதவி அமைப்பிற்குச் சொந்தமானவை அந்தக் கப்பல்கள். அந்த அமைப்பு துருக்கி நாட்டு அரசாங்கம் சாரா நிறுவனம் (NGO). இதுதான் அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தது. இந்தக் கப்பல்கள் அனைத்தும் அயர்லாந்து, கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து கிளம்பி சைப்ரஸ் வந்து சேர்ந்து அங்கிருந்து அணியாய்க் கிளம்பின. Free Gaza அமைப்பு ஏற்பாடு செய்து, அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகள் அளித்துள்ள நன்கொடைகள் மற்றும் தன்னார்வச் செயல்வீரர்களின் துணையுடன் 10,000 டன் உதவிப் பொருட்களைத் திரட்டியிருந்தது. மலேஷிய நாடு மிக அதிக நன்கொடை அளித்திருந்தது. அதில் மருந்து, கல்வி, மற்றும் கட்டட புனர்நிர்மாணப் பொருட்கள் ஆகியன அடங்கும்.


கப்பல்கள் கிளம்பும்முன் துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் இஸ்ரேலிடம் முறையான கோரிக்கை வைத்தார். ஆனால், "இஸ்ரேலுக்கு எதிரான வன்முறைப் பிரச்சாரம் இது. எங்கள் நாட்டு இறைமைக்கு பங்கம் விளைவிக்க விடமாட்டோம்" என்று இஸ்ரேல் மறுத்து விட்டது. அந்தக் கப்பல்களைத் தங்கள் நாட்டு துறைமுகம் அஷ்டோடுக்கு (Ashdod) இழுத்துச் செல்வோம் என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு விட்டது.


கப்பலில் இருந்தவையோ நிவாரணப் பொருட்கள். உடன் சென்றவர்கள் சமூக ஆர்வலர்கள். கடலில் நடந்த அஹிம்சை யாத்திரை அது. அதற்குத்தான் இஸ்ரேல் துப்பாக்கியால் முடிவுரை எழுதியது. அந்த அரசாங்கத்தையும் அந்த வீரர்களையும் தீவிரவாதிகள் என்று சொல்வதில் என்ன தயக்கம் வேண்டியிருக்கிறது?


துருக்கி இதற்குமுன்வரை இஸ்ரேலுக்குத் தோழன்தான். ஆனால் இந்த நிகழ்வு அதற்குப் பெரும் கோபாவேசத்தைத் தோற்றுவித்து விட்டது. இறந்தவர்கள் அனைவரும் துருக்கியர்கள். அதில ஒருவர் துருக்கியைச் சேர்ந்த அமெரிக்கர். தனக்கு வந்தால்தானே தெரியும் தலைவலியும் திருகு வலியும்? இஸ்ரேலுக்கான தன்னுடைய வெளியுறவுத் தூதரை திரும்பப் பெற்றுக் கொள்வதாய்த் அறிவித்தது துருக்கி. தவிர, "தனது இந்த நடத்தையின் பின்விளைவை இஸ்ரேல் சந்திக்க வேண்டியிருக்கும்" என்று துருக்கியின் வெளிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது சற்று எதிர்பாராததுதான். துருக்கியிடமிருந்து யூதர்களே எதிர்பாராத சற்றுக் கடினமான சொற்கள் அவை. அந்த அளவிற்குத் துருக்கிக்கு வீரியத்தை அளித்து விட்டது அந்த நிகழ்வு. இஸ்ரேலியப் பொருட்களைப் புறக்கணிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இது தவிர ஐரோப்பாவில் கிரீஸ், டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகளும் தங்களது நாட்டிலுள்ள இஸ்ரேலிய வெளியுறவுத் தூதரை அழைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் அமெரிக்கா மட்டும், "உயிரிழப்பிற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த நிகழ்வைச் சுற்றியுள்ள பின்னணியை அறிந்து கொள்வதில் முயற்சி எடுத்துள்ளோம்" என்று வாழைப்பழத்தை விளக்கெண்ணெய்யில் தோய்த்து அறிக்கை வெளியிட்டுள்ளது.


துணை ஜனாதிபதி ஜோ பிடேன் (Joe Biden), இஸ்ரேல் சர்வதேச நாடுகளை இணைத்து ஒரு புலன் விசாரண செய்யலாம் என்று இந்த நிகழ்வுக்கு ஆலோசனை தெரிவித்தார். ஐ.நா.வின் விசாரணைக்கு எல்லாம் இடமே இல்லை என்று அடித்துச் சொல்லிவிட்ட இஸ்ரேல் இதற்கு மட்டும் ஒத்துக் கொண்டது. ஏனெனில் விசாரணை செய்யப்போவது இஸ்ரேலிய அதிகாரிகள், மற்ற நாடுகள் பார்வையாளர்கள், அவ்வளவே!


ஏன் ஐ.நா. விசாரணை வேண்டாமாம்? டிசம்பர் 2008 கஸ்ஸாவில் இஸ்ரேல் புரிந்த அட்டூழியத்தை விசாரணை செய்த ஐ.நா., இஸ்ரேலியத் துருப்புகள் நிச்சயமாய்ப் போர்க் குற்றங்கள் புரிந்துள்ளன என்று பலமான ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவித்துவிட்டிருந்தது. அதனால் துளியூண்டு யோக்கியத்தை மிச்சம் வைத்திருக்கும் ஐ.நா. விசாரணை சரிவராது என்ற காரணம்தான்.


எத்தனையோ கொடுங்கோலான அட்டூழியங்களை இஸ்ரேல் நிகழ்த்தியுள்ளது. இது அந்த வரலாற்றில் இணையும் மற்றொரு அத்தியாயம். என்ன, இந்த ஒரு நிகழ்வு அனைத்து உலக நாடுகளுக்கும் அரக்க இஸ்ரேலின் தோற்றத்தை சற்று அதிகம் உணர வழிவகுத்துள்ளது. அவ்வளவுதான். மற்றபடி அமெரிக்காவின் கண்கள் வழக்கம்போல் மூடியே உள்ளன.


இந்த நிகழ்வு இஸ்ரேல்-பாலஸ்தீன் அமைதிப் பேச்சுவார்த்தையைப் புதிப்பிக்க ஒரு வாய்ப்பளிக்கும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இந்தக் கூத்தை என்னவென்று சொல்வது?


இவ்வளவு களேபரத்தைத் தொடர்ந்து அசரவில்லை Free Gaza. அடுத்து உடனே மற்றொரு கப்பலில் நிவாரணப் பொருட்களை ஏற்றி அதேபோல் கஸ்ஸாவிற்கு அனுப்பி வைத்தது. இம்முறை அயர்லாந்து அந்தக் கப்பலை அனுப்பியது. 1000 டன் நிவாரணப் பொருட்களுடனும், 9 மாலுமிகள் மற்றும் ஐந்து நாடுகளைச் சேர்ந்த 11 பயணிகளுடனும் கப்பல் பயணித்தது. அதில் பெரும்பாலானவர்கள் அயர்லாந்து, மற்றும் மலேஷியா நாட்டுச் செயல் வீரர்கள். பெஞ்சமின் நெடன்யாஹு (Benjamin Netanyahu) தன்னுடைய படைகளுக்குக் கூறினார். "அதையெல்லாம் அனுமதிக்காதீர்கள். ஆனால் பார்த்து கவனமாகவும் மரியாதையாகவும் அவர்களைத் தடுத்து அழைத்து வாருங்கள்" இம்முறை குதர்க்கம் புரியாமல் ஆனால் வலுக்கட்டாயமாக, கஸ்ஸாவை நோக்கி முன்னேறிச் சென்ற அந்தக் கப்பலை, தனது துறைமுகத்திற்கு இழுத்து வந்து சேர்த்தது யூத இராணுவம்.
இந்தக் கப்பலுக்கு ரேச்சல் கோரி (MV Rachel Corrie) என்று பெயரிட்டிருந்தார்கள். ரேச்சல் கோரி வேறு யாருமல்ல, 2003-ஆம் ஆண்டு இஸ்ரேலிய புல்டோசரால் நசுக்கப்பட்ட அமெரிக்க மாணவி.

எல்லாஞ் சரி. அரபு நாடுகள் என்ன செய்கின்றன? அவர்கள் இப்பொழுது தான் கார் விட ஆரம்பித்துள்ளார்கள்.
- நூருத்தீன்



http://www.satyamargam.com/1489அகிம்சைக் கப்பல்கள்

No comments: