Friday, June 18, 2010

மனம் மகிழுங்கள்-2

“ஸார்... சென்ற வாரம் நீங்கள் எழுதியதை என் மனைவியிடம் படித்துக் காண்பித்தேன். மனம் மகிழ்ந்தார். அடுத்த நாள், ஆழ்வார் பேட்டையிலிருந்து திருவான்மியூர் செல்லக் கிளம்பிக் கொண்டிருந்தேன் சார். 'டைலர் போன் செய்தான். பொண்ணு பாவாடையெல்லாம் ரெடியாம். வாங்கிட்டு வந்துடுங்க,' என்கிறார் மனைவி. டைலர் கடை திருவல்லிக்கேணியில்! தாங்கள் புதிய உத்திகளுக்கு வழிவகுக்கிறீர்கள், இருந்த நிம்மதியும் போச்சு“ - என்பதாக ஆழ்வார்பேட்டை ராஜ்குமார் கடிதமெழுதினால் அதற்கு என்ன செய்வது?

“இடுக்கண் வருங்கால் நகுக!” வேறென்ன சொல்வது?

இவ்வாரம் மேலும் சில மன மாதிரிகளைப் பார்ப்போமா?

- நூருத்தீன்

விபத்து வடிவமைப்பு

என்னுடைய மாமா ஒருவர் இருந்தார். நம் ஹீரோவும் ஹீரோயினும் “ஜஸ்ட் ஒன் ஸாங்” டூயட் பாட மலேஷியாவிற்குப் பறக்க ஆரம்பிப்பதற்குப் பற்பல வருடங்கள் முன்பேயே தமது சிறு வயதில் அங்கு பிழைக்கச் சென்றவர். மிகவும் அன்பானவர், பாசமானவர். சுறுசுறுப்பானவரும் கூட. ஒவ்வொரு முறை விடுமுறையில் அவர் இந்தியா வரும் போதும், எங்காவது எப்படியாவது தட்டுக் கெட்டு விழுந்து காலில் அடிபட்டு சுளுக்கிக் கொள்வார், கட்டுப் போட்டுக் கொள்வார். ஒருமுறை இடறி விழுந்தால் மறுமுறை, சைக்கிளில் இருந்து விழுந்து, இப்படி ஏதாவது ஒன்று நடந்து விடும். எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.

அது ஏன் என்றால் சிலருக்கு இப்படி ஒரு மனோ வடிவமைப்பு இருக்கிறதாம். ஏணியிலிருந்து விழுவது, சைக்கிளில் இருந்து விழுவது, மரங்களில் இருந்து விழுவது, ட்டூ வீலரை, கீரை விற்றுக் கொண்டு செல்லும் பாட்டி மேல் மெனக்கெட்டு சென்று இடிப்பது, இப்படி ஏதாவது.

வங்கி அதிகாரி ஒருவர் தம் வாடிககையாளரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கூறினார்:- “நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் வருடத்திற்கு ஒன்று என ஐந்து வண்டிகள் வாங்கிவிட்டேன். ஒவ்வொரு முறையும் யாராவது என்னைப் பின்னாடியிலிருந்து இடிப்பதால் வண்டி முழு டேமேஜ் ஆகி விடுகிறது.”

”இப்பொழுது அப்படியில்லையே,” என்றார் கஸ்டமர்.

“இல்லை, இன்னம் கொஞ்சம் நாள் வாழ்ந்து பார்க்க ஆசை. அதனால் வண்டி வாங்கறதை நிறுத்திட்டேன். இப்பல்லாம் பஸ் தான்.”

வெளியில் வந்த பின் கஸ்டமருக்கு "எதற்கும் அந்த மேனேஜரிடம் பஸ் நம்பர் கேட்டிருக்கலாமோ?" என்ற எண்ணம் ஓடியது.

நோய் வடிவமைப்பு

சிலருக்குத் தேர்வு நேரத்தில் சொல்லி வைத்தாற் போல் காய்ச்சல் வந்து விடும், கவனித்திருக்கிறீர்களா? தேர்வு ஜுரம்! பயத்திலோ பதட்டத்திலோ தொடங்கிய அது, பின்னர் வருடா வருடம் கரெக்ட் டைமிற்கு ஆஜராகிவிடும். வேறு சிலருக்கு ஏதாவது ஒரு முக்கிய வாய்ப்பு வந்து சேரும் போது தான், மூக்கில் ஜல்பு என்று ஏதாவது வந்து காரியத்தைக் கெடுக்கும். ஒவ்வொரு முறையும் அலுவலக வேலை நிமித்தம் பறக்கும் உங்கள் சக அலுவலருக்குப் பதிலாய், அபூர்வமாய் மும்பைக்கு விமானத்தில் செல்ல வாய்ப்பு வந்து வாய்க்கும் போது, திடீரென்று ஒரு காய்ச்சல் வரும் பாருங்கள், காய்ச்சல் தலைவலியை விட, எரிச்சலில் தான் மண்டை வெடிக்கும்.

சிலருக்கு ஒவ்வொரு திங்கள் கிழமை காலையும் அலுவலுக்கு கிளம்பும் போது, “லீவு போட்டுவிடேன்“ என்பது போல் உடம்பு படுத்தும். கிளம்பிச் சென்று மாலை வீடும் திரும்பும் போது, அதெல்லாம் ”போயே போச்”.

ஒழுங்கற்ற வடிவமைப்பு

வெளியூரில் பணிபுரியும் போது கண்டிருக்கிறேன். நண்பர்கள் சிலர் ஒன்றாகச் சேர்ந்து அறையெடுத்துத தங்கியிருந்தார்கள். காலையில் எழுந்து குளித்துவிட்டு அலுவலகத்துக்கும் போகும் அவசரத்தில் தான், இடுப்பில் டவலும், ஒரு கையில் பேண்டும் வைத்துக் கொண்டு, ட்ரையரிலிருந்து கூடைக்கு இடம் மாறிக் குவிந்திருக்கும் துணிக் குவியலில் அண்டர் வேர் தேடிக் கொண்டிருப்பார்கள். ”இதையெல்லாம் நேற்றே மடித்து வைத்திருக்கலாமே,” என்றால், ”ப்ச், நேற்று ஒரே பிஸி” என்று சொல்லிவிட்டு அடுத்து சீப்பு தேடிக் கொண்டிருப்பார். குழந்தைகளற்ற அந்த அறையில் அந்தச் சீப்பு எப்படி சோபா இடுக்கில் சென்று உட்கார்ந்து கொண்டது என்பது ஓர் ஆச்சர்யம்.

சிலருக்கு இயல்பாகவே மேசை, ஃபைல்கள், தலை, கார், என எல்லாமே என்னவோ திருட வந்தவன் கலைத்து போட்டு விட்டு ஓடியது போல் இருக்க வேண்டும். இரக்கப்பட்டு அக்கறையாக உதவி, அனைத்தையும் ஒழுங்கு படுத்திக் கொடுத்து விட்டுச் செல்கிறீர்கள் என்று வையுங்கள், குளித்து விட்டு வருவதற்குள், சிலவற்றை நிச்சயம் கலைத்து உதவ அந்த உங்கள் நண்பர் கியாரண்டி.

மனதை மகிழ வைப்பதற்கு முன், மனதின் பலவித வடிவமைப்பை அறிந்து கொள்வதற்காகவே பல மாதிரிகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவரும் இந்த ஏதாவது ஒன்றில், அல்லது ஒன்றிற்கு மேல் பொருந்திப் போகலாம். இந்த நெகட்டிவ் வடிவமைப்புகளைப் புரிந்து கொண்டால், அடுத்தது எளிது. அதனால் மேலும் சில.

நொடிந்த வாழ்க்கை வடிவமைப்பு

உண்மையிலேயே வாழ்க்கையில் நொடித்துப் போனவர்கள் கதை வேறு. தொழில் நொடித்தோ, அசம்பாவிதங்கள் நிகழ்ந்தோ ஏதேனும் ஒன்று அவர்களைத் தாக்கியிருக்கலாம். இது அது இல்லை. சம்பாதிப்பதை எல்லாம் தண்ணீராய் இறைத்து, காலி பர்ஸாய் இருப்பவர்கள். வரவிற்கு மீறிய செலவாளிகள். இத்தகையவர்களுக்கு, யதேச்சையாய் சற்று கூடுதலாய் பணம் கிடைத்தாலும், செலவழித்துக் காலியாக்கினால் தான் தூக்கம் வரும். என்ன தான் நடக்கிறது, பணம் எப்படித் தான் காலியாகிறது என்பது அவர்களுக்கே தெரியாது. சம்பளம் இரட்டிப்பானால் கூடச் செலவுக்குப் பட்டியல் தயார். லாட்டரியில் கோடி பெற்றவர்களில் லட்சாதிபதிகளாய் நிலைத்திருப்பவர்கள் எத்தனை பேர்?

மாற்றல் வடிவமைப்பு

ஏதாவது வேலை கிடைத்தால் போதும், என்று நன்றியுள்ள நாலு கால் பிராணியைப் போல் பலர் அலைந்து கொண்டிருக்க, சிலருக்கு ஒரு வேலையில் ஒட்டி உட்கார முடியாது. அதுவும் ஐ.டி. உத்தியோகமும், அதன் கவர்ச்சிகர இலக்க ஊதியமும், பலர் ஒரு வருடம் ஒரு கம்பெனியில் நீடிப்பதே அதிகம் என்றாகி விட்டது. அவர்களுக்கு வேலை மாறிக் கொண்டே இருக்க வேண்டும். பெரிய பிரச்சனை என்று எதுவுமே இருக்காது. மாற வேண்டும். ஓரிடத்தில் நிலையாய் இருந்தால் இருப்புக் கொள்ளாது. “அந்த மானேஜர்! அவன் போடுற சட்டைக் கலர்! சகிக்கலே, மாறிட்டேன்!” இப்படி ஏதாவது அற்ப காரணம்.

வேறு சிலருக்கு வீடு. ஒரு மாதப் பிரயாணம் என்று கிளம்பினாலே மூட்டை, முடிச்சைக் கட்டிக் கிளம்ப ஒரு பாடு ஆகிவிடும் நிலையில், இவர்களோ சர்வ சாதாரணமாய் வீடு மாறிக் கொண்டே இருப்பார்கள். சிறிய அசௌகரியம் கூட தாங்காது. அது எப்படி தான் முடிகிறதோ!

ஆச்சா? உபரியாகச் சில உண்டு.

சே... இந்த உலகத்தில் எவனுமே சரியில்லே...

இந்த வாழ்க்கையே மோசம். எனக்கென்று ஏன் தான் இப்படி நடக்கிறதோ. இதை விட செத்துப் போகலாம்னு தோணுது...

உலகத்திலே அத்தனை பேருக்கும் நான் இளிச்சவாயன்னு எப்படித் தான் தெரியுதோ...

இவர்கள் போக இன்னும் சிலர் உள்ளனர்...

ஒவ்வொரு முறையும் சரியாக ரயிலை, பஸஸை தவற விடுபவர்கள்...

உறவினர் ஒருவர் இருந்தார். ப்ளைட் பிடிக்கக் கிளம்பும் போது அவருடைய தாயார் அறிவுறுத்தி அனுப்பினார்கள், “நண்பர்களிடம் பேசிக்கிட்டே ப்ஃளைட்டை மிஸ் பண்ணிடாதே”. பரிகாசமில்லை, விடை பெற நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தவர் உண்மையிலேயே அன்று ப்ளைட்டை மிஸ் செய்தார்.

போதும் - நிறைய எதிர்மாறான வடிவமைப்புகளைப் பார்த்து விட்டோம். அடுத்து ஆக்கபூர்வ வடிவமைப்புகளைப் பார்ப்போம்.

ன மகிழ்வுகள் தொடரும்.

No comments: