Wednesday, June 9, 2010

மனிதம் மிச்சமிருக்கிறது : ஹமீதே சாட்சி!

அவருக்கு சர்வநிச்சயமாக தெரியாது. இறந்தவர்கள் எந்த சாதி, மொழி, என்ன மதம், நம் மாநிலமா வெளிமாநிலமா? எதுவுமே தெரியாது. ஆனாலும் இரண்டு நாட்களாக இரவு பகல் பாராமல் வென்லாக் அரசு மருத்துவமனையின் பிணவறை அருகில் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்துக் கொண்டிருந்தார். மங்களூர் விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் அங்குதான் ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்தது.
தேசமே சோகத்தில் மூழ்கிக் கிடக்க, இறந்தவர்களின் உடல்களை உரியவர்களிடம் ஒப்படைக்கவும், அவர்களுக்கு ஆறுதல் கூறவும் செய்தியைக் கேள்விப்பட்டதுமே, தன்னார்வலராக ஓடிவந்த அவரின் பெயர் அப்துல் ஹமீத் அலி. வயது 60.
விபத்தில் இறந்தவர்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மொழி புரியாமல், என்ன செய்வதென்று அறியாமல் பிணவறை வாசலில் விக்கித்து நின்ற உறவினர்களை ஆசுவாசப்படுத்தி, குடிக்க நீர் கொடுத்து, தகவல்களை அவர்களிடம் பெற்று அதிகாரிகளுக்கு உதவினார் ஹமீத். மரணமடைந்தவர்களின் உடல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கு ஹமீதின் இந்த சேவை மிக்க உதவியாக இருந்திருக்கிறது.
ஊடகவியலாளர்கள் அவரை படம் எடுக்க முனைந்தபோது, “நிறைய வேலை இருக்குப்பாஎன்று அன்போடு மறுத்தார். மங்களூருக்கு அருகில் மஞ்சேஸ்வர் நகரைச் சேர்ந்த ஹமீதுக்கு ஆறு குழந்தைகள். “எல்லோருக்கும் ஆண்டவன் புண்ணியத்தில் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்டேன். சும்மாதானே இருக்கிறேன். ஒரு அவசர ஆபத்துக்கு உதவுவதில் என்ன குறைந்துவிடப் போகிறேன்!என்று படபடப்பாக பேசிக்கொண்டே, ஸ்ட்ரெச்சரோடு ஓடுகிறார். அடுத்த ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருக்கிறது.
இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட அறுபது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஹமீது வேலை பார்த்ததாக பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் சொல்கிறார். அவராகவே வந்தார். யாரும் எதுவும் சொல்லாமல் அவராகவே புயல் மாதிரி எங்களோடு வேலை பார்க்கிறார் என்று மருத்துவமனை சிப்பந்திகள் ஆச்சரியப்படுகிறார்கள்.
ஊரே ஓலமிட்டுக் கொண்டிருக்க, வீட்டில் ஓய்வெடுக்க என் மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை” – இந்த மீட்புப் பணிக்கு தாமாகவே முன்வந்த்தற்கு ஹமீத் சொல்லும் காரணம் இது.
சாதி சண்டைகள், மதக்கலவரங்கள், பிரிவினை கோஷங்கள் அவ்வப்போது அச்சமூட்டும்போது ஹமீத் போன்றவர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்றால் என்னவென்று கேட்பவர்களுக்கு விடையாக, இவரை நோக்கி நாம் கைகாட்டலாம்.

(நன்றி : புதிய தலைமுறை)
 http://www.luckylookonline.com/2010/06/blog-post_3984.htmlமனிதம் மிச்சமிருக்கிறது : ஹமீதே சாட்சி!

No comments: