Monday, December 28, 2009

இல்வாழ்வில் இணைந்த தங்கைக்கு...

தங்கைக்கு.வாழ்த்து
------------------------
சின்னச்சின்ன விடயத்திற் கெல்லாம் தினமும்
சின்னப்பெண் போல்நீ சிணுங்காதே!-உன்
சிரிப்பை மறந்து சிறிது நேரம்-சுடும்
நெருப்பாய் நீயும் மாறாதே!

இருக்கும் நேரத்தை மகிழ்வாய்க் கழித்து
ஒருவருக் கொருவர் அன்பினைப் பகிர்ந்து
இன்ப நுகர்ச்சி கொள்வதே- இனிய
இல்லற வாழ்க்கை யாம்!

பெண்-ஆண் உரிமையில் சமமே யாயினும்
பெண்ணைவிட ஆண் ஒருபடி மேலேயாம்.
நுண்ணிய மொழிசொல்லும் திருமறையின்
உண்மைக் கூற்றினை உணராயோ?

ஆகாரம்தேடி உனைக் காக்க நாளும்
ஆண்மகன் வெளியில் செல்வானே-அவன்
ஆயிரமா யிரம்பிரச் சினையுடனே-தன்
ஆருயிர் மனைவிதேடி வருவானே.

இல்லம் நுழைந்ததும் எங்கே, ஏன் எனும்
பொல்லாக் கேள்வியைக் கேட்காதே!-அவனுக்கு
தொல்லைகள் தந்து துன்பமிழைத்து-நீ
அல்லல் பட்டு வாழாதே!

அண்டை  வீட்டுப் பெண்டிரோடு-வீண்
சண்டை ஏதும் போடாதே!-அவரோடு
தேவையற்ற பேச்சு வார்த்தையில்-காலமதை
பாவையேநீ வீண் செய்யாதே!

மாமியாரே உன் அன்னை யாவார்
மாமனாரே உன் தந்தை யாவார்.
மாசற்ற மனதுடனே பணிவிடைகள் செய்துநீ
மாநிலத்தில் மகிழ்ச்சியாய் வாழ்வாயே!

செய்யும்செயலைச் சிறப்பாய் செம்மையாய்
செவ்வனே செய்திடப் பழகிக்கொள்-நீ
பொய்யான, நிலையற்ற தரணி யதில்
மெய்யான வாழ்க்கை வாழ்வாயே!

நடப்பவை யாவும் இறைவன் விதிப்படி
நலிந்து சோர்ந்து போகாதே!-இனி
நடப்பவை யாவும் நலவாய் நடக்கும்-இறை
நம்பிக்கை நாளும் துறவாதே!

நாயன் உனக்கு நலவாய் எழுதிட்ட
நன்மை யாவும் கிடைத்துவிடும்-ஏக
நாயன் அருளுடன் நானிலத்தில் நாளும்
நன்றாய் நலமாய் வாழ்வாயே!























No comments: