Saturday, December 5, 2009

யார் அனாதை

யாருமற்றுப் போனாயோ
கண்ணே ஏக்கவிழி
அலைந்தாயோ
வேரொழிந்த பூங்கொடியோ
கண்ணே விரலெறிந்த
நகச்சிமிழோ

யாருந்தான் அடிக்கலியே
கண்ணே ஏனழுது
நிற்கின்றாய்
யாருந்தான் அடிக்கலியே
கண்ணே அதற்கழுதோ
நிற்கின்றாய்

தெருவோரம் கிடந்தாலும்
கண்ணே தெய்வத்தின்
உயிர்தானே
வருவோரும் போவோரும்
கண்ணே இருப்போரின்
தொடர்தானே

வயிறெல்லாம் வேறென்றால்
கண்ணே உறவென்றால்
பொருளுண்டோ
துயருள்ளம் கதறுகையில்
கண்ணே துணைநிற்கும்
தூணுண்டோ

கையோடு கைகுலுக்கு
கண்ணே கைவளர்ந்து
வான்கிள்ளும்
கையிரண்டும் உனதென்று
கண்ணே கர்வமனம்
புவிவெல்லும்

மெய்யான உறவுதேடி
கண்ணே பொய்யான
பூதலத்தில்
மெய்யறியும் வேளையுந்தன்
கண்ணே கைதானே
கவசமாகும்

இடதுகையோ யாசிக்க
கண்ணே இல்லாளும்
யோசிக்க
வலதுகையும் வந்துதானே
கண்ணே வாட்டத்தைத்
தூசாக்கும்

கொடுக்கின்ற மாந்தருக்கு
கண்ணே எடுப்போர்கள்
உறவாவர்
கொடுப்போனாய் நிலைத்துவிடு
கண்ணே குறையில்லா
உயிராவாய்


நன்றி உங்களுக்கு :    http://anbudanbuhari.blogspot.com/

No comments: