Monday, March 26, 2018

நாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு!

- தாஜ்

ஜன்னல் வழியே வானம் கறுத்துக் கிடக்க; மழை சரளமாக பெய்தது. அவ்வப்போது ஒளிநடனமாய் மின்னலின் நர்த்தனம். இடி தீவிரமாக கடம் வாசித்துக் கொண்டிருந்தது. நேற்று ஊர்கூடி பஞ்சாயத்து துவங்கிய நேரத்தில் பிடித்த மழை! இன்னும் விட்டபாடில்லை! பள்ளிவாசலுக்கு வேறு போயாகணும். நேற்றைக்கு நேரமில்லாமல் ஒத்திவைத்து விட்டு வந்த கேசு ஒண்ணு இன்றைக்கு விசாரிக்க வேண்டியிருக்கிறது. அதன் மனுவை இராத்திரி பிரித்து பார்த்தேன்.

"ரசூல் அண்ணன் வந்திருக்காங்களா?"

"இங்கே இருக்கேன் தம்பி!"

"உங்க கேசை நாளைக்கி வைச்சிக்கலாம் அண்ணே. எதுக்கும் உங்க மனைவியின் ஊர்க்காரப் பெரியவங்களை நாளைக்கி வரச்சொல்லி தகவல் கொடுத் தனுப்புங்க. அவுங்களுக்கு தகவல் சொல்லி அனுப்ப ஒங்கப்பக்கத்துலே தக்க ஆள் வசதி இல்லேன்னா, நம்ம மொதினார் கிட்டே தகவலை சொல்லி, பஸ் செலவுக்கு பணம் கொடுத்து அனுப்புங்க."

"சரி தம்பி."


"இந்த மனுவ யார்ணே எழுதுனா?"

"காதரை வச்சி எழுதுனேன் தம்பி."

"தங்கப்பல்லு காதரா?"

"ஆமாம்."

"அவன் எந்த மனுவையும் சரியா எழுத தரமாட்டான். ஐஞ்சு குடு, பத்து குடுன்னு பணத்துலேதான் குறியா நிப்பான். மப்புலே இருந்தானாண்ணே?"

"தெரியலே தம்பி!"

"கணக்குப் பிள்ளை இங்கே வாங்க, இந்த மனுவுலே 'ஜமாத்தார்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்'ன்னு மட்டும் எழுதி இருக்கே கவனிக்கலையா நீங்க! அதெ, 'நாட்டாண்மை, பஞ்சாயத்து, மற்றும் ஜமாத்தார்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்'ன்னு எழுதுங்க. அதேட சேர்ந்த மாதிரி மறக்காம 'வரஹ்'கை பிராக்கெட்லே போட்டுங்க. மனுனா... தர்த்தீபா... இருக்கணும்! நாளைக்கி எவனாவது இதை வச்சி கேள்வி கேட்டு, ஒண்ணுகெடக்க ஒண்ணு பேசிடப் போறானுங்க!"

கணக்குப் பிள்ளை, அதன்படி சரி செய்து எழுதி, ரிஜிஸ்டர் புத்தகத்தில் அந்த மனுவை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டார்.

*
இன்றைக்கு ரசூல் மனைவியின் ஊர்க்காரப் பெரியவர்கள் வந்திருக்கக்கூடும். இஷா முடிந்த கையோடு 'நகரா'வும் அடித்து விட்டார்கள். வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையை சலவை அடுக்கில் தேடினேன். வீட்டில் நிச்சயம் சப்தம் எழும். நேற்றைக்கும் இன்றைக்கும் இதே கூத்தென்றால் சப்தம் எழாமல் என்ன செய்யும்? என் பாட்டி இப்போ உயிரோட இருந்திருந்தா, பஞ்சாயத்துலே என்னை இருக்க விட்டிருக்கவே மாட்டாங்க. "யத்தா..., பாவா..., ஊர்லே, நாட்டாண்மை பஞ்சாயத்துன்ணு ஆசைப்பட்டு அங்கே போயி உட்கார்ந்து பேசி-கிசி-டாதே..டா..! ஏழேழு தலைமுறைக்கும் கஷ்டம் அதால வந்து சுத்தும்!" இப்படி அவுங்க சொன்ன எத்தனையோ வார்த்தைகள் சப்தசுத்தமா இந்த வீட்டின் ஏதோ ஒரு திக்குல இருந்து காதுல ஒலிச்சுக்கிட்டேதான் இருக்கு!

நேற்று அந்த மழையிலும் பள்ளிவாசல் வெளி வராந்தா ரொம்பி வழிகிற அளவுக்கு ஜமாத்துகாரர்களின் கூட்டம்! வியப்பாகத் தான் இருந்தது. கேசு அப்படி! ஊருக்கு ஒரு நல்ல காரியம் ஆற்ற 'நாலு பேரைக் கலக்கணும்' என்கிற கணக்கில், இரவு இஷாவுக்குப் பிறகு பள்ளிவாசலுக்கு வாங்கன்ணு எல்லோரையும் பார்க்க எத்தனை தரம் கூப்பிட்டாலும், அப்ப ஒருத்தரும் வரமாட்டாங்க. இப்பப் பாருங்க... தாங்கலை!

பொதுவாக இப்படியான கேசுகள் எல்லாம் கோடைக்காலம் பார்க்கத்தான் தோதா வந்து தகிக்கும். 'நகரா' கூட அடிக்க வேண்டாம்! இரவு எவ்வளவு நேரமானாலும் பெரிசு, சிறிசுன்ணு சப்ஜாடா ஆஜாராகி விடுவார்கள். பள்ளிவாசல் வராண்டாவில் காற்றுவேறு பிச்சுகிட்டு வரும்! புழுக்க காலத்து சொர்க்கபுரி மாதிரி அப்ப அந்த வராண்டா ஆயிடும்!

"இங்கே மட்டும் எப்படி இத்தனைக் காற்று அடிக்குது ஹஜ்ரத்து?"என்று நொண்டி பசீரு ஊர் ஹஜ்ரத்தை பார்த்து சிலிர்த்துக் கொண்டு கேட்க, 'ஆண்டவன்ற ஹொதரத்து!' என்றார் அவர். கேட்டுக் கொண்டு நின்ற எனக்கு சிரிப்பு வந்தது. சுவரற்ற அந்த வராந்தவும், சுற்றியுள்ள மரம்மட்டைகளும் கூட சிரித்திருக்கும்.

இந்த ரக கேசுகளை துப்புத்துலக்கி தேடிப்பிடித்து பஞ்சாயத்துக்கு கொண்டுவது சேர்க்கும் பக்கிரிகனியும் இப்பொழுது ஊரில் இல்லை. ஒரு சோத்துக்கடைக்கு, புரோட்டா வீசவென்று 'புரொஃபசனல்' சகிதமாய் கிழக்கு மலேசிய நகரான 'சாபா'வுக்குப் போய்விட்டான். ஆனாலும் அவனது வேர் இங்கேதானே இருக்கிறது. துளிர்கள் அதில் வெடித்துக் கிளம்பாதா என்ன? நேற்றைய அந்த வழக்கில், உண்மையை நெருங்கவே வெகுநேரம் ஆகிவிட்டது. தோண்டத் தோண்ட உண்மையின் வலை ஒண்ணுக்குள் ஒண்ணாய் எப்படியெப்படியோ போய்க்கொண்டே இருந்தது. ஆக, அது சிக்கியும் கஷ்டம். கடைசியில் அதை மூடி, பூசி மொளுக வேண்டியாகிவிட்டது. 'கோகோ'ன்னு கத்தி, வழவழான்னு பேசி, பஞ்சாயத்தை முடித்து வீடு திரும்ப நடுராத்திரி ஆகிவிட்டது. கஷ்டம்தான்! என்ன செய்ய? பிரச்சனைக்குரிய குடும்பத் தலைவன் வெளி நாட்டில் இருக்கிறான். கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் பில்லருக்கு கம்பி வளைக்கும் பணி. ஆண் இல்லாத வீட்டிற்கு ஊர்தான் பாதுகாப்புன்ணு எழுத ப்படாத சட்டம்வேறு! என்ன செய்ய?

எங்க முத்தவல்லி ஹஜ்ஜுக்குப் போய் வந்ததில் இருந்து எந்த வழக்கையும் விசாரிக்க மாட்டேன் என்கிறார். கையில் தசுவமணி யோடு பஞ்சாயித்துக்கு மட்டும் தவராமல் ஆஜர்! இது குறித்து பலதரம் அவரிடம் நான் பேசி விட்டேன்.

"இப்படி வந்து ஒண்ணும் பேசாம உட்கார்ந்துட்டா எப்படிண்ணே? நீங்க பஞ்சாயத்தே தொடங்கி விசாரிச்சாத்தானே நல்ல இருக்கும்."

"நீயே விசாரிப்பா... சிராஜு. உன் சப்தத்துக்குதான் இவனுங்க அடங்குறானுங்க!"

"இல்லண்ணே... நீங்க விசாரிச்சாதான் எனக்கெல்லாம் நல்லது கெட்டதெல்லாம் பிடிப்படும். என்ன இருந்தாலும் நான் புதுசுதானேன்ணே!"

"நீயேன் இதுக்குப் போயி இப்படி பயப்படுறே? உதவி தலைவரப்பா நீ!"

"அது இல்லேண்ண... அனுபவம் போதாதுலே...!"

"எல்லாம் போக போக சரியா வந்துடும்.... பயப்படாதே. அஞ்சு கேசுகளை விசாரிச்சோமுன்ணு வைய்யி, வாதி - பிரதிவாதின்ணு வர பத்துபேர்லே அஞ்சு பேரு நிச்சயம் விரோதியாதான் ஆவான்; சமயத்துலே அம்புட்டு பேர்களும்... அப்படியே ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுக்கெல்லாம் அசந்தாலோ இல்லே, பயந்தாலோ காரியம் நடக்காதுப்பா. நாம எதுக்கும் பயப்படவே கூடாது! எப்படியானாலும் நாளைக்கு ஒரு நாள் அவனுங்க நம்மகிட்டே வந்துத்தான் நிக்கணும். பயப்படாதே."

"இது பயமில்லண்ணே, தயக்கம்!"

"என்னவேண்டியிருக்கு தயக்கம்! முதல்லே அந்தத் தயக்கத்த தள்ளிவைய்யி. பஞ்சாயத்து பண்ணுறவங்களுக்கு அது ஆகவே ஆகாது. இது ஒண்ணும் சுப்ரீம் கோர்ட் இல்லே! ரெண்டு பேருக்கும் பாதகமில்லாம அப்படி இப்படின்னு பேசிவிடறதுதான் இந்தப் பஞ்சாயத்து. ஆண்டவன் பள்ளிவாசலுலே உட்கார்ந்து பேசுறதையும் மீறி அவனுங்க தீர்ப்பு சரியில்லைன்னு நின்னானுங்கன்னா... அதன் பிறகு அவனுங்களுக்கு போலீஸு, கோர்ட்டுதான். இல்லே... பைய மவனுங்க... வெட்டி கிட்டு சாவுட்டமே; நமக்கென்ன!"

அவரை தொடர்ந்து, மறுத்து மறுத்துப் பேசமுடியாது. அது அவருக்கு ஆகாது. 'பிரஷர்'கார மனுஷன். அதுவும் அவர் கொதித்து விட்டால் அவ்வளவுதான்!  மலைமாதிரி சாய்ந்து விடுவார். அவர் உடம்பு அத்தனைக்கு வாகானது. ஊரில் நடைப்பெறும் விருந்து களரிகள், ஆண்டாண்டு காலமாய் முதல் மரியாதையோடு தலைவரிசையில் உட்கார்ந்து, கூடுதல் உபசரிப்புகளோடு சாப்பிட்டு வருபவராச்சே!

அவர் வயதுக்காரர்கள் யாராவது அவரிடம், "நீ ஏன் இப்பல்லாம் கேசே விசாரிக்கமாட்டேங்கிறே ராவுத்தரே?" என்று கேட்டால், "வாங்கிக் கட்டிகிட்ட பாவமெல்லாம் போதாதா எனக்கு?" என்பாராம்! சில நேரம், "வயதாயிடுச்சுல்லே... முடியிலப்பா" என்று நழுவி விடுவாராம்.

*
சென்ற ஆண்டில் முத்தவல்லியின் பெண்டாட்டிக்கு இடது கால் கனத்து வீங்கிவிட்டது. அவர்கள் வீட்டில் யாருக்கு ஒன்றென்றாலும் முதலில் 'கொழுந்து' என்று அறியப்படும் 'சிவ கொழுந்து' ஜோசியரைதான் அழைத்து வைத்துப் பார்ப்பாங்க. அவன் எதைச் சொன்னாலும் அப்படியே செய்யவும் செய்வாங்க. அவனிடம் காட்டி, அவன் சொல்படிக்கு நடக்க... நல்லா போயிடுறதாவும் சொல்றாங்க. இப்பவும் அவன்தான் வந்து பார்த்திருக்கான். மேலே ஓடு இடப்பட்ட அந்த இரண்டுகட்டு கல் வீட்டின் உள்ளே, தெரு வாசலுக்கும்; கொல்லை வாசலுக்குமா மூணு முறை நடையோட்டமாக விரைந்து விட்டு, திறந்த பெரிய முற்றத்தின் மையம் பார்க்க நிஷ்டையில உட்கார்ந்தவனா.... 'இது நல்லா போகாது'ன்ணு ஒத்தவரியிலே சொல்லிட்டானாம்.

பதறிப்போன முத்தவல்லி, 'ஏன்'?ணு கேட்க, "இது சாபம். உங்களுக்கு யாரோ விட்டது, ஒரு லெக்கணத்துலே 'மிஸ்'ஆயி உங்க மனைவியெ அடிச்சிடுச்சி. உயிருக்கு ஒண்ணும் பாதகமில்லை. இனிமெயாவது பார்த்து நடந்துக்குங்க" என்று கூறியபடி புறப்பட்டு விட்டானாம். கொழுந்து சொல்லிவிட்டுப் போன திலேர்ந்து அவர் மனைவி மாய்ந்து மாய்ந்து அவரை திட்டி தீர்த்திருக்காங்க. "நீ செஞ்ச வினையெல்லாம் இப்ப நான் சுமக்குறேன்... நாட்டாண்மையா இருக்காதிங்கனா கேட்கிறிங்களா? உங்களுக்கு அந்தப் பதவியை விட்டுத் தொலைக்கவும் மனசு வராது. சாவுற வரைக்கும் அந்தப் பட்டமும் பதவியும் வேணும். எப்படியாவது தொலைஞ்சு போங்க. ஆனா இனியொரு தரம் பஞ்சாயித்துலே வாயகீயத் திறந்திங்கணு வையுங்க அப்புறம் இருக்கு சேதி" ன்ணு கடுமையா கண்டிச்சிருக்காங்க.  அதனால்தான் இப்பல்லாம் இவரு பஞ்சாயத்துல்ல எதையும் விசாரிப்பது இல்லை, பேசுறது இல்லைன்னு அவர் பக்கத்து வீட்டு மொய்தீன் பிச்சை ஒருதரம் என்கிட்டெ சொன்னார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது

இது குறித்து, அடுத்த நாளிலோ அதற்கு அடுத்தடுத்த நாளிலோ அகமதுகிட்டே கேட்டேன். அகமது என் வயசுகாரன்தான். கூட ஒண்ணா படிச்சவன். முத்த வல்லிக்கு கடைசி மைத்துனன். ஹைஸ்கூலில் பத்தாவது படிக்கும்போது ஒரு கிருஸ்துவப் பெண்ணைக் தீவிரமாக காதலித்தான். கட்டினாள் அவளைதான் கட்டிக்குவேன், இல்லாட்டிப் போனா விஷம் குடித்து மவுத்தாயிடுவேன் என்பான்!

"ஏண்டா இப்படியெல்லாம் பேசுறே?"

"காதல்னா அப்படிதாண்டா! உனக்கு தெரியாது."

"அதுயென்னடா... அவபெயரு சாந்தி எலிசபெத்?"

"அவுங்க அப்பா இந்து, அம்மா கிருஸ்டீன், அதான் அப்படி வெச்சிருக்காங்க."

"இதை யாரு உனக்கு சொன்னா?"

"ஜோசப்பு!"

ஜோசப்பு, எங்களுடன் படிப்பவன். அவன்தான் இருவருக்கும் பாலமாக இருந்திருந்தான். அவள், அகமதை திருமணம் செய்ய சம்மதிக்கும் பட்சம் மதம்மாற கூட இவன் தயாராக இருந்தான். அதற்காக தனக்கு ஒரு கிருஸ்துவப் பெயரைக்கூட தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். ஒரு நாள், ஊரைவிட்டுத் தள்ளி தனியே தெரிந்த அந்தச் சுடுகாட்டுப் பக்கமாக என்னை அழைத்துப் போய், யார் காதிலும் விழாத அளவுக்கு அந்தப் பெயர் தேர்வைச் சொன்னான்! அவன் சொன்னது என் காதிலேயே விழவில்லை. "சுடுகாட்டுக்கிட்டே கூப்பிட்டு வந்து வச்சிக்கிட்டு இத்தனை மெதுவா சொல்றே! இங்கே யாருடா இருக்கா?" என்றேன். அதன்பிறகும் என் காதில் விழும் அளவில் மட்டும்தான் சொன்னான்: 'அல்ஃபோன்ஸோ!'

அகமதை சட்டுன்னு பார்க்கிறவங்களுக்கு கொஞ்சம் லூசுமாதிரிதான் தெரியும்; ஆனா அவன் அப்படி இல்லே. அப்படி இருந்திருந்தால் நாடு தழுவிய ஒரு இஸ்லாமிய இயக்கத்துலே, அவனுக்கு நகரப் பொறுப்பு தருவாங்களா? சாதாரணமா பேசவேண்டிய நேரத்தில கத்தி கர்ஜிப்பதும், கத்தி கர்ஜிக்க வேண்டிய நேரத்தில சாதாரணமா பேசுவதும் அவன் சுபாவம்! இதை வைத்து சட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்திட முடியாது. சரியா சொன்னா, அவனது மேடைப் பேச்சுக்கு இந்த சுபாவம்தான் ரொம்பவும் கைகொடுத்திருக்கு. வெளியூர்களுக்கெல்லாம் அவனை பேசக் கூப்பிடுகிறார்களாம்! 'இறைநேசக் குரலோன்' என்ற அடைமொழிவேறு! வெளியூர்களில் உள்ள முஸ்லீம்களும் அப்படித்தான் அவனை அறிந்து வைத்திருக்கிறார்கள்! போலீஸ் பதிவில்கூட அவனது பெயர் இந்த அடைமொழியோடு தான் பதிவாகியிருக்கிறதாம்!

சமீப காலமாக, இஸ்லாத்தில் கிளைத்துள்ள 'அல்-நஜாத்' என்கிறப் பிரிவில் அவன் அங்கம் வகிக்கிறான்ணும், தான் நிஜமான இஸ்லாத்தை பின்பற்றுவதாக அவன் முழங்கிக் கொண்டு இருக்கிறான்ணும் தெரியும். ஆனா, அந்த நிஜம் இரண்டு பிரிவாக ஆகிப்போனதற்குப் பிறகு, இப்போது அவன் எதில் இருக்கிறான் என்பதோ, என்ன பொறுப்புலே இருக்கான் என்பதோ தெரியாது. அவன் அந்த இயக்கத்துலே சேர்ந்த நாளில் இருந்தே அந்த மைத்துனனை எங்க முத்தவல்லிக்குப் பிடிக்காது. "காலம் காலமா தொழுவுற தொழுகையிலே போயி, அப்படி தொழுகக் கூடாது இப்படி தொழுகு, இப்படி தொழுகக் கூடாது அப்படி தொழுகுன்ணு புதுசுப் புதுசா பேசிக்கிட்டு அலையிறாணுங்க கிறுக்குப் பிடிச்சவணுங்க" என்று திட்டிக் கொண்டே இருப்பவர் அவர். சில சமயங்களில், 'வேலை வெட்டியில்லாதப் பசங்க' என்றும் சேர்த்துக் கொள்வார். அவர் அப்படி சேர்த்து பேசறது தன்னைத்தான்னு அகமதுக்கும் தெரியும்.

ஒரு தரம் அவன் தனது பெரிய அக்காவைப் பார்க்க போயிருந்தப்ப "உன் புருஷன் பேசுறது சரில்லெ, எங்க பசங்க ரொம்ப கோபப்படுறாங்க, கண்டபடி பேச வேனாண்ணு சொல்லிவை. மறுபடியும் மறுபடியும் அவரு இப்படியே பேசுனாருன்னா எங்க பசங்களெ கன்ரோல் பண்ண என்னால முடியாது. அப்புறம் அவரு போகிற டி.வி.எஸ். ஃபிஃப்டியிலே பாம்தான் வெடிக்கும்" என்று அவன் சொல்லவும், பேரன் பேத்தியெடுத்த அந்த அக்கா, தனது சின்னத் தம்பியின் பேச்சைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிச்சிருக்காங்க. பின்னர் செல்லமா "ஒரு கலிச்சல்லெ போறவனே.. என்னடா பேசுறே"ன்னு தம்பியை திட்டிவும், கொஞ்சம் தள்ளி கதவு மறைவிலிருந்து இதை கேட்டுக் கொண்டிருந்த முத்தவல்லி, முதல் வேலையா வீட்டு வாசல் கதவை போய் அடைச்சிருக்காரு. அதே வேகத்தோட முற்றத்தில் காயக் கிடந்த வெறகு கட்டெ ஒண்ணெ எடுத்து, அவனை மாத்து மாத்துன்ணு மாத்தியிருக்காரு. அவரது மனைவி குறுக்க விழுந்து தடுக்கலைன்னா அன்னிக்கே அவன் மவுத்தாயிருப்பான்.

அப்புறம், வாரகணக்கா பக்கத்து டவுனில் உள்ள கிளினிக் ஒன்றில் தங்கி, வைத்தியம் பார்த்து, சுகமாகி வந்தான். இடைப் பட்ட நாட்களில் "எங்கே அகமதுன்னு?" அவனது சகாக்களிடம் கேட்டா, "தலைமை கழகத்திலிருந்து அழைப்பு வந்து அண்ணெ மதராஸ் போயிருக்காங்கன்னும், மேட்டுப் பாளையத்துலே நடக்கிற பயிற்சி வகுப்புக்கு போயிருக்காருன்னும்" பதில் சொல்லுவாங்க. ஊர் பஞ்சாயத்துலே உபதலைவர் பதவியை நான் ஒப்புக்கொண்டதில் இருந்து என் மீது அவனுக்கு கோபம். 'எல்லோரும் தொழுவுற அல்லாவின் பள்ளிவாசலில்' நான் பஞ்சாயக்காரனா இருக்கிறேன்ணு.

"இந்தபாரு அகமது... என்னை, உங்க மச்சான்தான், 'நான் பயணம் போகிறவரைக்கும் பஞ்சாயத்துல இருப்பான்ணு கட்டாயப் படுத்தினாரு' என்னாலேயும் மீற முடியிலே. என்னைப் பற்றித்தான் உனக்குத் தெரியுமே!"

"தெரியும்.. தெரியும்... நீ ஒரு நாத்திகன்! இன்னைக்கி ஆண்டன் பள்ளியிலே நீ பஞ்சாயத்துப் பண்றே!"

"வெள்ளிக் கிழமைகள்லே தொழுவவும் போய்கிட்டு இருக்கிறேன் அகமது!"

"அது வேறையா! உங்களெயெல்லாம் கணக்கெடுத்துதான் வைத்திருக்கோம். ஸ்பெஷல் பாம்தான்... பொறு மொவனே பொறு."

"மொதல்லே அதைச் செய்! புண்ணியமா போகும். ஆமா, எப்ப செய்றதா உத்தேசம்?"

அவனைப் பார்க்க பார்க்க சிரிப்பு வேற வந்து கொண்டே இருந்தது. என் சிரிப்பை அவன் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. மிகவும் உணர்ச்சி மேலிட பேசிக்கொண்டே போனான்.

"நம்ம ஜாதி மக்களுக்காக வாழ்வுரிமை மாநாட்டினை மாவட்டம் மாவட்டமா நடத்தி, இட ஒதுகீடு கேட்டுப் போராடிட்டு இருக்கோம், அதுலே வெற்றிவாகை சூடிய பிறகு, அடுத்து உங்ககிட்டதான் வருவோம்."

"அப்ப இந்த ஜென்மத்துலே எங்கள ஒண்ணும்ம் செய்யப் போறதில்லைன்ணு சொல்லு!"

"என்ன நீ சொல்றே?"

வந்து சொல்வதாக அன்றைக்கு அவனிடமிருந்து தப்பி வந்தவன்தான் அதன் பிறகு அவனை நான் பார்க்கவே இல்லை. அவனது மச்சான் குறித்து கேட்க அவனைத் தேடியபோது, ஒரு நாள் ஊர் மீன்கடையின் கூட்ட நெரிசலில் எதிரில் வந்து முட்டிக்கொண்ட நிலையில் "என்னடா" என்றான். அவனை மார்க்கெட் டுக்கு வெளியே அழைத்து வந்து சிகரெட்பாக்கெட்டைத் திறந்தேன். புகைத்தபடியே பேசினோம்.

"உங்க அக்கா உடல்நிலைய வைத்தியம் பார்க்க வந்த ஜோசியர் சிவகொழுந்து என்னமோ சொன்னானாமே?"

"ஆமாம். எங்க அக்காகூட போன்லெ சொல்லுச்சு. அந்த ஜோசியன் சிவகொழுந்து ஒரு வீணாப்போனவன். எங்க மச்சான் இருக்கானே... இவனும் ஒரு வீணாப்போனவன், அவன் சொன்னாங்கிறத்துக்காக இவன் ரொம்பவும் இடிஞ்சிப்போயிட்டானாம். இரண்டு வருஷத்திற்கு முந்தி, நீ... அப்போ துபாயிலெ இருந்தே, ரகமத் நகரிலே காசிம் பொண்டாட்டி இருக்காள..."

"ம்...."

"அவ எவனோடேயோ தொடர்பு வைச்சிருக்கிறதா அரசல் புரசலா செய்தி கிடைக்கவும், இவருபோயி கமுக்கமா விசாரிச்சிருக் காரு."

"இவருன்னா...?"

"அதான்டா என் மச்சான்."

"ம்...."

"இவரு கமுக்கமா கேட்டதுதான் தாமதம்.... அவ புடுச்சிகிட்டா. பேயாட்டமாடி, கத்தோகத்துன்ணு கத்தியும் இருக்கா. இவரும் பதிலுக்கு ஒண்ணுகெடக்க ஒண்ணு பேசியிருக்காரு. அவ ஆத்திரத்திலே மண்ணெ அள்ளி இறைச்சிருக்கா..! ரொம்ப நாளா அதைப் பற்றியே புலம்பிட்டு இருந்தாரு!"

"ம்..."

"இப்போ சிவகொழுந்து சொன்னதுகப்புறம் அந்த நெனெப்பு கூடிக்கிச்சின்ணு நினைக்கிறேன்! அவளோட சாபமா இருக்குமோன்ணு குழம்பிட்டு கிடக்கிறாராம். இப்பல்லாம் பஞ்சாயத்துக்கு வந்தா ஒண்ணும் பேசுவது இல்லையாமே?"

"ஆமாம். அது சரி, சரியா தெரியாமா இவரு ஏன் அந்தப் பொம்பளைக்கிட்டே ஒண்ணு கிடக்க ஒண்ணு கேட்கணுமாம்?"

"நாக்க தொங்கப் போட்டுட்டு அலையிற சபல கேசுங்கத்தானே! எதையாவது சொல்லி, எதையதையாவது கேட்டு மடக்கிடலாமுன்ணு நெனைச்சி கேட்டிருப்பாரு!"

"உனக்கு உன் மச்சான புடிக்கிலே என்கிறதுக்காக அவருமேலே இப்படி அபாண்டம் பேசக் கூடாது."

"அவரு, வாலிப வயசுல என்ன கூத்து அடிச்சாருன்ணு எங்க அக்காவ நீ கேட்டுப்பாரு. கதைகதையா சொல்லும்."

"கொழுந்து சொன்னத நீ நம்புறியா?"

"பைத்தியமா நானு, அவன் சொல்றத நம்புறதுக்கு? என் மச்சான்தான் அப்படியே நம்புவாரு! அவன் சொல்றதெல்லாம் அவருக்கு வேதவாக்கு! அந்த அளவுக்கு அவன் கிட்டே ஈமான் கொண்டு கெடக்குறாரு! இதுலே ஹஜ்ஜுக்கு வேற போய்ட்டு வந்திருக்காரு! அந்த சிவகொழுந்து போன வருஷத்திற்கு முந்தி, ஒரு சந்தேகக் கேசுல போலீசுல மாட்டிக்கிட்டது தெரியும்தானே?"

"எந்த கேசு?"

"அதான்டா, பக்கத்து கிராமத்துல புதையல் எடுக்கிறதுக்காகன்ணு ஒரு அஞ்சி வயசு குழந்தையைப் பலி கொடுக்கல; அந்த கேசுல! அவனை ஜாமீன் எடுக்கணுமுன்னு இவருகிட்டே கொழுந்து வீட்டுக்காரங்க வந்து உதவி கேட்டுருக்காங்க, இவரு பயந்துகிட்டு உதவி செய்ய மாட்டேன்ணுட்டாரு. அந்த ஆத்திரம் அவனுக்கு. வெளிய வந்ததில் இருந்து நேரம் பார்த்துகிட்டே இருந்தான். சரியா நேரம் வாய்க்கவும். வந்து ஆப்பு வச்சுட்டு போயிட்டான். நல்லா படுன்ணு."

"அகமது நல்லாதான் பேச கத்துகிட்டு இருக்கான். வா அகமது, டீ சாப்பிடாலாம் என்று கூப்பிட்டேன்."

"வேணாம், குறுக்குப் பேட்டைக்கு சீக்கிரம் கிளம்பணும்!"

"அங்கே இன்னைக்கி சந்தனகூடுலே நடக்குது! உனக்கு அங்கே என்ன வேலை?"

"கிண்டலா! என் மாமியா ஊரு அது, மறந்துட்டியா? இன்னெக்கிப் போகலேன்ணு வையி, அவ்வளவுதான்."

ஐந்து வருஷத்திற்கு முந்தி அவனுக்கு ஏதோ 'சேட்டை'ன்னு அந்த தர்காவுலேதான் இருபத்தியொரு நாள் வைத்திருந்தாங்க. அங்கே போயிதான் நல்லா போச்சுன்ணு என் கிட்டேயெல்லாம்... அந்த தர்காவைப் பற்றி பெருமையா சொல்லியிருக்கான். நான் கூட கிண்டல் அடிச்சதா ஞாபகம். இப்ப சொல்வானா? மாட்டான். இப்பவும் அந்த மகிமைக்காகத்தான் ஓடுறான். கேட்ட மாமியா வீட்டுக்குப் போறேன்கிறான்! திருட்டுப் பய!

*
மின்னலும் இடியும் வானத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்தது. மழை கொஞ்சம் நேரம் விட்டா போதும். பஞ்சாயத்துக்குப் போயி, முடிச்சிட்டும் வந்திடலாம். பொண்டாட்டி வேணாம்கிற கேசு. அந்தக் கிழக்குத்தெரு ரசூலுக்கு இப்ப இருக்கிறது ரெண்டாவது பொண்டாட்டி! முதல் மனைவிக்கு பிள்ளை இல்லே, மதிக்க மாட்டேங்கறா, அது இதுன்ணு என்னென்னமோ காரணங்கள் சொல்லி தலாக் சொல்லிட்டாரு. ஒரு ஃபிரான்ஸ் மாப்பிளைக்கு இரண்டாம்தாரமா வாக்கப்பட்டு, அந்தப் பெண்ணு, இப்ப அங்கே நல்லா இருக்கா. மூணு குழந்தைகள் வேற! இப்பவுள்ள பெண்ஜாதியே இவரு கட்டிகிட்ட வகையிலேயும் இந்த பெண்ணுக்கும் குழந்தை இல்லை. இரண்டு வருஷமா ரெண்டுபேருக்கும் தெனைக்கும் சண்டை. "என்ன ரசூலண்ணெ?" என்றால், "இவ சரியில்லே தம்பி" என்பார்!

அவர் மனைவியே கூப்பிட்டு கேட்டா "அவருக்கு அப்பலேந்து சக்கரை வியாதி இருக்குங்க! எல்லாத்தேயும் வெளியே சொல்ல முடியுதுங்களா? அவரைக் கட்டிக்கிட்டு நான் என்ன சுகத்த கண்டேன்? சரின்ணு பல்லைக்கடிச்சுகிட்டு இருந்தாலும் இவருக்கு எப்பவும் என்கிட்ட சந்தேகப் பேச்சுதான். வயலுக்கு போயிட்டு வந்த மனுஷன் கைகால கழுவமாட்டான்? நேரபோயி அறையே பார்க்கிறதும், கட்டிலுக்கு கீழே பார்க்கிறதும், பீரோவ தொறந்து பார்க்கிறதும், பரண்மேலே பார்க்கிறதும்... இப்படியா ஒருமனுஷன் சந்தேகப்படுறது? ஒருத்தி, அப்படியே ஒருத்தனே வச்சிகிட்டு இருந்தாலும் இப்படியா மாட்டிக்கிற மாதிரி மறைச்சி ஒழிச்சிலாம் வைப்பா? நீங்களே சொல்லுங்க நியாயத்த...?" என்கிறார். வெளியே விசாரிச்ச வகையிலே யாரோ ஒரு ஆட்டோக்காரன் வந்து வந்துட்டுப் போறதா சொல்றாங்க. ஒண்ணும் புரியில!

தலாக்கு கேட்டு வர கேசுகள பெரும்பாலும் ஒண்ணா சேர்த்து வைக்கத்தான் நாட்டாண்மை பஞ்சாயத்துகாரங்க எல்லாம் கடைசிவரை விடாப்பிடியா நிற்ப்போம். முடியாம போச்சுன்னாலும் கூட அத்தனைச் சீக்கிறம் பிரிஞ்சி விட்டுட மாட்டோம். இஸ்லாமிய மதரஸாக்களுக்கு இரண்டு தரப்பையும் அனுப்பி வைத்து, அங்கே அவர்களிடம் ஃபத்வா வாங்கி வாங்கன்ணு காலம் கடத்துவோம். வாங்கி வந்தா கூட மறுபடியும் கூப்பிட்டு வச்சுப் பேசுவோம். ஆகாத பட்சத்துக்குத்தான் தலாக்கெல்லாம்! கணவனும் மனைவியும் ஒத்து வாழப் பிடிக்கலைன்னா பிரிஞ்சிடலான்ணுதான், ரொம்ப எளிமையாதான் மதம் சொல்லுது. அதுக்காக நாங்க அப்படி விட்டுவிட முடியுமா?

இப்படிதான், போன வருஷம் 'மண்டை' வீட்டு, 'சாவன்னா முவன்னா' மகன் ஜாகீரு சௌதியில் இருந்து ஊர் வந்திருந்தப்ப மனைவியை தலாக் விட நின்னான். இரண்டாம் கல்யாணத்துல ஆசை அவனுக்கு! காசு பணத்தோடெயும், அங்கத்திய இஸ்லாமிய நடப்புகளை அறிந்த அறிவோடெயும் ஊர்வந்த அவனுக்கு, இங்கத்திய நடப்பு பெரிசா தெரியில! அவன் மனைவியோட அத்தா வந்து எங்ககிட்ட அழுது முறையிடவும், அவனைக் கூப்பிட்டு "உன் மனைவியே தலாக் விடப் போறேன்ணு பேசிகிட்டு திரியிறியாமே.. காரணகாரியம் வேணாமா?" ன்ணு கேட்டா, "இஸ்லாத்துலேயே அனுமதி இருக்கிறப்போ.. காரணகாரியம் அது இதுன்னு என்னங்க நீங்க இப்படி வந்து கிராஸ் செய்றீங்க?" என்றான்.

அவன் இப்படி துடுக்கா பேசுறதே கேட்டமாத்திரத்திலெ, பஞ்சாயத்து செயலாளராக இருக்கும் கண்ணு ஹமீது கோபப்பட்டு சீறிட்டான். "இஸ்லாத்துலே அனுமதி இருக்கு, ஹதீஸ்லே ஆதாரம் இருக்குங்கிறதெல்லாம் சரிதான். இது ஊரு, இங்கே இந்த நிர்வாகத்துக்கு கட்டுப்பட்டுதான் எல்லாம். நாளைக்கி ஒண்ணுன்னா நாங்கத்தான் நிக்கணும். பொம்பளை போலீசு ஸ்டேசனுக்கும் வீட்டுக்குமாதான் அலையணும். எங்க தாவுதான் தீரும். சௌதிக்கு போனமா, சம்பாதிச்சிட்டு வந்தோமான்ணு இல்லாமே.... என்னென்னமோவெல்லாமல்ல பேசுறானுங்க? இவனுங்களுக்கு ரொம்பவுதான் குளிர் விட்டுப் போச்சு. ஊருன்னா என்னன்னு நெனைச்சுகிட்டிங்க?" என்று கத்தவும் அடங்கிவிட்டான்.

"இவனுங்கள்ட கொஞ்சம் அசந்தா, தாபால்ல தலாக் எழுதுறதும், டெலிபோன்ல தலாக் சொல்றதுமால்ல இருகிறாணுங்க! கேட்டா 'சரியத்துல' அதுக்கு அனுமதியிருக்குன்னு லொல்லு பேச்சு பேசுறானுங்க! பொம்பளைப் பிள்ளைகலப்பெற்று வளர்த்து செலவு செஞ்சி கட்டிக்குடுத்துப் பாருங்கடா... அப்ப, உங்கப் பிள்ளைகளை கட்டிக்கிட்டவன் தலாக் சொன்னா அததோட வேதனைப்புரியும். இவன்களுக்கு எல்லாமே விளையாட்டா போச்சு"ன்னு என் பங்குக்கு குரல் எழுப்பினேன். இரண்டு மாசத்துக்கு முன்னாடி அந்த ஜாகீருக்கு இரட்டைக் குழந்தைங்க பொறந்துச்சு! ரெண்டும் பொம்பளைப் பிள்ளைங்க! ஜாகீர் என்ன நினைச்சானோ தெரியிலை, 'என் கண்ணெ திறந்தது நீங்கத்தான் மாமா'ன்னு என்னைக்கியும் இல்லாம.. கடிதம் எழுதி இருந்தான். அவன் பிள்ளைக்கி பெயர் வைக்கும் வைபவத்தில நான் முன் நின்றுவேறு நடத்திக் கொடுக்கணுமாம்! எழுதியிருக்கான்.

*
இந்த ரசூல் கேசைப் பொருத்தவரை பெரிய கஷ்டம் இருப்பதாக தெரியவில்லை. மண்டைய ஒடைச்சிகிட்டு சர்ச்சைப் பண்ணத் தேவையும் இருக்காது. ரெண்டு பேரும் பிரியிறதையே விரும்புவதா தெரியுது. ரசூலுக்கு இதைவிட தண்டனையும் கிடையாது! நேரா இறுதிக் கட்டத்திற்கே போயிடலாம் என்றுதான் தோன்றுகிறது. நேரம் ஆகாது. முத்தவல்லி கூடமாட ஒத்துழைச்சா இன்னும் சீக்கிரமே முடிச்சிடலாம். மழைதான் விடவே மாட்டேன்கிறது! அதுசரி... ஏன் இப்படி குழம்பிட்டே இருக்கேன்...? யோசிச்சு யோசிச்சு அதிலேயே உராய்ந்து அடியால சிதையிறேனோ?

வாயில் கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டு, திறக்கப் போனேன். "எங்கப் போறீங்க?" என்று மனைவியும், "சொன்னா கேட்கவே மாட்டானே... ஏய் சிராஜி நில்லுடா!" என்று என் அம்மாவும் குரலை உயர்த்தினார்கள். கதவைத் திறந்த போது அங்கே 'மோதினார்' நின்றுக் கொண்டிருந்தார்.

"இன்னெக்கி பஞ்சாயத்து இல்லேன்னு சொல்லிட்டு வரச்சொன்னாரு முத்தவல்லி."

"ஏன், பெண் சார்பா அவுங்க ஊர்லேயிருந்து யாரும் வரலயா?"

"வரலே தம்பி. காலையிலே நான்தான் அந்த ஊருக்குபோய் சொல்லிட்டுவந்தேன். இந்த ஊத்தாத மழையிலெ அவுங்க எப்படி வரத்தான் முடியும்! அவுங்க ஊருக்கு பக்கத்துல உள்ள ஏரி மத்தியானம் பார்க்க ஒடைச்சுக்கிட்டதாம்! அவுங்க ஊரெல்லாம் தண்ணியில மிதக்குது! என்னமா மழைபெய்யுது! என் வயசுக்கும் பார்த்தது இல்ல தம்பி! அப்புறம், இன்னொரு விசயம் தம்பி....."

"சொல்லுங்க..."

"யாரிடமும் மூச்சு விட்டுடாதிங்க..."

"இல்லை... சொல்லுங்க."

"இன்னிக்கி.... மகரிபு நேரம் பார்க்க...."

"ம்..."

"முத்தவல்லி வீட்டு... நடு முற்றத்துல....."

"ம்..."

"இடி விழுந்திடுச்சாம்...!"

- தாஜ்

No comments: