Tuesday, March 13, 2018

மனிதர்கள்!


Sabeer Ahmed
(மூலம்: சூரா அந்நாஸ் /அத்தியாயம் 114/ அல் குர்ஆன்)
காவல் நிலையத்திலோ -வழக்
காடும் மன்றத்திலோ
சட்டாம் பிள்ளையிடமோ - கடுங்
கட்டப் பஞ்சாயத்திலோ...
பாதுகாவல் தேடிடுதல் - அது
போதுமான தாகிடுமோ?
மானுடத்தைப் படைத்தவன் - அந்த
மாபெரும் இறையிடம்தேடு !
அவனன்றோ ஆக்குபவன் - வேதனை
அனைத்தையும் நீக்குபவன்;
மனிதகுலம் மீட்சியுற -நல்
மார்க்கம் தந்த மன்னனவன் !

நிற்கின்ற நிலையிலேயோ - முன்
நெற்றிநிலம் தொட்டவாறோ
மனிதரெலாம் வணங்குதற்கு - நம்
இனியதொரு இறைவனவன்
பிணிநீக்கிப் பாதுகாக்க- பல
மருத்தவர்கள் இங்குண்டு
பசியிலிருந்தும் மீட்டுவிடும் - சில
புண்ணியவான் பூமியிது
கண்ணுக்குத் தெரியாமல் - நம்
கணிப்புக்கும் புரியாமல்
பதுங்கிச்சந்தேகம் விதைக்கும் - வீணர்
தீங்கைவிட்டும் நீக்கக்கேள்
இயல்பிலேயே பலகீனம் - இம்
மாந்தர்தம் இதயங்கள்
சந்தேக நோய்விதைக்கும் - அத்
தீயவனிடமிருந்து காக்கக்கேள்
இத்தகைய தீயோர்கள்...
கண்ணுக்குப் புலப்படாத
படைப் பினங்களிலும் -நம்
கண்முன் நடமாடும் மனிதர்களிலும்
உளரென்று உணர்!

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

No comments: