Friday, March 30, 2018

தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை தஞ்சை தாவூத் ஷா !!


ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய நவீனக் கல்வி முறையின் மீதான ஒவ்வாமை முஸ்லிம் மத அறிஞர்கள் மத்தியில் ஏற்பட்ட காலத்தில், வட இந்தியாவில் அதை எதிர்த்து சர் சையது அகமது கான் நின்றார். அதற்குச் சற்றுப் பிந்தைய காலகட்டத்தில் தமிழக இஸ்லாமியர்கள் மத்தியில் கல்வி, சமூக பொருளாதாரம் குறித்த நுண்ணுணர்வை ஏற்படுத்தியவர் தாவூத் ஷா. இவ்வகையில் தாவூத் ஷாவை தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை எனலாம்.



தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலுக்கு அருகில் கீழ்மாந்தூரில் 1885 மார்ச் 29-ல் பப்பு ராவுத்தரின் மகனாக தாவூத் ஷா பிறந்தார். இவரது பள்ளித் தோழர் கணித மேதை ராமானுஜம். ராமானுஜத்துக்குத் தமிழ் வராது. தாவூத் ஷாவுக்குக் கணிதத்தின் மேல் ஒவ்வாமை. இருவரின் நட்பு பரஸ்பரக் குறைகளை நிவர்த்திசெய்தது. சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. படித்தபோது உ.வே.சாமிநாதய்யர் இவரின் ஆசிரியராக இருந்தார். ஆட்சியர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை கிடைத்தது. பதவி உயர்வுக்கான தேர்வு எழுதி சப் கலெக்டரானார். அன்றைய நாளில் இந்தப் பதவிக்கு வந்த முதல் இஸ்லாமியர் தாவூத் ஷாதான். மத அறிஞர்கள் கல்வியை உலகக் கல்வி மற்றும் மார்க்கக் கல்வி என்று இரண்டாகப் பிரித்து மார்க்கக் கல்வியை மட்டுமே முன்னிலைப்படுத்தியதையும் முஸ்லிம் பெண் கல்வி கற்க இருந்த தடையையும் தாவூத் ஷா எதிர்த்தார். அவருக்கு எதிராக பத்வா என்னும் மதத் தீர்ப்புகள் பிறப்பிக்கப்பட்டன.

தாவூத் ஷா பதவியைத் தூக்கி எறிந்தவுடன், தமது சொந்த ஊரான நாச்சியார் கோயிலுக்கு வந்தார். இந்திய விடுதலைப் போரில் குதித்தார். அரசியல் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டார். கிராமங்கள் தோறும் சென்று தீவிரமான பரப்புரை செய்தார். மக்களிடம் விடுதலை உணர்வை ஊட்டினார். பட்டி தொட்டியெல்லாம் சென்று மகாத்மா காந்தியடிகளின் அரசியல் கொள்கைகளை மக்களிடம் எடுத்துரைத்தார். கதர்த் துணிகளைக் கை வண்டியில் ஏற்றிக் கொண்டு தானே வண்டியை இழுத்துச் சென்று தெருத் தெருவாக விற்பனை செய்தார்.
சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராகச் செயல்பட்டார். சென்னை மாநகரத் தந்தையாக (ஆல்டர்மேன்) தாவூத் ஷா நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைப் பரப்புவதற்காக "தேசகேசவன்" என்ற வார இதழை நடத்தினார். இடி முழக்கம் போன்ற இவரது சொல்லாற்றலும், இளைஞர்கள் நெஞ்சத்தில் வெடி முழக்கம் ஏற்படுத்திய இவரது எழுத்தாற்றலும், நொடிப் பொழுதும் ஓய்வு அறியாத உழைப்பும், “தமிழ்நாட்டின் ஜின்னா“ என்ற சிறப்புப் பட்டத்தை தாவூத் ஷாவுக்கு பெற்றுத் தந்தது.

இசுலாமிய மக்களிடையே சமுதாயச் சீர்திருத்தத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டு, தாவூத ஷாவினுடைய எழுத்தும், பேச்சும் அமைந்திருந்தன.“தென்னாட்டு முசுலிம்களிடம் காணப்படும் மூடக்கொள்கைகளை எல்லாம் களைந்து, அவர்களுடைய மார்க்க ஞர்னத்தையும் கல்வியறிவையும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் 1921 முதல் ”தத்துவ இஸ்லாம்” என்னும் மாத இதழைதொடங்கி , தமது பிரச்சாரத்துக்காக லண்டனிலிருந்து கொண்டு வந்தார் தாவூத் ஷா.. பின்பு லண்டனிலிருந்து அதை நடத்தினார். அதற்கும் பல நெருக்கடிகள் ஏற்பட்டன. பின்னர் இந்த இதழின் பெயரை ‘தாருல் இஸ்லாம்’ என்று மாற்றினார். இதற்கு ‘இஸ்லாமிய வீடு’ என்று அர்த்தம்.


காங்கிரஸில் இருந்த தாவூத் ஷா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். தஞ்சையின் வீதிகளில் கதர் விற்றார். 1940-ல் அதிலிருந்து விலகி முஸ்லிம் லீக்கில் இணைந்தார். ஜின்னா தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் அவரின் மேடைப்பேச்சை மொழிபெயர்த்து வழங்கினார்.

நாச்சியார்கோயிலில் 1941ல் “அறிவானந்த சபை“ என்ற பெயரில் நூலகமும், உடற் பயிற்சி நிலையமும் ஏற்படுத்தினார். அச்சபையின் தலைவராக இருந்து சிறப்பாகச் செயலபட்டார். பின்னர், அந்தச் சபையை ”முசுலிம் சங்கம்” என்று மாற்றினார். !

ஆங்கிலம், அரபு மொழி யில் இருந்தும் தமிழுக்குப் பல நூல்களை மொழிபெயர்த்தார். புகழ்பெற்ற அரபு காவியமான ‘ஆயிரத்தோர் இரவுக’ளின் சில தொகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். கம்ப ராமாயணத்தை ஆழ்ந்து கற்று அது பற்றி உரையாடும் திறனைப் பெற்றார்.இதனால் கும்பகோணம் வட்டாரத்தில் இவரை கம்ப ராமாயண சாகிபு என்றழைத்தனர். அவரது முக்கியப் பங்களிப்பு குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்த்ததாகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் குர் ஆனை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்து அதற்கு விளக்க உரை எழுதியவர் தாவூத் ஷா தான். இஸ்லாமிய வரலாற்றில் குர்ஆனை அரபு அல்லாத மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு மத அறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. அதன் புனிதத்தன்மை கெட்டுவிடும் என்று அவர் கள் கருதியதே அதற்குக் காரணம். அதையும் மீறி கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையி லும் தாவூத் ஷா அதனை வெளிக்கொண்டு வந்தார்.


பெரியாருடன் பல சந்தர்ப்பங்களில் இணைந்து செயல்பட்டிருக்கிறார். ‘‘தாருல் இஸ்லாம் பத்திரிகையும், அதன் ஆசிரியரும் நமது கூட்டத்தைச் சார்ந்தவர்கள்” என்றார் பெரியார். “என் பள்ளிப்பருவத்தில் ஒரு கையில் குடியரசுப் பத்திரிகையும், மறுகையில் தாருல் இஸ்லாம் இதழும் இருக்கும்” என்று கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.

திரைப்படங்கள் மத விரோதமான ஒன்று (இன்றளவும் அது நீடிக்கிறது) எனக் கருதப்பட்ட காலத் தில் திரைப்படங்களுக்கு ஆதரவாக இருந்தார் தாவூத் ஷா. எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களில் முஸ்லிம் வாழ்வியல் சார்ந்த காட்சிப் பதிவுகளுக்கு இயக்குநர்கள் இவரைப் பயன்படுத்திக் கொண்டனர்.


முசுலிம பெண்களை வீட்டில் பூட்டி வைக்காமல் படிக்க வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார். பெண் கல்வி கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்த காலத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பஷீர் அகமது, பெண்களுக்காக சென்னை தேனாம்பேட்டையில் எஸ்.ஐ.இ.டி கல்லூரியை ஆரம்பித்தபோது, பழமைவாதச் சிந்தனை கொண்ட முசுலிம் உலமாக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முசுலிம் பெண்களுக்குக் கல்லூரி அமைக்கக் கூடாது என்றும், கல்லூரி ஆரம்பிப்பது இசுலாம் மார்க்கத்திற்கு விரோதமானது என்றும் கண்டனக் குரல் எழுப்பினர். அப்போது, நீதிபதி பசீர் அகமதுவுக்குப் பெரும் துணையாக இருந்து, கல்லூரி திறந்திட முழு ஆதரவு அளித்தவர் தாவூத் ஷா. தமிழ் இஸ்லாமிய சமூகத் தில் முக்கிய சீர்திருத்த ஆளுமையாக மிளிர்ந்த தாவூத் ஷா, தனது 84-வது வயதில் 1969 பிப்ரவரி 24-ல் மரணமடைந்தார். தாவூத் ஷா பற்றிய நூல்களை மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமி வெளியிட்டிருக்கிறார். இன்றைக்கும் தேவைப்படும் ஒரு இஸ்லாமிய ஆளுமை தாவூத் ஷா!


நன்றி : எச். பீர்முஹம்மது, அ.மா.சாமி, பி.தயாளன், ஜனசக்தி பத்திரிகை.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
http://ajmal-mahdee.blogspot.i

No comments: