Sunday, March 18, 2018

இறைவன் என்பவன் ...


ஆக்க ஒரு தெய்வம்
அழிக்க ஒரு தேவன்
காக்க ஒரு கடவுள்
கண்காணிக்க ஒன்று
படைக்க ஒரு பரம்பொருள்
பரிபாலிக்க பரமன் என
பகிர்ந்தெடுத்துப் பணிசெய்ய
பலகீனனல்லன் இறைவன்
வானங்களைப் படைத்தவன்
வணக்கத்திற்குரியவன்
அவன் என்று சொல் - அவன்
ஒருவன் என்று கொள்

உடற் தேவை உளத் தேவை
உள்ளிழுத்து வெளியேற்றும்
உயிர் சுவாசத் தேவை - இன்னும்
அகத் தேவை புறத் தேவை 
அளவற்ற பொருட் தேவை
எனும் எத் தேவையும்
இல்லாதவன் அவன்
தாயொரு தெய்வம்
தந்தையொரு கடவுள்
மகனொரு கடவுள் - அவர்தம்
அண்ணனும் ஆண்டவன் என்று
குடும்ப உறுப்பினர்
பட்டியல் போலன்றி
ஈகையை எடுத்தியம்பும்
ஈடிணையற்ற இறைவன்
எவரையும் 
ஈன்றெடுத்ததில்லை
யாராலும்
ஈன்றெடுக்கப் படவுமில்லை
அவனியைக் காக்கும் 
அவனுக் கிணையோ
அகிலமும் படைத்த
அவனுக்கு நிகரோ
அவ் வொருவனைத் தவிர
யாரு மிலர்!
oOo
(இறைமறையின் அத்தியாயம் 112 - இக்லாஸின் கரு)
ஆக்கம் : சபீர்



No comments: