Saturday, November 21, 2009

அழவேண்டும் அழவேண்டும்



அழவேண்டும் அழவேண்டும்
அழுகைக்குள்தான் இருக்கிறது படுக்கை
அதில் மலர்ந்தால்தான் பிடிக்கிறது உறக்கம்

அழுகைக்குள் அழுகையாய்
அழுகைக்குள் அழுகையாய்
அடுக்கடுக்காய் அழவேண்டும்
மன அமைதி அதில்தான் மீளவேண்டும்

அழுகைதான் குடை
அதன் அடியில்தான் இளைப்பாறும்
வாழ்க்கையின் நடை

கண்களில் நீர் வந்து முட்டினால்
நிம்மதி நெஞ்சின் கதவு தட்டும்
கன்னத்தில் ஒரு சொட்டு உதிர்கின்ற போது
உயிருக்குள் அமைதி விதை நட்டுப் போகும்

எது வந்து மடி சேர்ந்தபோதும்
அது நில்லாமல் ஒரு நாளில் போகும்
மாற்றந்தான் வாழ்க்கையின் மாறாத நியதி
அழுகைதான் அதற்கான பயணத்தின்
ஊர்தி

கோழையின் கூடாரமல்ல
அழுகை கருணையின் கோபுரம்
தனக்கே அழாதவன்
ஊருக்காய் உறவுக்காய் அழப்போவதே
இல்லை

ஒவ்வோர் அழுகையின் முடிவிலும்தான்
ஓர் உறுதியான மனவீரம்
வேர் விடுகிறது

Source :http://anbudanbuhari.blogspot.com

No comments: