Thursday, November 5, 2009

சோகங்கள் சுகமாகும்...

வருத்தமே வாழ்க்கையான
நான் _ என்
வருத்தத்தை நீக்கிக்கொள்ள
அருகில் நின்ற ஒருவரிடம்
அளவளாவினேன்.
சிறிது நேரத்தில்
அவரும் தம்
சோகக்கதைகளைச் சொல்லி
அழுகத் தொடங்கிவிட்டார்.

பிறரைக் காண
என் வருத்தமே எனக்கு
பெரிதாய்த் தெரிந்தது.
ஆனால் அவர்கள்தம்
உள்ளக் கிடக்கைகளைக்
கொட்ட ஆளின்றி
உள்ளுக்குள்ளேயே குமுறுவது
அப்போதுதான்
எனக்குப் புலப்பட்டது.

'உள்ளங்கள் அழுதாலும்
உதடுகள் சிரிக்கட்டும்'
எனும் நல்லெண்ணத்தில்
வாழ்வதும் தெரிந்தது.
சோகங்கள் இல்லையெனில்
இன்பத்தின் இனிமை
தெரியாமலே போய்விடும்
என்பதால்தான்
இன்பம் துன்பம்
இரண்டையுமே
இரவு பகலாக
மாறிவரச் செய்துள்ளான்
மறைதந்த இறைவன்.

சோகங்கள் பல இருந்தும்
சிலர் அவற்றை
வெளிக்காட்டுவதில்லை.
ஏனெனில் அவர்கள்
அவற்றை அனுபவித்து
சகித்துக்கொண்டவர்கள்;
அவற்றை இனிதாக
சுகித்துக்கொண்டவர்கள்.
அவற்றையே அவர்கள்
இனிமையாகக்
கருதுவதால்தான்
அவர்களுக்கு_ தம்
சோகங்களெல்லாம் சுகங்களாகவே
தென்படுகின்றன.
கீறல்களைச்
சகித்துக்கொள்வதால்தான்
சாதாரண மூங்கில்கூட
இனிய ஓசைதரும்
புல்லாங்குழலாகிறது. செதுக்கல்களைச்
சகித்துக்கொள்வதால்தான்
சாதாரண கல்கூட
அழகுமிகு சிற்பமாகிறது.
சோகங்கள் சுகமாகும்...
அவற்றைச் சகித்துக்கொண்டால்;
அவற்றையே சுகித்துக்கொண்டால்.
அல்லாஹ் ஒருவன் மீது
நம்பிக்கை கொண்டால். by ஆலங்குடி நூ. அப்துல் ஹாதி பாகவி
source http://hadibaquaviar.blogspot.com

No comments: