Sunday, November 1, 2009

இருட்டு பேசுகிறது



நான் இருட்டு
கொஞ்சம் ஊடுருவிப் பாருங்கள்
நானே நிஜம்
வெளிச்சம் விருந்தாளி
நானே நிரந்தரம்

புலன்கள் ஐந்து
அவற்றுள் ஒற்றைப்புலனே
வெளிச்சத்தின் அடிமை
அந்த விழிகளும் என்னில் மட்டுமே
கனவுகள் காண்கின்றன

கனவுகளே உங்களின்
சத்தியப் பண்புகளைச் சொல்கின்றன
உங்களின் சரியான முகவரி
உங்கள் கனவுகளில்தான்
பொறிக்கப் பட்டிருக்கிறது

வெளிச்சம் உங்களைப்
பொய்யுடன் பிணைத்துக் கட்டுகிறது
வெளிச்சம் பொய்களின் கூடாரம்
இருட்டே உண்மையின் தீர்மானத் தளம்

என்றாவது உங்களை
வெளிச்சத்தில் பார்த்திருக்கிறீர்களா
இருட்டில்தானே நீங்கள் தெரிவீர்கள்

வெளிச்சத்தில் உங்களுக்கு தினம் ஒரு முகம்
இருட்டில் உங்களுக்கு ஒரே முகம்

வெளிச்சத்தில் நாளும் நிறம்மாறுகிறீர்கள்
இருட்டில்தான் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்

வெளிச்சம் பொய் இருட்டே நிஜம்

வெளிச்சம் துயரம்
இருட்டே சந்தோஷம்
வெளிச்சம் அரக்கன்
இருட்டே உங்கள் தாய்

நிறைய அழுகை மனிதனுக்குச் சொந்தம்
அவை அனைத்தும் வெளிச்சம்
உங்களுக்குத் தந்த விசங்கள்

அத்தனைக் கண்ணீரையும் கொட்டித்தீர்க்க
இருட்டே உங்களுக்கு மடி வார்க்கிறது

கரு எங்கே உதிக்கிறது
விதை எங்கே முளைக்கிறது
உயிர்கள் அத்தனைக்கும் மூலம் இருட்டுதானே

வெளிச்சம் வேசம்
வெளிச்சத்தில் சொல்லப்பட்ட கதைகள்தாம்
இருட்டை பயமென்று பிதற்றுகிறது

கருப்பையில் பயந்தீரா வெளிவந்து அழுதீரா
இருட்டா உங்களுக்குப் பயம் சொல்லித்தந்தது

வெளிச்சம் கவலைகளின் தொழிற்சாலை
இருட்டு உங்களின் சத்தியமான வாழ்க்கை
புறக்கண் என்றேனும் எவரின் நிஜத்தையும்
உங்களுக்குக் காட்டி இருக்கிறதா

சொல்லுங்களேன்
பாசமென்பது பெத்தவளின் முகமா
அவள் அரவணைப்பா
காதல் தந்தது காதலியின் வெளியழகா
அவள் உள்ளழகா
நிம்மதிச் சொத்து
உருவங்களாலா உள்ளங்களாலா

யோசித்துப் பாருங்கள்
இருட்டையே நீங்கள் காதலிக்கிறீர்கள்
வெளிச்சத்தை வெறுக்கிறீர்கள்
வெளிச்சம் இதயத்தை மதிப்பதில்லை
இருட்டு உருவத்தை மதிப்பதில்லை

தினம் தினம் வெளிச்சம்
உங்களை ஏமாற்றுகிறது

தவறாக எண்ணாதீர்கள்
இருட்டு வெளிச்சத்தைக் கண்டு
ஓடி ஒளிவதில்லை
வெளிச்சத்துக்கும் வாழ்க்கை தருகிறது
வெளிச்சம் இல்லாமல் இருட்டு இருக்கும்
இருட்டே இல்லாமல்
வெளிச்சம் எங்கே இருக்கும்

பூமி இருட்டு
நிலா இருட்டு
கோள்களெல்லாம் இருட்டு
பிரபஞ்சமே இருட்டு
உயிர்கள் அத்தனையும் இருட்டின் துகள்கள்
இருட்டே நிஜம் வெளிச்சம் பொய்


  source:buhari.google pages .com
  நன்றி:அன்புடன் புகாரி

No comments: