Sunday, June 7, 2020

#ஆப்பிரிக்க_மக்கள்_அமெரிக்க #அடிமைகளாக்கப்பட்ட_வரலாறு ... அத்தியாயம் - நான்கு

Abu Haashima is with M S Abdul Hameed.



#பிடிலிஸ்ட் ...
#வேர்கள் நாவலின் ஒரு முக்கிய கதாபாத்திரம் பிடிலர்.
( பிடில் வாசிக்கக் கூடிய ஒருவருக்கு M.S.அப்துல் ஹமீது அவர்கள் சூட்டியிருக்கும் அழகான தமிழ் வார்த்தை பிடிலர்.)

பிடிலர் ஒரு கருப்பு அடிமை.
அவர் பெயர் தெரியாது.
அவர் நெடுநாட்களாக ஆங்கிலேயரிடம் அடிமையாக இருக்கிறார்.
அவரும் கை அடிபட்டு வில்லியம் வாலரால்
காப்பாற்றப்பட்டு அவரிடமே வேலை செய்கிறார்.

பிடிலருக்கு வயதாகிவிட்டது. ஆனாலும் அவருக்கு விடுதலைக் கிடைக்கவில்லை.
பிடிலர் நன்றாக பிடில் வாசிப்பார்.
அதனால் அவரை பிடிலர் என்றே எல்லோரும் அழைத்தார்கள்.
ஒருநாள் மாலை உணவை உண்டுவிட்டு வழக்கம்போல் குண்டா குடிசையின் வெளியே வந்தான்.
அப்போது குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியிலிருந்து ஒரு கிழவனை வண்டியோட்டும் கருப்பன்
இறக்கி விடுவதைக் கண்டான்.
கிழவனின் கையில் கட்டு போடப்பட்டிருந்தது.
வண்டியிலிருந்து இறங்கிய கிழவன் தன்னோடு ஒரு பெட்டியையும் எடுத்துக் கொண்டு தன குடிசைக்குச் சென்றான்.
குன்டாவுக்கு அந்தக் கிழவன் யார் என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.
நொண்டிக் கொண்டே கிழவனின் குடிசைக்குச் சென்றான். இவனைக் கண்டதும் கிழவன் கோபத்தோடு
" போ போ ... நீ ஒரு ஆப்பிரிக்க நீக்ரோ " என்று விரட்டினான்.


குன்டா வேதனையோடு திரும்பிவிட்டான்.
நீக்ரோ என்ற வார்த்தையை அப்போதுதான் அவன் கேள்விப்படுகிறான்.
மேலும் இரு தினங்கள் சென்றபிறகு வெளியே நின்ற குன்டாவைப் பார்த்து தன்னிடம் வரும்படி அழைத்தான் கறுப்புக் கிழவன்.
குன்டாவும் தயக்கத்தோடு சென்றான்.
அவனை தன்னருகில் உட்கார வைத்து அங்கேயுள்ள நடைமுறைகளை அவன்
குன்டாவுக்குச் சொல்ல ஆரம்பித்தான் .
அந்தக் கிழவன்தான் பிடிலர்.

" இங்கே என்ன நடைமுறை என்பதை முதலில் தெரிந்துகொள் .நான் இங்கே பிடில் வாசிப்பவன். பிடில் வாசிக்கும் என் கையையே உடைத்து விட்டார்கள்.தப்பியோடிய உன்னை அவர்கள் கொல்லாமல் விட்டது உன் அதிர்ஷ்டம். இங்கே சில சட்டங்கள் இருக்கின்றன. அவற்றை புரிந்துகொள் .
* ஆங்கிலேயர்களின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கக் கூடாது.
* அடிமைகள் படிக்கவோ எழுதவோ கூடாது.
* கருப்பன் செத்தாலும் எந்த கருப்பனும் சவ அடக்கத்திற்கு போகக் கூடாது.
* அடிமைகள் தப்ப நினைத்தால் மரண தண்டனை.
* ஒரு அடிமை ஆங்கிலேயனை கொன்றால் அவனுக்கு தூக்குத் தண்டனை.
* கருப்பனைக் கொன்றால் சவுக்கடி மட்டுமே.
* கருப்பன் பொய் சொன்னதாக ஆங்கிலேயன் புகார் சொன்னால்
கருப்பனின் ஒரு காதை அறுத்து விடுவார்கள்.
* இரண்டு பொய் சொன்னால் இரண்டு காதையும் அறுப்பார்கள்.
* தப்பு செய்யும் கர்ப்பிணி பெண்களை படுக்க வைத்து முதுகில் சாட்டையால் அடிப்பார்கள்.
* இதையெல்லாம் கவனத்தில் வைத்து நடந்து கொள்.
நீ ஒரு ஊமை என்றும் பைத்தியம் என்றும் கேள்விப்பட்டேன்.
உன் பெயர் டோபி என்று சொன்னார்கள் " என்று சொல்லிமுடித்தான் பிடிலர்.

பிடிலர் சொன்னது குன்டாவுக்கு அரைகுறையாக புரிந்தாலும் எல்லாம் புரிந்ததுபோல் தலையாட்டினான்.
தான் டோபி இல்லை குன்டா என்று ஆவேசத்தோடு சத்தமிட்டு சொன்னான்.
" என் பெயர் குன்டா கின்டே . நான் ஜுஃப்பூர் கிராமத்தை சேர்ந்தவன் " என்று சத்தமிட்டான்.
குன்டா பேசுவதைக் கேட்டு கிழவனுக்கு ஆச்சரியம்.

அன்று மாலை வயலில் வேலை முடிந்து அடிமைகள் அனைவரும் சேரிக்குத் திரும்பி வந்தார்கள். வேலை முடிந்து வரும் அவர்கள் அனைவரும் மாலையில் பிடிலர் வீட்டு முற்றத்தில் கூடி இருந்து இரவுவரை பேசுவது வழக்கம்.
பிடிலர்தான் அங்கே அவர்களுக்கெல்லாம் தலைமை அடிமை.
பல கதைகள் சொல்வார். கருப்பர்கள் அடிமைகளாக்கப்பட்ட கொடுமைகளைச் சொல்வார்.
மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

#மாசா_வில்லியம்_வாலரின்
சமையல் பணிப்பெண் பெல்லும்
அங்கே வருவாள்.
அன்று மாலை பெல் வரும்போது குன்டாவும் அங்கே அமர்ந்திருப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டாள்.
ஒரு மெல்லிய புன்முறுவலை அவனை நோக்கி அனுப்பி வைத்தாள்.
குன்டாவுக்கு சந்தோசமாக இருந்தது.

தினமும் மாலை வேளைகளில் பிடிலரின் குடிசைக்கு செல்ல ஆரம்பித்தான்.
ஒருநாள் பிடிலரின் குடிசைக்கு அவன் செல்லும்போது ஒரு வயதானவர் அங்கே உட்கார்ந்திருந்தார்.
அவர் மாசா வீட்டு தோட்ட வேலைக்காரர். அவருக்கு வயதாகிவிட்டதால் அவருக்கு உதவியாக குன்டாவும் தோட்டத்தில் வேலை செய்ய வேண்டும் என்று
வில்லியம் வாலர் கட்டளை இட்டிருப்பதாக அவனிடம் சொல்லப்பட்டது.

அடுத்தநாள் ...
குண்டாவுக்கென்றே விஷேசமாக தயாரிக்கப்பட்ட காலணிகளை கில்டன் என்பவன் கொண்டு வந்து கொடுத்தான்.
அதை காலில் மாட்டிக் கொண்டு குன்டா தோட்ட வேலை செய்ய ஆரம்பித்தான்.
சில நாட்களிலேயே வயதானவர் முழு ஒய்வு பெற்றுக் கொள்ள குன்டா முழுநேர தோட்டக்காரன் ஆனான்.
தினமும் காய்கறிகளை பறித்து கூடையை நிரப்புவாள் பெல். அதை எஜமானன் வீட்டு சமையல் கட்டில் கொண்டுபோய் குன்டாதான் வைக்க வேண்டும்.

ஒருநாள் பெல் இவனுக்கு ஒரு பிஸ்கட் கொடுத்து சாப்பிடச் சொன்னாள்.
அப்போதுதான் குண்டாவுக்கு பிஸ்கட் என்றால் என்னவென்றே தெரியும்.
அதுபோக தன் எஜமானனுக்கு சமைக்கும் நல்ல உணவுகளை குன்டாவுக்கும் கொடுத்தாள் பெல்.
அந்த ருசியான உணவுகளை உண்டு அசந்து போனான் அவன்.

குன்டாவுக்கு இப்போது இருபது வயது ஆகி இருந்தது....
அந்த பண்ணையில் உள்ள மற்ற கருப்பு அடிமைகளைப்போலவே
அவனும் ஒரு அடிமையாக மாறிப்போனான்.
அங்கிருந்து தப்பிச் செல்லும் முயற்சி ஏதுமில்லாமல் அங்கேயே வாழப் பழகி விட்டான்.
தினமும் வேலை . வேலை முடிந்தால் பிடிலரின் முற்றத்தில் நேரப்போக்கு
என்று பொழுதை கழித்தான். பிடிலரும் தனது பிடிலை எடுத்து மக்கள் விரும்பும்வரை வாசித்துக் கொண்டே இருப்பார்.

அப்போதுதான் ...
அமெரிக்காவின் பல பகுதிகளில் கருப்பர்கள் அடிமைத் தளையை எதிர்த்து கிளர்ச்சி செய்வதாக தகவல்கள் வந்து
கொண்டிருந்தன.
மாசா வாலரின் வீட்டுக்கு வரும் அவரது ஆங்கிலேய நண்பர்கள் நாட்டில் நடக்கும்
சம்பவங்களை பேசிக் கொண்டிருப்பார்கள்.
அதை ஒளிந்து நின்று கேட்டுக் கொண்டு மாலை நேரத்தில் பிடிலர் வீட்டு முற்றத்தில் கூடும் மக்களுக்கு சொல்லுவாள் பெல்.
இப்படி பல கலவரங்கள் நடந்து விட்டன . பலன் ஒன்றுமில்லை என்று விரக்தியோடு சொல்வார் அந்த வயதான தோட்ட வேலைக்காரர்.
குன்டாவும் அந்த செய்திகளை ஆவலோடு கேட்க ஆரம்பித்தான்.
கறுப்பின மக்கள் புரட்சி செய்து அடிமைளுக்கு விடுதலை கிடைக்காதா என ஏங்கினான்.

ஒவ்வொருநாளும் வேலை முடிந்து வந்து
குடிசையில் அல்லாஹ்வைத் தொழுதான்.
நாளாக நாளாக தன் பெற்றோரை
தம்பிகளை பார்க்க வேண்டும் என்ற ஆசை அவன் நெஞ்சில் நெருப்பாக வளர்ந்தது. இரவு நேரங்களில் குடிசையில் படுத்துக் கொண்டே தூக்கமில்லாமல் சிந்திக்க ஆரம்பித்தான் ...

பாதையெல்லாம் இருட்டாகவே நீள்வதைக் கண்டு அழுது கொண்டே இறைவனிடம் முறையிடுவான்.

#இன்ஷா_அல்லாஹ் ...
#நாளை

No comments: