Sunday, June 21, 2020

விடியலில் சிரிக்கும்...!

Hilal Musthafa

இறைவன் வழங்கிய ஆனந்தத் தோட்டம்
எங்கெங்கும் காந்த இசையின் ஆட்டம்!

உலகம் முழுவதும் வண்ண ஒளி
ஒவ்வொரு இடமும் அழகின் துளி
உலவும் காற்றில் நிலவின் மொழி
உள்ளொளி போதை மனத்தின் வெளி!
(இறைவன்...)

காலை உதயம் தோரணம் கட்டும்
கலகலப் பென்னும் விந்தை சுற்றம்
மாலை வானில் மேகத்தீ பற்றும்
மதியப் பொழுதோ அனல்புயல் கொட்டும்
(இறைவன்...)



தாய்தரும் முத்தம் தாங்கிக் கன்று
தாவித் தழுவி மடியில் முட்டும்
வாயிதழ் அமுதை நதிக்கரைப் பக்கம்
தோயும் ஜோடி நேரம் மறக்கும்!
(இறைவன்...)

கடலலை நீரின் அசைவில் நடனம்
கன்னியர் பூவிழி வெளிச்சப் புதினம்
உடலும் மனமும் உணர்வின் துடிப்பு
உள்ளே முழுதும் மத்தாப்பு வெடிப்பு!
(இறைவன்...)

பூவின் வாசம் புன்னகை நேசம்
புல்லாங் குழலோ காதல் வீசும்
மாங்கனி பழுத்து வண்டுக்கு அழைப்பு
மணலில் வெண்மைப் பாலின் விரிப்பு!

(இறைவன்...)

கிளைகளில் கிளிகள் அந்தரங்கம் பேசும்
கிறீச்கறீச் சென்றே சிள்வண்டு ஏசும்
வளிய வளிய வான்நிலா திரியும்
வரட்டுமா வென்றே தென்றல் நுழையும்!
(இறைவன்...)

அணில்கள் ஆட்டம் ஆண்பெண் கூட்டம்
அங்கெரு பசுப் பின் காளையின் நாட்டம்
இனியொரு விடுதலை இல்லை என்றே
இணைந்து பிரியும் நாய்கள் சல்லாபம்
(இறைவன்...)

இரவுப் போர்வைக்குள் இன்பம் தங்கும்
இணைகள் தாக எழுச்சிப் பொங்கும்
வரவுக்கு ஒத்திகை அங்கே நடக்கும்
வளரும் பூமி விடியலில் சிரிக்கும்!
(இறைவன்...)

Hilal Musthafa

No comments: