Friday, November 11, 2011

2029-ல் உலகம் கணினியின் கட்டுப்பாட்டில்! ஆய்வுத்தகவல்

வாஷிங்டன்: இன்னும் 18 ஆண்டுகளில் மனிதர்களை கணினி உலகம் விஞ்சி விடும் என்று  அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ரே  கர்ஸ்வெல் கூறுகிறார்.

இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், தொழில்நுட்பம் என்று ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் ‘பியூச்சராலஜி’ (எதிர்காலவியல்) துறையிலும் ஆராய்ச்சிகள் சூடுபறக்க நடக்கின்றன. கம்ப்யூட்டர் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் இதேபோக்கில் வளர்ச்சி அடைந்தால், எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்கும் ஆராய்ச்சியை அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் பியூச்சராலஜி ஆராய்ச்சியாளர் ரே  கர்ஸ்வெல் மேற்கொண்டார். ஆய்வு முடிவை தற்போது அவர் வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

கணினி, இயந்திர மனிதன் தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் அதிசயிக்கத்தக்க புதிய பரிணாமத்தை சந்தித்துக்கொண்டிருக்கின்றன. தொடர்ந்து இந்நிலை நீடிக்குமானால் கணினி துறை எதிர்பாராத  அசாதாரண வளர்ச்சியை அடையும். இப்போது உள்ள நிலையில் புதுப்புது கணினிகளை மனிதர்கள்தான் உருவாக்கி வருகிறார்கள். இது முழுவதுமாக மாறி புதுக் கணினிகளை  உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சியில் கணினிகளே ஈடுபட தொடங்கும். அதன் பிறகு, மனிதனின் உதவி இல்லாமல் கணினிகள் தங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும். இதர ஆராய்ச்சிகளிலும் தாங்களே ஈடுபடும். அந்த அளவுக்கு கணினி தொழில்நுட்பத்தில் அதிரடி வளர்ச்சி ஏற்படும். மனிதர்களை கணினி மிஞ்சும் அளவிற்கு மாற்றம் அனேகமாக இன்னும் 18 ஆண்டுகளில், அதாவது 2029ல் உண்டாகும் என்று தெரிகிறது.


எல்லா ஆராய்ச்சிகளிலும் கணினியே நேரடியாக ஈடுபடும் என்பதால் முடிவுகள் துல்லியமாக இருக்கும். சரியான சிகிச்சைகள் மூலம் எல்லா நோய்களையும் விரட்ட முடியும். இதன்மூலம், சாவைக்கூட தள்ளிப்போட முடியும். மனிதனின் ஆயுள்காலம் அதிகரிக்கும். ஆக மொத்தத்தில், ஒட்டுமொத்த உலகமும் கணினியின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். மனிதனின் செயல்பாடுகளில், சிந்தனைகளில்கூட கணினி குறுக்கிடும். அப்போதைய சூழல் நம்முடைய புரிந்துகொள்ளும் சக்திக்கு அப்பாற்பட்டு இருக்கும். கணினியின் இந்த அதிரடி மாற்றங்கள் தொடர்பான அறிவை நாம் வளர்த்துக் கொள்ளாவிட்டால், நடப்பது எல்லாம் நமக்கு குழப்பமாக இருக்கும். இவ்வாறு கர்ஸ்வெல் கூறியுள்ளார்.
Source : http://www.inneram.com/

No comments: