Saturday, July 17, 2010

பள்ளி,கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா சாக்லேட்! அதிர்ச்சி தகவல்

சென்னை: கஞ்சாவை மாவாக அரைத்து அதில் தேவையான இனிப்பு சேர்த்து, கண்கவரும் வண்ணங்களை சேர்த்து அழகிய பேப்பரில் சுற்றி இளைஞர்களை கவருவதற்காகவே இதுபோன்ற போதை சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சாக்லெட்டுகள் இளைஞர்கள் மற்றும், கல்லூரி மாணவர்களை குறிவைத்து சப்ளை செய்யப்பட்டுள்ளது என்பதுதான் அதிர்ச்சி தகவல்.
சமீப காலமாகவே இளைஞர்களிடையே போதை பழக்கம் அதிகரித்திருப்பதாகவே புள்ளியியல் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த போதை வாழ்க்கைக்கு இளைஞர்களே இலக்கு. தற்போது போதை தடுப்பு நாள் கடைபிடிக்ககப்டுவதையொட்டி தமிழகம் முழுவதும் போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி போதை தடுப்பு காவல்படை ஐ.ஜி., அபாஸ்குமார் தலைமையில் போலீஸ் படை கொண்ட 7 தனிப்படை அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படையினர் நடத்திய அதிரடி சோதனையில் வேலூரை சேர்ந்த ஆனந்தன் என்பவன் கைது செய்யப்பட்டான். இவன் கொடுத்த வாக்குமூலத்தில் கஞ்சாவை சர்க்கரையுடன் கலந்து சாக்லேட்டாக தயாரித்து விற்றதை ஒப்புக்கொண்டான். இவனிடம் இருந்து 10 ஆயிரம் போதை சாக்கலட்டுகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாவும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை டி. ஐ.ஜி., ஆறுமுகம் நிருபர்களிடம் கூறுகையில்; போதை சாக்லேட்டுகள் குறித்து போலீசார் சென்னையில் சென்ட்ரல், எக்மோர் உள்ளிட்ட முக்கிய பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் போதை சாக்லெட்டுகள் பீடா மூலமாகவும், நேரிடையாகவும் விற்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. ஒரு சாக்லேட் 100 முதல் 200 வரை விற்கப்பட்டுள்ளது. வேலூரை சேர்ந்த ஆனந்தன் என்பவன் மூல கர்த்தாவா இருந்துள்ளான். இவனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளோம். இவனுடன் முருகேசன் என்பவனும் கைது செய்யப்பட்டிருக்கிறான்.
இந்த போதை சாக்லேட் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும். இன்னும் தமிழகம் முழுவதும் சிறப்பு கண்காணிப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்ற தகவல் தெரிந்தால் போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம். தகவல் தருபவர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்படும். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 044- 22341518 என்று டி.ஐ.ஜி ஆறுமுகம் தெரிவித்தார்.
Source : http://www.inneram.com/201007179352/kanja-chocolets-sales-amoung-students-shocking-news

No comments: