Tuesday, July 13, 2010

அலெக்சாந்தர்


பேரரசன் அலெக்சாந்தர்
Alexander the Great
BattleofIssus333BC-mosaic-detail1.jpg
பாரசிக மன்னன் மூன்றாம் டாரியசுடன் அலெக்சாந்தர் போரிடும் காட்சி
ஆட்சிக்காலம் கிமு 336-323
பிறப்பு ஜூலை 20, கிமு 356
பிறப்பிடம் மசிடோன்
இறப்பு ஜூன் 11, கிமு 323 (அகவை 32)
இறந்த இடம் பாபிலோன்
முன்னிருந்தவர் இரண்டாம் பிலிப்
பின்வந்தவர் நான்காம் அலெக்சாந்தர்
துணைவர் பாக்ட்ரியாவின் ரொக்சானா
பேர்சியாவின் ஸ்டாடெய்ரா
வாரிசுகள் நான்காம் அலெக்சாந்தர்
தந்தை மசிடோனின் இரண்டாம் பிலிப்
தாய் ஒலிம்பியாஸ்
பேரரசன் அலெக்சாந்தர் அல்லது மகா அலெக்சாந்தர் (Alexander the Great, கிரேக்கம்: Αλέξανδρος ο Μέγας அல்லது Μέγας Aλέξανδρος,[1] Megas Alexandros; ஜூலை 20, கிமு 356 - ஜூன் 11, கிமு 323), என்பவன் கிரேக்க[2][3] மன்னன் (மசிடோனின் பசீலியஸ்) (கிமு 336–323). மசிடோனின் மூன்றாம் அலெக்சாந்தர் எனவும் இவன் அழைக்கப்படுகிறான். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவனாக இவன் போற்றப்படுகிறான். இவன் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவனது காலத்தில் பண்டைய காலக் கிரேக்கர்களுக்குத் தெரிந்த உலகின் பெரும் பகுதியைக் கைப்பாற்றி ஆண்டான்.
அலெக்சாந்தர் அவனது தந்தை இரண்டாம் பிலிப் இறந்த பின்னர் மசிடோனின் மன்னனாக முடிசூடினான். பிலிப் மன்னன் பண்டைய கிரேக்கப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நகரங்களை மசிடோனிய ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தான். அலெக்சாந்தர் கிரேக்கத்தின் தெற்குப்பகுதி நகரங்களை முறியடைத்து அவைகளை மசிடோனிய ஆட்சியில் இணைத்தான். பின்னர் கிழக்குப் பகுதியில் அக்கீமனிட் பாரசிகப் பேரரசை கைப்பற்றினான். இவன் அனத்தோலியா, சிரியா, பினீசியா, காசா, எகிப்து, பாக்ட்ரியா, மெசொப்பொத்தேமியா ஆகிய நாடுகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தனது பேரரசின் எல்லைகளை இந்தியாவின் பஞ்சாப் வரை நீட்டியிருந்தான்.
இவன் இறப்பதற்கு முன்பே, அரேபியக் குடாநாட்டுக்குள் தனது வணிக நடவடிக்கைகளையும், படை நடவடிக்கைகளையும் விரிவாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தான். இதன் பின்னர் மேற்கே கார்த்தேஜ், ரோம், ஐபீரியக் குடாநாடு ஆகியவற்றை நோக்கிச் செல்லவும் அவனிடம் திட்டம் இருந்தது. அலெக்சாந்தர் பல வெளிநாட்டவர்களைத் தனது படையில் சேர்த்திருந்தான். இதனால் சில அறிஞர்கள் இவன் இணைப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தான் என்றனர். தனது படை வீரர்களையும், பிற நாட்டுப் பெண்களை மணம் செய்யுமாறு ஊக்கப்படுத்தினான். அவனும் கூட இரண்டு வெளிநாட்டு இளவரசிகளை மணம் செய்தான்.
பன்னிரண்டு ஆண்டுகாலத் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளுக்குப் பின்னர் அலெக்சாந்தர் காலமானான். இவனது இறப்புக்கான காரணம் தெளிவில்லை. மலேரியா, நஞ்சூட்டல், தைபோய்ட்டுக் காய்ச்சல், வைரஸ் தொற்று போன்ற ஏதாவது ஒன்றால் அல்லது அளவு மீறிய குடிப்பழக்கத்தால் இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அலெக்சாந்தரின் விரிவாக்கங்களும், மரபுரிமைப் பேறுகளும் (legacy) அவன் இறந்து பலகாலங்களின் பின்னரும் நிலைத்திருந்ததுடன், தொலைதூர இடங்களிலும், கிரேக்கக் குடியேற்றங்களும், அதன் பண்பாட்டுச் செல்வாக்கும் பல நூற்றாண்டுகள் நீடிப்பதற்கு உதவின. இக்காலம் ஹெலெனியக் காலம் எனப்படுவதுடன், இது, கிரேக்கம், மையக்கிழக்கு, இந்தியா ஆகியவற்றின் ஒரு கலப்புப் பண்பாடாக விளங்கியது.



தொடக்க காலம்
அலெக்சாந்தர் மசிடோனிய அரசனான இரண்டாம் பிலிப்புக்கும் அவனது நான்காவது மனைவியான ஒலிம்பியாஸ் என்பவளுக்கும் மகனாக, அந் நாட்டின் தலைநகரமான பெல்லாவில் பிறந்தான். இவன் தாய், தந்தை இரு வழியிலும் பலர் சிறந்த வீரர்களாக இருந்திருக்கின்றனர்.

மெசொப்பொத்தேமியா


பண்டைய மெசொப்பொத்தேமியாவின் நிலவரைபடம்
மெசொப்பொதாமியா (Mesopotamia), தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும். இது டைகிரிஸ், யூபிரட்டீஸ் ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான வண்டல்மண் பகுதியாகும். இன்றைய ஈராக், ஈரான், மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது. பொதுவாக மெசொபொதேமியா என்னும் சொல், மேற்கில் சிரியப் பலைவனத்தாலும், தெற்கில் அராபியப் பாலைவனத்தாலும், தென்கிழக்கில் பாரசீக வளைகுடாவினாலும், கிழக்கில் ஸக்ரோஸ் மலைகளினாலும், வடக்கில் காக்கேசிய மலைகளினாலும் சூழப்பட்ட, மேற்சொன்ன இரண்டு ஆற்றுச் சமவெளி முழுவதையும், சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும். மெசொப்பொதேமியா, உலகின் மிகப் பழைய நாகரிகங்கள் சில தழைத்தோங்கியிருந்த இடம் என்ற வகையில் மிகவும் புகழ் பெற்றது.
மெசொப்பொதேமியாவின் எழுத்து முறைமை, உலகின் மிகப் பழைய எழுத்து முறைமைகளுள் ஒன்று. இது மெசொப்பொத்தேமியா உலக நாகரிகத்தின் தொட்டில் என்று புகழப்படக் காரணமாயிற்று.

நகர்த் தேசங்களும், அதிகார மேன்மையும்

பெருமளவு பண்டைக்கால நாகரிகங்களைச் சேர்ந்த மக்கள் மெசொப்பொத்தேமியாவில் குடியேறியும், அதனைக் கைப்பற்றி ஆட்சி செய்தும் உள்ளனர். பண்டைய மெசொப்பொத்தேமியாவின் நிகழ்வுகளுக்கான காலத்தை நிர்ணயிப்பது இன்னும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வருவதுடன், பல்வேறுபட்ட கால நிர்ணய முறைகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதன் காரணமாக, இக் கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ள காலக் குறிப்புகள் அண்ணளவானவை என்றே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
  • மெசொப்பொத்தேமியா, சுமேரியர், அக்காத்தியர், பபிலோனியர் மற்றும் அசிரியர் போன்றோரின் நாகரிகங்களையும் உள்ளடக்கிய பல பண்டைய நாகரிகங்கள் வளர்ந்தோங்கிய ஒரு இடமாகும்.
  • இப் பிரதேசத்துக்குள் எப்பொழுது நுழைந்தார்கள் என்பதில் அறிஞர் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், சுமேரியர்களே இங்கு முதன் முதலில் குடியேறியவர்கள் என நம்பப்படுகிறது. இந்த வளமான பகுதியில், கி.மு 10,000 க்கும், கி.மு 5000 க்கும் இடைப்பட்ட காலத்தில், பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறி வாழ்ந்துள்ளார்கள். இவர்களுள், உபெய்த் (Ubaid) மற்றும் சமரான் (Samarran) பண்பாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். பொதுவாக சிக்கலாக சமூக அமைப்புகள் கி.மு 6000 ஆண்டுகள் அளவிலேயே வளர்ச்சி பெற்றதாகக் கொள்ள வேண்டும். அக்காலத்திலேயே ஜெரிக்கோ நகரம் நீர்பாசனத் தொழில் நுட்பங்களையும் கொண்ட சந்தடி மிக்க நகரமாக இருந்திருக்கிறது. சுமேரியருடைய மொழி, அறியப்பட்ட வேறு மொழிகளுடன் தொடர்பில்லாததாகக் கருதப்படுவதால், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் கண்டறிவது கடினமானதாக உள்ளது. அவர்களுடைய பழங்கதைகளில் சூழவுள்ள இடங்கள் பற்றிய குறிப்புகள் காணப்பட்டபோதும், அவர்கள் தோற்றம் பற்றி அறிந்து கொள்வதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சுமேரிய மொழி கி.மு 3200 - 2900 காலப்பகுதியை அண்டிப் பயன்பாட்டில் இருந்தது அறியப்பட்டுள்ளது.
  • கி.மு நாலாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதியிலிருந்து கி.மு மூன்றாவது ஆயிரவாண்டுகளூடான காலப்பகுதியில் பல்வேறு நகர்த் தேசங்கள் (city-states) காலத்துக்குக் காலம் அதிகரித்த பலமுள்ளவையாக விளங்கின. எரிது (Eridu), உருக் (Uruk), ஊர் (Ur), லகாஷ் (Lagash), கிர்சு (Girsu) போன்றவை முக்கிய நகரங்களாக விளங்கின. சிறப்பாக நாலாவது ஆயிரவாண்டில் "உருக்" இப்பகுதியின் முக்கிய நகர மையமாக விளங்கியது. இக்காலப் பகுதியில்தான் "உருக்" நகரிலும், வேறுசில நகரங்களிலும் எழுதும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், சக்கரமும் கண்டுபிடிக்கப்பட்டது. உலோக உற்பத்தி கல்வேலை என்பவற்றிலும் அதிகரித்த முயற்சிகள் காணப்பட்டன.
  • கி.மு மூன்றாவது ஆயிரவாண்டு அளவில், மேற்சொன்ன நகர மையங்கள் மேன்மேலும் சிக்கல் தன்மை கொண்ட சமூகங்களாக உருவாகின. நீர்ப்பாசனம் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியது மூலம், உணவு உற்பத்தி அதிகரித்து, மேலதிகமாக உணவு பெறப்பட்டது. பாரிய கட்டிட வேலைத் திட்டங்கள் ஆட்சியாளர்களால் ஆரம்பித்து நடத்தப்பட்டன. அரசியல் நிறுவனங்களும் முன்னெப்போதும் இல்லாதவாறு சிக்கல் தன்மை கொண்டவைகளாயின.
  • கி.மு மூன்றாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதியில், சர்கன் (Sargon) என்பவனால் மெசொபொதேமியாவில் "அகேத்" (Agade) அல்லது "அக்காத்" (Akkad) என்னும் அரசவம்சம் நிறுவப்பட்டது. அப்போது தான் முதன்முறையாக முழுப் பிரதேசமும் ஒரு மைய அரசின் ஆட்சியின் கீழ் ஒருமைப்படுத்தப்பட்டது. அக்காத்தியர் செமிட்டிக் இன மக்களாவர். இவர்கள் பற்றிய குறிப்பிடத்தக்க அக்காத் மொழி ஆவணங்கள் கி.மு 2300 இலிருந்து கிடைக்கின்றன. சுமேரிய மொழி நிர்வாகம் மற்றும் இலக்கியங்களுக்கான மொழியாகத் தொடர்ந்து வந்தபோதும், மற்றெல்லா வகைகளிலும் அக்காத் மொழியே ஆதிக்கம் செலுத்தியது. இவ்வம்சம் கி.மு 2000 வரை தொடர்ந்தது.
  • இவ்வம்ச ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், பல்வேறு நகர்த் தேசங்கள் அதிகாரத்தைத் தம் கையில் எடுத்துக்கொள்ளப் போடியிட்டன. அதே நேரம், ஸக்ரோஸ் மலைப் பகுதியைச் சேர்ந்த "குட்டியர்" எனப்படுவோர் இப்பகுதியை ஆக்கிரமித்துச் சிலகாலம் ஆண்டனர்.

cuneiform script இல் சுமேரியக் கடவுள்களின் பெயர்கள், ca. கிமு 24ம் நூற்றாண்டு
  • இப்பகுதியின் ஆட்சி அதிகாரம் முடிவில் "ஊர்" எனப்பட்ட நகர்த் தேசத்திடம் சேர்ந்தது. "ஊர்" இன் மூன்றாவது அரச வம்சத்தின் (ஊர் III) ஆட்சியின் போது, கைத்தொழில்கள் மீது அரசின் கட்டுப்பாடு உச்சநிலையை அடைந்தது. "ஊர்-நம்மு", "ஷுல்கி", "ஹம்முராபி" என்பவர்கள் மூன்றாவது ஊர் அரசவம்சத்தின் புகழ் பெற்ற அரசர்களாவர்.
  • கி.மு 1600 ஆண்டளவில் "மித்தன்னி" (Mitanni) என்னும் கிழக்கு இந்தோ ஐரோப்பிய இன மக்கள், துருக்கிக்குத் தென்கிழக்கே உள்ள மெசொப்பொத்தேமியப் பகுதியில் குடியேறினர். கி.மு 1450 ல், நடுத்தர அளவுள்ள பேரரசொன்றை மெசொப்பொத்தேமியாவின், கிழக்கு, வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இவர்கள் நிறுவியதுடன், மற்றப்பகுதிகளைச் சேர்ந்த அரசர்களிடமிருந்து சிலகாலம் திறையும் பெற்று வந்தனர். இவர்களுடைய அதிகாரம் "காப்தி" (மினோயிக் கிறீட்) பரவியிருந்ததனால் இவர்கள் எகிப்தின் பாரோக்களுக்குப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கினர்.
  • இவர்கள் கி.மு 1300 இல், சின்ன ஆசியாவின் (Asia Minor) பெரும்பகுதியில் அதிகாரம் பெற்று, ஹத்துசாஷ் (இன்றைய துருக்கி) இலிருந்து ஆட்சி புரிந்து வந்த, மேற்கு இந்தோ-ஐரோப்பிய இனத்தவரான ஹத்திகளுக்குக் (Hatti) கீழ் சிற்றரசு நிலைக்குத் தாழ்ந்தனர்.
நன்றி http://nettrikan.blogspot.com/2010/06/blog-post_8746.html

No comments: