Wednesday, October 24, 2018

நேர்மறையான எண்ணங்களை உங்கள் ஆழ்மனதின் மூலம் இயக்குங்கள்

நான் சென்னைக்கு இரயிலில் பயணம் செய்துக் கொண்டு இருக்கும்போது அங்கே பல எண்ணங்கள், நிலைகள் கொண்ட அதாவது என்னையும் சேர்த்து மனிதர்களைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு எதிரில் இருந்த ஒருவர் தனது செல்போன் மூலம் தனது நிறுவனத்தை நடத்திக் கொண்டு அந்த நிறுவனத்தின் மூலம் வரக்கூடிய பல ஆயிரக்கணக்கான பணத்தையும் நிறுவகைத்துக் கொண்டு இருந்தார், இன்னொருவர் தனது வாழ்விற்காக யாசகம் கேட்டு கொண்டு இருந்தார். இன்னொருவர் தனது நோயினால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். சிலர்கள் சந்தோஷமாகவும் சிலர்கள் கவலையுடனும் இப்படி பல விதமான மனிதர்களுடன் இரயில் தன்னுள் வைத்துக் கொண்டு விரைந்து கொண்டிருந்தது.
சிலர் இடையில் சிலர் பாதியில் இன்னும் சிலர் முழுமையாக அதாவது அவர்வர்கள் இறங்கும் ஸ்டேஷனில் இறங்கி ஏறிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் இந்த இரயிலுக்கு யாரைப் பற்றியும் கவலையில்லை யார் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் எதைப்பற்றியும் சிந்திக்காமல் தனது இறுதி நிறுத்தத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. இந்த நிலையை கவனித்து கொண்டிருந்த எனக்கு ஏன் இந்த மாறுபட்ட மனிதர்கள் மாறுபட்ட வாழ்க்கை சிந்தனையில்...

هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰۤى اِلَى السَّمَآءِ فَسَوّٰٮهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ‌ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானங்களைப் படைக்கக் கருதி அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான். மேலும் அவன், ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:29)

உலகில் பிறப்பெடுத்த ஒவ்வொரு மனிதனிடமும் ஏறாளமான சக்திகள் உறங்கிக் கிடக்கின்றன.அந்த சக்தியினை அவன் தெரிந்து கொள்ளாததால்தான்.வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்.

பிரபஞ்ச சக்திகள் உலக முழுவதும் வியாபித்து இருக்கின்றன. அச்சக்திகளை இயக்குவதற்கு ஒரு தூண்டுகோல் வேண்டும்.

தானாகவே அந்த இயற்கைச் சக்திகள் செயல்படாது. வில்லின் நாணில் அம்பைப் பொறுத்தி இழுத்து இயக்கினால்தான் அம்புக்கு சக்தி கிடைத்து இலக்கை அடையும்.

இயற்கை அணுக்களை பிளக்க ஓர் உபாயத்தைச் செய்து அணுகுண்டு வெடிக்க ஒரு சக்தியை கண்டுபடித்தார் ஆல்பட் ஐன்ஸ்டீன். மனிதனும் அணுக்களில், உயிர் அணுக்களால் ஆனவனே! அவ்வணுக்களில் உள்ள ஆற்றல்களைக் கொண்டு எதையும் செய்ய முடியும்.

ஆகாயத்தில் இருக்கும் சக்திகள் மனிதனது உள் மனதிடம் தொடர்பு கொண்டிருக்கின்றன.

இறைவன் பிரபஞ்சத்தில் உள்ள சக்திகள் அனைத்தையும் மனிதனிடமும் வைத்துத்தான் படைத்திருக்கிறான்.

பிரபஞ்சத்தில் ஏற்படும் அசைவு உள்மனதிலும் ஏற்படுகிறது. அதேபோல் நம் மனதில் ஏற்படுகின்ற அசைவுகளும் ஆகாயத்தில் பாதிப்பை ஏற்ப்படுத்துகிறது.

பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே "பஞ்சபூதங்கள்" என்று அழைக்கப்படும் ஐந்து சக்திகளான நிலம்-நீர்-நெருப்பு-காற்று-ஆகாயம் என்ற மகா சக்திகளால் இயக்கப்படுகிறது.

உலகில் உள்ள படைப்புகள் அனைத்துமே இந்த ஐந்து சக்திகளால்தான் ஆக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ஐந்து பூதங்களில் மிகவும் முக்கியமானது காற்று. காற்று இல்லையேல் உலகில் ஜீவனே இல்லை.

உலகில் நாம் காற்று மண்டலத்திற்குள்தான் வாழ்ந்து வருகிறோம். இந்த காற்று மண்டலம் அண்ட சராசரங்களின் காற்று மண்டலத்துடன் இணைகிறது.

நாம் மனதில் ஒரு சலனத்தை ஏற்ப்படுத்தினால் அது நம்மைச் சுற்றிலும் உள்ள காற்று மண்டலத்திலும் பிரதிபலிக்கிறது.

அமைதியான தண்ணீரில் ஒரு கல்லை போட்டால் எப்படி அலைகளை ஏற்படுத்துகிறதோ அதுபோல நாம் மனதில் ஏற்படுத்தும் சலனம் அசைவு இந்தக் கல்லைப்போ ஆகாயத்தில் ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது.

மனதில் ஒன்றை எண்ணினால் சலனம் ஏற்படுகிறது. இது ஆகாயத்திலும் பிரதிபலிக்கிறது. ஆகவே உங்கள் எண்ணங்களின் சக்தி பிரபஞ்ச சக்தியாக மாறுகிறது.

وَفِىْۤ اَنْفُسِكُمْ‌ اَفَلَا تُبْصِرُوْنَ‏
உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன; (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?

وَفِى السَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوْعَدُوْنَ‏
அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன.

فَوَرَبِّ السَّمَآءِ وَالْاَرْضِ اِنَّهٗ لَحَـقٌّ مِّثْلَ مَاۤ اَنَّكُمْ تَنْطِقُوْنَ‏
ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசிக்கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும்.
(அல்குர்ஆன் : 51:21,22,23)

இந்த உலகத்தில் பிறந்ததிலிருந்து வாழ்க்கை என்ற இரயிலில் பயணம் செய்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள். ஆனால் இந்த வாழ்க்கையை நீங்கள் செல்வ செழிப்புடன் வாழலாம் வறுமையுடனும். கவலையுடனும் வாழலாம் சந்தோஷமாகவும் வாழலாம். ஆரோக்கியமாகவும் வாழலாம் நோயாளியாகவும் வாழலாம் ஆனால் இந்தப் பிரபஞ்சத்திற்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் நீங்கள் உங்கள் ஆழ்மனதில் நீங்கள் செல்வந்தர் என்றால் நீங்கள் இந்த உலகில் செல்வந்தர். உங்கள் ஆழ்மனதில் நீங்கள் ஏழை என்றால் இந்த உலகில் நீங்கள் ஏழை. உங்கள் ஆழ்மனதில் நீங்கள் ஆன்மீகவாதி என்றால் இந்த உலகில் நீங்கள் ஆன்மீகவாதி...

உங்கள் நேர்மறையான எண்ணங்களை உங்கள் ஆழ்மனதின் மூலம் இயக்குங்கள் நீங்கள் யாராக இருக்க வேண்டும் என்று. அதுவாகவே ""நீங்கள்"""

உங்களுடன் பயணிக்கும் நான்...

மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப்
உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
மேலப்பாளையம்
திருநெல்வேலி

No comments: