Friday, May 28, 2010

வாழ்க்கையின் இலக்கு.




காட்டில் வாழும் முயலைப் பிடிக்க எண்ணியவன் அந்த முயலை எய்து வருவதைவிட, பெரிய யானையைக் கவர முயன்றவன் எய்த அம்பு பிழைத்து வெறுங்கையுடன் வந்தாலும் அது தான் சிறப்பு என்பதை,


'கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது' என்பர் வள்ளுவர்.

யானையை எய்யச் சென்றவன் யானையைப் பிடித்து வெற்றியோடு திரும்புவதும் உண்டு.

சிறுபறவையை வேட்டையாட எண்ணியவன், வெறுங்கையுடன் திரும்புவதும் உண்டு.

அதனால் நமது இலக்குகள் உயர்ந்தனவாக இருத்தல் வேண்டும்.

இலக்கில்லாத வாழ்க்கை முள்ளில்லாத கடிகாரத்தைப் போல அது யாருக்கும் பயன் தருவதில்லை என்கிறார் கோப்பெருஞ்சோழன்.

வாழ்வியல் இலக்கைக் கூறும் புறப்பாடல் ஒன்று,

கோப்பெருஞ்சோழன் தன் மகன்கள் தன்மீது கொண்ட பகையால் மனம் வாடி தன் நாட்டை அவர்களிடமே கொடுத்து மானம் போனதாகக் கருதி வடக்கிருந்து உயிர்துறக்க முடிவுசெய்தான்.

வடக்கிருத்தல் என்பது,
ஊர்ப்புறத்தே தனியிடத்தில் அறம் கூறும் சான்றோர் சூழ புல்லைப்பரப்பி அதன் மீதமர்ந்து உண்ணா நோன்பு இருத்தலாகும். இப்படி இருப்பதால் வீடுபேறும், மீண்டும் பிறவா நிலையும் கிடைக்கும் என்பது அற்றைக் கால நம்பிக்கையாகும்.


வடக்கிருத்தலால் வீடுபேறு கிடைக்காது என்றும், மீண்டும் பிறவாநிலையென்பது கிடைக்காது என்ற கருத்தினரும் சங்க காலத்தில் இருந்தனர்.

யாவரையும் பார்த்து கோப்பெருஞ்சோழன் சொல்கிறார்...

அறம் செய்வதையே நம் வாழ்க்கைப் இலக்காகக் கொள்வோம். நல்வினை செய்வோமா? செய்யவேண்டாமா? என்ற சிந்தனை கொண்டோர் நெஞ்சத் துணிவில்லாதவர்களாவர்.

யானை வேட்டுவன் தவறாது யானையை வேட்டையாடி மீள்வதும் உண்டு.
சிறு பறவைகளை வேட்டையாட விரும்பிச் செல்வோர் அவற்றைப் பெறாது வெறுங்கையுடனே வருவதும் உண்டு.

“சாதிக்கப் பிறந்தவர்கள் நாம் வெறும் வயிற்றுக்கு வாழ்ந்து மடிந்து போவதா?“

அடுத்தவர்களைப் பார்த்து வாழும் வாழ்க்கையை முதலில் தூக்கி எறிந்து இலக்கோடு வாழப்பழக வேண்டும்.

அறவழியே (நேர்வழி) வாழ்ந்தால் சொர்க்கம் என்னும் மறு உலகம் கிடைக்கப் பெறும்.

பிறப்பு என்னும் நோயிலிருந்து “ மீண்டும் பிறவா நிலை“ அடையலாம்.
(பிறவி என்பதே நோய் – பிறவிப்பிணி. நாம் செய்த பாவத்தால் தான் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம் என்பது தமிழர்தம் நம்பிக்கை)

இவையிரண்டும் கிடைக்காவிட்டாலும் இமையத்தின் உயரத்துக்கு நம் புகழைப் பெற்று குற்றமில்லா உடலுடன் வாழ்ந்து மறையலாம் என்கிறார். பாடல் இதோ,

“செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே
ஐய மறாஅர் கசடீண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
5 குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கி னெய்த லுண்டெனிற்
றொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்
தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின்
10 மாறிப் பிறப்பி னின்மையுங் கூடும்
மாறிப் பிறவா ராயினு மிமயத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தவறத் தலையே
(புறநானூறு -214)

சொர்கம், நரகம், மறுபிறப்பு போன்றன இருக்கிறதா? இல்லையா என்ற கருத்து சங்ககாலத்திலிருந்தே இருந்திருக்கிறது.

இருந்தால் நன்றாக இருக்கும் என்ற மனித நம்பிக்கையே இதற்குக்காரணம்.

மனிதனைப் பண்படுத்தவே இவையெல்லாம் தோன்றின. நல்லபடி அடுத்தவுயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் வாழ்ந்தால் இறந்த பின்பு சொர்ககம் இல்லாவிட்டாலும் வாழும் வாழ்க்கை சொர்க்கமாக அமையும் என்பது சங்கத்தமிழர் கண்ட உண்மை.


பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்

1. வாழ்க்கையில் அறம் செய்ய வேண்டும்.
2. சொர்ககம், நரகம், என்னும் மறு உலகம் மற்றும் மறுபிறப்பு ஆகியன உண்டு என்றும் இல்லை என்றும் எண்ணிய அக்கால நம்பிக்கை புலப்படுகிறது.
3. மானம் போனால் வடக்கிருந்து உயிர்நீப்பர் எண்ணும் அக்கால மரபு சுட்டப்படுகிறது.
4. அறவழியே வாழ்வதே வாழ்வின் இலக்கு என்னும் வாழ்வியல் அறம் உணர்த்தப்படுகிறது.
முனைவர்.இரா.குணசீலன்
தமிழ் விரிவுரையாளர்
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்ககோடு
நாமக்கல் மாவட்டம்
தமிழ்நாடு
இந்தியா.
http://gunathamizh.blogspot.com/2010/03/blog-post_30.htmlவாழ்க்கையின் இலக்கு.: "

No comments: