Saturday, May 22, 2010

வணங்காமுடி பதில்கள் (18-05-2010)

ஈராக், ஆப்கன் போர்கள் முடிவுக்கு வந்து விட்டால் அமெரிக்கா என்ன செய்யும்? -ரவி

இருக்கவே இருக்கிறது ஈரான்.

அதுவும் முடிந்தால் வடைகறி...... ஸாரி வடகொரியா.


திரைப்படம் அற்ற இந்தியா எப்படி இருக்கும்? -கமலா

பெருமளவிலான வரி வசூலிக்க வழியில்லாமல் அரசு தள்ளாடும்.

ரசிகமகா ஜனங்கள் சின்னத்திரைத் தொடர்களில் முழ்கி விடுவர்கள்.

முன்னாள் நடிகர்களும் நடிகைகளும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில் கடை திறந்து விடுவார்கள்.

அல்லது அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டு எம் எல் ஏக்களாகவும் எம்பிக்களாகவும் அமைச்சர்களாகவும் இருப்பார்கள்.



திமுக.விலாவது சகோதரர்கள் இருக்கிறார்கள், தலைவருக்குப் பின் அடித்துக் கொள்ள? அதிமுக.வில் தலைவிக்குப் பிறகு என்னாகும் அக்கட்சியின் கதி? -ராஜா முகம்மது

பெரியாரிடமிருந்து விலகி, தி.மு.கழகத்தை உருவாக்கிய அண்ணாதுரை, கட்சியைக் குடும்பமாகக் கருதித் தாம் அண்ணனாக இருந்து கழகத் தம்பிகளை வளர்த்தார்.

அண்ணாவின் மறைவுக்குப் பின் எம்ஜியாரின் தயவால் தமிழ்நாட்டின் முதலமைச்சரான கருணாநிதி, தி.மு.கவின் தலைவரான பின் தம் குடும்பம்தான் கட்சி என்று உருமாற்றிவிட்டார். அதனால்தான் நீங்கள் வினா எழுப்ப நேர்ந்தது.

ஜெயலலிதா குறித்த வினாவுக்கு முன்னர் அளிக்கப்பட்டுள்ள விடையையும் இங்கே பார்வையிடுங்கள்.


அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்து யாரை தலைவராக பார்க்கிறீர்கள்? - கண்ணன்

ஜெயலலிதா ஓர் ஆலமரம்.

ஆலமரத்தின் கீழ் வேறு எதுவும் வளராது.

ஆனால் அவரின் கட்சியில் யாராவது உருவாவார்கள். எம்ஜியாரின் மறைவிற்குப் பின் ஜெயலலிதாவைத் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டதைப்போலப் புதிய தலைவரையும் ஏற்றுக் கொள்வர்.

ஆனால் அத்தலைவரை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.

என் பார்வையில் அப்படி ஒரு தலைவர் இப்போதைக்கு அக்கட்சியில் இல்லை


மின்சாரப் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை இல்லாத தமிழகம் உருவாகுமா? - ஜோஸப்

"UTOPIA"

நாட்டின் பொருளாதார, தொழில் வளார்ச்சிகளுக்கேற்பவும் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்பவும் தொலைநோக்குடன் சரியாகத் திட்டமிட்டு நவீனத் தொழில் நுட்பத்திறனுடன் முயன்றால் மின் மற்றும் நீர்ப் பற்றாக்குறை இல்லாத் தமிழகம் உருவாகலாம்.



மணிரத்னமும் ஷங்கரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும்? - வினோதன்

இருவரும் என்னென்ன கதாப்பத்திரங்கள் ஏற்று நடிக்கப் போகிறார்கள் என்று தெரியாதவரை நான் இதில் என்ன கருத்துச் சொல்ல முடியும்?


அதிராம்பட்டணத்துக்கும் கழுதைக்கும் என்ன சம்பந்தம்? - கோமளா

காங்கேயம் காளை, ராஜபளையம் நாய், மணப்பாறை மாடு போல அதிராம்பட்டினக் கழுதை என்று சொல்ல எந்தத் தொடர்பும் இல்லையே?

ஒருவேளை அவ்வூரார் நிறையப் பொறுப்புகளைச் சுமப்பவரோ-- கழுதை பொதி சுமப்பதுபோல்..?


நடிகையின் மூக்கு, இடுப்பு இவற்றையெல்லாம் ஒப்பிடச் சொன்னால் பதில் அளிப்பீர்களா? - அருணா

நடிகையின் மூக்கு, இடுப்பு மட்டுமல்ல -- யாருடைய மூக்கையும் இடுப்புடன் ஒப்பிட முடியாது. இரண்டுக்கும் இருவிதப் பணிகளும் நிலைகளும் உள்ளன.

ஆப்பிளை ஆப்பிளுடனும் ஆரஞ்சை ஆரஞ்சுடனும் ஒப்பிடுவதுதான் அறிவு.



எம்.ஜி.ஆர் இன்று உயிருடன் இருந்திருந்தால் கருணாநிதிக்கு இத்தனை விருது கிடைத்திருக்குமா? - ராஜன்

ஏதோ கருணாநிதிக்கு விருதுகள் கிடைப்பதைத் தடுக்கும் ஆற்றல் எம்ஜியாருக்கு இருந்ததைப்போல ஒரு மாயை தெரிகிறது உங்கள் வினாவில்.

எம்ஜியார் உயிருடன் இருந்து முதல்வராக நீடித்திருந்தால் கருணாநிதிக்கு இத்தனை எண்ணிக்கையில் விருதுகள் கிடைத்திருக்குமா என்பது உங்கள் வினாவாக இருந்தால்,
"கிடைத்திருக்காது" என்பதே விடை.
இப்போது கருணாநிதிக்கு வழங்கப்படும் விருதுகள் அனைத்தும் எம்ஜியாருக்கு வழங்கப் பட்டிருக்கா.
ஏனெனில், எம்ஜியார் கொடுத்துப் பழக்கப் பட்டவர். விருதுகளைக் கேட்டு வாங்க மாட்டார்.


பெரியார்தாசனைப் பின்பற்றி வீரமணியும் இஸ்லாத்தைத் தழுவினால் பெரியார் கட்சி என்னாகும்? - விச்சு

இப்போதும் பெரியார் உருவாக்கியபடி எக்கட்சியும் இல்லை.

ஒருவர் தம் நம்பிக்கையை மாற்றிக் கொள்வதால் ஒரு கட்சி காணாமல் போகும் என்று சொல்வது அதீதக் கற்பனை..
ஏதோ பெரியாரின் கொள்கைகளை இவ்விருவர் மட்டும்தான் ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பதுபோன்று நீங்கள் நம்ப வைக்கப் பட்டுள்ளீர்கள்.

 
http://www.inneram.com/201005208428/vanangamudi-answers-18-05-2010

No comments: