Sunday, November 9, 2014

வெற்றிகரமான ஆறாவது ஆண்டில் இந்நேரம்.காம்!

அன்பிற்கினிய வாசக நெஞ்சங்களே!
கடந்த 2009ஆம் ஆண்டு மே முதல் தேதி துவங்கப்பட்ட இந்நேரம்.காம் இணைய தளம், தனது ஐந்தாண்டுப் பயணத்தைப் நிறைவு செய்து ஆறாவது ஆண்டில் தடம் பதிக்கிறது என்பதைப் பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

அரசியல், மதம், பணம் போன்றவற்றிற்குச் சிரம் பணிந்து இரட்டை நிலைபாட்டில் இயங்கி வரும் தமிழக ஊடகங்கள் பெரும்பாலானவற்றுக்கு மத்தியில் இளைஞர்களின் புதிய படைப்பாக உருவானதே இந்நேரம்.காம்.

தமிழர்களுக்கான ஆபாசமில்லாத, நேர்மையான ஊடகம் ஒன்று வேண்டுமென ஏங்கித் தவித்த வாசகர்கள் சிலர் துணிவுடன் முன் வந்து கை கோத்து இயக்குவது "இந்நேரம்.காம்". 2008 ஆம் ஆண்டு வலைப்பூவில் ஆரம்பித்த இப்பயணம், வாசகர்களின் பெருவாரியான வரவேற்பினைத் தொடர்ந்து 2009 ல் டாட் காமாக தனி டொமைன் பதிவு செய்யப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது.
இலக்கை நோக்கிய வெற்றிப் பயணத்தில் தொடக்க காலம் முதல் ஆதரவளித்து வரும் வாசகர்களுக்கு நன்றி. உங்களுடைய பேராதரவைப் பெற்றுள்ள இந்நேரம்.காம், தமிழர்களுக்கான தவிர்க்க முடியாத மீடியாக்களில் ஒன்றாக உருவெடுக்க இருப்பதும் உங்களால்தான்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்நேரம்.காம் குழுமம் கடந்து வந்த பாதை மிகக் கடினமானது. இதில் இணைந்து பணியாற்றும் குழுவினர்களுள் எவருமே முழுநேரச் செய்தியாளர்கள் அல்லர். தமது தொழில் வேலைப் பளுவுக்கு மத்தியில் செய்தி சேகரித்தல், பதிவேற்றல், இணைய தளத்தைப் பராமரித்தல் ஆகிய பணிகளில் தமது நேரத்தைச் செலவழித்து செய்திகள் சுவையுடனும் சுணங்காமலும் உங்களை வந்தடைய பின்புலத்தில் முகம் காட்டாமல் அவர்கள் உழைத்து வருகின்றனர்.

தினசரி சர்வதேச அளவில் பல்லாயிரக்கணக்கான வாசகர் பார்வைகளில் வலம் வரும் இந்நேரம்.காம் தள வளர்ச்சிக்கு பெரும் துணையாக விளங்கிக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளில் வசிக்கும் நண்பர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதுடன்,

தளம் துவங்கிய நாள் முதல் இன்றுவரை இந்நேரம்.காமுக்குத் தம் ஆதரவை வழங்குவதுடன் விமர்சனங்கள், ஆலோசனைகள் மூலம் சரியான பாதையில் பயணிக்கச் செய்த உலகெங்கும் உள்ள வாசகர்களான உங்களையும் நன்றியுடன் நினைவு கூர்வதில் பெருமிதம் அடைகின்றோம்!

உங்களின் விமர்சனங்கள், ஆலோசனைகளைத் தொடர்ச்சியாக எமது இணைய தளம் மூலமாகவோ அல்லது Facebook பக்கத்திலோ தொடர்பு கொண்டு கட்டாயம் தெரிவிக்க வேண்டுகிறோம்..

மாற்று ஊடக முயற்சியான இந்நேரம்.காம் மேலும் பல தமிழர்களை எட்டும் வகையில் வாசகர்கள் தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்நேரம் பற்றிய அறிமுகத்தை எடுத்துச் சொல்வதுடன், இந்நேரத்தின் சமூகவலைப் பக்கங்களுடன் இணைந்திருக்கக் கோருகிறோம்.

இந்நேரம்.காமில் பங்களிப்பு அளிக்க விரும்பும் ஆபாசமற்ற, நேர்மையானதொரு ஊடகம் வேண்டுமென்ற எண்ணம் கொண்ட தமிழர்கள் அனைவரையும் இந்நேரம் அன்புடன் வரவேற்கிறது.

- ஆசிரியர், இந்நேரம்.காம்
நன்றி  Source: http://inneram.com/

No comments: