Wednesday, November 26, 2014

உலகம் உன் கையிலடா....! - ராஜா வாவுபிள்ளை

 முரண்கள் முற்றிய உலகமடா!
=== முரண்டுகள் பிடிக்கும் உலகமடா!
முயற்சியை இகழ்ச்சியின்றி செய்துவிட்டால்
=== உன்முன்னே மண்டியிடும் உலகமடா!!

ஏழைபாழைகள் வாழும் உலகமடா!
=== ஏமாற்றிப் பிழைக்கும் உலகமடா!
தர்மம் தலைகாக்கும் புரிந்துகொண்டால்
=== இடுக்கண் களைந்துவிடும் உலகமடா!!

ஏற்றத்தாழ்வு நிறைந்த உலகமடா!
=== வேற்றுமைகள் பாராட்டும் உலகமடா1
ஒற்றுமையை பற்றிப்பிடித்துக் கொண்டால்
=== வறுமையையே ஒழித்துவிடும் உலகமடா!!
எந்திரத்தால் ஆளுகின்ற உலகமடா!
=== தந்திரத்தை நம்புகின்ற உலகமடா!
தந்தைசொன்ன மந்திரத்தை சிரமேற்கொண்டால்
=== ஏற்றங்கள் கொண்டுதரும் உலகமடா!!

கனிமங்களை களவாடும் உலகமடா!
=== பொதுசொத்தை தனதாக்கும் உலகமடா!
திருத்தங்களை தவறாது தேர்ந்தெடுத்தால்
=== திருப்புமுனைகள் காட்டும் உலகமடா!!

நிலைமாற்றங்களில் மூழ்கிவிட்ட உலகமடா!
=== தன்னிலை தவறவிட்ட உலகமடா!
தவறுகளைத் திருத்திக் கொண்டால்
=== தளராது வாழவைக்கும் உலகமடா!!

மானுடத்தை மறந்துவிட்ட உலகமடா!
=== மாக்களால் ஆளப்படும் உலகமடா!
மன்னுயிர் காக்க முனைந்துவிட்டால்
=== மனுநீதி காத்திடும் உலகமடா!!

பொதுநலம் புதைத்துவிட்ட உலகமடா!
=== புண்ணியம் புறக்கணித்த உலகமடா!
மனிதநேயம் மாண்பாய் காத்திருந்தால்
=== வாழ்வாங்கு வாழவைக்கும் உலகமடா!!

உழாமல் உண்ணஎண்ணும் உலகமடா!
=== உழவர்கள் மாண்டுபோகும் உலகமடா!
உழுதுண்டு வாழ்வோராய் மார்விட்டால்
=== தொழுதுண்டு வாழவைக்கும் உலகமடா!!

இயற்கையை அழிக்கும் உலகமடா!
=== இன்புற்றுக்கவே நினைக்கும் உலகமடா!
சுற்றுப்புற சூழல்களை காத்துவிட்டால்
=== களைப்பின்றி வாழவைக்கும் உலகமடா!!
 
ராஜா வாவுபிள்ளை

No comments: