Wednesday, November 5, 2014

மறவாதே என் மனமே....!

மலர்ந்து மணம் பரப்பி
மாய்கின்றன மலர்கள்
காய்த்து கனியாகி
விதையாகின்றன பழங்கள்

பொழிந்து பூமியைக் குளிர்வித்து
கடலில் சங்கமிக்குது மழை
நிலையில் நின்று சுழன்று
இரவையும் பகலையும் தருகிறாள் பூமி

தீ பிழம்பாய் எரிந்து
ஒளியை தருகிறது சூரியன்
தன்மீது படர்ந்த ஒளியை
பிரதிபலித்து இரவில் ஒளிர்கிறாள் நிலா

தொடர்சங்கிலியின் கண்ணிகளாய்
இயற்கையின் ஒவ்வொரு பரிமாணத்தின்
பலன்களையும் மனிதனுக்காக படைத்து
பரிபாலனம் செய்கிறான் இறைவன்

சிசுவாய் பிறந்து அத்தனையையும்
அனுபவித்து தனது வருங்கால
சந்ததியினருக்கு இயற்கையின் அழிவை
விட்டுவிட்டு மரிக்கிறான் மனிதன்

இயற்கையோடு ஒன்றிவாழ்ந்து
மனிதத்தை மாண்புடன் மதித்து
அத்தனையையும் படைத்து பரிபாலிக்கும்
ஏகன் இறையோனை மறவாதே என்மனமே!

No comments: