Thursday, October 21, 2021

" வெள்ளிக் கிழமையின் மாட்சி மாட்சி "

 

" வெள்ளிக் கிழமையின் மாட்சி மாட்சி "

வெள்ளியை

பெயரிலே வைத்திருந்தாலும்

தங்கமான நாள்

வெள்ளிக் கிழமை !

முந்தைய இரவிலேயே

ஆரம்பமாகி விடுகிறது

ஜும்மா நாளின்

கொண்டாட்டம் !

வழக்கம் போல்

சூரியன்

விழிப்பதற்கு முன்னாலேயே

விழிக்க வைக்கும்

பிலாலின் அழைப்பு

ஒரு பெருநாளின்

தக்பீர் முழக்கம் போல்

மிதந்து வருகிறது !

சுபுஹு தொழுதால்

அன்றைய தினத்தில்

வருவது எல்லாம்

ஆனந்தமே !

பார்க்க முடியாத

முகங்களெல்லாம்

ஜும்மாவில் பிரசன்னம் !

அரேபிய நாட்டு

அத்தர் வாசனையோடு வரும்

வேக்கேசன் சபுராளிகள் !

வயசுப் பிள்ளைகளின்

தோளில் படர்ந்து

தவழ்ந்து வரும்

வயசாளிகள் !

வாப்பாமார் கைபிடித்து

வண்ணத் தொப்பியோடு

முல்லைகளாய் மணம் வீசி வரும்

சின்ன பிள்ளைகள் !

ஆலிம்சாவின் பயானும்

நிசப்தத்தைக் கிழித்து

கணீரென்று

"அல்ஹம்துலில்லாஹ்"

என ஆரம்பமாகும்

குத்பாவும்

பள்ளி நிறைந்து

மக்கள் தொழும்

கண்கொள்ளாக் காட்சியும்

சொல்லும்

" இது வெள்ளிக் கிழமையின்

மாட்சி மாட்சி "என்று !

அத்துடன்

முடிந்து விடாது

இந்த

ஏழைகளின் பெருநாள்...

தொழுது முடிந்து வந்தால்

இல்லத்தரசியின்

கைப்பக்குவத்தில்

நெய் சோறும் கறியும் !

இல்லையென்றால்

பிரியாணி ....

ஆஹா ....

எத்தனை பரக்கத்தை

இந்த நாளுக்குள் வைத்திருக்கிறான்

ஏக இறைவன் !

அத்தனை நாளும்

ஜும்மா நாளாக இருந்தால்

எத்தனை இன்பம் என்று

மனம் எண்ணும் !

நித்தமும் ஐவேளை

தொழுது வந்தால்

அந்த எண்ணமும்

உண்மை ஆகும் !

 அபூஹாஷிமா வாவர்



Abu Haashima Abu Haashima Vaver

No comments: