Sunday, October 10, 2021

Abu Haashima #முத்தஸீர் மறைவான ஞானமிக்கவர்

 


Abu Haashima

#முத்தஸீர்

மறைவான ஞானமிக்கவர்

மக்கா

நபிகளை

கொன்று விடத் துடித்தது

இறைவனின் கட்டளையோ

நபிகளை

யத்ரிபுக்கு பயணிக்க வைத்தது !

முஹம்மதை

கொன்று வருவோர்க்கு

ஒட்டகங்கள் நூறு பரிசு என

கொக்கரித்தான்

குறைஷியரின் மூடத் தலைவன்

அபு ஜஹல் !

சுராக்கா ...

அபு ஜஹலின் ஆதரவாளன் !

பொன்னுக்கும் பொருளுக்கும்

ஆசைப்பட்டு

பாலைப் பெருவெளியில்

புரவியைப் பாயவிட்டு

பெருமானைப் பிடிக்க வந்தான் !

நெருங்கி வந்த

பேராசைக்காரனை

" அருகில் வராதே " என

நபிகள் எச்சரித்தார் !

நூறு ஒட்டகங்களின்

மயக்கத்தில் இருந்தவன்

நபிகளின் எச்சரிக்கையை

காற்றில் பறக்க விட்டான் !

நபிகள்

காற்றை ஊதி விட்டார் !

சுராக்காவோடு

அவன் புரவியும்

மண்ணில் புதைய ஆரம்பித்தது !

அண்ணலின்

ஆற்றலை புரிந்து கொண்ட

சுராக்கா அலறினான் ...

" அண்ணலே அபயம் தாருங்களேன் "

எனக் கெஞ்சினான் !

மன்னர் மஹ்மூதர் மன்னித்தார் !

நபிகளின் கரம் தொட்ட

வெறியனவன்

நபி நேசர் ஆனார் !

" யா ரஸூலல்லாஹ் ...

அரபுலகை தாங்கள்

ஆட்சி செய்யும்

காலத்தில்

என்னுயிர்

காக்கப்பட வேண்டும் "

என்று காவலும் தேடினார் !

காலனாக வந்தவனே

காவல் தேடிய விந்தையை எண்ணி

உடன் வந்த தோழர் அபுபக்கர்

புன்னகைப் புரிந்தார் !

மறைவான ஞானமெலாம்

மறையோனருளால் 

நிறைவாகப் பெற்றிருந்த

மக்கத்து மாநபி ...

" காவல் பெறுவீர்

அத்துடன்

பாரசீகப் பேரரசின்

பொற்காப்புகளை

பரிசாகப் பெறுவீர் "

என வாக்களித்து

சுராக்காவை

பிரமிக்க வைத்தார்கள் !

கலீபா உமரின்

ஆட்சி காலத்தில்

பாரசீகம்

வெற்றி கொள்ளப்பட்டது !

அரண்மனை பொற்காப்புகள்

சுராக்காவுக்கு

பரிசளிக்கப்பட்டு

அண்ணலின் அருள்வாக்கு

ஹயாத்தாக்கப்பட்டது !

வாழ்ந்தாலும்

மறைந்தாலும்

தங்கள் அருள் வாழ்வு

மறையாது என உணர்த்திய

மஹ்மூது நபிகள் பிரானே

உங்களின் மீது இறைவனின்

வாழ்த்துக்கள்

இறங்கிக் கொண்டே இருக்கட்டும் !

ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

No comments: