Wednesday, July 11, 2012

அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி-5)

 அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -2)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -3) 
 அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி -4 அரபிக் கல்லூரி வளம் பெறுதல்)
by K.M. ஜக்கரியா, B.Com.,எலந்தங்குடி



                                           அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.
மக்கட் பேறு :
 தமது குடும்பம் விரியடையவே தம்மால் விரிவாக்கப்பட்ட நீடூர்  ஜின்னா தெருவில் வீடு ஒன்றைக் கட்டி ஹாஜிமஹால் என அதற்குப் பெயர் சூட்டி அதில் வாழ்ந்து வரலானார்கள். வளமார் விரிந்த நெஞ்சோடு,  விஞ்சு  புகழ் வள்ளற்றன்மையோடு நிறைந்த மக்கட் செல்வத்தையும் பெற்றிருந்தார்கள். ஷபீர் அஹ்மத், அப்துல் ஹமீத், முகம்மது ஜக்கரியா, அப்துல் லத்தீப், அப்துல் ஹக்கீம், முகம்மது சயீத், முகம்மது அலி ஜின்னா  என்ற ஆண் மக்களும்.
ரஹ்மததுன்னிசா, பாதிமாஜின்னா என்ற பெண் மக்களும் பிறந்தனர்.

  நியாயம் வழங்குதல் :
ஹாஜியார் அவர்கள் தஞ்சை மாவட்டம் முழுதும், அதைத் தாண்டியும் அறிமுகம் ஆனவர்கள். சொல்லாலும் வாக்காலும், இறைவழி நின்று செயலால் அதைக் கட்டிக்காத்த அந்த பெருமகனின் சேவை மக்களிடையே ஏற்பட்ட எண்ணிறந்த பிணக்குகளை மனமுறிவுகளை நேர்படுத்தியிருக்கின்றன. எத்தனையோ சச்சரவுகள், சண்டைகள்,
வழக்கு மன்றம் செல்லாமலே ஹாஜியார் அவர்களின் பஞ்சாயத்தால் சுமூகமாக தீர்க்கப்பட்டிருக்கின்றன.

இறையடி சேர்தல்:
அவர்கள் இவ்வுலகில் இறுதி மூச்சு சுவாசிக்கும் வரை மக்கள் நலனும், பொது நலத் தொண்டுமே அவர்களிடத்து முதலிடம் பெற்றன. அவர்கள் பெற்ற செல்வங்களைக் காட்டிலும்,பேணி வளர்த்த   மதரஸா மிஸ்பாஹுல்  ஹுதாவையே பெரிதும் நேசித்தார்கள். உலகமுள்ளளவும் அது ஞான ஒளி பரப்பி சமுதாயத்தின் அகக் கண்ணைக் திறந்து ஹாஜியாரின் உன்னத சேவைக்கு சாட்சியம் கூறிக்கொண்டிருக்கும். 1955 -ம் ஆண்டு அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது, அதே ஆண்டு மே திங்கள் ஐந்தாம் நாள் பகல் சுமார் 2 மணிக்கு ஆண்டவன் கட்டளைப்படி இவ்வுலகை நீத்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்,மெய்யாகவே நாம் இறைவனை சேர்ந்தோர் ஆவோம் மேலும் மெய்யாகவே நாம் திரும்பிச் செல்கின்றோம்.  (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள்) ஆவி பிரியும் சில வினாடிகளுக்கு முன்கூட தமக்கு வைத்தியம் செய்த மருத்துவருக்கு நன்றி கூறினார்கள். கண்ணீர் பெருக்கெடுத்தோட  தேம்பி கொண்டு ஒரு கூட்டமே சுற்றிலும் நின்று கொண்டிருந்தது. கடைசி நிமிடத்தில் அனைவரையும் அவர்கள் அழைத்து தாம் அறியாமல் ஏதாவது பிழை செய்திருந்தால் பொறுத்தருளும்படி கேட்டுக் கொண்டார்கள். இறுதி நிமிடம் வரை இறைவனுக்கேற்ற அடியானாகவும் குற்றமற்றவனாகவும் இருக்க நாடியதையே இந்த நிகழ்ச்சி அறிவுறுத்துகிறது. புதல்வர்கள்,புதல்விகள்,உற்றார்,உறவினர், அவர்கள் வளர்ப்பால் வளர்ந்தோங்கி இருக்கும் மதரஸாவும்,மாணவர்களும்,கட்டி முடித்த கல்விக் கூடங்களும் சோகமே உருவாக நின்று அறற்ற இறுதி விடை பெற்றார்கள்.

 ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைக்க வேண்டியதாகும்.(இறுதியில்) நீங்கள் நம்மிடமே திரும்பி வாருங்கள்.
என்ற இறைவசனத்தை  எண்ணி சாந்தி பெறுவோமாக.

Jazaaka Allah khair! :ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா நுற்றாண்டுப் பெருவிழா  வரலாற்று மலர்  
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -2)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -3)

  நீடூர் - நெய்வாசல் - Nidur - Neivasal
  ஊருக்குப் பெருமை « SEASONSNIDUR
 
K.M. ஜக்கரியா, B.Com.,
( K.M. ஜக்கரியா, B.Com., அவர்களது  சொந்த ஊர் எலந்தங்குடி)

அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப் அவர்களது சரிதத்தை எழுதிய K.M. ஜக்கரியா, B.Com., அவர்கள் மிகவும் புகழ்பெற்ற சிறந்த எழுத்தாளர். பல்வேறு இஸ்லாமிய  இதழ்களில் இவரது படைப்புக்கள்  வெளிவந்துள்ளன. பல்வேறு இஸ்லாமிய  இதழ்களில் இவரது படைப்புக்கள்  வெளிவந்துள்ளன .இஸ்லாமிய இலக்கியக் கழகத்தில்  பல்லாண்டுகளாக பொருளாளராக இருந்து சிறப்பான சேவை செய்து வருபவர் . K.M. ஜக்கரியா அவர்கள் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் படித்தவர்.  படித்த பின்பு மாயூரத்தில் சில காலம் தொழில் செய்த பின்பு  லாவோஸ் சென்று அங்கு அமெரிக்கன் வெளிவுரைத் துறையில் லாவோஸ்-ஒப்பந்த வல்லுநர் வேலையில் பணி செய்தார். பின்பு ஈரானில் அமெரிக்கன்  எண்ணெய் நிறுவனத்தில் ஜெர்மன் எஃகு ஆலை, பின்பு குவைத் மின் நிலைத்தில் பணியாற்றினார் .பலநாடுகளுக்கு சென்று வந்த அன்பவமுண்டு . அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அமெரிக்க அரசால் சிறப்பிக்கப்பட்டவர் .

6 comments:

Aashiq Ahamed said...

அன்பு அப்பா அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

மாஷா அல்லாஹ். மிக அருமையான வாழ்க்கை பாடத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. என்னை போன்ற இந்த தலைமுறையினருக்கு என் கொள்ளு தாத்தாவின் வாழ்க்கை சாட்டையடி பாடமாக இருக்கிறதென்றால் அது மிகையாகாது.

சேமித்து வைத்துக்கொண்டு அவ்வபோது எடுத்து படித்து நம்மை நாமே சீர்தூக்கி பார்த்துக்கொள்ளும் படியான தொடர்...

ஜசாக்கல்லாஹ்...

வஸ்ஸலாம்,

உங்கள் பேரன்,
ஆஷிக் அஹமத் அ

VANJOOR said...

மாமனிதர் மர்ஹும் அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப் அவ‌ர்க‌ளின் மாண்புமிகு வ‌ர‌லாற்றை ப‌டித்த‌தில் பெரும் ம‌கிழ்ச்சியை அளித்தது.

மாமனிதர் மர்ஹும் அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப் அவ‌ர்கள் தன் பெற்றோர்க‌ள்,
தன் பிள்ளைகள்,
ஊரார்கள்,
உற்றார்கள்,
இஸ்லாமிய சமூகம்

அனைவருக்கும் எண்ணத்தாலும் எழில்மிகு சேவையாலும், பண்பாலும் பார்போற்றும் செய்கையாலும் போற்றத்தக்க ஒரு முன்மாதிரியாக த‌ன்னுடைய‌ வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்க‌ள்.

அல்ஹ‌ம்துலில்லாஹ்.


இவ்வ‌ர‌லாற்றை ப‌டிக்கும் ஒவ்வோர் உள்ள‌த்திலும் மாமனிதர் மர்ஹும் அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப் அவ‌ர்கள் போன்று ஊருக்கு ஊர் ஒரு பெருந்த‌கைய‌ர் வேண்டும் என்னும் பேர் ஆவ‌லை நிச்ச‌ய‌மாக‌ துளிர்விட‌ செய்கிறது.

மாமனிதர் மர்ஹும் அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப் அவ‌ர்க‌ளின் வ‌ர‌லாற்றை மிக‌ அருமையாக‌ தொகுத்து வ‌ழ‌ங்கிய ஜனாப் K.M. ஜக்கரியா, B.Com.,எலந்தங்குடி அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி.


.

mohamedali jinnah said...

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Burhanudeen said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
கண்ணியமிகுந்த எனது தாய் வழி பாட்டனாரின் வரலாற்றை எனது தாயின் மூலம் அவ்வபொழுது அறிந்துள்ளேன். எனினும் மரியாதைக்குரிய ஜக்கரியா மாமா அவர்களின் கட்டுரையை படித்தவுடன் என்னையும் அறியாமல் கண்கள் குளமானது. இதே நிலைதான் எனது உடன்பிறப்புக்களுக்கும் என அறிந்த பொழுது மெய் சிலிர்த்தேன்.
எவ்வளவு பெரிய மனிதரின் குடும்பத்தில் பிறந்திருக்கிறோம் என எண்ணி மகிழும் அதே நேரத்தில் அன்னாரின் வாழ்கையில் நாம் அறியவேண்டிய வஷயங்கள் இன்னும் நிரம்ப இருக்கும் என உறுதியாக நம்புகிறேன், மேலும் விரிவாக அறிய ஆவல் கொண்டுள்ளோம். வல்ல இறைவனின் துணைகொண்டு பாசத்திற்குரிய மாமா ஜின்னாஹ் அவர்கள் ஆவண செய்ய வேண்டும்.
யா அல்லாஹ், எனது பாட்டனாரின் அனைத்து அமல்களையும் அங்கீகரித்து அவர்களுக்கு சுவனத்தை வழங்குவாயாக.
அனைவரும் பயன் பெரும் வகையில் பாட்டனாரின் வரலாற்றை இணையதில் இணைத்த மாமாவிற்கு மிக்க நன்றி.

mohamedali jinnah said...

அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி-5) இந்தப் பகுதியை கணினியில் கட்டுரையாக ஆக்க முயலும்போது தொடர்ந்து செயல்பட முடியவில்ல. எனது விழிகள் கண்ணீரை அருவியாகக் கொட்டிக் கொண்டே இருந்தன. எனது தந்தை ஆண்டவன் கட்டளைப்படி இவ்வுலகை விட்டு இறைவன் வசம் (5.5.1955)அடையும் நிகழ்வையும்(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அவர்கள் தமக்கு வைத்தியம் செய்த மருத்துவருக்கு நன்றி கூறியதையும் கடைசி நிமிடத்தில் அனைவரையும் அவர்கள் அழைத்து தாம் அறியாமல் ஏதாவது பிழை செய்திருந்தால் பொறுத்தருளும்படி கேட்டுக் கொண்டதையும் பார்த்தவன் நான். அப்பொழுது எனக்கு வயது பதினேழு. அவர்கள் அன்போடு வளர்த்த மான் பாய்ந்து ஓடிவந்து அவர்களை கண்ணீர் வடிய நோக்கியதையும் கண்டேன் . பாசத்தினையும் நன்றி செலுத்தும் மாண்பினையும் அணைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் கொடுத்துள்ளான்.

Nidur Faizur AMB said...

பாசமும் நேசமும் நிறைந்த (ஜின்னா) அப்பாவிற்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்தஹூ.
தாங்கள் ஆற்றி வரும் பணி மிக மகத்தானது. எனது மனதில் என்றும் நிறைந்திருக்கும் எங்களது அத்தம்மா (ரஹ்மத்துன்னிசா) அவர்கள் தங்களது தந்தையின் பண்பினையும், பெருமையையும் மெய்சிலிர்த்து மிகவும் பணிவாகவும் மரியாதையாகவும் பேசி இருப்பதனை நிறையவே கேட்டிருக்கிறேன். கேட்டு ஆனந்தமும் அடைந்திருக்கிறேன். (தொடர்ந்து கேட்க முடியாமல் போனது அல்லாஹ்வின் நாட்டம்). ஆனால் இந்த கட்டுரையை வாசிக்கும் போது என் கண்கள் காணாத (ஹாஜியார்) அவர்களை நேரில் காணுவது போன்ற தோன்றுகிறது. அன்னார் போன்ற அற்புத அடியானின் குடும்பத்தில் என்னையும் ஒருவனாக படைத்ததற்கே அல்லாஹ்விற்கு நிறையவே நன்றி செய்ய கடமைப்பட்டிருக்கிறேன் வார்த்தைகளால் வடிக்க முடியாத அற்புத வாழ்க்கை. வாழ்ந்தோம் சென்றோம் என்றில்லாமல் வாழ்ந்தோம் சாதித்தோம் என்று வாழ்ந்து சாதித்தார்களே அதுதான் வாழ்க்கை. குடும்பத்தில் ஏதோ ஒரு பகுதியில் ஒரு அங்கத்தினராக இருந்தும் இதுவரை இவ்வளவு தகவல்களை அறிந்துக்கொள்ளாமல் இருந்தது நினைத்தால் மனது வருந்துகிறது. எம் போன்ற மூன்றாவது தலைமுறையினருக்கு தாங்கள் கூறும் படிப்பினை என்றும் உவமை என்றுமே நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். நமதூரின் தற்போதைய தலைமுறையினர் அநேகர்களுக்கு இந்த செய்திகள் தெரியாமல் போனதும் மிகவும் வருத்தத்திற்குரியது. அன்னாரின் அற்புத வாழ்க்கையின் ஒவ்வொரு அமல்களையும் மற்றும் நம் அனைவரின் அமல்களையும் தவறுகள் இருப்பின் அதனை மன்னித்து (மன்னிப்பதில் அல்லாஹ்வே சிறந்தவன்) பரிப்பூரணமாக ஏற்றுக்கொண்டு நீடித்த நிலைத்த சுவனசோலையில் நம் அனைவரையும் மீண்டும் ஒன்று சேர்ப்பானாக.
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்!